Sunday, December 8, 2019

" தெலுங்குமயமான இட ஒதுக்கீடு ஆணைகள் "


நீதிக்கட்சி துவங்கப்படுவதற்கு முன்பே பல இட ஒதுக்கீடு அரசாணைகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களே தந்திருந்தார்கள். பல அரசாணைகளுக்கு பின்னர், சென்னை மாகாண அரசு 1919 ஜனவரியில் எழுத்தர்கள், துணைத் தாசில்தார், சார்பு நீதிபதிகள் பதவிகளின் நியமனத்தின்போது தமிழ், தெலுங்கு மொழியினருக்கும் அவரவர் விகிதாசாரத்திற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்திருந்தது. மேலும், மொத்தப் பதவிகளில் பார்ப்பனர்கள் 50% மேற்படாமலும் பார்ப்பனரல்லாதார் முஸ்லீம்கள் 50% குறையாமலும் நிரப்பப்பட வேண்டுமெனவும் அதே அரசு ஆணை தெரிவித்திருந்தது. அதே ஆண்டு, சென்னை மாகாண அரசு அளித்த இன்னொரு ஆணையின்படி மேலே குறிப்பிட்டுள்ள வகையில் தேர்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த 1919-ம் ஆண்டு ஆணையின் தமிழர்களின் வீதப்படி பதவிகள் அளிக்கப்பட வேண்டுமென்று அடிப்படையை தகர்க்கும் வகையில் நீதிக்கட்சியின் 1921-ம் ஆண்டு அரசாங்க ஆணை இருந்தது. முதலில் இந்த 1921-ம் ஆண்டு இட ஒதுக்கீடு ஆணை என்பதே அதற்கு முந்தைய அரசாணை எண் 128(2)-ஐ மேலும் அரசாங்கத்தின் அனைத்து பதவிகளுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான ஆணை மட்டுமே. ஏறக்குறைய இதற்கு முன்னரே ஆங்கில அரசின் பல ஆணைகள் அரசாங்கத்தின் எல்லாப் பதவிகளுக்கும் பொருந்துவதாக இருந்தன.

இதனால்தான், இந்த ஆணை அமல் செய்யப்படாமலேயே இருந்தது. இந்த 1921-ம் ஆண்டு ஆணை எண் 613-ல் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத இந்துக்கள், இந்தியக் கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், அய்ரோப்பிய மற்றும் ஆங்கிலோ - இந்தியர், பிறர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை அரையாண்டுக்கு ஒருமுறை அறிக்கையாக அனுப்ப வேண்டுமென துறைத்தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளுக்கு ஆணையிடப்பட்டிருந்தது. இந்த ஆணை தமிழ், தெலுங்கு சதவீதத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெரிவிக்கச் சொல்லவில்லை என்பது எதேச்சையாக நடைபெற்றதாக கருத இயலாது ஏனெனில் அரசுப் பணிகளில் தமிழர்களின் ஆதிக்கத்தை களைந்தெறிய புறப்பட்ட தெலுங்கர்களின் தனி ஆந்திர கோரிக்கைக்கு உரம் ஊட்டியவர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருக்கக்கூடிய நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற நேரம். இதனால், தெலுங்கர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டாலும் அறிந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். 

இதனை அடுத்து நீதிக்கட்சி வெளியிட்ட இரண்டாவது அரசாணை, நீதிக்கட்சியின் எண்ணத்தை தெளிவுபடுத்தியது.
தமிழர்களை அரசுப் பணிகளிலிருந்து அகற்றிடவும் தெலுங்கர்களுக்கு அரசுப் பணிகளை உறுதிப்படுத்தவும் இரண்டாவது இட ஒதுக்கீடு அரசு ஆணை எண் 658-ஐ, 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்டது. இந்த இரண்டாவது இட ஒதுக்கீடு ஆணை என்பது கடந்த 70 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு ஆணைகளை உறுதி செய்வது போல இருந்தாலும் அந்த ஆணையானது தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கை.
இந்த அரசின் பரிவைப் பெற்றதும் சட்ட மேலவையில் பலமுறை கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுமான அரசாங்கப் பணிகளில் அந்தந்த மொழிப் பகுதிகளை சார்ந்தவர்களை கொண்டே நியமிக்கப்பட வேண்டுமென்பதைத் தொடர்ந்து, தெலுங்கு மாவட்டங்களிலும் ஏரியாப் பகுதிகளிலும் உள்ள தலைமை அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தை, பகுதியைச் சாராத பிறமொழியின பணியாளர்களின் பட்டியலை தயாரித்து வைத்துக் கொள்வதோடு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அத்தகையவர்களின் எண்ணிக்கையை குறைத்திட வேண்டுமென ஆணையிடப்படுகிறது. அந்த இரண்டாவது ஆணையுடன் தெலுங்கு மாவட்டங்கள், ஏரியாப் பகுதிகளின் பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டாவது ஆணையென்பது தெலுங்குப் பகுதிகளில் அரசாங்கப் பணிகளில் தமிழர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்ற தெலுங்கர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தெலுங்குப் பகுதிகளில் தமிழ்ப்பார்ப்பனர்களும் மராட்டியப் பார்ப்பனர்களும் அதிக அளவில் பணிகளில் இருந்ததை அதுவரை எதிர்த்து வந்த தெலுங்குப் பார்ப்பனர்களுக்கு உறுதுணையாகவும் அமைந்துபோனது. ஏனெனில், பார்ப்பனர்களுக்கு 50% மேல் தரக்கூடாது என்ற முந்தைய ஆணைகளுடன் இந்த இரண்டாவது ஆணையில் குறிப்பிட்டுள்ள தெலுங்கு மொழிப் பகுதியைச் சார்ந்தவர்களுக்கே என்கிறபோது, தெலுங்கு மாவட்டங்களில் உள்ள அரசாங்க பணியிடங்களில் 50% தெலுங்குப் பார்ப்பனர்களே நியமனம் செய்யப்படுமென்ற வாய்ப்பை உருவாக்கியது. அதைப்போல, பார்ப்பனரல்லாதார் என்ற அடிப்படையிலும் அந்த தெலுங்கு மாவட்டங்களில் தெலுங்கர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பதை இந்த இரண்டாவது இட ஒதுக்கீடு ஆணை உறுதி செய்தது. 

இதன் வழியாக, பார்ப்பனரோ, பார்ப்பனரல்லாதாரோ யாராக இருப்பினும் அரசாங்க பணியிடங்களைப் பொறுத்தவரை தெலுங்கர் மயமாக்க நீதிக்கட்சி அரசின் இந்த இரண்டாவது ஆணை தெளிவாக்கியது. இப்படி இட ஒதுக்கீடு ஆணைகளில்கூட தெலுங்கு மயமாக செயல்பட்ட நீதிக்கட்சியானது. மொழி கடந்த பார்ப்பனரல்லாத நிலையை எடுக்காமல் தெலுங்கின ஆட்சியாக, கட்சியாக தான் செயல்பட்டது.

தமிழ்நாடு தமிழருக்கே,  ஆசிரியர்: வழக்குரைஞர் க.சக்திவேல்

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...