Thursday, December 5, 2019

நாட்டார் {கோனாடு}

"நாட்டார்" பதிவின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை பகுதியின் கோனாட்டில் நாட்டவர்கள் செயல்பாடுகள் பற்றி தற்போது காண்போம்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனின் குடுமியான் மலைக் கல்வெட்டில் IPS: 266,
[ ".... கோனாடான கடலடையாதி லங்கைகொண்ட சோழ வளநாட்டு நாட்டோமும்..." ]
கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டின் நாட்டவரும், திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிற் தானத்தாரும் காரையூர் வேளானுக்கு கோயிலின் தேவதானமாக உள்ள நிலத்தை விற்பனை செய்து அதை மீண்டும் கோயிலுக்கே திருத்தோப்பாக மாற்றி வழங்கிய செய்தியை அறியமுடிகிறது. இதற்கு ஒப்புதல் அளித்த நபர்களாக,

1.நம்பு செய்வான்.
2.கருணாலைய பிள்ளையான் ஆன திருமந் பொழிய நின்றான்.
3.உதையன் நம்பியாண்டாரான வளவதரையன்
4.செருந்திவனப் பெருமாள்
5.அன்பாண்டார்
6.திருமுனைப்பாடி நம்பி
7.எதிரிலிச் சோழ பட்டன்
8.கோயிற் கணக்கு பெரியநாட்டுப் பிரியன்
9.நாட்டுக் கணக்கு குன்றிசூழ்நாட்டு வேளான்
10. கைக்கோளர் கணக்கு குடுக்கும் தியாகி
11.கோயிலின் அனுஸாரம் பிக்ஷை மடத்து நல்லதறியும் பெருமாள். - முதலானோர் குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்களுள் நம்பி ,பட்டன், கோயிற்கணக்கு, மடாதிபதி ஆகிய நால்வரைத் தவிர எஞ்சியோரை நாட்டாராகவே கருத முடிகிறது. மூன்றாம் ராஜராஜனின் குமாரமங்கலம் கல்வெட்டில் IPS: 196,
[ "....கோனாடான கடலடையாத இலங்கைகொண்ட சோழவளநாட்டு நாடும் நகரம் அகர பிரமதேயம ளோமும்..." ]

நாட்டாரும், நகரத்தாரும், அகரப் பிரமதேயங்களில் வாழும் நபர்களும் கூடிய நிகழ்வு சுட்டப்படுகின்றது. திருவாணைக்காத் திருப்பதியிலுள்ள மடத்திற்கும் ஜீயர் ஒருவருக்கும்
[ "... திருவாணைக்காத்திரு(ப்ப)திய் (கிலா)ண்ட நாயகி திருமடத்து எழுந்தருளி இரு க்கும் ஜியர்....." ]
நிலக்கொடை வழங்கிய தகவலைக் கூறும் இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்து காணப்படுவதால் ஒப்பமிட்டவருள் நாட்டுவேளான் எனக் கூறப்படும் ஒரு நபரை மட்டுமே அறியமுடிகிறது.
வீரபாண்டியனின் குடுமியான்மலைக் கல்வெட்டு IPS: 601 திருநலக்குன்றத்தில் உள்ள சிகாநாதசுவாமி சிவாலயத்தில் பிராமணர்களால் நடந்த திருட்டை விசாரிப்பதற்காகக் கூடிய கோனாட்டு நாடுகள், நகரங்கள், கிராமங்கள், கோயிற் தானத்தார் அடங்கிய கூட்டத்தைக் குறிப்பிடுகிறது.

[ "... கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழவளநாட்டு நாடுகள் நகரங்கள் கிராமங்களோம் உடையார் திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிற் காங்கேயராயன் திருமண் டபத்து நிறைவற நிறைந்து குறைவறக்கூடி எங்களில் அமைந்து பிடி பாடு இட்டபடியாவது..." ]
[ "...இப்படி இக்கோயிற் சிவப்பிராமணரில் கள்ளரானவர்களை மாற்கத்து கத்துக்கு கடவார்

சிவத்துரோகிகளைச் செய்யும் முறைமைகளிலே செய்யவுநிலை யிட்டு...." ]
கோயிற் கணக்கர் இருவர், நம்பி, பட்டன் முதலான ஆலயப் பிரதிநிதிகளுடன் கீழ்கண்டவர்களும் ஒப்பமிட்டுள்ளனர்.

1.புன்னங்குடி குன்றன் தேவனான தென்னவதரையன்,
2.பரம்பையூர் நம்புசெய்வான், 3.சிகாநல்லூர் வளவதரையன், 4.காரையூர்ச் செங்கதிர்ச் சோழ மூவேந்த வேளான்,
5.அண்ணல் வாயில் வளவன் பல்லவதரையன்,
6.புதுவூர்ப் பெரியதேவன்
7.கீழ்தணியத்து வீரசோழ வேளான்
8.சுந்தரசோழபுரத்துத் தென் கோனாட்டு வேளான்
9.கீழ்மணநல்லூர் இராசேந்திர வேளான்
10. வெம்பனூர் ஈசானதேவன்
11.மீநெல்வேலி பொற்காரி சூரியதேவன்
12.திருநலக்குன்றத்து அன்பாண்டான்
13.குலோத்துங்கப் பல்லவதரையன்
14.கச்சிராயன்
15.விஞ்சத்தரையன்
16.பெருமாள் உடையான்
17.குடுக்குந் தியாகி வேளான்
18.ஆளவந்தான் திருவொத்த சாமமழகியான் .

வேளாண் குடியிருப்பின் {ஊர்கள்} பிரதிநிதிகளே இங்கே நாட்டாராகச் செயல்பட்டுள்ளனர் என்பதை இங்கு தெளிவாக அறியமுடிகிறது. வேளான் அந்தஸ்து பெற்றவர்களும், அரையர் அந்தஸ்து பெற்றவர்களும் இங்கு ஏறக்குறைய சம அளவில் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக ஒரு குடுமியான் மலைக் கல்வெட்டு IPS: 367 கோனாட்டு நாட்டாரின் தன்மையை நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. திருநலக்குன்றத்து நாயனார் திருக்கற்றளியைப் புதுப்பிக்க நிதியில்லாத காரணத்தினால் கோயிலின் தேவதான நிலத்தை விற்பதாகக் கொண்ட முடிவினைக் கூறும் இந்த கல்வெட்டில் 41 நபர்கள் ஒப்பமிட்டுள்ளனர். இவர்களில் ஆலயத்தின் தேவகன்மிகள், கணக்கர், வயிராகி, கைக்கோளன்,பட்டன், நம்பி,கோயிற் பண்டிதன், உள்ளிட்ட நபர்கள் தவிர்த்து மீதமுள்ள நபர்களில் 14 அரையர்களும், 9 வேளான்களும் , 2 மாராயன்களும் வருகின்றனர். இங்கு வேளான்களை விட அரையர்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.

[ "... இந்நாயநார் திரு க்கற்றளி ஜீணிக்கையில் ஜீணோத்தாரம்பண்ண வேறு உடலில்லாமையால் இதுக்கு உடலாக நாட்டுத்தேவதான இந்நாயனார் திரு நாமத்துக்கா ணி இலுப்பைக்குடிக்குளமும் வயலிலும் விற்பதான..." ]
14வது நூற்றாண்டிற்குரிய கூடலூர்க் கல்வெட்டில்{ IPS: 447 } ஒப்பமிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் வரி நிர்வாகத்தில் நாட்டாரின் பங்கு எத்தகையது என்பதை அக் கல்வெட்டு உணர்த்துகிறது.

[ "..... எங்கள் நாட்டு இல்லநூரில் இருகூற்றுக்குக் கடவ இல்லனூர் கிழவன் கீழ்மணநல்லூ ரில் பெரியதேவரை புணையிட்டு இவர் கடமையிறாமல் ஓடிப்போகையில் இப்பெரியதேவரை நாங்கள் நாடாக அழைத்து நீரு புணைப்படியே இறுக்கவேணும் என்று புரட்டாதி மாதவரை கடமை இவரைப் பூட்டுகையில் இப்படி புணைபட்ட நான் இறுக்கப்பாத்தால் எனக்கு ஆற்றாது என் காணியான கீ ழ்மணநல்லூர்க்காணியும் போகட்டுப்பெமித்தளை என்று சொல்லி எங்கள் முன்பாக இவர் புணை கழித்துப்போகையாலும்...." ]
அதாவது,.. கோனாட்டு இல்லனூருக்கு அரசுக்கான வரியில் இரண்டு பங்கைச் செலுத்த வேண்டிய இல்லனூர்க் கிழவனானவன் கீழ்மணநல்லூர் பெரியதேவரை புணையாக {ஜாமீன்} வைத்து விட்டு வரியைத் தராமல் ஓடிப்போகிறான். இந்த சிக்கலைத் தீர்க்க எண்ணி தென்கோனாட்டு நாடும், நகரமும், கிராமங்களும் கூடிப் பெரியதேவரை அழைத்துக் கேட்கின்றனர். அவர் இந்த வரியைத் தன்னாலும் செலுத்த முடியாது என்று கூறி தனது கீழ்மணநல்லூர் காணியை எடுத்துக்கொண்டு இந்த கைது நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறதை ஏற்று அவரை விடுவிக்கின்றனர். இது பத்தாமல் போக அதேபோல இன்னொரு பங்கைச் செலுத்த இல்லனூர்க் கிழவனால் பனணயமாக வைக்கப்பட்ட பிள்ளான் சொக்கனாரையும் அழைத்துக் கேட்க, அவர் தன்னாலும் அந்த வரியைச் செலுத்த இயலாது என்று கூறி தனது காணியையும் விற்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறித் தன்னை விடுவித்துக்கொள்கிறார். இறுதியாக இல்லநூரை ஏலத்தில் விட்டு வரியைச் செலுத்த முனையும் நாட்டார்கள் மதுரைக் கைக்கோளனான மாளுவச்சக்கரவர்த்திக்கு விற்கின்றனர்.
கோனாட்டுப்பகுதியில் அரையர்களே வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக 13ம் நூற்றாண்டிற்குரிய குடுமியான்மலைக் கல்வெட்டு IPS 565. படம் பிடித்துக் காட்டுகிறது.

[ ".... கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு இரண்டுகரைனாட்டு னாட்டவர்ரோம் இன்னாட்டு கூடலூர்னாட்டு பனையூர் குளமங்கலத்தரை . . ர்கள்ளுக்கு . . . தரம் பண்ணிக்குடுத்த பரிசாவது இவர்களுக்கு நாட்டரசுங்கட்டி இவர் . . தின்கலம் சிற்றூர் ஐங்கலனெல்லும் பெற்றுச்சிலந்திவனபெருமாள் சிபாதம்...." ]
கோனாட்டின் இரண்டு கரை நாட்டவர்கள் கூடலூர் நாட்டு பனையூர்-குளமங்கலத்து அரையர்களுக்கு நாட்டரசு அளித்து காவற் பொறுப்பையும் தருகின்றனர். இதற்கு காணிக்கையாக ஒவ்வொரு ஊரவரும் நெல் அளக்க ஒப்புக்கொள்ளப்படுகிறது. மேலும் திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிலில் முன் ஒடுக்கும் {முதல் மரியாதை} அரையர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பகுதியில் "மறவ அரையர்கள்" வலுவான நிலையில் காணப்பட்டதற்குச் சான்றாகத் தென்கோனாட்டுக் கூடலூர் நாட்டுச் செவ்வலூர் உள்ளிட்ட வடபற்று நாட்டவரால் பூவாலைக்குடி சிவாலயத்தில் நிறுவப்பட்ட "மறமாணிக்கன் சந்தி" ஐக் குறிப்பிடலாம். {IPS:444} மறமாணிக்கம் என்பது மறவர் இனத்தாரின் விருதுப் பெயராகும். அவர்களை அண்டி வாழ்ந்த கைவினைஞர், இடையர் மக்கள், ஆகியோருக்கும் மறமாணிக்கக் கொல்லன், மறமாணிக்கத் தட்டான், மறமாணிக்கக் கோன் என அறியப்பட்டனர். அடுத்த பதிவில் கானாட்டு நாட்டவரின் செயல்பாடுகள் எத்தகையவை என்பதைக் காண்போம்.

Reference..
1. IPS:266, 196, 601, 367, 447, 565, 444.
2. புதுக்கோட்டை 1600 வரை.
{ பக்: 335-337 }
Thanks to
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
{கல்வெட்டுத் தகவல்கள்}
நன்றி!
அன்பன்: கி..முனிராஜ்வாணாதிராயன்.









No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...