Friday, June 7, 2019

வரலாற்று ஏடுகளில் ஏழுகிளை கள்ளர் நாடுகள்


சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக, சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர் நாடுகள், ஏழுகிளை கள்ளர் நாடுகள் என அழைக்கப்படுகிறது.

ஏழுகிளை கள்ளர் நாடுகள்
-------------------------------------------
1) குன்னங்கோட்டை நாடு,
2) தென்னிலைநாடு,
3) உஞ்சனை நாடு,
4) இரவுசேரி நாடு,
5) செம்பொன்மார் நாடு,
6) கப்பலூர் நாடு,
7) இரும்பா நாடு,
8) சிலம்பா நாடு,
9) வடம்போகி நாடு,
10) தேர்போகிநாடு,
11) கோபால நாடு,
12) ஏழுகோட்டை நாடு,
13) ஆற்றங்கரை நாடு,
14) முத்து நாடு

மேற்குறிப்பிட்ட கள்ளர் நாடுகளில் வாழும் கள்ளர்களின் கிளைகள்
1. அரசியான்கிளை
2. அரியாதன் கிளை
3. பிச்சையாகிளை
4. சோழான் கிளை (சோலையான்)
5. அரசனன் கிளை (பெஸ்தான் )
6. தொண்டைமான்கிளை
7. குருவிலி கிளை

கிபி 1909-ல் எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய Caste and tribes of southern india vol 3 ல் மேற்குறிப்பிட்ட 14 நாடுகளுக்கும் தலைமையாக "உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி நாட்டு அம்பலங்கள் உள்ளனர். இவர்களுக்கு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இனி இந்நாட்டார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை காண்போம்.

இலங்கை படையெடுப்பை எதிர்த்து போரிட்ட செம்பொன்மாரி நாட்டு கள்ளர்கள் ( கிபி 1171)
---------------------------------------------------------------------------------------------
* கிபி 1171 ல் பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டியனுக்கும், பராக்கிரம பாண்டியனுக்கும் வாரிசுரிமை போர் ஏற்படுகிறது. இந்த போரில் குலசேகர பாண்டியனின் கைக்கு ஆட்சி சென்றது. பராக்கிரம பாண்டியன் இலங்கை அரசர் பராக்கரம பாகுவின் உதவியை நாடினார். பராக்கரம பாகு, மாபெரும் படையை லங்கபுரா தண்டநாதா எனும் தளபதி தலைமையில் அனுப்பினார்.ஆட்சியை இழந்த பராக்கிரம பாண்டியன் கொல்லப்படுகிறார். குலசேகர பாண்டியனை வென்று பாண்டிநாட்டை பராக்கரம பாண்டியனின் வாரிசிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசர் தனது தளபதிக்கு உத்தரவிட்டார்.

* லங்கபுராவை எதிர்க்க குலசேகர பாண்டியன், தன்னுடைய படைகளை இணைத்து கோட்டை கொத்தளங்களோடு திகழ்ந்த ஏழுகோட்டை நாட்டில் தயாராக இருந்ததாக மகாவம்ச நூல் கூறுகிறது.ஏழுகோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்றாகும்.

* இலங்கை தளபதி லங்கபுரா ராமேஸ்வரம் வழியாக தமிழகத்தில் நுழைந்து தாக்குதலை நடத்தி சென்றான். லங்காபுராவை எதிர்த்த தமிழ் குறுநில மன்னர்களை தோற்கடித்து, தொடர்ந்து முன்னேறி கள்ளர் நாடாம் செம்பொன்மாரியை அடைந்தார். " செம்பொன்மாரி நாட்டு மாளவ சக்கரவரத்தியை சரணடையும்படி லங்கபுரா தூது அனுப்பினான். ஆனால் செம்பொன்மாரியில் இருந்த மாளவ சக்கரவர்த்தி லங்கபுராவை எதிர்த்து தாக்க தயாரானார்.

* செம்பொன்மாரியில் இருந்த கோட்டையை பிடிக்க சோலியர்கள் ( சோலையான் கிளை கள்ளர்கள்) இரு வருடமாக முயற்சி செய்தும் தோற்றதாக செம்பொன்மாரி நாட்டின். படைபலத்தை மகாவம்சம் விளக்குகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சோலையன் வழியினர் இன்றும் சோலைய கிளை கள்ளர்களாக வாழ்கின்றனர் என்பது சிறப்பிற்குரிய தகவல்.

* இத்தகைய பலம் வாழந்த செம்பொன்மாரியை பெரும் யானைபடை கொண்டு தாக்கிய லங்கபுரா அரை நாளில் கைப்பபற்றினான். பிறகு 60,000 பேர் கொண்ட கள்ளர் மற்றும் மறவர்கள் படை இலங்கை தளபதியை தாக்கியது. ஆயினும் பெரும்பலம் கொண்டிருந்த லங்கபுரா ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து வெற்றி பயணத்தை தொடர்ந்தார். பெரும்போரிட்டு கள்ளர்கள் மறவர்கள் மற்றும் ஏனைய குறுநிலத் தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இலங்கையர்கள்.

(இலங்கை வரலாறு கூறும் "மகாவம்ச நூல் "வரிகள் (246-267)

மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட செம்பொன்மாரி இன்றும் கள்ளர் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. சொலையர்கள் என குறிப்பிடப்பட்ட சோலையன் கிளை கள்ளர்கள் இன்றும் வசித்து வருகின்றனர். இலங்கையில் எழுதப்பட்ட ஒர் நூலில் தமிழ் போர்குடிகளாக குறிப்பட்டது கள்ளர் மற்றும் மறவர் மட்டுமே.












கல்வெட்டுகளில் ஏழு கிளை கள்ளர் சீமை
----------------------------------------------------------------------

உஞ்சனை நாடு
*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 12 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய தேவர் காலத்தில் உஞ்சனை நாட்டார்களுக்கு, செலுத்தவேண்டிய வரி தொடர்பான தகவல்கள் கொண்டுள்ள கல்வெட்டு, உஞ்சனை நாடு என இந்த பகுதியை குறித்துள்ளது( உஞ்சனை வட்டார க.வெ 6)

அரசியான் கிளை
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 1313 ல், இராசராசன் சுந்தரப்பாண்டியன் ஆட்சி காலத்தில் அரச மணவாள தேவன் என்பவருக்கு, கார்த்திகை மாதம் பிரசாதம் கொடுத்து பரிவட்டம் கட்ட தானத்தார் ஏற்பாடு செய்ததாக செய்தி கூறப்பட்டுள்ளது. அரசர் மணவாளதேவரின் வழியினாராக இன்றும் அரசியான் கிளை, அரசனன் கிளை ஆகிய கிளைகள் ஏழுகிளை கள்ளர் கிளைகளில் உள்ளது.( உஞ்சனை வட்டார க.வெ 11)

* கிபி 1315 ல், சடையவர்மன் சுந்தரப்பாண்டிய தேவர் ஆட்சி காலத்தில், உஞ்சனை நாட்டார்கள் இறையிலியாக நிலத்தை அளித்துள்ளனர். அவ்வூர்காரர்களாக செழியதரையர், அதிகைமான், ஆளவந்தார், வீரபாண்டிய பல்லவதரையர், அண்டக்குடி கண்டத்தேவர், காணப்பேரயன், வீரசிங்கத்தேவன் முதலானவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்( உஞ்சனை வட்டார க.வெ 8)

யானைப்படை குதிரைப்படை கொண்டிருந்த உஞ்சனை படைபற்று
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 1315-ல் ராசராசன் சுந்தரப்பாண்டியன் ஆட்சிகாலத்தில், சிதம்பரம் மடத்துக்கு, ,உஞ்சனை நாட்டார்கள் நிலம் அளித்துள்ளனர். அந்த நிலத்தின் மீதான வரிகளும் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட வரிகளின் பட்டியலில், ஆனைச்சாரல், குதிரைப்பந்தி, சிறைத்தேவை,, ஆள்வரி முதலியவை குறிக்கப்பட்டுள்ளது. குதிரைப்பந்தி என்பது குதிரைப்படையை பொறுத்து வாங்கப்படும் வரி. ஆனைச்சாரல் என்பது யானைப்படையினை பொருட்டு வாங்கப்படும் வரியாகும். ஆள் தேவை என்பது வீரர்கள் தொடர்பான வரியாகும். சிறைச்சாலையின் பொருட்டு வாங்கப்படும் வரி, சிறைத்தேவையாகும். இவற்றின் மூலம் உஞ்சனை பற்று ஒர் படைபற்றாக திகழ்ந்ததை அறிந்து கொள்ளலாம். குதிரைப்படை, யானைப்படை என மாபெரும் படைப்பற்று உஞ்சனை நாட்டில் இருந்ததை கல்வெட்டு தெளிவுபடுத்துகிறது (உஞ்சனை வட்டார க.வெ 12)

உஞ்சனை நாடு
*-*-*-*-*-*-*-*-*-*-*
* கோனேரின்மை கொண்டான் என்பவரின் ஆட்சி காலத்தில்(கிபி 13-14 ஆம் நூற்றாண்டு) , உஞ்சனை நாட்டார்களுக்கு அரசு வரி விதித்த தகவல்கள் உள்ளது.( உஞ்சனை வட்டார க.வெ 4)

தொண்டைமான் புன்செய்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாத்தூரான வீரபாண்டிய புரத்தில் வாழ்ந்த, காத்தான் நகர சேனாதிபதி என்பவன் உஞ்சனை கோயிலுக்கு நிலத்தை கொடையாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தின் ஒர் எல்லையாக தொண்டைமான் புன்செய் குறிக்கப்பட்டுள்ளது. தொண்டைமான் கிளை கொண்ட கள்ளர்கள் இன்றும் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.( உஞ்சனை வட்டார க.வெ 17)

* உஞ்சனை நாடு இன்றும் கள்ளர் நாட்டு பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. 14 நாடுகளுக்கும் தலைமை வகிக்கும் 4 நாடுகளில் உஞ்சனை நாடும் ஒன்றாகும்.

செம்பொன்மாரி நாட்டை சேர்ந்த மாளவ சக்கரவரத்தி
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

* கிபி 13 ஆம் நூற்றாண்டு, கண்டதேவி சொர்ணமூரத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு, பாண்டி மண்டலத்து தாழையூர் நாட்டு செம்பொன்மாரி பற்றை, " இந்நாட்டில் எங்கள் காணி பற்றில் " என குறித்துள்ளனர். இதன் மூலம் மாளவ சக்கரவரத்தி செம்பொன்மாரி நாட்டார் என்பது தெளிவுபடும். மகாவம்ச நூலில் செம்பொன்மாரி பற்றை பிடிக்க இலங்கை தளபதி மாளவ சக்கரவரத்தியிடம் போரிட்டதாகவும் கூறுகிறது. இவரோடு மும்முடிசோழன் சக்கரவர்த்தியும் செம்பொன்மாரி பற்றை சேர்ந்தவராக குறிக்கப்படுகிறார்.சோலையன் கிளை கள்ளர்கள் இன்றும் வாழ்வது குறிப்பிடத்தக்கது.( உஞ்சனை வட்டார க.வெ;; கண்டதேவி கல்வெட்டு 2)

* கிபி 14 ஆம் நூற்றாண்டில், இராசாக்கள் தம்பிரானார் காலத்தில் அவ்வூர் கள்ளர் மக்கள் கண்டதேவி தூண் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர். (ஹஜிரா கல்வெட்டு 771-825)

செம்பொன்மாரிபற்று, மூத்தூர் கூற்றம்(முத்து நாடு)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

* தேவகோட்டை வெங்களூர் சிவன் கோயில் கல்வெட்டு கோனேரிமேல்கொண்டார் ஆட்சிகாலத்தை சேர்ந்தது( கிபி 14) . முத்தூற் கூற்றத்து சாத்த மங்கல மாளவ மாணிக்க ஈசுவரமுடையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றி கூறுகிறது.
" இச்செம்பொன்மாரி மாளவ மாணிக்கம் கானப்பேருடையான் மாளவசக்கரவரத்தி" என மாளவர் மாணிக்கம் குறிக்கப்படுகிறார். முத்து நாடான முத்தூற் கூற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளது( உஞ்சனை வட்டார க.வெ, வெங்களூர் கல்வெட்டு 1).

சேதுபதி செப்பேடுகளில் கள்ளர் நாடுகள்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

முத்துநாடு, தென்னிலை நாடு (கிபி 1661)

திருமலை சேதுபதி காத்த தேவர் காலத்தில் மதுரை நாயக்க மன்னர் புண்ணியத்துக்காவும், தளவாய் சேதுபதி காத்த தேவர் புண்ணியத்துக்காவும், தங்கள் மாதா, பிதா ஆகியோரின் புண்ணியத்திற்காகவும் திருப்பெருந்துறை ஆவுடைய பரம சுவாமியாருக்கு பூசை நடத்த அம்பலத்தாடும் பண்டாரம் வசம் பல சீமைகளில் உள்ள கிராமங்கள் கொடை அளிக்கப்பட்டது. அவற்றில் முத்துநாட்டுச்சீமை மற்றும் தேர்போகி நாட்டு சீமைகளில் உள்ள கிராமங்களையும் தானமாக அளித்ததாக இம்மன்னர் அளித்த திருப்பெருந்துறை செப்பேடு கூறுகிறது. முத்து நாடு கருமாணிக்க மன்னர்களால் ஆளப்பட்ட நாடாகும்.இது முத்தூற்கூற்றம், கப்பலூர் நாடு என கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. தேர்போகி நாடு மற்றும் முத்து நாடு 14 கள்ளர் நாடுகளில் உட்பட்டவை.
தென்னிலைநாடு ( கிபி 1684):-

இரகுநாத சேதுபதி கிபி 1684 ல் அளித்த " புதுக்கோட்டை செப்பேடு" அம்மாவாசை புண்ணிய நாளில் தென்னிலை நாட்டில் வளுவாபுரி
விசுவேசுவரருக்கும் அகிலாண்ட ஈஸ்வரி அம்மனுக்கும் காளையார் கோயில் சீமையில் தென்னிலை நாட்டில் அரிசிலையாற்றுப் பாய்ச்சலில் புதுக்கோட்டை, கள்ளிக்குடி, எடையன் வயல் ஆகிய மூன்று கிராமங்களை கொடையாக அளித்ததை கூறுகிறது. தென்னிலை நாடு 14 கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். புதுக்கோட்டை எனும் ஊர் காளையார் கோயில் பகுதியிலும் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தேர்போகி நாடு (கிபி 1709)

கிழவன் சேதுபதி காலத்தில் இரகுநாதராய தொண்டைமான் சகோதரியும், இராயதொண்டைமான் மகளுமான இராமநாதபுர சமஸ்தான அரசியுமான காதலி நாச்சியார் கிபி 1709-ல் குமரண்டூர் வீரம நல்லூரில் இருக்கும் வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராணய்யன் என்பவருக்கு ஓரு அமாவாசை புனிதநாளில் தேர்போகி நாட்டில் உள்ள களத்தூரை கொடையாக அளித்த செய்தியை களத்தூர் செப்பேடு கூறுகிறது. தேர்போகி நாடு ஏழுகிளை கள்ளர் நாடுகளில் ஒரு நாடாகும்.

ஏழுகோட்டை நாடு (கிபி 1733):-

இரகுநாத சேதுபதி காத்த தேவர் கிபி 1733-ல் வெளியிட்ட " திருப்பொற்கோட்டைச் செப்பேட்டில்" திருவாடுதுறை மடத்தில் அருளாட்சி நடத்திய பன்னீரெண்டாம் ஆதீனகரத்தா அவர்களிடம் மடத்தின் பூசைக்காக சேதுபதி அரசர் அம்பலவாணசுவாமி சன்னதியில் ஏழுக்கோட்டை நாட்டில் ஒரூர் வட்டவகையில் திருப்பக்கோட்டை எனும் ஊரை கொடையாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழுகோட்டை நாடு 14 கள்ளர் நாடுகளில் ஒன்றாகும்.

18 ஆம் நூற்றாண்டு போர்களில் ஏழு கிளை கள்ளர் நாடுகள்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

சேதுபதி மன்னருக்கு ஆதரவாக தேர்போகி, கப்பலூர் மற்றும் இரவுசேரி நாடுகள்( கிபி 1772)
---------------------------------------------------------------------------------------------
கிபி 1772 ல் ஆங்கில தளபதி ஸ்மித் தலைமையிலான படை இராமநாதபுரத்தை தாக்கிய போது இராமநாதபுரத்துக்கு உதவியாக கப்பலூர் நாடு , தேர்போகி நாடு மற்றும் இரவுசேரி நாடு சென்றுள்ளது.
" தேர்போகி நாட்டுத் திரண்ட படைக்கலமும் இரவிகேசரி நாடும் யெண்வோண்ணா மன்னவரும் வெருவிச் சினந்து வெகுசேனை சூழ்ந்து வர கப்பலூர் நாடுங் கறுத்தக்கோட்டை நாட்டவரும் தளத்துடனே"( சிவ அம் பக் 109)
என கப்பலூர் நாட்டார், தேர்போகி நாட்டார்கள் மற்றும் இரவுசேரி நாட்டார்கள் படை உதவி அளித்ததை விளக்குகிறது.

முத்துவடுகநாதரை காக்க களம் கண்ட ஏழுகிளை கள்ளர் நாடுகள்(ஏழுக்கோட்டை நாடு , தென்னிலை நாடு, சிலம்பா நாடு, முத்து நாடு)( 21 Jun 1772)
---------------------------------------------------------------------------------------------
இராமநாதபுரத்தை அடுத்து சிவகங்கையை நோக்கி திரும்பிய ஆங்கிலேயர் படை கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையில் தாக்கினர். இந்த போரில் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ள நாடுகளை பற்றி அம்மானை பாடுகிறது.
" தென்னிலை வளர்நாட்டு ஊரவரும், மேல் சிலம்பா நாட்டவரும் , சாவ முத்து நாட்டுத்தலைவர் வெகுசனமும் கண்டதேவி நாட்டு கனமான மன்னவரும் வண்டரெழுவங்கோட்டை மன்னருடன் கண்டமாணிக்கம் கனநாட்டு இராணுவமும் துண்டரிக்க னான துரை பாகனிச் சனமும் பட்டமங்கல நாட்டு பலசனங்கள் மெத்தவுமாய் திட்டமுட னாயுதங்கள் சேர்க்கை வெகு வாகவுமே, பள்ளத்தூர் நாடும், பாலைய நாட்டாரும் கள்ளற் சிலகுடியுங் காவலராரும் , நேரிய போரில் நிலையதனை விட்டகலா ஏரியூர் மல்லாக்கோட்டைக் கியல்புடைய சேதுபதியம்பலம் தீரன் வெகுசனமும் பேதமில்லா பெரியபிள்ளையம்பலமும்" (சிவ அம் பக் 122)
எழுவங்கோட்டை நாட்டார்கள், தென்னிலை நாட்டார்கள், சிலம்பா நாட்டார்கள், முத்து நாட்டு கள்ளர்கள் ஆகிய ஏழுகிளை கள்ளர் நாடுகளும் , பாகனேரிச் சனமும், பட்டமங்கல நாட்டார்களும்,
கண்டதேவி நாட்டார்கள், கண்டர்மாணிக்கம் நாட்டார்கள், பள்ளத்தூர் நாடு, பாலையூர் நாடு, கள்ளர் காவல்காரர்களும், மல்லாக்கோட்டை நாட்டு சேதுபதியம்பலம் தலைமையிலான் படை, பெரியபிள்ளை அம்பலம் படை முதலான நாட்டார் படைகள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆபத்தில் இருந்து காக்க உதவியுள்ளனர்.

இராமநாதபுர மன்னர் சிவகங்கையை தாக்கியபோது உதவிய தென்னிலை நாடு மற்றும் முத்துநாடு (கிபி 1794)
---------------------------------------------------------------------------------------------
கிபி 1794ல் ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதி படமாத்தூர் கவுரி வல்லபதேவருக்கு ஆதரவாக இராமநாடு படையை அனுப்பி ஒரு சகோதர யுத்தத்தை நடத்தினார். அந்த போர் ஆனந்தூர் எனும் இடத்தில் நடந்தது. இப்போரில் மருதுபாண்டியருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர் நாடுகள்:-

" தென்னிலை நாட்டில் வளர் ராமச்சந்திரன் சேனையது நானூறு காலும் சமத்தான் தைரியவான் நாச்சியப்பன் சேர்வை நானூறு தளமதுவும் பெருமைமிகு பெரும்பாலைய நாடும், மாசில்லாக் கள்ளர் மல்லாக்கோட்டை நாட்டவரும், ஏரியூர் நாடும், எண்ணவொண்ணா மன்னவரும் முத்துநல்ல நாட்டவரும், முனைவீரமுள்ள திருப்பத்தூர் நாட்டவரும், பூரவரும் சிறுகுடி நாட்டவரும் " ( சிவ அம் பக் 172-174)

தென்னிலை நாட்டு வளர் ராமச்சந்திரன் தலைமையில் நானூறு பேர் கொண்ட படையும் மல்லாக்கோட்டை நாச்சியப்பன் சேர்வை, தலைமையிலான நானூறு பேர் கொண்ட படையும், பாலையூர் நாட்டவரும், மாசற்ற மல்லாக்கோட்டை கள்ளர்களும், ஏரியூர் நாட்டாரும், முத்து நாட்டு கள்ளர்களும் திருப்பத்தூர் மற்றும் சிறுகுடி நாட்டு கள்ளர்களும் மருதுபாண்டியருக்கு ஆதரவாக ஆனந்தூர் போரில் களம் கண்டுள்ளனர். இவற்றில் தென்னிலை நாடு மற்றும் மற்றும் முத்து நாடு ஏழுகிளை கள்ளர் நாடுகளை சேர்ந்ததாகும்.
இங்ஙனம் மூவேந்தர் காலம் தொட்டு பிரிட்டீசார் காலம் வரையிலும் நாட்டுக்கு ஆபத்து நேர்ந்த காலங்களில் தங்களது உயிரை துச்சமென மதித்து, போர்களம் நோக்கி விரைந்தவர்களே, கள்ளர் நாட்டார்கள்! காலங்காலமாக இன்றும் மாறாமல் நாட்டு வழக்கங்கள் கடைபிடிக்கப்படுவதே கள்ளர் நாட்டு கட்டமைப்புகளின் வெற்றி. நாட்டார்களுக்கு அளிக்கும் மரியாதை, கொட்டிய இரத்தத்தால் வந்தது.
சியாம் சுந்தர் சம்பட்டியார்
வாராப்பூர் நாடு







No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...