Thursday, October 27, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் – இந்தியாவின் தவறான அணுகுமுறையும், ஈழத் தமிழர்களுக்கான சிக்கல்களும்


ஸ்பெக்ட்ரம் ஊழல் – இந்தியாவின் தவறான அணுகுமுறையும், ஈழத் தமிழர்களுக்கான சிக்கல்களும்

மின்னஞ்சல்அச்சிடுகPDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

2010 டிசம்பர் 25ம் தேதி டெய்லி மிரர் பத்திரிகையில், இந்தியா இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் (தோளில் வைத்து சுடும் ஐஜிஎல்ஏ ஏவுகணைகள்) பரிசளிப்பதாக பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது பிடிஐ செய்தியை ஆதாரமாக கொண்டு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் தாக்குதலுக்கு உதவும் ஏவுகணைகள் ஆகும். இவற்றைத்தான் இந்தியா முன்னதாக எல்டிடிஈ மீது தாக்குதல் தொடுக்க இலங்கைக்கு கொடுத்தது. ஆனால் 2004 முதல் 2009 வரை நடைபெற்ற போரில் பயன்படுத்த இவற்றை இலங்கைக்கு கொடுத்து உதவியது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது.
karunanidhi_381முல்லைத்தீவின் மையப் பகுதியில் உள்ள வீடுகளின் மீது இந்த ஏவுகணைகளால் 20லிருந்து 30 குண்டுகள் சுடப்பட்டதாக அங்கிருந்து வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். அங்கிருந்து வெளியேறாவிட்டால் முன்னேறிவரும் இலங்கை ராணுவம் அவர்களுக்கு அந்த வீடுகளிலேயே சமாதி கட்டியிருக்கும். இது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் மேலும் சில ஆயிரங்களை சேர்த்திருக்கும். இலங்கை மீது கொண்டுவரப்படும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளில் இங்கிருந்து வெளியேறியவர்கள் நம்பகமான சாட்சிகளாக இருப்பர்.
இந்தியாவின் மூடிமறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நாராயணன்/மேனன் ஆகிய இருவரும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு போராளிகளே காரணம் என்று கூறுகின்றனர். இதில் நாராயணன் உருவாக்கிய ‘பாதுகாப்பு வளையத்திற்குள்‘ (முள்ளிவாய்க்கால்) கொல்லப்பட்டவர்களுக்கும் போராளிகளையே காரணமாக கூறுகின்றனர். மேலும் 3,00,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆட்டுமந்தைகள் போல முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். இவையெல்லாம் இனி வெளியிடப்படும் பிரசுரங்களில் இனவெறிபிடித்த சிங்களர்களின் ‘மஹாவம்சம்‘ மற்றும் சமதர்ம இந்தியாவின் ‘கீதைக்கு‘ புகழ் சேர்க்கும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்னதாக 1990களில் இந்திய அமைதிப்படை ‘யாழ்ப்பாண மருத்துவமனையில் இனப்படுகொலை‘ செய்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
டெல்லி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயுதங்கள், போர் வீரர்களை அளித்து வந்தது பற்றி பலமுறை வெளிச்சம்போட்டு காட்டியும் டெல்லி தொடர்ந்து தான் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவில்லை என்று மறுத்து வந்தது. இது யூபிஏ/காங்கிரஸ் தொடர்ச்சியாக செய்துவரும் துரோகச் செயலையே காட்டுகிறது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலைக்கு நாராயணன்/மேனனின் ‘திரைமறைவு‘ வேலையே காரணம் என்று கோத்தபயா ராஜபக்சே மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தமிழர்களை கொன்று குவிக்க தாங்கள் ஒருபோதும் உதவவில்லை என்று இந்தியா சொல்கிறது. 2009 நவம்பர் 14ம் தேதி கொழும்பு ஆல்கட்டி பகுதியில் கோத்தபயா பேசியவற்றை கோகலே தன் ‘இலங்கை-போரிலிருந்து அமைதி‘ (ஆகஸ்ட் 2009) புத்தகத்தில் விவரிக்கிறார். அதில் அவர், இந்தியா இலங்கைக்கு மறைமுகமாக கொடுத்த தாக்குதல் ஆயுதங்களை பட்டியிலிடுகிறார். இந்தியா 2006ம் ஆண்டு இந்தியா ஐந்து எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கைக்கு கொடுத்தது. ‘இலங்கை விமானப்படையின் அடையாளங்களோடு‘ இந்த ஹெலிகாப்படர்களை இயக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் கொடுக்கப்பட்ட இது பெரும் துரோகச் செயலாகும். நிபுணர் நிதினின் கருத்துப்படி, எல்டிடிஈயின் கடல் புலிகள் மீதான தாக்குதலை இந்திய – இலங்கை கடற்படைகள் கூட்டாக நடத்தின. இலங்கை கடற்படையின் தளபதியான கர்ணகோடா, எல்டிடிஈ தாக்குதலுக்காக நடுக்கடலில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க இந்தியாதான் உதவியது என்று கூறியுள்ளார். இந்தியா தனது இரண்டு போர்க்கப்பல்களான வராஹா மற்றும் விக்ரஹாவை இலங்கைக்கு கொடுத்தது. இவையே இலங்கையின் போர்க் கப்பல்களாக சகாரா மற்றும் சயூரலா என்ற பெயரில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன.
சக்திவாய்ந்த ராடார்கள் பொருத்தப்பட்ட இந்திய கப்பற்படையின் டானியர்கள் தமிழகத்தில் இராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இவை அடிக்கடி இலங்கைக்கு பறந்து போராளிகள் மற்றும் தலைவர்கள் இருக்கும் இடம் மற்றும் போரின் நகர்வுகளை பற்றி விரிவாக தகவல் சேகரித்து இலங்கைக்கு கொடுத்து வந்ததன. இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இலங்கையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் மூழ்கியிருக்க, அவர்கள் மும்பையில் எல்ஈடி தாக்குதல் நடத்துவதை கோட்டை விட்டுவிட்டனர். இந்த தாக்குதல் உலக அளவிலும் இந்தியர்களிடமும் இந்தியாவின் மானத்தை கப்பலேறச் செய்தது. இந்த தாக்குதல் பற்றிய இந்தியர்களின் மனநிலையை விவரிக்கும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா “நமது அரசியல்வாதிகள் அப்பாவிகளின் உயிருடன் விளையாடுகிறார்கள்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு மக்களின் ஆதங்கத்தை தெரிவித்தது. இது ஈழத்தமிழர்களை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த, தான்தோன்றித்தனமான சோனியா மும்பை மக்களின் பாதுகாப்பை மறந்து விட்டதை காட்டுவதாக அமைந்தது. இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் மட்டுமே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பாதுகாப்பு படையை எல்லாம் தமிழகத்தில் குவித்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் யாரும் இந்த பெருந்தவறுக்கு பொறுப்பேற்க வில்லை. வழக்கம்போல யூபிஏவின் விசாரணைகள் 9/11 தாக்குதலுக்கு காரணமாகும் பாதுகாப்பு தோல்வியையோ அதற்கு காரணமானவர்களையோ விட்டுவிட்டது.
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை இந்தியா தடுக்க முயன்று வருவதற்கான காரணம், முள்ளிவாய்க்கால் படுகொலையில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு வந்ததையும் அதன் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்பு இழப்பால் மும்பை மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தினாலுமே ஆகும். இந்தியா, தான் இலங்கை விவகாரத்தில் தலையிடவில்லை என்று போலியானதொரு நிலையை கடைப்பிடிப்பதாக காட்டி வந்தது.
அந்த பொய்நிலையால் ஏற்பட்டதே 2ஜி அலைக்கற்றை ஊழல். தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகள் பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பதற்காகவே டெல்லி இதுபோன்ற ஒரு போலியான நிலையை கடைப்பிடித்தது. இந்த ஊழலில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் பிரதமர் மன்மோஹன் சிங் (யூபிஏவின் முகமூடி), ராஜீவ் கொலைக்காக தமிழர்களை பழிவாங்கவேண்டும் என்று துடித்து வந்த ‘தான்தோன்றித்தனமான‘ சோனியா, அவரது எடுபிடிகளான, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் மற்றும் தெற்கு பிளாக்கில் உள்ள பிரிவினைவாத அதிகாரிகள் நாராயண்/மேனன் ஆவர். ஊழல் பற்றிய விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை என்றாலும், இந்திய அரசு மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இன்னமும் முழுவதுமாக வெளிப்படவில்லை. ஊழலுக்கு எதிராக பீகாரில் கிடைத்த தேர்தல் தோல்வி யூபிஏவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கலங்க வைத்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
இந்தியாவின் தொடரும் நடிப்பு வளர்த்த கடா மார்பில் பாய்வது போல 2ஜி அலைக்கற்றை ஊழலை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் இருக்க, யூபிஏவின் கீழாக ஆட்சியில் வளர்ந்துவரும் ஊழல் கலாச்சாரம் அதன் தேர்தல் எதிர்பார்ப்பை மாற்ற உள்ளது. பொதுமக்களின் பணத்தை தவறாக கையாளும் அரசின் மீது வாக்காளர்கள் இரக்கம் காட்டமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. லட்சக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள 2ஜி ஊழல், பொதுமக்களின் பணத்தை மிகத்தவறாக பயன்படுத்தியதற்கான உதாரணம் ஆகும். தங்களது பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்தால் மக்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்? இதுபோன்ற மாபெரும் ஊழல்களை யூபிஏ கண்டுகொள்ளாமல் இருப்பது, ராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஊழல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் கலாச்சாரத்தையே காட்டுகிறது. இப்போது அது யூபிஏ மூலம் உச்சநிலையை எட்டியுள்ளது.
டெல்லியின் மற்றொரு பயங்கரமான முயற்சி 2ஜி ஊழலை வைத்து திமுக தலைவரை தனது தமிழர் விரோத கொள்கைக்கு உடன்படச் செய்ததாகும். அதோடு அரசியல் ரீதியாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான முயற்சி செய்தது. இந்திரா காங்கிரஸ் அறிவுஜீவிகள் தங்களது கட்சி உருவாக்கிய திட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்தனர். மேலும் காட்டிக் கொடுக்கும் விதமாக தங்களது விசுவாச கூட்டணி கட்சியை விலையாகக் கொடுத்து தங்களது அதிர்ஷ்டத்தை வாங்க முயன்றனர்.
மேலும் காங்கிரஸ் முள்ளிவாய்க்காலில் 40,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் தங்களது நியாயமான உணர்வை வெளிப்படுத்த விடாமல் அடக்கி வைத்தது. இப்போது 2ஜிக்கான குற்றச்சாட்டு ராஜா மற்றும் இந்திரா காங்கிரஸின் மிரட்டலுக்கு அடிபணிந்த கருணாநிதி மீது திருப்பி விடப்பட்டுள்ளது. சோனியாவின் எடுபிடியான பிரணாப், கருணாநிதியை மிரட்டி டெல்லி சொல்வதன்படி கேட்கவேண்டும் இல்லையெனில் 2ஜி உழலை சிபிஐ விசாரணை செய்யும் என்று கூறி மிரட்டினார். காங்கிரஸின் முன்னணி தலைவராக இருப்பதை மிகவும் விரும்பும் பிரணாப் முகர்ஜி எதிர்க்கட்சியின் கோரிக்கையான ஜேபிசி விசாரணையை ஏற்க மறுத்துவிட்டார்.
manmohan_a_raja2ஜி ஊழலில் சிதம்பரமின் கொள்கை மிகவும் பயங்கரமானது. சிதம்பரத்தின் அலுவலகம்தான் தொலைபேசி உரையாடல்களை பதிவுசெய்து அவற்றில் சிலவற்றை வெளியிட்டு 2ஜி ஊழலை பெரிதுபடுத்தியது. கூட்டு பாராளுமன்ற குழு விசாரணை மட்டுமே சிதம்பரத்தின் சித்து வேலையான சில ஒலிப்பதிவுகளை மட்டுமே வெளியிடுவதற்கான காரணம் என்னவென்று வெளிக்கொண்டு வரும். இதற்கு காரணம் திமுக தலைவருக்கு தர்மசங்கட நிலையை ஏற்படுத்தி மத்தியிலும்/தமிழகத்திலும் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதுமே ஆகும். இந்த ஊழலில் டெல்லியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் பங்கு உண்டு. அதனால்தான் யூபிஏ ஜேபிசி விசாரணைக்கு அஞ்சுகிறது. அதுபோன்ற ஒரு விசாரணை போபர்ஸ் ஊழலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட அதே நிலைக்கே அது மீண்டும் தள்ளப்படும். ராஜாவை விசாரிக்க ஜேபிசி விசாரணை போன்ற கடுமையான முறையை பின்பற்றினால் அது யூபிஏவின் முக்கிய பிரமுகர்களின் பங்கையும் வெளிக் கொண்டு வரும். இந்திரா காங்கிரஸ் ஒரு சாதாரண மனிதனைப் போல இருந்து ஜேபிசி விசாரணைக்கு உட்பட்டால் விசாரணையில் போபர்ஸ் ஊழல் போன்ற ஒரு ஊழல்தான் வெளிவரும். 2ஜி ஊழலை வெளிக்கொண்டு வருவது நீண்டகாலமாகவே (3+ ஆண்டுகள்) தாமதிக்கப்பட்டு வந்தது. போபர்ஸ் போன்ற முடிவை தருவதற்காக ஏற்கனவே கொள்ளை அடித்த பணத்தை கொண்டு போன தடத்தை எல்லாம் அழித்துவிட்டார்கள். பிரதமரின் அலுவலகம் செயலற்று இருந்த காரணத்தால் அது உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இப்போது யூபிஏ, போபர்ஸ் முடிவை எட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் கோரிவரும் நம்பகமான ஜேபிசி விசாரணையை கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இந்திரா காங்கிரஸ், விசாரணைகளில் தான் விரும்பு முடிவை கொண்டு வருவதில் திறமை பெற்றது. பயந்து நடுங்கும் பிரணாப் ஜேபிசி விசாரணைக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் ஜேபிசி விசாரணைக்கு கடுமையாக எதிர்ப்பதற்கு காரணம் யூபிஏவுக்கும் இந்த ஊழலில் தொடர்பு கொண்டிருக்கிறது, இந்தியாவில் யூபிஏவின் ஊழல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற அச்சத்தின் காரணத்தினால்தான். போபர்ஸ் மற்றும் ஊழல்களுக்கு மக்கள் அளித்த வாக்கு அதிரடியாக இருந்தது.
மேலும் இந்திரா காங்கிரஸ் 2ஜி ஊழல் விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்திற்காக, குறிப்பாக திமுகவை தனது நீண்டகால கொள்கையான தமிழ் ஆதரவு அல்லது திராவிட ஆதரவு கொள்கையை இழக்கச் செய்து பெரும் அரசியல் இழப்பை சந்திக்க செய்தது. திமுக டெல்லியின் மிரட்டலுக்கு பணிந்து தமிழர்களின் உணர்வுப் பிரச்சனையான ஈழத்தமிழர் விவகாரத்தில் பின்வாங்கச் செய்தது. எனவே தமிழ்நாடும் ஈழம் வழியில் செல்ல நிர்பந்திக்கப்படுகிறதா என்று அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி 2008ம் ஆண்டு 2ஜி விவகாரத்தில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது தமிழக மக்களை கிளர்ச்சியின் ஓரத்திற்கே தள்ளிவிட்டது. 2008 செப்டம்பருக்கு பின்னால், தமிழ் கட்சிகள் (கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக) நடத்திய போராட்டங்கள் உச்சநிலையை அடைந்தன. அவை கருணாநிதியை ஈழப்பிரச்சனை குறித்து பேச வைத்தன. பேரணிகள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு செய்ய வைத்தன. வழக்கறிஞர்களின் போராட்டம் நீதிமன்றங்களை மூடச் செய்தது. திரைப்படத் துறையினரும் போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல மைல்களுக்கு நீண்ட மனித சங்கிலிகளும், தற்கொலைகளும் தமிழகத்தை போராட்டத்தின் விளிம்புக்கு தள்ளின. இதைக்கண்டு டெல்லி உஷாரானது.
டெல்லி உயர்மட்டத்தில் எதிர்விளைவை காட்டியது. டெல்லி அரசியல்வாதிகள் பிரணாபும் சிதம்பரமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தெற்கு பிளாக்கின் அதிகாரி நாராயணன் சென்னைக்கு வந்து கருணாநிதியை அடங்கு என்று மிரட்டிவிட்டுச் சென்றார். சோனியாவின் எடுபிடிகளான பிரணாபும் நாராயணனும் 2ஜி ஊழலில் திமுக அமைச்சர் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறி மிரட்டினர். 2ஜி ஊழலில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இழுக்கப்பட்டன. இதன் காரணமாகவே கருணாநிதி திராவிட கொள்கையை விட்டுக்கொடுத்து டெல்லியிடம் சரணடைந்தார்.
திமுக தலைவர் தனது அரசியல் வாழ்க்கையை எண்ணி கவலைப்பட்டார். மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் ஆட்டுமந்தைகள் போல ஈழத்தமிழர்கள் முள்வேலி கம்பிகளில் அடைத்து வைக்கப்பட்டபோது திறமையாக தமிழ் மக்களின் எழுச்சியை அடக்கினார். தமிழர்களின் மனநிலையை அடக்க திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் பெரிதும் உதவினர். முன்னணி தமிழ் தேசிய தலைவர்களான சீமான், நெடுமாறன், வைகோ மீது டெல்லியும் சென்னையும் ராஜபக்சே போல செயல்பட்டு ஈழ ஆதரவு போராட்டங்களை தீவிரவாத சட்டத்தின் கீழ் தடுத்தன. கருணாநிதி தனது தமிழர்/ திராவிடர் கொள்கைகளுக்கு எதிராக தனது பதவியை தக்க வைக்க மேலோட்டமான அமைதியை உருவாக்கினார். ஆனால் அந்த அமைதியின் கீழே ஆழமான கோபம் அடக்கப்பட்டது. தமிழக மக்கள் பீஹாரை போல வாக்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். யூபிஏ தனக்கு வளைந்து கொடுக்கும் கூட்டணி கட்சியை இழந்து இப்போது இரு கட்சிகளுக்கும் சரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இன்னமும் யூபிஏ-திமுக கூட்டணி சிறிதும் பிசகாத கூட்டணிதான். யூபிஏவின் ஊழல் தொடர்பை வேறறுக்க தமிழக தமிழர்கள் செயல்பட வேண்டிய நாளும், டெல்லி/கொழும்பு இனப்படுகொலை சர்வாதிகாரத்தை ஈழத் தமிழர் முறியடிக்க வேண்டிய நாளும் இதுவே.
வி.எஸ்.சுப்பிரமணியம்
தமிழில் - தேவன்
நன்றி - கிரவுண்ட் ரிப்போர்ட்
நன்றி - கீற்று

அடிமை இந்தியா - ஓஷோ





இந்தியா இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமையாக இருந்து வந்தது. முதலாளிகள் மாறிக்கொண்டே வந்தனர். ஆனால் அடிமைகள் மாறாமல் இருந்தனர். என் குடும்பம் முழுவதுமே சுதந்திரத்திற்காக போராடியது. எல்லாருமே தண்டிக்கப்பட்டனர்,சிறையிலடைக்கப்பட்டனர். நான் வயதில் மிகச் சிறியவனாக இருந்த காரணத்தால் நான் என் சித்தப்பா, அப்பாவுடன் இணைந்து போராடினேன். அவர்களிடம் ஒரு சிறு விஷயத்தை சொல்வேன், “உங்களால் ஒரு சிறு விஷயத்தை புரிந்துகொள்ள முடியவில்லையா?இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு நாட்டை சிறு நாடுகள் கைப்பற்றி ஆட்சி செய்ய முடியுமா? இந்த நாட்டை ஒரு நாடு என்று கூட சொல்ல முடியாது. இதனை கண்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஐரோப்பா முழுவதையுமே இந்த நாட்டிற்குள் அடக்கி விடலாம். இங்கிலாந்தை சொன்னால் அது இந்தியாவின் ஒரு பெரிய மாவட்டத்தை விட பெரியதாக இருக்காது. அது மட்டுமல்ல... முகலாயர்கள் வந்தார்கள். துருக்கியர் வந்தனர். மங்கோலியர் வந்தனர். ஹூனர்கள் வந்தனர். இந்த நாடு யாருக்கு வேண்டுமானாலும் அடிபணிந்து அடிமையாக தயாராக இருந்தது.

எனது கருத்து என்னவென்றால், ஆட்சியாள வந்தவர்களுடன் சண்டையிடுவது பற்றியது அல்ல. உண்மையான கேள்வி என்னவென்றால், யார் அடிமையாவது என்று உங்களுக்குள் நடைபெறும் சண்டையைப் பற்றியதாகும். இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. எப்படி ஒரு சிறு கூட்டத்தினர் வந்து நாடு முழுவதையும் ஆட்சி செய்ய முடியும்? நிச்சயமாக ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு அடிமை மறைந்திருக்க வேண்டும்.

இதை நீங்கள் இன்றும் கூட பார்க்கலாம். சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் கூட (இந்தப் புத்தகம் 24 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது) நீங்கள் என்ன பெற்று விட்டீர்கள்? இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சீனா தாக்குதல் நடத்தியது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அளவுகடந்து துயரப்பட்டார். அனுப்பப்பட்ட ராணுவம் தோற்கடிக்கப்பட்டது. சீனா அழகிய இமயமலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றியது. இந்தியா தோற்கடிக்கப்பட்ட பின்னர் நேரு, "அந்த நிலம் பயனற்றது. அங்கே புல் கூட முளைக்காது." என்று சொன்னார். அப்புறம் எதற்காக ராணுவத்தை அனுப்ப வேண்டும்? வீணாக கொல்லப்படுவதற்கா? அல்லது புல் கூட முளைக்காத ஒரு நிலத்தை பாதுகாக்கவா?

அதற்குப் பின்னால், எந்தவொரு ஜனாதிபதியும், பிரதமரும் அதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. அல்லது 'அந்த ஆயிரக்கணக்கான மைல் அழகிய இமயமலை என்ன ஆனது?எப்போது அதை திருப்பித் தரப்போகிறீர்கள்?' என்று கூட கேட்கவும் இல்லை.

பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டது. இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் சௌத்ரி. அவரது மனைவி என்னிடமும் எனது கருத்துக்களிலும் அதிக பற்றுக் கொண்டவர். உண்மையில் நடந்தது என்னவென்று அவர் என்னிடம் சொன்னார். தளபதி சௌத்ரி சூரியோதயத்திற்கு முன்னரே, அதாவது பாகிஸ்தான் ராணுவம் கண்விழிக்கும் முன்னரே தாக்குதலை நடத்த தயாராக இருந்தார். அவரது யுக்தி சரியானதாகவே இருந்தது. 'நாம் பாகிஸ்தான் பிடித்துக்கொண்ட நமது பகுதியை மட்டுமே மீட்கக் கூடாது. மிக அருகேயுள்ள லாகூரையும் பிடித்துக் கொள்ள வேண்டும்' என்று அவர் சொன்னார்.

அப்போதுதான் பேச்சுவார்த்தை என்று வந்தால் நமது கை ஓங்கி இருக்கும். 'நாங்கள் லாகூரைத் தருகிறோம். நீங்கள் எங்களது பகுதிகளை கொடுங்கள் என்று கேட்கலாம்.'இல்லாவிட்டால் நீங்கள் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்? எதற்காக நடத்துவீர்கள்?நீங்கள் எதையும் கொடுக்காமல் வெறுமனே எதையாவது கேட்பீர்களா? நாற்பது ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகிறது. 'நீங்கள் பிடித்த பாகங்களை திருப்பி கொடுத்து விடுங்கள்' என்று. அவர்கள் அதனை திருப்பித் தராமல் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி விட்டனர். இப்போது அது கைப்பற்றப்பட்ட பகுதி அல்ல. இந்தியத் தலைவர்கள் அமைதியாகவே உள்ளனர். யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

தளபதி சௌத்ரி தொடர்ந்து போன் செய்து, “என்னை முன்னேறிப் போக விடுங்கள்“ என்று கேட்டார். ஆனால் நேருவாலும் அவரது அமைச்சரவையாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. "நீங்கள் சூரியோதயம் வரை காத்திருக்க வேண்டும்" என்று சொன்னார்கள். ஆனால் உண்மையைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அவர் சூரியோதயம் வரை காத்திருந்தாரானால், காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தான் வசம் போயிருக்கும்.

அவர் அது வரை காத்திருக்கவில்லை. அவர் உண்மையில் ஒரு தைரியமானவராக இருந்தார். ஆனால் அவர்கள் பிரதமரின் உத்தரவைத் தராமல் அவரை சூரியன் உதயமாவதற்கு சற்று முன்னர் வரை காத்திருக்கச் செய்தனர். அவரது தைரியத்தின் காரணத்தால் பாகிஸ்தானால் ஒரு சிறு பகுதியை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனால் அது மிகவும் அழகிய பகுதியாகும். ராணுவ அறிவியலைப் பொறுத்தவரை அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஏனெனில் அந்த சிறு பகுதி பாகிஸ்தான் சீனாவுடன் இணைய வழி செய்கிறது. அந்தப் பகுதி இல்லாவிட்டால் பாகிஸ்தான் - சீனா நாடுகளின் எல்லைகள் தனித்தனியாக இருந்திருக்கும். பாகிஸ்தான் அந்தப் பகுதியை எடுத்துக் கொண்டது. இப்போது சீனா, லாகூர் வரை ஆயிரக்கணக்கான மைல் நீளம் கொண்ட சூப்பர் ஹைவேயை நிர்மாணித்துள்ளது. இரண்டு நாடுகளுமே இந்தியாவுக்கு எதிரிகள். இப்போது ஒன்று சேர்ந்து விட்டன.

"என்னை முன்னேற அனுமதியுங்கள். பாகிஸ்தான் அந்தப் பகுதி மீதே தன் கவனத்தை வைத்துள்ளது என்ற காரணத்தால், அந்தப் பகுதியை விட்டுவிடுங்கள். அவர்கள் அந்த பகுதியை எடுத்துக் கொள்ளட்டும். நேரத்தை வீணடிக்காதீர். என்னை முன்னேறிச் செல்ல விடுங்கள். நான் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரமான லாகூரை பிடித்து விடுவேன்." என்று சௌத்ரி வற்புறுத்தினார். லாகூர் பதினைந்து மைல் தூரத்தில்தான் இருந்தது. சில நிமிடங்களில் வேலை முடிந்து விடும். ஆனால் அமைச்சரவை கூடிப்பேசியது... பேசியது.... கூடிப்பேசுவதைப் பொருத்தவரை இந்த நாடு மிகவும் புத்திசாலியானது. பல நூற்றாண்டுகளாக இந்த நாடு எதையும் செய்யாமல் எல்லாத்தையுமே பேசிக்கொண்டே வந்திருக்கிறது.

சௌத்ரி லாகூரை பிடிக்கப் போகிறார் என்பதை அவர்கள் அறிந்ததும், அவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்? "உத்தரவு இல்லாமல் அப்படிச் செய்ய நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அவருக்கு தண்டனை கொடுத்தனர். முன்னதாகவே ஓய்வு பெறச் செய்தனர். "லாகூரை பிடிக்க விட்டிருந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு கண்டிருக்க முடியும். பாகிஸ்தான் லாகூரை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்திருக்காது. ஏனெனில் லாகூர் நம்மை ஆஃப்கானிஸ்தான்- சோவியத் யூனியனுடன் இணைக்கிறது" என்று அவரது மனைவி என்னிடம் சொன்னார்.

சோவியத் யூனியனுடன் சாலை, ரயில் போக்குவரத்தின் மூலம் இந்தியா இணையும் அபாயத்தை பாகிஸ்தான் கையிலெடுக்காது என்ற தனது கருத்தில் சௌத்ரி உறுதியாக இருந்தார். எனவே அவர்கள் தங்களது நிலையிலிருந்து மாறி பேச்சுவார்த்தைக்கு வரலாம். "நாங்கள் பிடித்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிடித்ததை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லியிருப்பார்கள்.

அடிமையாக இருக்க இந்த நாடு இரண்டாயிரம் ஆண்டுகளாக பாடம் கற்று வருகிறது. எனவேதான் சுதந்திரமடைந்து நாற்பது ஆண்டுகள் ஆகியும், சுதந்திரம் என்ற வார்த்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறதே தவிர அதனை எங்கேயும் பார்க்க முடியவில்லை. இல்லையெனறால், நான் ஒரு சர்ச்சைக்குரியவன் என்ற ஒரே காரணத்திற்காக, என்னைத் தடுக்க ஒரு போலீஸ் கமிஷனருக்கு எவ்வாறு துணிச்சல் வரும்? இன்னும் முப்பது நிமிடங்களுக்குள் பூனாவை விட்டு வெளியேறு என்று சொல்ல முடியும்?

எனக்கு ஒன்றை மட்டும் சொல்லுங்கள். உலகம் முழுவதும் ஏதாவது முக்கியத்துவம் பெற்ற ஒருவர் சர்ச்சை இல்லாமல் இருக்கிறாரா? ஏசு சர்ச்சைக்குரியவராக இருக்கவில்லையா?அவர் தனது தந்தையுடன் தச்சு வேலை மட்டும் செய்து வந்திருந்தார் என்றால் அவரை யாரும் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அவரது தந்தையை சிலுவையில் ஏற்றவில்லை.

புத்தர் சர்ச்சைக்குரியவராக இருக்கவில்லையா? ஆனால் எந்த அரசராவது அவருக்கு எதிராக ஆணை பிறப்பித்தாரா? அவருடைய காலத்தில் இந்தியா இரண்டாயிரம் அரசர்களால் ஆளப்பட்டது. அவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு தடையில்லாமல் சென்று வந்தார். அவர் விசாவோ பாஸ்போர்ட்டோ கூட பெறவில்லை. கௌதம புத்தரை விட சர்ச்சைக்குரிய நபர் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் அவர் இந்து மதத்தின் ஆணிவேரான வேதங்களுக்கு எதிராக பேசினார். அவர் பூசாரிகளாகவும் இந்துக்களுக்கு சட்டத்தை உருவாக்கி கொடுப்பவர்களாகவும் இருந்த வந்த பார்ப்பன‌ர்களுக்கு எதிராகப் பேசினார். இருந்தும் கூட அவர் ஒரு சர்ச்சைக்குரிய நபர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை யாரும் தடுக்கவில்லை.

நாம் அப்படி ஒரு அடிமைகளாகிவிட்டோம் என்று தோன்றுகிறது. நாம் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியுள்ளோம். இது உலகம் முழுவதும் உள்ள சிறந்த அரசியலமைப்பு சட்டங்களின் பிரதியாகும். நாம் அங்கிங்குமாக கிடைத்த சிறு சிறு துண்டுகளை எடுத்து ஒட்டிக்கொண்டோம். நான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் தவறாமல் ஒரு சிறுகதை நினைவுக்கு வரும் – அன்றைய தினம் டார்வினின் பிறந்தநாள். அவரது அண்டை வீட்டுச் சிறுவர்கள் அவருக்கு ஒரு பரிசு அளிக்க விரும்பினர். ஏனெனில் அவர் மிகவும் புகழ் பெற்ற மனிதர். அதோடு அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதரும் கூட. அவர் குழந்தைகளுடன் மிகவும் அன்புடன் பழகுவார். அவர்களுடன் விளையாடுவார். அவர்கள் அனைவருமே அவரது நண்பர்கள் ஆவர்.

அவரது பிறந்த நாளுக்கு என்ன கொடுப்பது என்று குழந்தைகள் யோசித்துக் கொண்டிருந்தனர். அவர் விலங்குகளைப் பற்றி அறிவதையே தனது ஒற்றைக் குறிக்கோளாக கொண்டிருந்தார். எப்படி உயிர் தோன்றியது, அது எப்படி இவ்வளவு வடிவங்களை எடுத்தது என்பதை கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தார். எனவே குழந்தைகள் என்ன செய்தார்கள் என்றால்... குழந்தைகள் பெரியவர்களால் சிதைக்கப்படும் வரை புத்திசாலிகளாகவே உள்ளனர். அவர்கள் சில பூச்சிகளைப் பிடித்தனர். அவற்றை துண்டுதுண்டாக வெட்டினர். ஒன்றிலிருந்து இறக்கை, ஒன்றிலிருந்து கால்கள், மற்றொன்றிலிருந்து உடல்,வேறொன்றிலிருந்து தலை என வெவ்வேறு பூச்சிகளின் உறுப்புக்களை வெட்டி ஒன்றாக இணைத்தனர். அவர்கள் அவற்றை பசை போட்டு ஒட்டி ஒரு புதிய பூச்சியை உருவாக்கினர். பூச்சிகள், பறவைகள், விலங்குகளில் மாபெரும் நிபுணராக உள்ள டார்வினால் அது என்ன பூச்சி என்று சொல்ல முடியுமா என்பதை தெரிந்துகொள்ள காத்திருந்தனர்.

அவர்கள் மிகவும் பரவசமாக இருந்தனர். அன்று மாலை அதனை டார்வினிடம் கொண்டு வந்தனர். அது என்னவென்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது வாழ்நாளில் உலகம் முழுவதும் சுற்றியுள்ளார். ஆனால் பக்கத்து வீட்டில் உள்ள இந்த சிறுவர்கள், தன்னால் பார்க்க முடியாத ஒரு பூச்சியை கண்டுபிடித்து விட்டனரா என்று வியந்தார். அதனை நெருக்கமாக வைத்துப் பார்த்தார். அவருக்கு வயதாகிக் கொண்டிருந்தது.“என் கண்ணாடியை கொண்டு வாருங்கள். நான் இந்த பூச்சியை பார்த்ததே இல்லையே” என்று கூறினார். அவர் தனது கண்ணாடியை அணிந்து கொண்டதும், “இப்போது இது என்ன பூச்சி என்று சொல்லுங்கள்?" என்று குழந்தைகள் கேட்டனர். அப்புறம் அவர், "இது ஒரு ஹம்பக்!" (போலியான பூச்சி) என்று சொன்னார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் போலியானது. கொஞ்சம் சோவியத் அரசியலமைப்பு,கொஞ்சம் அமெரிக்க அரசியலமைப்பு, பெரும்பாலான பகுதி இங்கிலாந்தின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது. மற்ற நாடுகளில் எதெல்லாம் நல்லது என்று பட்டதோ, தனிநபர் சுதந்திரம், வேறுபாடு பாராட்டாமை, கருத்துச் சுதந்திரம், மக்களால்,மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் என்று எல்லாத்தையுமே எடுத்துக் கொண்டனர். எல்லாமே கடன் வாங்கியது. படிக்கும்போது மிகவும் சிறந்த ஒன்றாகத் தோன்றும். ஆனால் பொருத்தமில்லாதது.

சர்ச்சைக்குரியவனாக இருக்கிற காரணத்தால் நான் முப்பது நிமிடங்களுக்குள் பூனாவை விட்டு வெளியே செல்ல வேண்டுமா? நான் எங்கே போவது? ஏனென்றால் நான் எங்கே சென்றாலும் சர்ச்சைக்குரியவனாக இருப்பேன். சர்ச்சைக்குரியவனாக இருப்பது குற்றம் என்றால், என் நாட்டில் எனக்கு இடமே இருக்காது. ஆனால் இந்த நாடு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்கிறது.

இந்த சுதந்திரத்திற்காகத்தான் எனது குடும்பம் முழுவதும் போராடி, சிறை சென்று அவதிப்பட்டது. குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் அனைவரும் சிறை சென்றுவிட்ட காரணத்தினால், வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர். இதனால் தொழில்கள் முடங்கின. நாங்கள் குழந்தைகளாக இருந்தோம். சிறு குழந்தைகளாக இருந்தோம். பள்ளிக்கு கூட பணம் செலுத்த முடியவில்லை என்ற காரணத்தினால் நாங்களும் அவதியுற்றோம். இந்த சுதந்திரத்திற்காக என் குடும்பம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அவதியுற்றன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

தலைவர்கள் அனைவருமே சர்ச்சைக்குரியவர்கள். மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு,முகமது அலி ஜின்னா, டாக்டர். அம்பேத்கர். இவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரியவர்கள். உங்களுக்கு சிறிதளவாவது புத்தி இருந்தால், நீங்களும் சர்ச்க்குரியவராவீர்கள். ராணுவத்தில் மட்டும் உங்களது புத்திசாலித்தனம் மழுங்கடிக்கப்படும். நீங்கள் ஏதாவது தவறான ஒன்றைப் பார்த்தாலும் கூட செய்ய 'மாட்டேன்' என்று சொல்லாத வகையில் அது அழிக்கப்படும். எந்த சூழ்நிலையிலும், 'சரி' என்று சொல்லுவதற்காகவே உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆதாரம் – ஓஷோவின் “தி மெஸையா, வால் 12“ புத்தகம்



 நன்றி - http://www.messagefrommasters.com/

Thursday, October 20, 2011

என்னை யாரும் ஜெயிக்க முடியாது

ஒரு குரு தனது சிஷ்யர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பலவிஷயங்களை பேசிய அவர், என்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று கூறினார்.

அதுவரை அமைதியாக கேட்டு வந்த சிஷ்யர்களில் ஒருவர், “அதெப்படிச் சொல்கிறீர்கள்? உலகில் உடல் பலம் வாய்ந்த பலசாலிகள் ஏராளமாக உள்ளனர்என்று கேட்டார்.

“உண்மைதான். இருந்தாலும் என்னை யாரும் ஜெயிக்க முடியாது. ஏனெனில், அவர்கள் என்னை தோற்கடிக்கும் முன்பாகவே நான் அவர்களிடம் சரணடைந்து தோற்று விடுவேன். அப்புறம் எப்படி அவர்களால் என்னை ஜெயிக்க முடியும்? என்று கேட்டார் அந்த குரு.

ஓஷோவின் குட்டிக் கதைகளிலிருந்து.  

Monday, October 17, 2011

வறுமையும் பட்டினிச் சாவும் ஒழியுமா?


வறுமையும் பட்டினிச் சாவும் ஒழியுமா?
(உலக உணவு தினம் அக்டோபர் 16)

தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை
அழித்திடுவோம் என்று பாடினான் பாரதி.

ஆனால் உணவில்லாமல் மஹாராஷ்டிராவில் ஆதிவாசிகள் ஆண்டு தோறும் மாங்கொட்டைகளை உண்டு உயிர்விடுவதை காண்கிறோம். இன்று சோமாலியாவில் லட்சக்கணக்கான உயிர்கள் உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி நம் நெஞ்சை பிளக்கிறது.

தகவல் தொழில் நுட்பம் மிகுந்த இந்த உலகில் இப்படியும் நடக்குமா? என்று கேட்க வைக்கும் அளவிற்கு பட்டினிச் சாவுகள் நடந்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

அரசியல் காரணங்கள்
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43% பேர் நீண்ட காலமாக போதிய உணவு இல்லாமல் பட்டினியாக இருந்து வருகிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகளும் பணக்காரர்களும் தங்களது தொப்பைகளை குறைக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்கின்றனர். நகர்ப்புறங்களில் உடல்பருமன் வியாதி பரவி வருகிறது. இது அண்மையில் லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி. (http://www.theaustralian.com.au/news/world/india-faces-new-epidemic-with-60-million-people-morbidly-obese/story-e6frg6so-1226142567221)

இந்தியாவில் போதுமான உணவு தானியங்கள் அரசு கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டிருந்தும் அவை முறையாக பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் அரசின் நிர்வாக குறைபாடுகளே. இன்று உலக அளவில் மக்கள் நலன் பேணும் அரசியல்வாதிகளுக்கு புறம்பாக அதிகாரத்தை விரும்பும் நபர்களே அரசியலில் உள்ளனர். இவர்களது முக்கிய நோக்கம் தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்வதே. இவர்களுக்கு நாட்டு மக்களைப் பற்றியோ அல்லது ஏழை மக்களைப் பற்றியே கவலை இல்லை. ஏழை மக்களை வாக்குக்காக பயன்படுத்தும் இவர்கள் மற்ற நேரங்களில் அவர்களை ஒரு வேண்டாத சுமையாகவே கருதுகின்றனர். எனவே அவர்கள் சாப்பிட்டார்களா இல்லையா என்பதெல்லாம் இவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் ஏழை மக்களின் பகுதிகளை கண்காணித்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவுப் பொருட்களை பெற்றுத் தந்தாலே அங்கு பட்டினிச் சாவு ஏற்படுவது மறைந்து விடும்.

செல்வந்தர்கள் - சமூக பொறுப்பு
செல்வம் சேர்ப்பதை நோக்கமாக கொண்ட செல்வந்தர்களிடம் தங்களது செல்வத்தை தானம் செய்யக் கோர முடியாது. ஆனால் தங்களது பங்குக்கு சமுதாய நலன் கருதி அறங்களை செய்யலாம். அதனை சிலர் செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த மேலை நாடுகளிடம் ஒப்பிடுகையில் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் செல்வந்தர்களிடம் கொடைக்குணம் மிகக் குறைவே என்று கூறலாம்.

இந்த கோடீஸ்வரர்கள் தங்களது பணத்தை பகிர்ந்து தரத் தேவையில்லை. இவர்கள் பணம் சம்பாதிக்கும் முறையை யாருக்கோ சொல்லித்தரவும் தேவையில்லை. இவர்கள் இந்த யுக்தியை தங்களது ஊரில், கிராமத்தில் தங்களது உறவினர்களுக்கு சொல்லித் தந்து அவர்களை மேற்பார்வை செய்யலாம். இதில் வர்த்தக குழுக்களும் பங்கேற்கலாம். இவ்வாறான முயற்சிகள் காலப்போக்கில் வறுமை பட்டினியை ஒழிக்க உதவும்.  


ஆசியாவிலேயே அதிகளவு இளம் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி வருவதாக அண்மைச் செய்தி கூறுகிறது. இவர்கள் 2010ம் ஆண்டில் மட்டும் நாட்டின் உற்பத்தியில் (73.07 லட்சம் கோடி) 34% முதலீடு செய்யத்தக்க வருமானத்தை (34.23 லட்சம் கோடி) பெற்றுள்ளனர். (http://www.dnaindia.com/money/report_youngest-indian-millionaires-lead-asia-world-hnis_1598548) அதேவேளையில் கோடிக்கானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். இந்த வறுமைக் கோட்டிற்கு விளக்கமாக கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.26 மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் ஒருநாளைக்கு ரூ. 32 சம்பாதிப்பவர்கள் என்று இந்திய திட்ட கமிஷன் உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. (http://www.guardian.co.uk/global-development/poverty-matters/2011/oct/04/india-measuring-poverty-line) இந்த வேறுபாட்டை என்னவென்று சொல்வது?

வறுமை பட்டினிக்கான சமூக பொறுப்பு
பெருநகர், நகரம், சிறு நகரங்களில் வாழ்பவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களாக கூற முடியாது. நகரங்களில் எப்படியாவது எல்லாருக்கும் வேலை - பணம் - உணவு கிடைத்து விடுகிறது. நகர்ப்புறங்களில் வறுமை இருந்தாலும் மிகக் குறைந்தளவே இருக்கிறது. ஆனால் வறுமையில் சிக்கிக் கொள்பவர்கள் கிராமங்களை சேர்ந்தவர்களே. குறிப்பாக கல்வியறிவற்ற காடு மற்றும் வானம் பார்த்த பூமியை நம்பியுள்ள ஆதிவாசிகள் மற்றும் கிராமத்து மக்கள் பட்டினிச் சாவை சந்திக்கின்றனர். இவர்களது சாவுக்கு கற்றிந்த, பணம் படைத்த, அதிகாரம் படைத்த அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். செல்வந்தர்கள் ஏழைக் கூட்டத்திடம் மாட்டி தங்களது பணத்தை இழந்துவிடக் கூடாது என்று அஞ்சுவது இயல்பே. ஆனால் அவர்கள் தங்களால் இயன்ற அளவு அந்தக் கூட்டத்தை மாற்ற, அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இவர்கள் சம்பாதித்தல், சேமித்தல், முதலீடு செய்தல் போன்ற நிதி அறிவுரைகளை ஏழைகளுக்கு வழங்கலாம்.

செல்வந்தர்களின் சேவைக்கு உதாரணமாக விப்ரோ நிறுவனத்தின் அதிபரான ஆஸிம் பிரேம்ஜியை கூறலாம். இவர் தனது நிறுவன ஊழியர்களுக்காக விப்ரோ ஈக்விட்டி ரிவார்ட் டிரஸ்ட் என்ற அமைப்பையும், மற்றவர்களுக்காக ஆஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் மற்றும் யுனிவர்சிட்டியை நிறுவியுள்ளார். இவரது நிறுவனத்தில் தகுதியான ஊழியர்களை கண்டறிந்து அவர்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும், அதன் மூலம் கடன், வட்டி, லாபப்பங்கு போன்றவற்றை பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. அதேபோல ஆஸிம் பிரேம்ஜி இந்தியா முழுவதும் உள்ள 13 லட்சம் அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் உதவிக்காக பல உதவிகளை செய்து வருகிறது. இதற்காக பிரேம்ஜி ரூ. 8000 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளார். இந்தியாவில் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை அறக்கட்டளைக்காக ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (http://en.wikipedia.org/wiki/Azim_Premji#Wipro_Equity_Reward_Trust)

மற்றொரு நிறுவனமான டாடா நிறுவனத்தின் சேவையையும் இங்கு குறிப்பிடலாம். டாடா நிறுவனம் ஜாக்ருதி யாத்ரா (விழிப்புணர்வு பயணம்) என்ற பயணத்தை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த பயணத்திற்காக தொழில்துறையில் ஆர்வம் மிக்க நூற்றுக்கணக்கான படித்த படிக்காத ஆங்கிலம் தெரிந்த தெரியாத தாய்மொழி மட்டுமே பேசத் தெரிந்த இளைஞர் இளைஞிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்காக இந்தியா முழுவதுமாக (ஏறக்குறைய 20 நாட்கள்) ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டு தொழில் நிறுவனங்களை பார்வையிட, தொழிலதிபர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. (http://www.jagritiyatra.com/) இதுபோல செல்வந்தர்கள் நிறுவனங்களின் பங்கேற்பின் மூலமாக மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.



தற்போது இந்தியாவில் செல்வச் சேர்ப்பு பற்றிய புத்தகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்து வந்தாலும் அவை கீழ்த்தட்டு மக்களை சென்று சேரும் வகையில் இல்லை. மேலை நாடுகளில் இருப்பதைப் போல செல்வச் சேர்ப்பு பற்றி பேசும் ஊக்கப்பேச்சாளர்கள் போன்றவர்கள் இல்லை என்றே கூறலாம். பொதுவாக ஏழை மக்களிடம் தங்களுடைய வாழ்க்கை இவ்வளவுதான். இதில் மாற்றம் ஏற்படப் போவது இல்லை என்ற நிலை உள்ளது. அந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு ஆயிரக்கணக்கான ஊக்கப்பேச்சாளர்கள் தேவை. இது போன்ற முயற்சிகள் நீண்டகால அடிப்படையில் வறுமையை ஒழித்து பட்டினியை குறைக்கும்.

உணவு பாதுகாப்பு
புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ஆதம் ஸ்மித் மக்கள்த் தொகை பெருக்கல் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் பெருகிச் செல்லும் என்று கூறினார். ஆனால் அவரது கூற்றை எந்த அரசாங்கமும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக மக்கள் தொகையை பெருக்கிக் கொண்டு பயிர் விளையும் நிலப்பரப்பை குறைக்க உதவிக் கொண்டும் வருகின்றன.  

தற்போது உணவுப் பொருள் பாதுகாப்பு அரசிடம் மட்டுமே உள்ள காரணத்தால் அது முழுமையாக பாதுகாக்கப்படாமல், தக்க நேரத்தில் உரியவருக்கு சென்றடையாமல் வீணாகி விடுகிறது. அதே வேளையில் விவசாயிகளால் தங்களது உற்பத்தி பொருட்களை சேமிக்க இயலாமல் போகிறது. உணவுப் பொருள் பாதுகாப்பை அரசு வர்த்தகர்கள் சங்கங்கள் விவசாயிகள் கூட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளலாம். ஆனால் இந்த பணியை அரசு - வர்த்தக சங்கங்கள் விவசாயிகள் என இணைந்து திறம்படச் செய்ய இயலும். இந்த முயற்சியில் வேளாண்மை, பொருளாதார வர்த்தக நிபுணர்களையும் சேர்த்துக் கொண்டால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். எந்தவொரு திட்டத்தையுமே இலவச திட்டமாக செயல்படுத்தாமல் வர்த்தக அடிப்படை கொண்ட திட்டமாக நடத்தினால் முதலுக்கு மோசமாகாது, வெற்றிகரமான திட்டமாகவும் அமையும்.   

இதில் வட்டார உணவு உற்பத்தி, உணவுத் தேவை போன்றவற்றை கணக்கிட்டு எஞ்சிய உணவு தானியங்களை விற்பனை செய்வது சிறந்தது. இதன் மூலம் தேவையில்லாத பகுதியில் உணவுப் பொருட்களை சேர்த்து வைப்பதை தவிர்க்கலாம். இந்த திட்டங்கள் பட்டினிச் சாவுகளை குறைக்க உதவும். உணவுப் பாதுகாப்பு மற்றும் வினியோகம் குறித்து தனிக்கட்டுரை எழுதலாம் என்று கருதியுள்ளேன்.          


  


ஆன்மீக ஞானியே, அறிவுக் கடலே!

ஆன்மீக ஞானியே, அறிவுக் கடலே!
கடவுளின் குத்தகைக் காரரே
புறம் சுத்தமா? அகம் சுத்தமா?
புறம் சுத்தம் என்றால்,
கடவுள் ஏன் அசுத்ததை
படைத்தான்?

அகம் சுத்தம் என்றால், 
அகம் அசுத்தமாவது எப்படி?  
அசுத்தத்தை அகத்தில் வைத்துக் 
கொண்டு ஆன்மீகம் பேசும் 
அஞ்ஞானிகளை என்னவென்று சொல்வது?

ஒரு தீண்டத் தகாதவன்
ஆதி சங்கரரிடம்
இக்கேள்வியை கேட்டு
அவரது அகக் கண்ணை திறந்தானாம்.

கண்டதே கடவுள், கொண்டதே வேதம்
என்று ஓடும் கூட்டமே,
உன் பின்னால் வரும்
கூட்டத்திற்கு என்ன சொல்வாய்?

ஞானம் சொல்லும் ஞானியே
யாருக்குச் சொல்கிறாய்?
ஞானிகளுக்கா இல்லை பாமரனுக்கா?


அந்த கூட்டம் உனக்காக வரவேண்டுமா?
அது தனக்காக வரவேண்டுமா?
அந்த கூட்டத்தை மதிக்காத,
அறியாத, உணராத, காணாத
நீயெல்லாம் எப்படி
இறைவனை காண முடியும்?

அசுத்தமும் சுத்தமும்
ஒரே கயிற்றின் இருமுனைகள்
என்பதை உணரவில்லையா?

கடவுள் ஏன் உலகை படைத்தான்?
பரிசுத்தமான கடவுளின் அகம்
அடைந்த அசுத்தத்தால் அல்லவா
பிறந்தது இந்த உலகு?

பூவுலகின் இன்றைய தேவை
அறிவியல் மதமும் மருத்துவ குணமுமே!
அவ்வாறில்லா மதங்கள் மாய்ந்துவிடும்!
புதிய மனங்கள் மலர்ந்திடும்!
 



Tuesday, October 4, 2011

சாதிப் பிரச்சனைக்கு தீர்வுண்டா?



பண்புடன் குழுமத்தில் நடைபெற்ற சாதிப்பிரச்சனைக்கு தீர்வு உண்டா என்று நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். உலகில் இந்தியாவை தவிர ஏனைய பகுதிகளில் சாதி என்ற அமைப்பு இல்லாவிட்டாலும் கூட மனிதர்கள் சிறு குழுக்களாக இருப்பதும் அவர்கள் தங்களிடையே வேற்றுமை பாராட்டி வருவதும் நடப்பில் உள்ளது. நடைபெற்ற விவாதத்தில் படித்தவர்கள் மத்தியிலும் சாதி உணர்வு உள்ளது, எனவே இந்த உணர்வை ஒழிக்க முடியாது என்று பாதிக்கும் மேற்பட்டோர் வாதிட்டனர். சாதி பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதால் அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று மறுபாதியினர் குறிப்பிட்டனர். இதனை ஒழிக்க கட்டாய முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறினர்.

இந்த பிரச்சனையை ஆழமாக புரிந்துகொள்ளும் நோக்கில் இதுபற்றி ஆராய்வோம்.

சாதி வலுவான சமூக கட்டமைப்பு

சாதி என்பது ஒரு பிரச்சனைக்குரிய அமைப்பாக இருந்தாலும், இது வலுவான சமூக, அரசியல், பொருளாதார கட்டமைப்பாக உள்ளது. ஒரு சாதியில் இருப்பவர் சமூக அந்தஸ்து என்று வரும்போது அவர் தனது சாதியை சேர்ந்தவரையும் எடைபோட்டுத்தான் பார்க்கிறார். அதேவேளையில் மாற்று சாதியினருடன் ஒப்பிடும்போது அவர் தன் சாதியினரை கண்மூடித்தனமாக நம்புகிறார். சமுதாயத்தின் அடிப்படை கட்டமைப்பான திருமணம் சாதி அடிப்படையிலேயே நடைபெறுகிறது. குடும்ப விழாக்கள் முற்கொண்டு குழந்தை பிறப்பு, காதணி விழா, பூப்புனித நீராட்டு, இறப்பு என சமூக விழாக்கள் அனைத்தும் சாதிக்கட்டமைப்புக்குள்தான் நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற ஒரு வலுவான கட்டமைப்பை ஒழிப்பது என்பது இயலாத காரியம், மாறாக இது நல்ல ஒரு அமைப்பே என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

உண்மைதான் சாதி சமூகத்தின் ஆணிவேராக இருந்து சமூகத்திற்கான ஒரு அடிப்படை அமைப்பாக இருந்து வருகிறது. இதனை ஒழிப்பது என்பது இயலாத காரியமே. அதேவேளையில் இதில் உள்ள குறைபாடுகளை களைய முயற்சி செய்தால் அது தவறு இல்லையே? உதாரணமாக இதே சாதி அமைப்புதான் காதல் திருமணங்களை எதிர்க்கிறது. காதல் திருமணங்களை எதிர்ப்பது என்பது மனித இனத்திற்கு எதிரான செயல் அல்லவா?

பொருளாதார கட்டமைப்பு

அதேபோல சாதி நிதியுதவியிலும் ஒரு உதவிகரமான அமைப்பு என்று கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய்-அன்பளிப்பு நிதி உதவியை கூறலாம். அதே போல ஒருவருக்கு நெருக்கடி ஏற்படும்போது, ஒருவர் தன் தொழிலில் நஷ்டத்தை அடைந்து தோல்வியை சந்திக்கும்போது, அவரது உறவினர்கள் அவனுக்கு ஊக்கமளித்து வேண்டிய நிதி உதவியை செய்கின்றனர். வியாபாரத்தில் வளர்ச்சி பெற உதவுகின்றனர். மார்வாடி சாதியினர் தங்களது சாதி நபர் ஒருவர் தொழிலில் பலமுறை தோல்விபெற்றாலும் மீண்டும் மீண்டும் பொருளுதவி செய்து அவரை கைதூக்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்ற பிரச்சனைகள் வந்தாலும் உடனே ஓடிவருவது ஒருவரின் சாதிசனம்தான் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் நொடித்துப்போன ஒருவனை கைவிடுவதும் இந்த சாதிதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் இல்லாதவனை சமமாக நடத்தாததும் இந்த சாதிதான். பொருள் இருந்தால் சாதிசனம் தன்னால் வரும் என்பார்களே?

அரசியல் சக்தி
சாதி அமைப்புக்கு மக்களிடையே உள்ள நம்பிக்கைதான் சாதி அரசியல், வாக்கு வங்கி அரசியலுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சாதி வாக்கு என்பது மொத்தமாக கிடைக்கும் வாக்கு என்றே கருதப்படுகிறது. இதனை சரியாக புரிந்து வைத்துள்ள அரசியல் கட்சிகள் சாதிகளிடையே பிரிவினையை வளர்த்து அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. இந்த அரசியல் கட்சிகள் சாதிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக சாதிகளிடையே பகைமையை வளர்த்து வருகின்றன. இந்த நிலையில் சாதிகள் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கை இல்லாத நிலையிலேயே இருந்து வருகின்றன. அதேபோல சாதிகளால் தனிப்பட்ட முறையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதும் உண்மையே. சாதி ஆதரவு இல்லாமல் ஆட்சியை பிடிப்பதும் என்பதும் முடியாது என்பதும் உண்மையாகவே தெரிகிறது. எனவேதான் நாளுக்குநாள் சாதி அரசியலும் சாதி கட்சிகளும் பெருகி வருகின்றன.


சாதிச் சமநிலை
இந்தியாவில் நிலவும் தீண்டாமை சாதியை அடிப்படையாக கொண்டது. இதனால் தீண்டாமையை ஒழிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் சாதி மட்டும் ஒழிந்தபாடில்லை. இதற்கு இன்னொரு காரணம் சாதிகளை மேம்படுத்த பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது ஆகும்.

இட ஒதுக்கீடு வழங்க ஒருவரின் சாதியை அறிந்து கொள்வது அவசியம் என்ற நிலையில் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படும்போதே சாதி கேட்கப்படுகிறது. இது அவர்கள் பெறும் கல்விச சான்றிதழிலும் குறிக்கப்படுகிறது. இது தொழுவத்தில் கன்றுகளை அடையாளம் காண சூட்டுக்கோலால் அடையாளம் இடுவதைப்போல உள்ளது. சான்றிதழில் சாதியை குறிப்பிடுவதை நிறுத்திவிட்டால் சாதி மறைந்துவிடும் என்றும், ஆனால் சான்றிதழில் சாதி குறிப்பிடுவதை நிறுத்திவிட்டால் மட்டும் சாதி மறைந்து விடாது என்று பலரும் வாதம் செய்தனர். இது உண்மைதான்.

ஆனால் சான்றிதழில் சாதி குறிப்பிடுவது நிறுத்தப்பட்டால் அதன் ஆணிவேரை அறுப்பது போன்றதாகும். அதேவேளையில் இட ஒதுக்கீட்டை எப்படி அளிப்பது என்ற பற்றிய கேள்வியும் எழுகிறது. இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது அது அனைத்து தாழ்ந்த நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் உதவும்.  

இட ஒதுக்கீட்டு முறையின் தோல்வி

நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இந்த 65 ஆண்டுகள் நீண்ட காலமாகும். இந்த காலத்தை வைத்துப் பார்த்தால் நம்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை தோல்வி பெற்றுவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் ஒதுக்கீடு வழங்கப்படும் தலித் மக்களின் வாழ்க்கையில் பெரிதும் முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் பல சாதிகள் தங்களை ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இவ்வாறு அண்மையில் போராடிய சாதியினர்தான் ராஜஸ்தானை சேர்ந்த குஜ்ஜார் சாதியினர்.

இவர்களது கோரிக்கை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏன் சாதிகளின் பட்டியல் குறையாமல் அதிகரிக்கிறது என்று கேட்டனர். மேலும் சாதிகள் குறையாதபட்சத்தில் இட ஒதுக்கீட்டால் பயனில்லை என்றுதானே அர்த்தம் என்று அவர்கள் கேட்டனர். ஆனால் அரசாங்க வழக்கறிஞர்களால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை.

எனவே இட ஒதுக்கீட்டை விட்டு விட்டு சாதிகளை முன்னேற்ற சரியான பொருளாதார கொள்கையை உருவாக்க வேண்டும். மேலும் சாதி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் மாற்றுச் சாதி குழுக்களுடன் இணைந்து தொழில் தொடர்புகள், வியாபார வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார முன்னேற்றமே சாதி முன்னேற்றத்தை தருவதாக அமையும். ஆனால் இதனை செய்ய சாதி அமைப்புகளோ, கட்சிகளோ, அரசாங்கமோ செய்யத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.           

இட ஒதுக்கீட்டு முறையை நம்பியே ஏராளமான படித்த தலித் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர் அவர்கள் மத்தியில் வர்த்தகத்தில் ஈடுபடுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து விட்டாலே ஓரளவு சாதிச் சமநிலை அடைந்து விட்டது என்று கூறலாம்.

சாதி வன்முறை
எல்லாச் சாதிகளிலும் பண்பாளர்களும் சில்லறைகளும் உள்ளன. இந்த சில்லறைகள்தான் தங்களது சாதி வெறியை ஊட்டி அதனை வளர்த்து வருபவர்கள். சாதி அரசியல் நடத்துபவர்களுக்கும் இவர்களே தேவை. எதுவும் சொன்னால் தாங்கள் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் பண்பாளர்கள் இவர்களை செய்வதை கண்டு கொள்வதில்லை. இதுவே சில்லறைகளுக்கு ஊக்கமாக அமைகிறது. இது இன்று பள்ளி கல்லூரி மாணவர்களிடமும் பரவியுள்ளது என்பது மிகவும் கொடுமையான விஷயம். இதனை போக்க சாதி பொருளாதாரக் குழுவை அமைப்பது போல சாதி நல்லிணக்க குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழு பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் உருவாகும் சிறு பிரச்சனைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை போக்க வேண்டும்.

உதாரணமாக குருபூஜை விஷயத்தில் தேவர் மற்றும் தலித் மக்கள் ஏற்படும் வன்முறை சில்லறைகள் காரணமாகவே ஏற்படுகிறது. இரு தரப்பினரும் தாங்கள் செல்லும் வழிகளில் உள்ள மாற்றுச் சாதியினரை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். சாதி நல்லிணக்கக் குழு இருந்தால் வழியில் உள்ள கிராமங்களை கண்காணித்து பிரச்சனைகளை போக்கிவிடலாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒருவருக் கொருவர் உதவி செய்யலாம். உதாரணமாக மும்பையில வாழும் சீக்கியர் இந்துக்களின் பண்டிகை காலத்தில் சாலையில் ஊர்வலமாக செல்பவர்களுக்கு குளிர்பானம் வழங்குவதை குறிப்பிடலாம். இதனை சாதிச் சங்கங்கள், சாதிக் கட்சிகள், அரசாங்கம் செயல்படுத்த முன்வரலாம். இதனை ஒரு நீண்டகால திட்டமாக செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

சாதி வலிமையை ஆற்றலாக மாற்றலாம்
சாதி பிரச்சனை தீர்க்க முடியாதது போல தோன்றினாலும் முயற்சி செய்தால் காலப்போக்கில் இதனை போக்கிவிடலாம். அதற்கு தேவை சாதி ஒழிப்பு அல்ல. சாதியின் சக்தியை ஆற்றலாக மாற்றுவதாகும். காட்டாற்று வெள்ளத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பது போல சாதியின் சக்தியை ஆக்கப்பூர்வமான ஆற்றலாக மாற்றிவிடலாம். அவ்வாறு மாற்றப்படும் பட்சத்தில் நிச்சயம் சாதி வெறி தணிந்து அது உதவிகரமான அமைப்பாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.    

கடுமையான நடவடிக்கைகள்
சாதியை ஒழிக்க வேண்டும் என்ற துணிச்சலான முடிவை அரசாங்கம் எடுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். சாதியை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு தனியான கட்டணச் சான்றிதழ் மற்றும் சாதி வரி, சாதி திருமண வரி, கூடுதல் வரிகள் விதித்தல் போன்றவற்றை விதிக்கலாம். சாதிகளை தக்க வைத்துள்ளவர்களிடம் வேலை, வர்த்தகம், அனுமதி போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பின்தள்ளப்படுவது. இது காலப்போக்கில் சாதி வெறியை குறைப்பதாக அமையலாம். இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தும்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...