பல்வேறு மிரட்டல் உருட்டலுக்குப் பிறகும் வரி வசூலிக்க முடியாததால், வீரபாண்டிய கட்டப்பொம்மனிடம் வரி வசூலிக்க தங்கள் ஏவள் அடிமையான எட்டப்ப நாயக்கரை மாறுவேடத்தில் அனுப்பி வைத்தனர் வெள்ளையர்.
எட்டப்பன் அங்கு சென்று வெள்ளையர்களை புகழ்ந்து பேசுகிறான்.
அப்போது நடைபெறும் உரையாடல்....
பொறுமையிழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், "வெள்ளையர்களின் வீரத்தைச் சொல்வதற்குத்தானே மாறுவேடத்தில் வந்தீர்கள் எட்டயபுரத்து ராஜாதி ராஜ ராஜ கம்பீர எட்டப்ப நாய்க்கர் அவர்களே!" என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
தன்னை வீரபாண்டிய கட்டபொம்மன் அடையாளம் கண்டுகொண்டதை அறிந்ததும் எட்டப்பனின் தலை குனிந்தது.
வந்திருப்பது எட்டப்பன் என்று அறிந்ததும் ஊமத்துரை வாளை உருவினான். அதைத் தடுத்த கட்டபொம்மன், "தம்பி இவரும் நம்மைப்போன்று பாளையத்து மன்னர், ஆனால் எழுந்து நிற்பதற்கு பதிலாக, வெள்ளைக் காரர்களின் காலில் விழுந்து கிடக்கிறார். அவர்கள் கொடுக்கும் மதுவுக்காக இங்கே மாறு வேடத்தில் வந்திருக்கிறார். அந்நியருக்கு வரிக்கட்டி ஆயுளைக் கடத்துகிறார்" என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே,
"வீரபாண்டியரே! வெள்ளையரை அந்நியர்! அந்நியர்! என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறீரே! ஆனால் நீங்களும் அந்நியர்தானே!" என்று எட்டப்ப நாயக்கன் தயங்கி தயங்கிக் கேட்டான்.
ஊமத்துரையும், வெள்ளையத்தேவனும் எட்டப்ப நாயக்கன் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து அந்நியன் என்று சொல்லியதைக் கேட்டதும் ஆவேசம் கொண்டனர். அவர்களைத் தடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன்,
"எட்டப்பரே! ஒரு சரியான கேள்வியை கேட்டதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நான் பிறப்பால் தெலுங்கர்தான். நம் இரண்டுபேருடைய மூதாதையரும் ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த மண்ணுக்கு வந்தவர்கள்தான். ஆனால் நான் இந்த மண்ணின் மகத்துவத்தை காப்பதற்கு நான் வாழ்கிறேன். நீங்கள் இந்த மண்ணை அந்நியனுக்கு அடகு வைப்பதற்காக வாழ்கிறீர்கள். அதனால் தூதுவந்த நீங்கள் தொல்லையில்லாமல் செல்லுங்கள். அதிகமாகப் பேசி எங்களை ஆத்திரமூட்டாதீர்கள். அதன் பின் நடப்பதற்கு நான் பொறுப்பல்ல", என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
-வீரபாண்டிய கட்டபொம்மன், கே. ஜீவபாரதி, பக்கம் 83, 84