•".....கிராமங்களோமும்"......•
~~~~~~~~~~~~~~~~~~~
புதுக்கோட்டைப் பகுதியின் நாட்டார் அமைப்பைத் தொகுத்துக் கூறும் முன்பாக இப்பகுதிக் கல்வெட்டுகள் சிலவற்றில், நாட்டாருடன் நகரங்களும், கிராமங்களும் அல்லது பிரமதேயங்களும் {..."நாடுகளோம் நகரங்களோமும் கிராமங்களோம பிரம்மதேயமுங்களோம்"..} என தனியே கூறப்படுவதற்கு விளக்கம் என்னவென்று பார்ப்போம். முதலில் "கிராமங்களோம்" என வருவதைக் கவனிப்போம், இன்றைய நாளில், கிராமம் என வரும் சொல் ஊர்க்குடியிருப்பைக் காட்டும். அவ்வாறாயின் ஊர்க்குடியிருப்பின் பிரதிநிதிகளே , அதாவது 'ஊரவரே' நாட்டாராக இடம் பெற்றனர் எனும் கருத்தினைக் கவனத்தில் கொண்டால், கிராமம் அல்லது ஊரின் பிரதிநிதிகள் நாட்டார் அவையில் இடம்பெறவில்லை என்று கூற வேண்டியமை வரும். எனவே கிராமம் எனும் சொல்லிற்கு இன்று வழங்கப்படும் சொல் இங்கு பொருத்தமற்றதாகும். பிரமதேயக் குடியிருப்புகள் நாட்டார் அவையின் ஒருமித்த இயல்பிற்குப் பொருத்தமற்ற நிலையில், பிராமணர்களின் பிரதிநிதிகள் நாட்டார் அவையில் தனியே இடம்பெற்றனர் எனக் கொள்வது ஏற்கத்தக்கது என்றால், இங்கு கூறப்படும் கிராமங்கள் பிரமதேயக்குடியிருப்புகளே எனக் கொள்வதில் தவறில்லை!, கிராமம் எனும் சொல்லிற்குப் பதிலாக பிரமதேயம் என கூறப்படுவது {IPS: 196 "அகர பிரம்மதேயங்களும்" } கிராமங்கள் பிரமதேயங்களே எனும் கருத்தை உறுதிசெய்யும்.
•......"நகரங்களொமும்"....•
~~~~~~~~~~~~~~~~~
மேற்கண்ட தலைப்பிற்குள் உள் நுழையும் முன்பு, வணிகர்கள் பற்றிய ஒரு விரிவான பார்வையைப் பார்ப்போம். வணிகருக்குரிய அறுவகைத் தொழில்களாக, ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரையோம்பல்,வணிகம் -ஆகியன தொல்காப்பியப் பொருளுரையில் கூறப்படுகின்றன. வடவரின் சமூகத்தில் வைஸ்ய மற்றும் சூத்திர குழுக்கள் வேளாண் தொழிலை மேற்கொண்டன எனவும், வைஸ்யருள் வசதி படைத்தோரே வணிகத்திலும் ஈடுபட்டனர் எனக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் பண்டைய சான்றுகளின் படி, மருத நில மாந்தருக்குத் தேவையான உப்பு, நெய்தல் நிலத்து உமணரால் கொணர்ந்து அளிக்கப்பட்டது. மருத நில உற்பத்திப் பொருட்களாகிய நெல் முதலானவற்றை பிறபகுதி மக்கள் விரும்பியமையால் பிறபகுதி மக்களும் மருதநிலப்பகுதியில் குவிந்து பொருட்களைப் பறிமாறிக்கொண்டனர். இவ்விதப் பரிமாற்றங்கள் பெருமளவில் நடைபெறும் இடங்கள் வணிக மையங்களாகின. எனவே ஓரிடத்தில் கிட்டும் உற்பத்திப் பொருள் அல்லது அதன் அமைவிடம் வணிக மையங்கள் உருவாகக் காரணமாகிற்று. தமிழகத்தைப் பொறுத்தவரை வைசியர் எனும் குழு இங்கு ஒருபோதுமே காணப்படவில்லை எனினும், வேளாண் தொழிலை மேற்கொண்டேரே வணிகத்திலும் ஈடுபட்டனர் எனலாம். அதாவது வணிகர் என்போர் வேளாண் சமூகத்திற்கு அந்நியர் அல்லர். வணிகத்தை மேற்கொண்ட வெள்ளாளர், வெள்ளான் செட்டார்{செட்டி} - வெள்ளாஞ் செட்டியார் எனவும், வணிகம் புரிந்த பிராமணர் , 'பிரம்மச்செட்டி' எனவும் அறியப்பட்டனர். இங்கு செட்டி எனும் பின்னொட்டுச் சொல் இன்றுள்ள செட்டியார் எனும் சமூகக் குழுவைக் குறிக்காது. அது வணிகத்தில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும் குறிக்கும். 'செட்டி' எனும் சொல்லிற்குரிய விளக்கம் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும். "சிரேஸ்டி" எனும் வடசொல்லின் தமிழ் வடிவமே 'செட்டி'யாகும். அச் சொல்லிற்கு 'சிறப்புப்பெற்றவர்' என்பது பொருள்.{ Recent perspective of early Indian history, New Delhi: Sangam Books - 1995, Romila Thapar.} & { The culture and civilisation of Ancient india in historical outline, New Delhi: vikas. - D.D.Kosambi} அதாவது வணிகத்தில் ஈடுபட்டுச் செல்வநிலையினை எய்தியோர் {சிரேஸ்டி} செட்டி என அறியப்பட்டனர். இவர்களிலும் மேம்பட்டநிலையைப் பெற்றவர்கள், "மஹாசிரேஸ்டி" எனப்பட்டனர். இதன் தமிழ் வடிவமே கல்வெட்டுகளில் பயின்று வரும் "மாயிலட்டி" எனும் சொல்லாகும். இவ்விதமாக, வணிகத்தில் ஈடுபட்ட அனைவரும் செட்டி என்கிற சொல்லைப் பெற்றனர். புதுக்கோட்டைக் கல்வெட்டுகளில் பயின்று வரும் "சிலைச்செட்டி" எனும் தொடர் திரு.ஹால் அவர்களின் கூற்றுப்படி சிறப்புமிக்க{சிலை} வணிகரைக் குறிப்பதாகும்.வணிகத்தில் ஈடுபட பொருள்வளம் வேண்டுமாகையால் திரு. ரொமிலா தாபார் குறிப்பிடுவது போன்று வேளாண் தொழிலில் கிட்டிய பொருள்வளமே வணிகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்க வாய்ப்புண்டு எனலாம்.
இன்றைய நாளில் செட்டியார் எனும் சமூகக் குழுவின்{ஜாதியின்} உட்பிரிவாக நகரத்தார் கூறப்படுகின்றனர். ஆனால் இடைக்காலத்தில் இச்சொல் இரண்டுவிதமான சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, நாட்டுப் பிரிவினுள் அடங்கிய உள் வணிக மையமான நகரத்தின் பிரதிநிதிகள் நகரத்தார் எனச் சுட்டப்பட்டனர். இவர்கள் சாசனங்களில் தங்கள் செயல்பாடுகளை அறிவிக்கையில் "நகரத்தோம்" எனக் கூறிக்கொண்டனர். மேலும் வணிகக் குழுக்களைக் குறிப்பதற்கும் நகரத்தார் எனும் சொல் பயன்பட்டிருக்கிறது. அவைகள்,.
1. வணிகக் கிராம அல்லது மணிக்கிராம நகரத்தார் {அயல் வணிகம் செய்த பண்டைய குழு}
2. அஞ்சுவண்ண நகரத்தார் { ஹஞ்சமன எனும் அயல் வணிகர் குழு}
3.சாலிய நகரத்தார் { சாலியராகிய நெசவாளர் வணிகக் குழு}
4.வாணிய நகரத்தார் அல்லது சங்கரப்பாடி நகரத்தார் {எண்ணெய் வணிகர்}
5. அரவ நகரத்தார் { ஆந்திரப்பகுதியில் இயங்கிய தமிழ் வணிகக் குழு}
- முதலானவைகளாகும். - இன்றைய நாளில் நகரத்தார் என்று ஒரு சமூகத்தைக் குறிக்கும் நடைமுறை உருவானது 16ம் நூற்றாண்டில் எனக் கருத இயலுகிறது. இதற்குச் சான்றாக, கி.பி.1544 க்குரிய திருவரங்குளம் கல்வெட்டில் {IPS: 855} கூறப்படும் "ஒன்பது நகரத்தார்" மற்றும், கி.பி.1504-க்குரிய கோட்டையூர்க் கல்வெட்டில் {IPS: 838} இடம்பெறும் "கோட்டையூர்ச் செட்டிகளில் பெற்ற பெருமாள் நகரத்தார்" எனும் குறிப்புகளைக் குறிப்பிடலாம்.
வேளாண் குடியிருப்புகளே வணிக மையங்களாக செயல்பட்டன எனும் அடிப்படையில் வேளாண்குடிகளே வணிகராயினர் என்பதுதானே உண்மை! -அவ்வாறாயின், நாட்டார் அவையில் நகரத்தார் இடம்பெறாது, கிராமம் அல்லது பிரமதேயம் போன்று தனியே இடம் பெறுவதற்கான காரணத்தை நாம் அறியவேண்டும். வேளாண் குடியிருப்புகளே நகர மையங்களாக மாற்றம் பெற்றிருப்பினும் ஊர்க்குடியிருப்புகளில் நிலவிய ஒருமித்த இயல்பை நகர மையங்கள் பெறவில்லை. பிற குடியிருப்புகளின் 'உடையான்'களும் நகர மையங்களில் ஊரவராக இடம் பெற்றிருந்தனர். {IPS: 158, ...."இனகரத்து வியாபாரி பரம்பையூருடையான் } மேலும், அயல் வணிகர்களும் இங்கே தொடர்புற்றிருந்தமையால் நகரத்து பகுதிகளில் ஒரு பன்முகத்தன்மை , அதாவது பலதரப்பட்ட மக்களும் வாழும் சூழல் நிலவியதாகக் கருத முடிகிறது.
நாட்டார்கள், இவ்விதமான பன்முகத் தன்மை கொண்ட நகரத்தாரைத் தம்முடன் இணைத்துக் கொள்ளாமல் தனிக் குழுவாகவே கருதியுள்ளமை வியப்பளிக்கும் நிகழ்வாகத் தோன்றவில்லை. கோனாட்டில் வந்திறங்கும் வெற்றிலைத் தரகு பெறும் உரிமையை இரண்டு வணிகருக்கு வழங்கிய நாட்டாரின் செயல்பாடு {IPS: 125 } இனக்குழு அவையின் {Tribal Assembly} செயல்பாடு போன்றது எனும் ஹாலின் கருத்து ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது.{ Trade and state craft in the age of colas} நகரத்தார் தனிக் குழுவாக நாட்டார் அவையுடன் இணைந்து செயல்பட்டிருப்பினும் நகரத்தாராக ஒப்பமிட்டுள்ளோரை இனங் காண்பது கடினமானதாகத் தோன்றுகிறது. திருமயத்தில் கூடிய நாட்டார் அவையின் பெருங்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சோழபாண்டியச் செட்டியை {IPS: 341} மட்டுமே நகரத்தாரின் பிரதிநிதி என உறுதியாகக் கூறலாம்.
•...."நாடோமும்"...•
~~~~~~~~~~~~~
புதுக்கோட்டைப் பகுதியின் கோனாடு-கானாடு-தென்கவிநாடு ஆகிய நாடுகளின் நாட்டாராகச் செயல்பட்டோர் குறித்துப் பின்வரும் கருத்துக்களைக் கூறலாம். முதலாவதாக, ஊர் மட்டத்தில் அதிகார வர்க்கமாகக் காணப்படும் 'உடையான்' எனும் அடிப்படைத் தகுதியைப் பெற்ற வேளான்களும் அரையர்களுமே நாட்டவராகச் செயல்பட்டுள்ளனர். இருப்பினும் 13ம் நூற்றாண்டை ஒப்புநோக்க, 14ம் நூற்றாண்டில் அரையர்களின் பிடி நாட்டார் அவையில் வலுவாக இறுகுகிறது. மேலும் வல்லாண்மை பெற்ற சமூகத்தவரான கள்ளரும் மறவருமே அரையர்களாகக் காணப்பட்ட நிலையில், இச்சமூகத்தவரே நாட்டாராக, நாட்டளவில் அதிகார வர்க்கமாகக் காணப்படுகின்றனர். பிற சமூகக் குழுக்களில் இடையர் மக்களின் ஓரிரு பிரதிநிதிகளை மட்டுமே இனங்காண இயலுகிறது.
அடுத்ததாக, வளநாட்டளவிலேயே நாட்டாரின் செயல்பாடுகள் காணப்படுகிறது. கோனாடு-கானாடு தனி வளநாடுகளாக அமைக்கப்பட்ட நிலையில் இவற்றிற்குரிய நாட்டாரும் தனியாகவே செயல்பட்டுள்ளனர். கோனாட்டின் உட்பிரிவாகிய தென் கோனாட்டின் நாட்டார் கூறப்பட்டிருப்பினும்{IPS: 447}, ஒல்லையூர்க் கூற்றத்திற்குரிய கோனாட்டின் நாட்டவரே இங்கு பங்கு பெற்றனர் எனலாம்.வளநாட்டளவிலேயே நாட்டார் அவையின் செயல்பாடு நடைமுறைக்கு மாறாக, இருவளநாடுகளின் உட்பிரிவுகளான இரு நாடுகளின் ஊரவர்கள் இணைந்து செயல்பட்டுள்ள நிகழ்வும் உண்டு. இதைக் குறிப்பிடும் மூன்றாம் ராஜராஜனின் கீரனூர்க் கல்வெட்டு{IPS:198} புதுக்கோட்டைப் பகுதியின் நாட்டார் அவையின் தன்மையை முழுமையாக அறிய உதவிடும்.
கோனாட்டு உறத்தூர்க் கூற்றத்தின் ஒன்பது ஊரவரும், நான்கு அரையர்களும், ஜெயசிங்க குலகால வளநாட்டின் சிறுவாயில் நாட்டின் பத்து ஊரவரும், அரையர் இருவரும் தம் குடியிருப்புகளிலுள்ள கீரனூர்ச் சிவாலயத்திற்குரிய நிலங்களுக்கு இறையிலிச் சலுகை வழங்கியமை இக்கல்வெட்டில் கூறப்படுகிறது {IPS: 198} "இன்னிலத்தால் வந்தகடமை முதலிய எப்பேர்ப்பட்டவையும் இரண்டு நாட்டுக்கும் பாரமாகும்" - என {நாட்டவரே ஏற்றுக் கொள்வதாக} கல்வெட்டில் கூறப்படுகிறது. உறத்தூர்க் கூற்றத்து நான்கு ஊரவரோடும் வடசிறுவாயில் நாட்டு இரண்டு ஊரவரோடும் இணைத்துக் கூறப்படும் அரையர் அறுவரும் {எ.கா: ...."விருதராயக் குறிச்சி ஊரோமும் வருதராயனும்"....} அவ்வூர்களின் ஆட்சிப் பொறுப்பிற்குரியவர் எனலாம். "வடசிறுவாயில் நாட்டுக் கீரனூர் ஆளும் அரையன்" - எனும் குறிப்பு இதை உறுதிபடுத்தும்.
இக்கல்வெட்டில், 19 ஊரவர்கள் கலந்து கொண்டிருப்பினும், நாட்டவரின் முடிவை இருநாட்டுப் பிரிவுகளின் அரையர்களே அறிவிக்கின்றனர். எவரெவர் எனில்,..
1. புதுவயல் கொடும்பையராயன்
2.முடிகொண்ட நாடாழ்வான்
3.விசையராயன்
4.குருகுலராயன்
5.வீரபத்திர நாடாழ்வான்
6.கீழைப்புதுவயல் விக்கிரம முத்தரையன்
7.ஈழத்தரையன்
8.சேரமான்தோழன்
9.கீழ்க்கோனாட்டுத் திருவரங்க நாடாழ்வான்
10. சேனைபரிபாலன நாடாழ்வான்
11.விருதராயக்குறிச்சியில் விருதராயன்
12.சிறியான் எதிரிலிப் பெருமாளான நாட்டரையன்
13.மருதாந்தப்பேரரையன்
14.அரையன் நாயன்
15.கடம்பன் நாயன்
16. குஞ்சிர முத்தரையன்
17.மொன்னைக் காடன்
18.கொன்னதேவனான விருதராயன்
19.கீரனூர் ஆளும் அரையன்
20.விசையபால நாடாழ்வான்
21.ஆகமல நாடாழ்வான்
22.ஐந்நூற்றுவப்பேரரையன்
23.தொண்டைமா நாடாழ்வான்
24.இனசாக்கியரையன்
25.எதிரிலிச் சோழ நாடாழ்வான்
26.கொல்லத்தரையன்
27.மாணிக்கராயன்
28.ஜெயங்கொண்ட நாடாழ்வான்
29.கிடாரங்கொண்ட பேரரையன்
30.காங்கய நாடாழ்வான்
31.செம்பியன் நாடாழ்வான்
32.உப்பிலிக்குடியில் ஈழஙாகொண்ட நாடாழ்வான்
33. மங்களராயன்
34.கோனாட்டரையன்
35.வீரசிங்க நாடாழ்வான்
36.சிறுபாலூர் வாளுவராயன்
37.பெருங்களூர் நாடாழ்வான்
38.இளஞ்சையூர் நாஞ்சில் முத்தரையன்
39. கற்குடி நாடாழ்வான்
40.ஆனையூர் நாடாழ்வான்
41.இரைங்குடி நாடாழ்வான்
42.குமாரமங்கலத்து கண்ணவதரையன்
-ஆகியோர்கள் ஒப்பமிட்டுள்ளனர். இறுதியாக "இக்கல்வெட்டுப் பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் இரண்டுநாட்டு அரையர்களோம்" - எனக் கூறப்படுகிறது. ஆகவே, ஊர் அளவில் காணப்பட்ட அரையர்களின் ஆதிக்கப்பிடி நாட்டார் அவையிலும் இறுகியது என நான் கூறிய கருத்தை இக்கல்வெட்டுச் செய்தியும் உறுதி செய்கிறது.
கேரளசிங்க வளநாட்டு உஞ்சனைப் பற்றில் தனியொரு நாட்டாராக கள்ளர் ஒருவர் செயல்பட்டிருப்பனும் இங்கு நாட்டார் அவை என்பது தனியொரு நபருக்கானதல்ல என்பதைக் கடந்து காலத்தால் அது தனிநபர்களுடையதாகியதை உணர முடிகிறது.
ஊர் அமைப்பு குறித்தும் இக்கல்வெட்டில் ஒரு புதிய செய்தி கூறப்படுகிறது. வடசிறுவாயில் நாட்டின் 10 குடியிருப்புகளின் ஊரவரைக் குறிப்பிடுகையில் "குமாரமங்கலத்து இரண்டூராய் இசைந்த ஊரோம்" - 'அமண்குடி{சமணர் குடியிருப்பு? } இரண்டூராய் இசைந்த ஊரோம்' - 'இறைங்குடி இரண்டூராய் இசைந்த ஊரோம்'- என மூன்று குடியிருப்புகளில் இரண்டு ஊர் அவைகள் செயல்பட்டுள்ள செய்தி கிடைக்கப் பெறுகிறது. பிற பகுதி கல்வெட்டுகளில் பிராமணக் குடியிருப்பின் 'ஸபை'யாரும், ஊர்க் குடியிருப்பின் ஊரவரும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.இதே போன்று இந்து ஆலயங்களின் தேவதானக்குடியிருப்பும், சமணரின் பள்ளிச் சந்தக் குடியிருப்பும் இணைந்து செயல்பட்டுள்ளன. கொங்கு நாட்டின் வேளாண் குடிகளான வெள்ளாளக் கவுண்டரும், வேட்டுவக் கவுண்டரும் முறையே, வெள்ளானூர்- வேட்டவூர் என ஊர் அளவிலும், வெள்ளாநாடு - பூலுவநாடு என , நாட்டளவிலும் தனித்தனி அவைகளாக இணைந்து செயல்பட்டுள்ளனர். { கொங்குநாடு- மக்கள் வெளியீடு- Dr.மாணிக்கம்} ஆக இங்கு சுட்டப்படும் இரண்டு ஊர் அவைகள் சமய அடிப்படையிலோ அல்லது கள்ளர்-மறவர் எனும் சமூகக் குழுக்களின் அடிப்படையிலோ தனித்தனியாகச் செயல்பட்டன எனக்கருதலாம்.
Reference..
1. IPS: 196, 125, 341, 447, 198, 855, 838, 158, 125, 341
2. Recent perspective of early Indian history, - 1995, Romila Thapar.
3. The culture and civilisation of Ancient india in historical outline, - D.D.Kosambi
4. கொங்கு நாடு - {மக்கள் பதிப்பகம், Dr..Manickam}
5. புதுக்கோட்டை 1600 வரை,
6. Trade and state craft in the age of colas {Dr. R.Kenneth Hall}
Thanks to,
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
{கல்வெட்டு படங்கள்}
நன்றி!.
No comments:
Post a Comment