Tuesday, May 29, 2018

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்



சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வருவதாகவும், அதற்கு மின் இணைப்பு பெற அண்டை வீட்டுக்காரர் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தும்போது அந்தப் புறம்போக்கு நிலத்தில் ஒரு பகுதியை அண்டை வீட்டுக் காரருக்கு விட்டுக் கொடுத்து விட்டால் பிரச்சனை முடிந்து விடும் என்று மத்தியஸ்தம் செய்தவர்கள் சொன்னதாகவும் தெரிவித்தார்.

அந்த நிலம் தொடர்பான ஆவணம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். நீதிமன்றம் சென்று வழக்கில் வெற்றி பெற்றதாகச் சொன்ன அவர் அதற்கான ஆவணத்தைக் காட்டினார். அதில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்று கேட்டபோது எதிர் தரப்பினர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை என்று சொன்னார். மேலும் அந்த நிலம் அவரது உறவினரிடம் எழுதி வாங்கிய ஒன்று என்றும் சொன்னார். அதன் பின்னர் பதிவு பத்திரத்தின் பிரதியைக் காட்டினார்.

பதிவு செய்யப்பட்ட நிலத்தை ஏன் புறம்போக்கு நிலம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டேன். நாங்கள் இன்னமும் பட்டா வாங்க வில்லை என்று சொன்னார். அவரது அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். பதிவு செய்யப்பட்ட நிலம் என்றாலே அது புறம்போக்கு ஆகாது என்பதை அவருக்கு கூறினேன். உடனே பட்டாவிற்கு விண்ணப்பிக்குமாறு கூறினேன். பதிவுத் துறையில் தனது நில உரிமையை பதிவு செய்த ஒருவர் பட்டாக் கேட்டு விண்ணப்பிக்கும்போது நிர்வாகத் துறை பட்டா தர மாட்டேன் என்று மறுக்க முடியாது. வேறு ஒருவர் தக்க ஆதாரங்களுடன் அந்த நிலத்தை உரிமை கோரினால் நிர்வாகத் துறை பட்டாத் தர மறுக்கலாம். நீதிமன்றம் மூலம் உரிமை நிலைநாட்டப்படும்போது பட்டா கொடுத்தே ஆக வேண்டும்.

தற்போது ஒருவர் சட்டப்படியே நிலத்தை வாங்கி இருந்தும் தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய, நிலத்தின் மதிப்பைப் பொறுத்து கிராமங்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. பட்டா மாறுதல் செய்பவர் விவரமான ஆளாக இருந்தால் நூறு இருநூறில் வேலை முடிந்து விடும். அதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிறிது அலைய வேண்டியிருக்கும்.

பட்டா நிலம்

வெள்ளையர் காலத்திலேயே ஏறக்குறைய பெரும்பான்மை நிலத்தை அளந்து புல எண்கள் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் 1980களில் மறு அளவை செய்து புல எண்களும் பட்டாக்களும் வழங்கியுள்ளனர். ஆக புல எண் இல்லாமல் எந்தவொரு நிலமும் இருக்காது. அந்த நிலத்திற்கு ஒரு உரிமையாளர் இருந்து அது அரசாங்க பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது தனியாருக்குச் சொந்தமான நிலமாகும். அவரிடம் ஒருவர் அந்த நிலத்தை தானமாகவோ அல்லது விலை கொடுத்தோ வாங்கியிருந்தால் அந்த நிலத்தின் உரிமையாளராக அவர் பதிவு செய்யப்படுவார். இது பதிவுத் துறையில் செய்யப்படும் பதிவு ஆகும்.

பின்னர் அவர் நிர்வாகத் துறையான கிராம நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் மனுச் செய்து அந்த நிலத்திற்கான உரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவுத் துறையில் தனது உரிமையைப் பதிவு செய்த ஒருவர் ஏதாவது காரணத்தால் நிர்வாகத் துறையில் தனது உரிமைச் சான்றிதழைப் பெறாமல் இருந்து விடலாம். அப்போது அந்த நிலத்தின் உரிமைச் சான்றானது பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருக்கும். நிலம் விலைக்கு வாங்குவோர் குறைந்தது 30 ஆண்டுகாலம் வில்லங்கச் சான்று எடுத்துப் பார்த்துக் கொள்வது நலம்.

அதேபோல 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நில உரிமைப் பிரச்சனைகளில் உள்ள சிக்கல்களைப் போக்க நிலத்தை அனுபவிப்போருக்கு உரிமைச் சான்று (பட்டா) வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி பலரும் சட்டப்படி தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களுக்கு பட்டா வாங்கியுள்ளனர். பதிவுத் துறையில் பதிவு செய்த உரிமையாளர் அல்லது அவரது வாரிகள் கேள்வி எழுப்பாத வரை அவ்வாறு உரிமை பெற்ற ஒருவர் அந்த நிலத்தை தன் விருப்பப்படி அனுபவித்துக் கொள்ளலாம். வில்லங்கச் சான்றிதழ் எடுக்கும்போது அந்த நிலம் யார் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒத்தி, ஈடு எழுதி வாங்கினாலும் அதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நபருக்கும் பட்டா வைத்திருப்பவருக்கும் என்ன தொடர்பு? அந்த நிலம் அவரது கைக்கு எப்படி வந்தது என்பதை தெரிந்து கொண்டால் அந்த நிலத்தை வாங்குவதில் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

அவ்வாறு இல்லாது பட்டா வேறொருவர் வைத்திருக்க பதிவு செய்த உரிமையாளரின் வாரிசுகள் வந்து உரிமை கோரினால் பட்டா வைத்திருப்பவர் உரிமையை விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. 1987-ம் ஆண்டிலிருந்து பத்திரப் பதிவு கணிணி மயமாக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய பதிவுகளை ஊழியர்கள் பதிவேடுகளைத் தேடி சான்று வழங்கி வந்தார்கள். தற்போது 1967-ம் ஆண்டு முதலான பதிவுகள் கணிணியில் ஏற்றப்படுவதாக சொல்கிறார்கள். இவ்வாறு ஏற்றினால் நிலச்சிக்கல்கள் பெருகும் என்று பதிவு துறையில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். பல சொத்துக்களை காட்டி எழுதப்படும் உயில் சாசனங்கள் விலங்கச் சான்றில் இடம் பெறாமல் போகலாம்.

புறம்போக்கு நிலம்

இது இப்படி இருக்க புறம்போக்கு நிலம் என்றால் என்னவென்று பார்ப்போம். சாலைகளின் இருபுறமும் உள்ளதுதான் புறம்போக்கு நிலம். போக்குவரத்திற்கு புறமாக உள்ள நிலம். இது அல்லாமல் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், அணைகள், மலைகள், குன்றுகள் அருகேயும் புறம்போக்கு நிலங்கள் இருக்கும். இந்த நிலங்களுக்கு புல எண்கள் இருக்கும். இதில் ஆறு, ஏரி, கால்வாய், அணைகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் மலைகள், குன்றுகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் வருவாய் துறை, வனத்துறையின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

வருவாய் துறை, பொதுப்பணித்துறை நிலங்களை ஒருவர் அனுபவித்து வந்தால் அதற்கு தண்டத் தொகை வசூலிக்கப்படும். அந்தத் தொகையை செலுத்துவதற்கு வழங்கப்படும் ரசீதை 2சி பட்டா (தூசி பட்டா), பி மெமோ (பீமா) இது போன்ற ரசீதுகளை வைத்திருப்போர் புறம்போக்கு நிலத்தின் மீது உரிமை கோரி நீதிமன்றம் செல்லலாம். ஆனால் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அல்லது அரசுத் திட்டங்களுக்குத் தேவைப்படுவதாக இருந்தால் இந்த நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். பழங்குடியினர், மலைச் சாதியினர் போன்றோர் புறம்போக்கு நிலத்தில் வசித்தாலும் அவர்களுக்கு அந்த நிலத்திற்கு உரிமை வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளில் எனது நிலப் பிரச்சனைகளின் மூலமாக கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதியுள்ளேன். சட்ட வல்லுனர்கள் இன்னும் மேலான தகவல்களைத் தரலாம். (ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களே நில உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்)

Sunday, May 27, 2018

அடையாளம் காண வேண்டிய தலைவர்கள்


தமிழின விரோத கருத்துக்களால் பெரியார் என்ற ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் தமிழர்களுக்கு பெருந்தீங்கு செய்திருக்கிறார் என்பதை இன்று தமிழ் மக்கள் புரிந்து ஈவெராவை அடையாளம் கண்டுள்ளனர். அதுபோல அடையாளம் காண வேண்டிய கடந்த காலத் தலைவர்தான் காமராஜர். இவர் ஈவெராவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை.

இவர் தமிழ் மண்ணை அண்டை மாநிலங்கள் பறிப்பதை வேடிக்கை பார்த்தவர் ஆவார். அதுபற்றி கேட்டபோது
மேடாவது குளமாவது என்று எள்ளி நகையாடியவர் ஆவார். தமிழ் மொழியை அலட்சியப்படுத்தி இந்தியை கற்கவேண்டும் சொன்னவர் ஆவார். அதைவிட முக்கியமான விஷயம் தமிழினத்தின் முக்கிய இனக்குழுக்களான மறவர்-பள்ளர் இடையே பகைமை ஏற்பட காரணமாக இருந்தவர்.  அதுவே இன்று பட்டியல் சாதியினர் - முக்குலத்தோர் இடையேயான பகைமையாக மாறி நிற்கிறது. இவர் முதுகுளத்தூர் கலவரத்தை உருவாக்கி இந்தப் பகைமையை ஏற்படுத்தினார். முதுகுளத்தூர் கலவரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதாகக் கூறிக் கொண்டு மறவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதம் ஆகும். (அதற்கான பலனை அந்த ஆட்சியாளர்கள் பெற்றார்கள் என்பது வேறு விஷயம்). தமிழ் மக்கள் இதனை உணராமல் இந்தப் பகைமை போகாது. எனவே தமிழ் மக்கள் காமராஜரின் ஆட்சிகாலத்தை, செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசுவது, நாடார் - முக்குலத்தோர் இடையே பகைமையை ஏற்படுத்தும், எனவே காமராஜர் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையில் தமிழின நலன் என்று வரும்போது தமிழ் மக்கள் தங்கள் சொந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கி எறிவார்கள், தூக்கி எறிய வேண்டும். அந்த வகையில் நாடார் மக்களும் காமராஜரை அடையாளம் கண்டு அவ்வாறு செய்வார்கள் என்று நம்புவோம்.

ஈவெராவை அடையாளம் காணாமல் தமிழின மீட்சி எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே காமராஜரை அடையாளம் காணாமல் பட்டியல்சாதி மக்கள் மற்றும் முக்குலத்தோர் இடையேயான பகைமை போகாது.

முதன் முதலில் ஈவெரா பற்றிப் பேசியபோது நாயக்கர் மக்களின் பகைமையை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். இன்று ஈவெராவின் இரண்டகங்களை அவர்களும் புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். காமராஜர் விஷயத்திலும் அதுவே நடைபெறும். 

Friday, May 25, 2018

சாதியும் வகுப்பு பிரிவினையும்


இங்கே வகுப்பு பிரிவினை இல்லை, சாதிப் பிரிவினை மட்டுமே உள்ளது, அதனால் கம்யூனிஸம் என்பது இந்தியாவுக்குச் சம்பந்தம் இல்லாதது என்று என் நண்பர்கள் வாதம் செய்கிறார்கள்.
ஆனால் தூத்துக்குடி ஒரு பொதுவான எடுத்துக்காட்டாக உள்ளது. இங்கே கொல்லப்பட்டவர்களில் பாதிப்பேர் நாடார் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தச் சாதியில் பணக்காரர்கள் சொகுசு வாழ்க்கையும், ஏழை மக்கள் தலித்களைப் போல எளிய வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.
இதுவரை எந்தவொரு பணக்கார நாடாரும் கொல்லப்பட்ட ஏழை நாடார்களுக்காக குரல் கொடுக்க வில்லை. தமிழகத்தின் மிகப்பெரிய ஊடகமான தினத்தந்தி ஒரு நாடாருக்குச் சொந்தமானது. ஆனால் இது வெளிப்படையாக அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பணக்கார மாஃபியாவான விவி மினரல்ஸ் மனிதத் தன்மையைக் காட்டுவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒரேயொரு மத்திய அமைச்சர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். கொலைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அவர் மோதிக்கு வாக்களித்திருந்தால் இப்படி நடக்குமா என்று கேட்கிறார். தமிழக பாஜக தலைவியான தமிழிசையும் ஒரு நாடாராவார். அவர் அமைச்சரின் வாக்குமூலத்திற்கு ஆமாம்சாமி போடுகிறார்.
ஒரே சாதி, ஆனால் வேறுபட்ட வகுப்புக்கள். சாவுக்குப் பின்னரும் இந்த வகுப்பு வேறுபாடு நீடிக்கிறது.
பி.கு. - பணக்காரர்கள் நாடார்கள் என்றும் ஏழைகள் சாணார் என்றும், இந்த இரண்டு பிரிவினைகள் இன்னமும் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையில்லை.
-ஆங்கிலத்தில் எழுதியவர் #Andez Raj A Fernando

Wednesday, May 16, 2018

சாதியால் சாதித்தது என்ன???


தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள உணவகங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள பொட்டிக்கடைகளையும் உள்ளடக்கி வர்த்தகம் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,

தமிழ்நாட்டின் நிலங்கள் அனைத்தும் தமிழருடையது தான் என்றும், உழவர் சங்கத்தலைவர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,

அதுபோக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் அனைத்திலும் தமிழர் தலைமைதான் என்றிருந்தேன்,

இதுபோக இன்னும் விடுபட்டுள்ள அனைத்திலும் தமிழர்தான் ஆதிக்கத்தில் உள்ளனர் என்றிருந்தேன்,

இப்போதுதான் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது, எல்லாத்திலும் தமிழராக இருந்திருந்தும் பின்பு ஏன் ஈழம் சுடுகாடாகியது,தமிழ்நாடு ஆகிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது,

கேள்விக்கான விடையை தேடும்போது ஆதிக்கத்திலுள்ள ஒரு கருத்தியலின் சித்தாந்தம் இறுதியாக சாதியொளிப்பில் நின்றது,

எதற்காக இந்த சாதியொளிப்பு நாடகம் என ஆராய்ந்து ஆணிவேரை பிடித்திழுக்க முயன்றால், அவ்வேரை வலுவாக பிடித்திருந்தது தமிழரல்லாத வேற்றினச் சாதிகள்,

பிறகுதான் அரசியலையும், அரசியல் அதிமுக்கிய தலைகளின் பூர்வீகத்தையும், ஒவ்வொரு துறையிலும் ஊடுறுவியிருந்த வேற்றினச் சாதிகளையும் பலருடைய தேடலின் மூலம் அறிய நேரிட்டது,

ஒரு இனம் தன் தொன்மையை இழந்து நிற்கவேண்டும் என்பதற்காகவும், உடமை, உரிமை,ஆளுமை, அரியணையை தக்கவைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவும்,

மன்னராட்சி அநாகரிக கூட்டம் மொழியை கவசமாக்கி, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி, அதையும் இனமென்று பொய்யுரைத்து ஒரு தொன்மை வாய்ந்த இனத்தை காயடித்துக்கொண்டிருக்கிறது என்பதை,

இவ்வளவையும் அறிய புதைக்க நினைத்த சாதி எனப்படும் குடிவழியை தோண்டியெடுத்து அக்குவேர் ஆணிவேராக பிரித்து வகைப்படுத்த முடிந்தது,

யாருக்கு எப்படியோ, யாருக்கு எத்தனைக் கேள்விகள் எழுந்தாலும், தமிழ்நாட்டில் வாழ்வோரெல்லாம் தமிழரே என்ற பிம்பத்தை உடைத்தெறிய சாதி என்னும் குடிவழியை வைத்தே இனங்காண முடிந்தது,

இக்குடிவழியில்,வந்தவனாலும், உள்ளவனாலும் ஏற்பட்டுள்ள விரிசலை, காழ்ப்பை, பகையை,பொறாமையை, சுயநலத்தை களைய என்ன செய்ய வேண்டுமோ அதைமட்டும் ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும்.

இரா. வேல்முருகன்

Saturday, May 12, 2018

எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதன்



படத்தில் இருப்பவர் எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதன். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இவர் மதுரை மட்டுமல்லாமல் வடுகபட்டி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய ஊர்களில் எலும்பு வைத்தியம் செய்து வருகிறார்.

இவரது தாத்தா காலத்திலிருந்து இவர்கள் இந்தத் தொழிலைச் செய்து வகிறார்கள். இவரது தந்தைக்குப் பின் இவர் தனது வைத்திய சேவையை தொடர்கிறார். பொதுவாக இவர்களின் வைத்திய முறை நமது பாரம்பரிய வைத்திய முறையாகும். எலும்பு முறிவுகளுக்கு கட்டுப் போட்டு மருந்து கொடுப்பார்கள்.

ஆங்கில வைத்தியம் என்பது உடலைக் கிழித்துச் செய்வது. நமது பாரம்பரிய வைத்தியம் வெளிப்புறம் இருந்தே சிகிச்சை அளிப்பது. ஆங்கில வைத்தியர்கள் எலும்பு முறிவை எக்ஸ்ரே எடுத்து அதன் அடிப்படையில் கட்டுப் போடுதல், அறுவைச் சிகிச்சை செய்தல், முறிந்த எலும்புகளை போல்ட்-நட் போட்டு இணைத்தல் போன்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் ஆங்கில வைத்திய முறையை சிகிச்சை என்று சொல்வதை விட சித்ரவதை என்றே சொல்லலாம். இது போன்ற இணைப்புகளால் அந்த உறுப்புகள் இணைக்கப்பட்டிருக்குமே தவிர செயலற்றதாக இருக்கும். ஆனால் பாரம்பரிய வைத்திய முறையில் அந்த உறுப்பு மீண்டும் இயங்கத் தொடங்கும்.

அப்படி பலரும் தங்கள் எலும்பு முறிவுகளை ஆங்கில வைத்திய முறையில் சரி செய்ய முடியாமல் பெரும் பணத்தை இழந்து இவரிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதைக் காணலாம். பாரம்பரிய வைத்திய முறையில் வைத்தியத்திற்காக சிறிதளவு செலவு செய்தாலே போதுமானது.

ஒருநாள் காலையில் எழும்போது என் மனைவியால் நிமிர முடியவில்லை கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே நாங்கள் வழக்கமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆங்கில வைத்தியரிடம் காட்டினோம். சோதனை செய்த மருத்துவர் முதுகெலும்பு டிஸ்க் லேசாக விலகியுள்ளது. மூன்று நாட்கள் ஊசி போட்டால் சரியாகிவிடும். பின்னர் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதன்படி தினமும் 2 ஊசி என்ற கணக்கில் 3 நாட்கள் தொடர்ந்து ஊசி போட்டுக் கொண்டோம் வலி குறைந்தாலும் நிற்கவில்லை. பெல்ட் போட்டுக் கொள்ளச் சொன்னார். பெல்ட் போட்டும் பலனில்லை.

அதுபற்றி சொன்னதும் இனி எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். எந்த வழியிலும் அது விரும்பத் தகாத ஒன்றாகவே இருக்கும் என்பதை உணர்ந்தோம். இது பற்றி நண்பர்கள் சிலரிடம் விசாரித்தபோது எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதனைப் பற்றிச் சொன்னார்கள். அவர்கள் சனிக்கிழமை தோறும் எங்கள் ஊரின் அருகேயுள்ள வடுகபட்டி, பெரியகுளத்திற்கு வந்து சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது.

அவரைச் சந்தித்து ஆங்கில வைத்தியர் சொன்ன தகவலைச் சொன்னோம். முதுகெலும்பு விலகி இருந்தால் உங்களால் நகரக் கூட முடியாது என்று சொன்ன அவர் முதுகு சவ்வு விலகி இருக்கிறது. வாரம் ஒருமுறை கட்டுப் போட வேண்டும். 3 முறை கட்டுப்போட்டால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதன்படி அவர் கட்டுப் போட்டு மருந்துகளைக் கொடுத்து  அனுப்பினார். சரியாக ஒரு மாத காலத்திற்குள் சரியாகி விட்டது.

இவ்வாறு கட்டுப் போடச் சென்றபோது பனை மரத்தில் இருந்து விழுந்து கை எலும்பை முறித்துக் கொண்ட ஒருவர் சிகிச்சைக்காக வருவதை பார்க்க முடிந்தது. அவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து ஓரிரு லட்சங்களை இழந்திருந்தார்.

முறிந்த எலும்பில் நான்கு துளைகளைப் போட்டு எலும்புகளை இணைக்க முயன்றிருந்தார்கள். அதற்கான எக்ஸ்ரேக்கள் அவரிடம் இருந்தன. எலும்பு இணைக்கப்பட்டிருந்தது ஆனால் கை செயலற்று இருந்தது. அதைப் பார்த்த வைத்தியர் கையை சரி செய்து விடலாம் என்று சொல்லி கட்டுப்போடும் வேலையைத் துவங்கினார். இன்று வைத்தியரைச் சந்தித்த போது அந்த நபர் தேறி வருவதாகச் சொன்னார்.

எலும்பு தொடர்பான சிறு  வலி, முதல் முறிவு வரை இவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை செய்து கொள்ளலாம். எலும்பு வைத்தியம் முக்கியமாக இருந்தாலும் இவர் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார். மதுரை, தேனி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இவரை அணுகலாம். வைத்தியரின் தொடர்பு எண் 99426 47440

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...