தமிழர்களுக்குத் தேவையான புரிதல்
அன்புள்ள தலித், இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து சாதி மக்களே,
நாம் அனைவரும் பல நூற்றாண்டுகளாக எந்தவித வேறுபாடும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் நமது சமூக கேடுகளுக்கு சாதி, மதம்தான் காரணம் என்று சமூக விஞ்ஞானி ராமசாமி நாயக்கர் கண்டுபிடித்தார்.
அவர் அதையே பிரச்சாரம் செய்தார், பாவம் அரசியலுக்கு வராத காரணத்தால் அவரால் எதையும் செய்ய முடியவில்லை.
அவர் கம்பெனியில் இருந்தால் சல்லிக் காசும் பெயராது என்பதை அறிந்த அண்ணன் தம்பி கம்பெனி அந்த பிரச்சாரத்தில் தங்களுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்து தொடர்ந்தது.
அண்ணன் போய்ச் சேர்ந்ததும் தம்பி தன் வேலையைக் காட்டினார். அதைக் கண்டு பொங்கிய புரட்சித் தலைவர் நம்மை தம்பியிடமிருந்து மீட்டார்.
இந்த தம்பி அண்ட் கோவும், புரட்சித் தலைவரும் செய்த லீலைகள்தான் கடந்த 40 ஆண்டுகாலத்தில் தமிழகம் கண்ட பொற்காலம். அனைத்து வளர்ச்சிப் பணிகளும் இவர்கள் செய்ததே. அனைத்துக் கேடுகளும் இவர்கள் செய்ததே.
ஆனால் இவர்கள் இவர்களின் அரசியல் தோல்விகளுக்கு காரணம் காட்டுவது என்ன சாதி, மதமாம். ஆட்சி செய்தது இவர்களா, இல்லை சாதி மதமா?
சாதி, மத வேறுபாடுகளைக் களைய இந்த தம்பி அண்ட் கோவும், புரட்சித் தலைவரும், அவரின் தனி வாரிசு அம்மாவும் என்ன செய்தார்கள்? எனவே இவர்களது இயலாமைக்கு சாதி, மதத்தை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது. அது போன்ற சிந்தனைகளை நாம் அனைவரும் ஒதுக்க வேண்டும்.
தலித் மக்களே, தீண்டாமை என்பது வெறுக்கத் தக்க செயல். அதை முழுமையாக போக்காதது மேற்கண்ட தலைவர்களின் இயலாமையே. அதற்கு ஒட்டுமொத்த இந்து ஆதிக்க சாதிகள் காரணமல்ல. ஆனால் அந்த தீணடாமையை ஒழிக்க வேண்டுமானால் அதே ஆதிக்க சாதிகளின் ஒத்துழைப்போடுதான் ஒழிக்க முடியும்.
ஆனால் தீண்டாமையை ஒழிப்பதற்கு பதிலாக சாதி, ஒழிப்பு, மத ஒழிப்பு, அடையாள ஒழிப்பு என்பது மனிதனை மூளைச் சலவை செய்யும் வேலைகளாகும்.
இந்தியச் சட்டங்களின்படியும், சாதி அடிப்படையில் சலுகை பெற்றுக் கொண்டும் சாதியை, மதத்தை ஒருக்காலும் ஒழிக்க முடியாது. அவற்றை ஒழிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த வழக்கங்களை சில ஒழிக்க முடியும். உடனடியாக ஒழிக்க வேண்டியது தீண்டாமை வழக்க மட்டுமே.
மற்றபடி சமூக அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம், சமூக உறவு என்பதெல்லாம் படிப்படியாக செய்து முடிக்க வேண்டிய இலக்குகளாகும்.
இதை ஒவ்வொரு சமுதாயமும் எவ்வாறு அடைய விரும்புகிறார்கள் என்ற கருத்தொற்றுமையின் கீழாகவே அடைய முடியும்.
எனவே தமிழர்களில் உள்ள அனைத்து மத, சாதிப் பிரிவுகள் ஒன்று கூடி எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த இலக்கை அடைய வேண்டும். என்ன மாதிரியான சமூக, அரசியலை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூடி முடிவு செய்து அதன்படி செல்வதுதான் தற்போதையத் தேவை.
அதுவே சரியான ஒன்றாக இருக்கும். மற்றபடி கற்பனையான சமுதாய, அரசியல் கருத்துக்கள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதலை உருவாக்கக் கூடியவையே. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது பற்றி பேசும் அரசியல்வாதிகளை ஒதுக்க வேண்டும்.
தமிழ்க் குலம் வாழ்க. தமிழினம் வாழ்க.