Tuesday, January 31, 2012

இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?

சு. செந்தில் குமரன்

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.


பெட்டி செய்தி : பணிக்கரின் ஆவேசம்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.

தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீரிமேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.

அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீரிமேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார். அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார்"



தம்பி, தயார் தயார்!

தமிழக எல்லைப்புறத்தில் நாம் இழந்த பகுதிகளை மீட்க 1956ம் ஆண்டு அனைத்துக் கட்சிப் போராட்டம் ஒன்று நடந்தது. அதைக் குறித்து 1956ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி (கருணாநிதி குறிப்பிட்டதுபோல் ஜனவரி 14ந்தேதி அல்ல) எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள்...

எல்லா கிளர்ச்சியும், குண்டு கிளம்பும் வரையில்தான். முழக்கமிட்டவன் ஐயோ என்று அலறிக் கீழே விழுந்து புரண்டு, பிணமாவது கண்டால், காக்கை குருவிக் கூட்டம் கல் கண்டதும் கடுகிப்போதல் போல இந்த வீராதி வீரர்கள் வீறிட்டழுதபடி ஓடோடிச் செல்வர் என்று சர்க்கார் எண்ணிற்று! துப்பாக்கி முழங்கிற்று! எழுவது பிணங்கள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தடியடி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில், எனினும் எதிர்ப்புணர்ச்சி மடியவில்லை. எக்காளம் குறையவில்லை. எமது உரிமையையாவது தாருங்கள் அல்லது உயிரையாவது பறித்துக் கொள்ளுங்கள் என்று கூறி மார்காட்டி நின்றனர் மக்கள்.

தம்பி, இந்தத் திங்கள், உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ள சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கிளம்பிய சூறாவளி, நேருவின் கண்ணையும் திறந்திருக்கும்.

மொழி வழி அரசு என்ற திட்டத்துக்காகவே, இத்துணை பயங்கர நிலை மூண்டது.

கதர் கட்டினாலே ஆபத்து என்று எண்ணிப் பீதி கொள்ளும் நிலை இன்னமும் அங்கெல்லாம் நீங்கவில்லை.

பண்டிதரின் பவனியே சிறிதளவு தடைபட்டுப் போய் நிற்கிறது.

புதிய போலீஸ் படையும், துருப்புகளும், ‘கலகம்’ நேரிட்ட நகர்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

பம்பாயில் உத்தரப்பிரதேச போலீஸ், ஒரிசாவுக்கு மத்தியப்பிரதேச போலீஸ்!

அருந்தமிழ்நாட்டில் மட்டும். தம்பி! அற்புதமான அமைதி நிலவுகிறது! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அக்கிரமத்தை உணர்ந்தோர் எத்துணை பேர் என்பதையும் அறிய முடியவில்லை. மாணவர்கள் மட்டுமே இதுபோது, நாட்டு மானங்காப்போம் என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.

இதற்கிடையில், பெரியார், இந்தப் பிரச்சினை சம்பந்தமாகத் திருச்சியில் பேசியதாகப் பத்திரிகைச் செய்தி கண்டேன்-கண்களை அகலத் திறந்து பார்த்தேன்-ஆச்சரியத்தால் மூர்ச்கையாகிவிடக் கூடிய நிலைமை - அவர் நம்மையும் அழைத்து ஒரு பொதுத்திட்டம் தீட்டப் போவதாகப் பேசினார் என்று பத்திரிகையில் இருந்தது. நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன்-நானாக அவரை நாடுவது என்றாலோ, ‘வழி மறித்தான்களும், இடம் அடைத்தான்’களும் புடைசூழ அல்லவா அவர் நிற்கிறார்?

இந்நிலையில், அஞ்சற்க, அனைவரும் ஒன்று கூடுவோம், என்று கூறுவதுபோல, நண்பர் ம.பொ.சி.யின் தந்தி எனக்குக் கிடைத்தது-கலந்து பேசலாம் என்பதாக.

சென்னையில் அவர் என்னிடம் சுவையான தகவல்களைக் கூறினார்-எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஏற்படும் விதமான தகவல்கள்.

‘பெரியாரும் நானும் கலந்து பேசினோம்’ என்றார் ம.பொ.சி. ‘பரவாயில்லையே, இப்போது நாம் ம.பொ.சி.யைப் பார்ப்பது, பாபமல்ல; இதற்கு எந்தப் பழியும் பிறவாதல்லவா-முதலில் பெரியாரும் ம.பொ.சி.யுமல்லவா சந்தித்தனர்-பிறகுதானே நாம், பரவாயில்லை-என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மகத்தான சந்திப்பின்போது பேசப்பட்டவைகள் பற்றி அவர் கூறக்கேட்டு இன்புற்றேன்.

தமிழகத்துக்கு உரிமையான பகுதிகளை மீட்பதற்கான கிளர்ச்சி அவசியம் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கைக்குப் பெரியார் ஒப்புதலளித்துப் பேசினார் என்று கூறினார்-களிப்புற்றேன்-அந்தக் களிப்புப் பன்மடங்கு வளரும் வகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பெரியார் பல இடங்களில் பேசினார்.

எனினும், 27ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரியார் கலந்து கொள்ளவில்லை; காரணம், முன்னாளே காட்டினார்.
அவர் காட்டிய காரணங்களின் தன்மை பற்றியோ, உண்மை குறித்தோ ஆராய்ச்சி நடத்துவது தேவையுமல்ல, என் வழக்கமுமல்ல-ஆனால், ஒன்றுமட்டும் கூறுவேன். அவர் காட்டிய காரணங்கள் அன்றைய கூட்டத்துக்கு அவர் வராததற்குப் போதுமானவை யாகாது.

மேலெழுந்தவாரியாக நான் கேள்விப்பட்டதும், ‘தினத்தந்தி’ ஆசிரியர் ஆதித்தன் என்னிடம் நேரில் சொன்னதும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது - நீ வருவதால்தான் பெரியார் வரவில்லை என்றார் - தம்மிடமே சொன்னதாகச் சொன்னார் - ஆனால், சொன்னவர் தினத்தந்தி!

நான் அவரிடம் சொன்னேன். ‘நான் இங்கு வருவதுதான் பெரியார் இங்கு வராததற்குக் காரணம் என்று எப்படிக் கூறமுடியும்? நாளைக்கு 28ல் வேறோர் இடத்தில் மற்றோர் பொதுப் பிரச்சினை குறித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்-பெரியாரும் பெருந்தன்மையுடன் அங்கு வரச் சம்மதம் தந்திருக்கிறாரே, அதுமட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?’ என்று கேட்டேன்.

காரணம் அதுமட்டுமல்ல, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை பற்றி மட்டுமே ம.பொ.சி.யின் கூட்டத்தில் கவனித்துக் கிளர்ச்சிக்கு வகை காண முன் வருகிறார்கள். பெரியாரோ, தம்முடைய ஒத்துழைப்பும் துணையும் தரப்பட வேண்டுமானால், வேறு சில பிரச்சினைகளையும் போராட்டத்துக்குக்கானதாக உடனடியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதுகிறார். அதன்படி இங்கே காரியம் நடைபெறாது என்று எண்ணியே வரவில்லை என்று, என்னையும் பெரியாரையும் ஒருசேரத் தோழமை கொள்ளும் நண்பர் கூறினார்.

இதுவும் பொருத்தமாகப் படவில்லையே! நாளைய தினம் நடைபெற இருக்கும் கூட்டத்திலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும்தான் கவனிக்கப்பட இருக்கிறது. அங்கு பெரியார், தம்முடைய மற்ற பிரச்சினைகளை வலியுறுத்துவதாகக் காணோமே என்றேன். எனக்கென்ன தெரியும் என்றார் நண்பர். எனக்குப் புரிந்தது-புன்னகையும் பிறந்தது.

தம்பி! 27ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்ட மாபாவிகளிலே பலர், 28ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு பெரியார், தட்டாமல் தயங்காமல் வந்திருந்து தமது சீரிய யோசனையை வழங்கினார்.

பெரியார் 27ல் வரவில்லை, 28ம் தேதிய கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். 27ம் தேதிய கூட்டம் தேவிகுளம், பீரிமேடு சம்பந்தமாக.

28ம் தேதிய கூட்டம் ஆங்கிலமே இந்திய யூனியனின் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக. இந்த ஒரு பிரச்சினைக்காக ‘இதுக’ளோடு, நான் கலந்து பேசுவதா என்று கேட்ட பெரியார், மொழிப் பிரச்சினை மட்டுந்தான் என்று 28ம் தேதிய கூட்டம் நடத்தப்பட்ட போதிலும் அதிலே ‘இதுகள்’ இருந்தபோதிலும், வந்தார்!

நான் திகைத்துப் போனேன்-உன் நிலை எப்படியோ?

ஒன்று மறந்தேனே கூற... 28ம் தேதிய கூட்டத்தில் இராஜகோபால ஆச்சாரியாரும், திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரும், கே.எஸ்.ராமசாமி சாஸ்திரிகளும், வெங்கட்ராம அய்யரும் வந்திருந்தனர். 27ல் இந்த ‘ஜமா’ இல்லை!

27ல் தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை என்ற பெயரில், தமிழரின் உரிமைப் பிரச்சினை, மொழிவழி அரசுப் பிரச்சினை, அதை வெட்டி வீழ்த்தக் கிளம்பும் தட்சிணப்பிரதேச யோசனையை வீழ்த்தும் பிரச்சினை, சென்னைக்குத் தமிழ்நாடு என்று உரிய பெயர் பெறும் பிரச்சினை இவைகளுக்கெல்லாம்.

தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி, திராவிட பார்லிமெண்டரி கட்சி, ஷெட்யூல் காஸ்ட் ஃபெடரேஷன், வடக்கெல்லைப் பாதுகாப்பு கமிட்டி, திருகொச்சி இணைப்பு கமிட்டி, எழுத்தாளர் சங்கம், புதுவை முன்னணி, ஜஸ்டிஸ் கட்சி ஆகிய இத்தனை அமைப்புகளின் தலைவர்கள் ஒப்பமளித்தனர்; உடனிருந்து பணியாற்ற ஒருமனப்பட்டனர். செயலாற்றக் குழு அமைக்கப்பட்டது. பி.டி.ராஜன் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ம.பொ.சி. அமைப்புச் செயலாளராகவும், நமது என்.வி.நடராஜன், ப.ஜீவானந்தம், அந்தோணிப் பிள்ளை, சுப்ரமணியம் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர்.

இதுபோன்றதோர் ‘கூட்டணி’ இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தாயக மீட்புக்கு, அவரவர் தத்தமது கடமையைச் செய்ய, காணிக்கை தர, தயாராகி விட்டனர்.

இதிலே இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியின் உருவமோ முறையோ, வேலைத் திட்டமோ கொள்கைகளோ, இந்தக் கூட்டினால், குலையும் நிலையில் ஏதும் இல்லை.

தேவிகுளம், பீரிமேடு என்ற குறிச் சொல்லால் இன்று உணர்த்தப்பட்டு வரும் மொழிவழி அரசுத் திட்ட வெற்றிக்கான வரையில் கூடிப் பணியாற்றுவது என்பதே நோக்கம்.

இல்லையேல் பி.டி.இராஜன் தலைவர், ம.பொ.சி.யும் ஜீவானந்தமும் செயலாளர்கள் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்க முடியுமா?

தம்பி! அன்று நான் அனைவரிடத்திலும் கண்ட உள்ளத் தூய்மை என்னை உவகைக் கடலில் ஆழ்த்திற்று! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ ஏசினோம். ஏசப்பட்டிருக்கிறோம் எனினும், அன்று நாட்டுக்கு வந்துற்ற பெருங்கேட்டினை நீக்கிட நாமனைவரும், ஓர் அணியில் நின்றாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசியது கேட்டு, உளம் பூரித்தேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என் உள்ளத்தில் எப்போதும் இருந்து வருபவர். நீண்ட நாட்களாகக் காணாதிருந்தேன். அவருக்குக்கூட அல்லவா என்னிடம் கோபம், கசப்பு- அவர் அன்று அங்கு அமர்ந்து, அரசோச்சும் மன்னருக்குப் பழந்தமிழ்ப் புலவர்கள் பேராண்மையுடன் அறிவுறுத்திய பான்மை போல், அவையினருக்கு, ‘செயல்! செயல்! உடனடியாகச் செயல்! உரிமை காத்திடும் செயல்’ என்று பேசினதை நான் என்றும் மறந்திட முடியாது!

இந்தக் கூட்டு முயற்சியைக் குறைகூறிப் பேசுவோரும் எழக்கூடும் நாட்டிலே எதற்குத்தான் வாய்ப்பு ஏற்படவில்லை?

இந்தக் கூட்டணி அமைந்ததால் தத்தமது கட்சி கலைக்கப்பட்டு, கொடி அகற்றப்பட்டுக் கொள்கை தகர்க்கப்பட்டுப் போகும் என்பதல்ல. ஏமாளியும் அங்ஙனம் எண்ணத் துணியமாட்டான், ஒவ்வோர் கட்சியும் இந்தப் பொதுப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தத்தமது சக்திக்கேற்ற வகையிலும் அளவிலும் பணியாற்றி, அந்தக் கூட்டுச் சக்தியின் பலனாக, நாட்டுக்கு வந்துற்ற கேட்டினை நீக்குவர் என்பதுதான் பொருள்.

தம்பி, ஏற்பட்டுள்ள உறவு, முன்னாளில் இருந்து வந்த கசப்புகளையும் மறந்திடச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

அப்படிச் செய்தவர்! இப்படிப் பேசியவர்! என்று இரு தரப்பிலும் பேசிடுவது. அவரவர்க்கு தத்தமது அமைப்பினிடம் உள்ள பாசத்தை முன்னிட்டுத்தானே! இனிக் கூட்டுமுயற்சி மூலம், பல்வேறு அமைப்புகளும், பகையின்றிப் பூசலற்று, ஏசலை விடுத்துக் கூடுமானபோதெல்லாம் ஒன்றுபட்டுச் செயலாற்றவும், கருத்து வேறுபாடு எழும் பிரச்சினைகளில் தனித்து நின்று, ஆனால் ஓர் அமைப்பை மற்றோர் அமைப்புத் தாழ்த்திக் கொள்ளாமலும், அவரவர் துறை நின்று பணியாற்றுதலே பண்புடைமை, அறிவுடைமை என்பது பற்றி, நானும் நண்பர் ம.பொ.சி.யும் பேசியபோது, ஏன் அத்தகைய அன்புச் சூழ்நிலையை அமைத்தல் கூடாது? நீண்டகாலப் பகையும் ஒன்றை ஒன்று அழித்திடத்தக்க முறையும் கொண்ட திராவிடர் கழகமும் கம்யூனிஸ்ட்டும், கடந்த பொதுத் தேர்தலிலே, காங்கிரசை முறியடிக்க ஒன்றுபட்டுப் பாடுபடவில்லையா? இன்று காமராஜர் நமது இனப் பாதுகாவலர் என்று காரணம் காட்டிப் பெரியார் அவருக்குப் பெருந்துணைவராக இல்லையா? அதேபோல, மற்றவர்கள் பண்பறிந்து நடந்துகொள்ளவா முடியாது - நிச்சயம் முடியும் என்றே எனக்கும் தோன்றிற்று. 27ம் தேதி ஆச்சாரியாரும் பெரியாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட ‘அன்பினைப்’ பார்த்தபோது இஃதன்றோ, தமிழம் காண வேண்டிய காட்சி என்று தோன்றிற்று.

‘உலகத்திலே உள்ள அவ்வளவு பேதங்களும் எங்கள் இருவருக்கிடையில் உண்டு; மறைத்துப் பயனில்லை; என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நானும் அவரும் ஒத்துப் போகிறோம்; ஒரே அபிப்பிராயம்தான்’ என்று பேசினார்.

பார்ப்பனச் சூழ்ச்சி என்று கூறிவிடலாம், அவர் மட்டுமே இப்படிப் பேசி இருந்தால், பெரியார் பேசியது என்ன தெரியுமா, தம்பி!

‘என் அன்புக்குரிய ஆச்சாரியார்.

நண்பர்;

தலைவரென்றே சொல்லலாம்.’

‘இந்த ஒரு விஷயத்தில் நானும் அவர் கருத்தைப் பூரணமாக ஆதரிக்கிறேன்’ என்றார்.

28ல் ஏற்பட்ட கூட்டு, ஆங்கிலமே பொதுமொழியாக இருத்தல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குப் பல கட்சியினர் கூறிக் கூறி, அதைப் பெறுவதற்கு வழி காண ஏற்பட்டது.

27ல் ஏற்பட்ட கூட்டு, நாம் பெற வேண்டிய எல்லைகளைப் பெறவும். சென்னைக்கு உரிய தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கவும், தட்சிணப்பிரதேசம் என்ற பேய்த் திட்டத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பட்டது.

28ன் உடனடி விளைவு, ஆங்கிலமே பொதுமொழியாதல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குத் தெரிவிப்பது.

அதில் நாங்கள் அனைவரும் இசைவு தந்திருக்கிறோம்.

27ம் தேதி செய்த முடிவு, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை சம்பந்தமாக மத்திய சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 20ல் நாடெங்கும் பொது வேலைநிறுத்தம் செய்வது என்பதாகும்.

தம்பி! சர்க்கார் எத்தகைய கடுமையான முறைகொண்டும் நம்மை ஒடுக்கத் தயாராக இருக்கிறது. இப்போதே அறிவகத்தைச் சுற்றி போலீஸ் வட்டமிட்ட வண்ணம் இருக்கிறது.

அந்தத் ‘தட்டும் குவளையும்’ துடியாய்த் துடிக்கின்றனவோ என்னவோ யார் கண்டார்கள் - சிறையில்! எது எப்படி நேரிடினும் பிப்ரவரி 20, வெற்றிகரமாக, அமைதியாக, பலாத்காரமற்ற வகையில் நடைபெற்றாக வேண்டும்.

தம்பி, தயார்! தயார்!

அண்ணன்
அண்ணாதுரை



நள்ளிரவில்... நடுரோட்டில்... பசியோடு...
தமிழக - கேரள எல்லை குறித்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் நாடக, சினிமா கலைஞரும், எழுத்தாளருமான ‘பாரதி’ மணி. அவர் அந்த சம்பவத்தை இங்கு நினைவு கூர்கிறார்:

"1954ல் நான் நாகர்கோயில் சேது லஷ்மிபா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தேன். எங்க ஊருக்கு மாசத்துகொருமுறை ம.பொ.சி., சின்ன அண்ணாமலை, ந.சஞ்சீவி, கே.விநாயகம் தமிழரசு கழகம் சார்பா பொதுக்கூட்டம் பேச வருவாங்க. நான் ரொம்ப ஆர்வமா அவர்கள் பேச்சையெல்லாம் போய்க் கேட்பேன். பள்ளித்தோழன் தாணுப்பிள்ளை என்பவன், ஸ்டூடண்ட் லீடர். போராட்டம், மறியல் எல்லாத்துக்கும் சட்டாம்பிள்ளை மாதிரி முன்னாடி நிப்பான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனைப் பாக்கப் போயிருந்தப்ப, ‘டேய்! இன்னிக்கு ஒரு மறியல் இருக்குடா, நீயும் வா’ன்னு என்னையும் கூட்டிட்டுப் போயிட்டான். முனிசிபல் கோர்ட் வாசல்ல நிறையப்பேர் நின்னுக்கிட்டு, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும் ‘பட்டம் தாணுப்பிள்ளை ஒழிக’ என்றும் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்தான் அப்போது ஆளுங்கட்சியான பி.எஸ்.பி. பார்ட்டி சார்பில் திருவிதாங்கூர், கொச்சிக்கு முதல்வர். தமிழர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். ‘கண்டால் அறியுன் நபர்’ அப்படிங்கிற எழுதப்படாத சட்டம் மூலம் தமிழர்களின்மீது போலீஸைக் கொண்டு அராஜகம் செய்து வந்தவர். எஃப்.ஐ.ஆர். இல்லாமலே யாரை வேண்டுமானாலும் ஒரு மாதம் உள்ளே வைக்கலாம் என்பது அப்போது வழக்கில் இருந்தது.

மொத்தம் அறுபது பேரோடு நானும் கலந்துகொண்டு கோஷம் போட ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு வேனில் வந்த போலீஸ், எங்களையெல்லாம் அதில் அள்ளிப் போட்டுக்கொண்டு கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய், ஒரு சிறிய அறையில் மொத்தமாக அடைத்துப் போட்டார்கள். மதியம் மூணு மணியிலேர்ந்து ராத்திரி மூணு மணி வரைக்கும் அந்த ரூமுக்குள்ளேயே தண்ணீர்கூட கொடுக்க மறுத்து, எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். ஏற்கெனவே அழுக்கடைந்திருந்த அந்த அறையில், மற்றவர்களின் வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ள, சுவாசிப்பதே மிக சிரமமாக இருந்தது. ஒருவழியாக இரவு மூன்று மணிக்குமேல் எங்களையெல்லாம் திறந்துவிட்டு, அதே வேனில் ஏற்றினார்கள். அந்த வேன் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. கடைசியில், நாகர்கோயிலிலிருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் நடுரோட்டில் எங்களை இறக்கிவிட்டு, அந்த வேன் போய்விட்டது. கும்மிருட்டில் மரத்தடியில் பசியோடு படுத்திருந்தோம். விடிந்ததும் தான் நாங்கள் அழகிய பாண்டியபுரத்தின் அருகில் இருக்கிறோம் என்றே தெரிந்தது. அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து, ஊர் வந்து சேர்ந்தோம்.

அப்படி அந்தச் சம்பவத்தில் கைதானவர்களில், நான் ஒருவன்தான் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவன். தெருவுக்குள் நுழைந்ததுமே ஒருவர் மாலையோடு ஓடி வந்தார். இன்னும் நான்கு பேர், என்னை தங்கள் தோளில் தூக்கிவைத்துக் கொண்டு வீடுவரைக்கும் கொண்டு போனார்கள்.’ ‘நேற்று வகுப்புத் தோழனைப் பார்க்கப்போன உன் மகன் இன்றைக்கு போராட்டத் தியாகியாக வீடு திரும்பி இருக்கிறான், வந்து பார்’ என்று என் அப்பா, அம்மாவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்."

- கல்யாண்குமார்

நன்றி - புதியதலைமுறை இணையம்
http://www.puthiyathalaimurai.com/this-week

சிறை வைக்கப்பட்டாரா தா. பாண்டியன்?



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது!
தா.பாண்டியனுக்கு அப்படி என்னதான் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்...

“இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசை அதில் தலையிட வலியுறுத்தி டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்தது. பெயரளவில் அது அனைத்துக் கட்சிக் குழு என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் அதில் இருந்தவர்கள் தி.மு.க.வுக்கு அனுசரணையானவர்கள்தான். ஆனால், அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் பிரதமர் அலு வலகத்திற்குள் நுழைந்தார், தா.பாண்டியன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் தீவிரமாக இருந்த தா.பாண் டியனின் திடீர் என்ட்ரியால், குழுவின் தலைவரான டி.ஆர்.பாலுவுக்குக் கடும் அதிர்ச்சி!

பின்னர் குழுவினர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தனர். தா.பாண்டியனும் தன் பங்குக்கு, ‘இலங்கையில் அரசியல் தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும். அங்கே சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும், இலங்கைக்கு இந்தியா எந்த ஆயுதத் தள வாடங்களையும் அனுப்பக் கூடாது’ என பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார். இவரது கோரிக்கைகளுக்கு பிரதமர் வாய்திறக்காத நிலையில், பக்கத்தில் இருந்த பிரணாப் முகர்ஜியோ, ‘ராணுவத் தளவாடங்கள் வழங்குவது இரு நாட்டு உறவுகள் சம்பந்தப்பட்டது. அதை நிறுத்த முடியாது’ என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

லட்சக்கணக்கான தமிழர்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில், மனசாட்சியே இல்லாமல் மத்திய அமைச்சர் ஒருவர் பேசியதையும், பிரதமர் வாயே திறக்காமல் மௌனமாக இருந்ததையும் அப்போதே தமிழகக் குழுவினர் அம்பலப்படுத்தி யிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் வெளியே வந்து, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க உறுதி தந்திருப்பதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்கள்.

தா.பாண்டியன் உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை நடத்திய விதம்தான் ரொம்பக் கொடுமை. ‘உள்ளே நடந்த விஷயங்களை நீங்கள் வெளியே சொல்லக் கூடாது. நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அது தமிழர்களுக்கு இன்னும் கெடுதலாகிவிடும்’ என டி.ஆர்.பாலு திரும்பத் திரும்பச் சொல்லி தா.பாண்டியனை பிரதமர் அ லுவலகத்தின் உள்ளேயே உட்கார வைத்துவிட்டார். ‘மவுனச் சாமியாராக’ இருந்த பிரதமரோ இன்னும் ஒருபடி மேலே போய் தா.பா.விடம், ‘உங்களுக்குப் புலிகளை நன்றாகத் தெரியுமே? நீங்கள் எப்படி இவர்களோடு வந்தீர்கள்?’ என்கிற ரீதியில் பேசி நேரத்தைக் கடத்தி, மீடியாக்கள் கிளம்பிப் போன பிறகே தா.பா.வை வெளியே விட்டிருக்கிறார். நாகரிகம் கருதி தா.பா.வும் இவற்றை முழுமையாக வெளியே சொல்லவில்லை’’ என்றார்கள் அவர்கள்.

இதுபற்றி தா.பாண்டியனிடமே கேட்டோம். “வெளியூரில் இருந்த நான் தமிழகக் குழுவினர் பிரதமரைச் சந்திப்பதைக் கேள்விப்பட்டு நானாகப் போய் அதில் பங்கேற்றது உண்மைதான். முன்னாள் எம்.பி. என்ற வகையில் பிரதமர் அலு வலக அதிகாரிகள் என்னைத் தடுக்கவில்லை. பிரதமர் மௌனமாக இருந்தது, பிரணாப் முகர்ஜி பேசியது, டி.ஆர்.பாலு நடந்துகொண்டவிதம் பற்றியெல்லாம் பொதுக்கூட்டங்களில் ஏற்கெனவே நான் பேசியிருக்கிறேன். அடுத்தபடியாக இந்த விவகாரம் சம்பந்தமாக ஒரு புத்தகமே எழுத இருக்கிறேன்’’ என்றார்.

ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ், தி.மு.க.வின் துரோகத்தை அந்தப் புத்தகம் வலுவாகவே அம்பலப்படுத்தும் என் கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

நன்றி- குமுதம் ரிப்போட்டர்

Monday, January 30, 2012

செயலை அடிப்படை கொள்கையாகவும் பேச்சை பிரச்சார யுக்தியாகவும் கொண்டவர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடையலாம்.

குடியரசு கொண்டாடுவோம்

அந்த மூவர்ணமும் ஒரு அசோக சக்கரமும்
=======================================

நம் கொடிக்கு
அறுபத்தேழு ஆண்டாக
கெட்டிச்சாயம் தான்.
சாயம் போனது
ஜனநாயகத்துக்கு தான்.

"லொக் லொக்" லோக் பால்
===========================
லோக் பால் வந்தால்
தேனும் பாலும் ஓடுமா?
கங்கைக்குள்ளும்
ஆயிரம் கூவங்கள்.
இன்று புத்தன் இருந்தால்
கேட்டு இருப்பான்....
"லஞ்சமே கொடுக்காத
வீட்டில் இருந்து
அரைப்ப‌டி
க‌டுகு கொண்டுவாருங்க‌ள்."

இந்தியா..பாகிஸ்தான்
====================

வெள்ளையன் பிரித்துத்தந்தான்.
அதனால்
இன்றும் இந்திய இதயத்தின்
ஆரிக்கிள் வென்டிரிக்கிளில்
ரத்தம் குடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள்க‌ள் தான்.

அலங்கார வண்டிகள்
=====================

உண்மை வண்டி ஒடிந்து நிற்க‌
பொம்மை வண்டிகள்
ஆயிரம் ஊர்வலம்.
முப்படைகள் மீசையை
முறுக்கி விட்டுக்கொள்ளட்டும்
ஆட்சேபணையில்லை...ஒரு
முல்லையாற்றுக்கு முன்னால் இவை
முனை ம‌ழுங்கிப்போவ‌தென்ன‌!

ந‌திகளை இணைக்க‌ப்போகிறோம்
என்று
அதோ ஒரு அல‌ங்கார‌வ‌ண்டி
ஊர்ந்து வ‌ந்து கொண்டிருக்கிற‌து.
ஆம்.
அது எல்லா மாநிலங்களின்
அரசியல் சாக்கடை நதிகள் எல்லாம்
ஒரே நதியாய்!


ம‌ரியாதை
=========
இந்திய அன்னையின் முகத்தில்
ஊழல்
காறி உமிழ்ந்தது.
அதற்கு மரியாதை செலுத்தவா
இந்த பீரங்கிகளும் இங்கு
குண்டுகள் உமிழ்ந்தன?

வாகா
==========
விறைத்த சல்யூட்டுகளுடன்
பூட்ஸ்கால்கள் ஓங்கி மிதிக்க‌...அடியில்
இந்தியிலும் உருதுவிலும்
இந்திய‌த்தாயின் க‌ண்ணீர்த்துளிக‌ள்.

இல‌வ‌ச‌ங்க‌ள்.
============
வெள்ளைக்கார‌ன்
அன்றே தெரிந்து கொண்டான்.
"இல‌வ‌ச‌ங்க‌ள்" தான்
இங்கே ஆட்சி செய்யும் என்று.
அத‌னால்
"இல‌வ‌ச‌மாய்"த் த‌ந்தான் இந்த‌ சுத‌ந்திர‌ம்.


இன்னும் தோண்டுங்கள்
========================
மசூதிக்கு அடியில் ஒரு கோவில்
கோவிலுக்கு அடியில்
இன்னோரு கோவில்.
அதற்கும் அடியில்
ஒரு நாகரிகம் தோன்றியதன்
எலும்புக்கூடுகள்.
இன்னும் தோண்டுங்கள்
கூச்சல்கள்
கூப்பாடுகள்
கேட்கிறதா அந்த‌
கொலவெரி...
கூப்பிட்டு விருந்து கொடுங்கள்.
அமைதி எனும்
ஃபாசில்கள் கிடைக்கும் வரை....

சொற்பொழிவு
=============
புள்ளிவிவரத்தில் பசித்து
புள்ளிவிவரத்தையே புசித்து
புள்ளிவிவ‌ர‌த்தைப்ப‌டித்து
ஏதாவது ஒரு
இருபத்திமூன்றாம் நூற்றாண்டுக்குள்
வறுமையை ஒழிப்போம் என்று
இலக்கு குறிப்போம்.


க‌ருப்புப்ப‌ண‌ம்
============

சுவிஸ் பேங்கில் ப‌ண‌ம்
க‌ண‌க்கில் வெள்ளைய‌டிக்காத‌ ப‌ண‌ம்.
நம் நாட்டு ஊழலின்
ஆயுதக்கிடங்கு இந்த பேங்கு தான்.
க‌ருப்புப்ப‌ண‌ம்
காவி நிற‌த்தில் கூட‌ இருக்க‌லாம்.
உல‌கமெங்கும்.
இவ‌ர்க‌ளின்
க‌ண்ணுக்குத்தெரியாத‌
செக்கு புத்த‌க‌த்தில் தான்
ந‌ம் அர‌சிய‌ல் ச‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ளும்
ஆன்மீக‌ வேத‌ புத்த‌க‌ங்க‌ளும்
அச்சிட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

இல‌ங்கைக்கு இந்திய‌ தூதுவ‌ர்க‌ள்
==============================

வ‌ட்ட‌மேஜையை
சுற்றி சுற்றி வ‌ர‌
வெள்ளைக்கால‌ர் அதிகாரிக‌ள்.
ஆயிர‌க்க‌ண‌க்கில்
த‌மிழ‌ர்க‌ள் ப‌டுகொலை!
அது ப‌ற்றி க‌ண‌க்கு எடுக்க‌
அந்த‌ காக்கா குருவிக‌ளை
அழைத்திருக்கிறார்க‌ள்.
பாவ‌ம்.
ராஜ‌ப‌க்ஷேக்க‌ள் அமைதியாக தூங்க‌ட்டும்.
ஃபைல் குறிப்புக‌ளில்
இந்த‌ அமைதி காக்கும் ர‌க‌சிய‌ம்
ப‌த்திர‌மாக‌
பாதுகாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.


கோட்டை ர‌க‌சிய‌ம்.
==================

புதிய‌ ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌த்தில்
ஒரு புதிய‌ ம‌ருத்துவ‌ ம‌னை.
அறிஞ‌ர் அண்ணா நூல‌த்தில்
குழ‌ந்தைக‌ள் ம‌ருத்துவ‌ ம‌னை.
த‌மிழ‌க‌த்தின்
ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ ம‌னையை
எங்கே வைப்ப‌து?
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு
நெய்க்கு அலைவ‌தா?
இருக்க‌வே இருக்கிற‌து
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை!

ஒரு உர‌த்த‌ சிந்த‌னை!
====================

அவ‌ர்க‌ள் ஒரு மாட்டுத்தாவ‌ணியை
ம‌துரையில்
ம‌த்திய‌ பேருந்து நிலைய‌ம் ஆக்கினார்க‌ள்.
சென்னையில்
ஏன் உல‌க‌த் த‌மிழ் செம்மொழிப்பூங்காவை
ஒரு மாட்டுத்தாவ‌ணி ஆக்க‌க்கூடாது?

கூட‌ங்குள‌ம் அணு உலை
=======================

எருமை மாடுக‌ள் கூட‌
செல்ஃப்போன்க‌ளில்
"கொல‌வெரி" கேட்கும் நாடு இது.
இதை "இருட்டு இந்தியா"
ஆக்க‌வும் த‌ய‌ங்காத‌
ம‌ந்தைக‌ளின்
ச‌ந்தை இரைச்ச‌ல்க‌ளில்
மாட்டுச்சாண‌மே மிச்ச‌ம்.

நன்றி - ருத்ரா (இ.பரமசிவன்)
பண்புடம் குழுமம்

Sunday, January 29, 2012

அனுஷ்காவுடன்

29/01/2012 அன்று மும்பை, கோரேகாவ் ஒபேராய் டவரில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பில் மொழி மேற்பார்வையாளராக கலந்துகொண்ட பின் அனுஷ்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Saturday, January 28, 2012

உயிர்(எழுத்து)இந்தியா (அன்றும் இன்றும்)

கலைச்சோழன் sarav4kr@gmail.com

அன்னியர் ஆட்சியை அகற்றிய நாடு
அதன்பின் அரசியல்வாதி கைப்பற்றிய நாடு

ஆங்கிலேயர் ஆட்சியே நல்லது என்று
ஆமோதிக்கும் அளவு உள்ளது இன்று

இதிகாசம் இலக்கியங்கள் பல பார்த்திருக்கின்றது
இறக்கம் கொண்டு குற்றத்தை ஊக்குவிக்கன்றது

ஈடு இணையற்ற இந்திய நாடு
ஈரமும் இரக்கமும் மறந்த நாடு

உலகத்தில் வளங்களில் முதலிடம் பெற்றது
உலகத்தில் ஊழலில் முதலிடம் பெற்றது

ஊரெங்கும் கலையும் கலாச்சாரமும் சிறந்தது
ஊறிய நாகரிகத்தில் அவ்விரண்டும் இறந்தது
எதுவும் தனக்கென்று எண்ணாதோரின் ஆட்சி
எல்லாம் தனக்கென்று எண்ணுவோரின் ஆட்சி

ஐந்தில் நால்வர் நல்லவர் ஆட்சியில்
ஐந்தில் நால்வர் கெட்டவர் ஆட்சியில்

ஒற்றுமையும் ஒழுக்கமும் நிறைந்து இருந்தது
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே குறைந்தது

ஓசையின்றி இந்தியா வலுவிழந்து உள்ளது
ஓரளவாவது உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது

(ஒளவை பிறந்து தமிழை வளர்த்தார் அன்று
ஔடதம் குடித்து அத்தமிழே இறக்கும் இன்று)

Thursday, January 26, 2012

முத்துக்குமார் நினைவஞ்சலியில்

2010 ஜனவரி மாதம் மும்பை தாராவி கணேசர் ஆலயத் திடலில் சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் சார்பில் முத்துக்குமாரின் நினைவஞ்சலி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசும்போது எடுத்த படம்.

Tuesday, January 24, 2012

இலங்கையில் அடிப்படை மனித உரிமை, பாதுகாப்பு என்பதே படுமோசமாகியுள்ளன!- மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிக்கை வெளியீடு


இலங்கையில் நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை! ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை என மனித கண்காணிப்பகத்தின் 2012ம் ஆண்டுக்குரிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை எகிப்திய தலைநகர் கெய்றோவில் 2012 ஆண்டுக்குரிய அறிக்கையினை மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் உள்ள மனித உரிமை நிலைவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை தருகின்றோம் :

கடந்த வருடத்தில் இலங்கை அரசு, நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதற்கும் தவறியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch) இன்று வோர்ல்ட் ரிபோர்ட் (World Report)2012’-ல் தெரிவித்துள்ளது. போரில்-நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை அகலத் திறந்திருந்த போது, அரசு, நாடு முழுவதிலும் அடிப்படை சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத்தியது.

பாதுகாப்புப் படையினர் மூலமான கொடுமைப்படுத்துதல்களுக்கும், ஊடகத்தையும் சிவில் சமூகக் குழுக்களையும் மிரட்டியதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பின்மை குறித்த புகார்களை பெருமளவில் நிராகரிப்பதற்கும், நில அபகரிப்பிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அரசு பொறுப்பு கூறும் நிலையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch) கூறியது.

டிசம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (Lessons Learnt and Reconciliation Commission) நீண்ட-காலம் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) நடந்த மே 2009’ல் முடிந்த போரின் இரத்தக்களரியான கடைசி மாதங்களில் இராணுவம் நடந்துகொண்ட முறைக்கு எதிரான குற்றச்சாட்டினின்றும் அதை பெருமளவு விடுவித்தது.

“2011’ல், பொறுப்பேற்றல் என்பது வழக்கற்றுப்போன விடயமாகவே நீடித்தது, ஊடகங்கள் அதிக தணிக்கையை எதிர்கொண்டன, சண்டைக்கு வித்திட்ட நீண்ட கால குறைகள் எதுவும் அக்கறையுடன் கையாளப்படவில்லை,” என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் (Human Rights Watch) ஆசிய இயக்குனர் ப்ராட் ஆடம்ஸ் (Brad Adams) கூறினார். “சர்வாதிகாரத்துவம் அதிகரித்துக்கொண்டுள்ள அரசின் அநீதி, பலவீனமான ஆட்சி அதிகாரம், நில அபகரிப்பு, ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுதல் போன்றவற்றை ஸ்ரீலங்கர்கள் சந்திக்கின்றனர்.

சிலரால் ஊகிக்க முடிகின்ற வகையில் கடந்த வருடம் அரபு நாடுகளில் மக்களின் ஆதரவு பெற்ற எழுச்சிகள் உட்பட 90’க்கும் அதிகமான நாடுகளில் மனித உரிமைகளின் வளர்ச்சியை மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)தனது வோர்ல்ட் ரிபோர்ட் (World Report)2012’–ல் மதிப்பிட்டுள்ளது. “அரபு எழுச்சியை (Arab Spring)” ஏற்க மறுக்கின்ற வன்முறை சக்திகள் தொடர்பாக, பிராந்தியத்தில் பிறப்புரிமைகளை மதிக்கின்ற ஜனநாயகங்களுக்கு உதவுவதில் சர்வதேச சமூகம் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது என வோர்ல்ட் ரிபோர்ட் (World Report)–ல் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)கூறியுள்ளது.

வன்குற்றம் புரிபவர்களை பொறுப்பு கூறத் தவறும் அரசின் செயலானது வருடம் முழுதும் ஓர் மிக முக்கிய விடயமாக நீடித்தது. எல்டிடிஈ (LTTE) உடனான சண்டையின் போது நிகழ்த்திய கொடுமைகளுக்கு எவருமே தண்டிக்கப்படவில்லை. ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் (Ban Ki-moon) தலைமையில் நிறுவப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட, அரசுப் படைகள் மற்றும் எல்டிடிஈ (LTTE) இருவராலும் மேற்கொள்ளப்பட்ட மிகுதியான வன்முறைகள் குறித்த கண்டறிதல்களையும் போர்-விதிமீறல்களை விசாரிக்க நடுநிலையான சர்வதேச அமைப்பிற்கு அழைப்பு விடுத்ததையும் அரசு நிராகரித்தது.

பதிலாய், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) சட்டப் பாராதீனம், சமாதானஞ்செய்தல், செயல்படு முறைகள் எனும் அனைத்தும் அதிக குறைபாடு கொண்டவையாய் இருந்தபோதிலும், போர்க்கால குற்றங்களை எடுத்துரைப்பதற்கு தனது ஆணைக்குழுவே சிறந்த அமைப்பு என வலியுறுத்தியது. எல்எல்ஆர்சி (LLRC), போர்-விதிமீறல்கள் தொடர்பாக அரசுப் படைகளை குற்றச்சாட்டிலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது, நீண்ட-கால பரிந்துரைகளுக்கு புதுவடிவம் கொடுத்தது, அத்துடன், பொறுப்பு கூறுதலை துரிதப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் யாவும், மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)உட்பட ஐ.நா. வல்லுனர் குழு, நீதிமன்ற நேரடி வழக்குடன் தொடர்பில்லாமல் மரண தண்டனை நிறைவேற்றுதல் தொடர்பான ஐ.நா. சிறப்புத் தூதர், அரசுசாரா அமைப்புகள் போன்றோரின் கண்டறிதல்களுக்கு முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.

அரசின் வெடிகுண்டுத் தாக்குதல்களின் விளைவாக படைத்துறை சாராதோர் இறந்துள்ளனர் எனும் குற்றச்சாட்டை அரசு விடாமல் மறுக்கின்ற வேளையில், அது உண்மையென எல்எல்ஆர்சி (LLRC) கண்டறிந்தபோதிலும், போர் விதிகளால் தடைசெய்யப்படுகின்ற கண்மூடித்தனமான தாக்குதல்கள் கூடுமான வரை பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் மருத்துவமனைகள் மீதும் தொடர்ந்து நிகழ்வதை அது சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch) கூறியுள்ளது.

“அரசுப் படைகள் மூலமான வன்முறைகள் குறித்து விவரிக்கப்பட்ட ஐ.நா. வல்லுனர் குழுவின் அறிக்கைகள் யாவும் எல்எல்ஆர்சி (LLRC) ’யின் கண்டறிதல்களில் மர்மமான முறையில் தொலைந்துள்ளது,” என ஆடம்ஸ் (Adams) கூறினார். “எல்எல்ஆர்சி (LLRC) ’யின் பயனுள்ள பரிந்துரைகளும் கூட, மற்ற ஸ்ரீலங்க ஆணைக்குழுக்களுடன் சேரும் நோக்கில் ஒரு ஓரமாய் கோப்பிலிட்டு புறக்கணித்து ஒதுக்கிவைக்கப்பட்டதாக தெரிகிறது.”

இலங்கையில் சுதந்திரமாய் கருத்து தெரிவிப்பது என்பது 2011’ல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் (Jaffna)-சார்ந்த செய்தித்தாளின் பதிப்பாசிரியர் ஜூலை மாத இறுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் குழுவால் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டார். யூலை மாதத்திலேயே, ரேடியோ நெதர்லாந்து (Radio Netherlands) பத்திரிக்கையாளர் குழு, போலீசாரால் துன்புறுத்தப்பட்டு பின்னர், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வெட்கட்கேடான அடையாளம் எனும் வகையில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்களால் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.

மேல்மட்ட ஊழல் பற்றி சண்டே லீடர் (Sunday Leader) பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரைகளுக்கு பதிலடியாக, 2009’ல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதன் வாயிலாக தனது சகோதரர் லசந்தா விக்ரமதுங்கா (Lasantha Wickrematunge)’வை இழந்தவரான, சண்டே லீடர் (Sunday Leader)-ன் நடத்துனரை ஜனாதிபதி ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து தாக்குவதாக தனிப்பட்ட முறையில் மிரட்டினார். டிசம்பரில், யாழ்ப்பாணத்தில் (Jaffna) திட்டமிட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு செல்லும் வழியில் லலித் குமார் வீரராஜ் (Lalith Kumar Weeraraj), குகன் முருகானந்தன் (KuganMuruganathan) எனும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் பலவந்தமாய் கடத்திச் செல்லப்பட்டு மாயமாய் மறைந்து போயினர்.

அரசியல் தலையீடுகளை தொடர்ந்தால் அகற்றப்படுவாய் எனச் சொல்லிய அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முன்பாக தனது மகனுக்கு வந்தன என்று வீரராஜின் (Weeraraj) தந்தை தெரிவித்தார்.

நவம்பர் மாதம், நாட்டின் ஊடகங்களுக்கான வழிமுறைகளையும் நடத்தை விதிமுறையையும் அரசு வெளியிடும் என அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் (Daily News) அறிவித்தது. செய்தி இணையதளங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ளுமாறு ஊடக அமைச்சு அழைப்பு விடுத்தது. நாட்டிற்குள் அரசை குற்றங்கண்ட குறைந்தது ஐந்து இணையதளங்கள் அடுத்தடுத்து தடைசெய்யப்பட்டன.

“சுதந்திர ஊடகம் என்பது ஜனநாயக அரசின் அத்தியாவசிய கட்டமைப்பு,” என ஆடம்ஸ் (Adams) கூறினார். “குறைகாணலுக்கு, அடக்குமுறைகளின் வாயிலாக பதிலளிப்பதன் மூலம், ராஜபக்ச (Rajapaksa) அரசு இதை அபாயத்துக்கு உள்ளாக்குகிறது.”

நல்லிணக்கம் அர்த்தமுள்ள வளர்ச்சியைக் கண்டுள்ளது என அரசு சொல்கிறது, ஆனால் அந்த வாதத்தை ஆதரிப்பதற்கு குறைவான ஆதாரமே உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch) கூறியது. அதிகாரப் பகிர்வு குறித்து அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் (TNA) இடையிலான பேச்சுவார்த்தைகள் 2011’ன் பெரும்பான்மையான சமயங்களில் செயலிழந்து நின்றது. ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிகழும் தேர்தல்களை நோக்கிய பிரச்சாரங்களின் போது டிஎன்ஏ (TNA)’வின் உறுப்பினர்களும் மற்றும் ஆதரவாளர்களும், உலோகக் கம்பிகள், குறுந்தடிகள், கம்புகள் போன்றவற்றைக் கொண்டிருந்த படையினரால் தாக்கப்பட்டனர்.

2011’ல் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களிடத்தில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன. மனித நேயமிக்கவர்கள், உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்கள், குடும்பத்தினர் போன்றோர் பெருமளவு அணுகுவதற்கு வடக்கிற்கான சுதந்திர இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வாழ்க்கை நிலைமையை இயல்பாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு 2011’ல் குறைவான அளவே மேற்கொண்டது. பாலினம்-சார்ந்த வன்செயல், அச்சுறுத்தல் மூலம் விபச்சாரம் செய்தல் போன்ற கவலைக்கிடமான சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு என்பது பிராந்தியத்தில் மோசமாகவே நீடிக்கிறது.

“கிறீஸ் பூதங்கள்” (greasedevils) எனப்படுகின்ற முகந்தெரியாத ஆண் தாக்குதலாளர்களால் வருட மத்தியில் நிகழ்த்தப்பட்ட நிலைகுலையச் செய்யும் தாக்குதல்கள் யாவும், பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் தேவைகளை போதுமான அளவு எதிர்கொள்வதற்கான பாதுகாப்புப் படையினரின் திறமையிலுள்ள வெற்றிடத்தை வெளிக்காட்டியது. வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவு இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் செயலானது, பெருமளவிலான தமிழ் மக்களிடையே உள்ள நம்பிக்கையின்மையின் தொடரும் ஆதாரமாக இருந்தது.

பல ஆண்டுகளாய் நீடிக்கின்ற சண்டைக்கு ஆதரவாயுள்ள மைய பிரச்சனைகளில் ஒன்றான நிலப் பிரச்சனை தொடர்ந்து தீர்க்கப்படாததாகவே இருந்து கொண்டுள்ளது. நில உரிமை மற்றும் கோருவதற்கான தகுதி, குறிப்பாக போரின் போது தப்பியோடியவர்களுக்கான தகுதியை எடுத்துரைப்பதற்கு திட்டமிட்ட சுற்றறிக்கை ஒன்றை ஏப்ரல் மாதத்தில் அமைச்சகம் ஏற்றுக்கொண்ட போதும், அதன் சட்டப்பிரிவுகளை அமலாக்குவதற்கு குறைவான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் தேவைப்படுமாறு, தேசிய நில ஆணைக்குழுவை (National Land Commission) நிர்ணயிப்பதற்கு அரசு தவறிவிட்டது. வடக்கிலும் நாட்டின் பிற இடங்களிலும் இராணுவத்திற்கு எதிரான நில-அபகரிப்புப் புகார்கள் 2011’ல் அதிகரித்தன. சில வழக்குகளில், ஆக்கிரமிப்பாளர்களால் அல்லாமல் உரிமையாளர்களால் தொடங்கி வைக்கப்பட்டபோது மட்டுமே இராணுவம் இங்குமங்குமாய் சில நஷ்டஈட்டை வழங்கியது.
“தமிழ் மக்களின் மனக்குறைகளை எடுத்துரைப்பதற்கான முயற்சியை அரசு போதும் போதாமலும் மேற்கொண்டுள்ளது,” என ஆடம்ஸ் (Adams) கூறினார். “அரசு முக்கியமான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கு பதிலாக, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் யாவரும் மிரட்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.”

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவல் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக சிறைப்படுத்தப்பட்ட ஏறத்தாழ 300,000 குடியிழந்தவர்களில் பெரும்பாலானோரால், போருக்குப் பிறகு 2010’ன் தொடக்கத்தில் வெளியேற முடிந்தது, ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் இன்னமும் தங்களின் வீடுகளுக்கோ சமுதாயங்களுக்கோ திரும்பிச் செல்ல முடியவில்லை.
அவர்களின் பிறப்பிடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் இன்னமும் முடிக்கப்படாத காரணத்தால், ஏறத்தாழ 57,000 மக்கள் உபசரிப்பாளர் இல்லங்களிலும், தோராயமாக 53,000 பேர் இன்னமும் முகாம்களிலும் பகுதியாய் பிரிந்திருக்கின்றனர்.

அரசு, டிசம்பர் மாதத்தில் 1000 தவிர அனைவரையும் விடுவித்திருந்தது, ஆனால் போராளிகள் எனவும் ஆதரவாளர்கள் எனவும் குற்றம்சாட்டி ஏறத்தாழ 12,000 “சரணடைந்த” எல்டிடிஈ (LTTE)’யினரை, அவர்கள் யாவரும் 2012-மத்தியில் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறி குற்றச்சாட்டு தாக்கல் செய்யாமல் அல்லது வழக்கு விசாரணை மேற்கொள்ளாமல் காவலில் வைத்துள்ளது.
இந்த முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு, பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு பயிற்றுவிக்கப்படுவார்கள் என அரசு கூறுகிறது. மற்ற 1,000 “தீவிர” எல்டிடிஈ (LTTE) உறுப்பினர்கள் பூசா (Boosa) முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அரசு கூறியது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரின் நிலைமையும் அறியப்படாததாகவே உள்ளது. சிறைக்காவலில் மோசமாக நடத்தப்படுத்துவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவில்லை.

நெருக்கடிநிலைச் சட்டங்கள் (Emergency Regulations) யாவும் ஆகஸ்டு 31 அன்று காலாவதியாவதற்கு அனுமதிக்கப்பட்டது, ஆனால் பயங்கரவாத தடுப்புச்சட்டம் (PTA) 1979 மற்றும் மற்ற சட்டங்களும் விதிகளும், 18 மாதங்கள் வரையில் குற்றச்சாட்டை பதிவு செய்யாமல் தடுப்புக்காவலில் வைத்திருக்க அனுமதித்து, தவறான வகையில் தடுப்புக்காவலில் வைத்திருக்கும் ஆட்சிமுறையை விட்டுவைத்திருக்கிறது.

மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் யாவும் ஜனாதிபதி ராஜபக்ஷ’வின் (Rajapaksa)ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (United Freedom People’s Alliance party) பிடிப்பை மேலும் பலப்படுத்தியது. அது, போட்டியிட்ட 322 உள்ளூர் அமைப்புகளில் 270 இடங்களை வென்றது. முந்தைய வருடங்களைப் போலவே, அரசு மீதான தனது பிடிப்பை பலப்படுத்துவதற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையே ஜனாதிபதி சார்ந்திருந்தார். ராஜபக்சந’வின் (Rajapaksa) பல்வேறு சகோதரர்கள், முக்கிய இலாக்காக்களுடன் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். எதிர்க் கட்சிகள் யாவும் திறமையுடன் ஓரங்கட்டப்பட்டன.

2010 ஜனாதிபதி தேர்தலிலின் போது ராஜபக்ஷ’விற்கு (Rajapaksa) சவால் விட்ட முன்னால் இராணுவ படைத்தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka), ஜனவரி 2012’ல் முடிவடைந்த அவரது தற்போதைய தண்டனைக்குப் பிறகு கூடுதலாக மூன்று வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

“ராஜபக்ச (Rajapaksa) அரசு, அரசியல் ரீதியாக தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதால், நாட்டின் அடிப்படை உரிமைப் பாதுகாப்புகள் யாவும் படுமோசமாகியுள்ளன,” என ஆடம்ஸ் (Adams) கூறினார்.

நன்றி - தமிழீழ புரட்சிகர மாணவர்கள் இணையம்

http://rste.org/2012/01/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/

Sunday, January 22, 2012

கேரளாவுக்கு பதிலடி கொடுக்க பாண்டியாறு புன்னம்புழா திட்டம்?

ஊட்டி: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் முரண்டு பிடிக்கும், கேரள அரசுக்கு "செக்' வைக்க, பாண்டியாறு புன்னம்புழா திட்டத்துக்கு, தமிழக அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


பாண்டியாறு புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் முழு வடிவம் பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மரப்பாலம் பகுதி வரை, இதற்கான பணிகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் ஓடும், 10க்கும் மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, பாண்டியாறு புன்னம்புழா நீரை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்த அணைகள் கட்ட திட்டமிடப்பட்டன. மரப்பாலம் பகுதியில், 42 மீ., உயரத்திலும், பாண்டியாறு பகுதியில், 62 மீ., உயரத்திலும், சோலாட்டி புழா பகுதியில், 65 மீ., உயரத்திலும், மூன்று அணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டப்படும் போது தேக்கி வைக்கப்படும் தண்ணீர், நீர்மின் திட்ட பணிகளுக்காக, மாயாருக்கு திருப்பி விடவும் திட்டமிடப்பட்டது. மின் உற்பத்தி பணிகளை, மசினகுடி அருகேயுள்ள சீகூர் மேற்கொள்ளவும், மின் உற்பத்திக்குப் பின் தண்ணீரை, கீழ் பவானி திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும், 14 டி.எம்.சி., தண்ணீரை, தமிழக, கேரள மாநிலங்கள் சரி சமமாக பங்கிடுவது என்றும், இதன் மூலம், 260 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும், அப்போது கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு, 1,600 கோடி ரூபாய் செலவாகும் எனவும், அப்போது மதிப்பிடப்பட்டது.


கேரள அரசின் எதிர்ப்பும், அச்சமும்: கேரள அரசு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு காரணம், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும் என்றும், அச்சம் தெரிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பந்தலூர், இளம்பிராலி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள், கேரள எல்லையில் இணைந்து சாலியார், கரியம்புழா, பேப்பூர்புழா என, மூன்று நதிகளாக பிரிந்து, அரபிக் கடலில் கலந்து வீணாகி வருகிறது. அரபிக் கடலில் வீணாகும் தண்ணீரைத் தேக்கி வைத்து, நீர்மின் திட்டத்திற்கும், நீர்ப்பாசன தேவைகளுக்கும் பயன்படுத்தவே, தமிழகம் தரப்பில் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கிடைக்கும் என்பதே முக்கிய காரணமாக இருந்தது.


கிடப்பில் போடப்பட்டது ஏன்? பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஆய்வாளர்களை கொண்டு முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வாளர்கள் அரசுக்கு சமர்ப்பித்த தகவல்களின் படி, "நீலகிரியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் 5000 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் முழ்கும். இதில், 2500 ஏக்கர் வனப்பகுதியாகவும் இருக்கும். ஆதிவாசிகளின் குடியிருப்புகளும் பாதிக்கப்படும். தவிர, முதுமலை காப்பகத்தில் 27 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் போது வனவிலங்குகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளது' என ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டதை தொடர்ந்து, பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் அப்போது கிடப்பில் போடப்பட்டது.


முல்லைப் பெரியாறு பிரச்னை: அரசியல் லாபத்துக்காக முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசியல் கட்சிகள் பெரிதாக்கி வரும் நிலையில், பாண்டியாறு- புன்னம் புழா திட்டம் உள்ளிட்ட பிற முக்கிய அணை திட்டங்களையும் மாநில அரசு நடைமுறை படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும், கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளை போல, அணை விஷயத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணைக்கும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எனினும், தற்போது எழுந்துள்ள அணைப் பிரச்னையால், மக்கள் மத்தியில் பாண்டியாறு அணை பற்றி பேசப்படுகிறது. அதேவேளையில், அரசின் சார்பில் இது குறித்து ஆய்வுகள் நடத்த எவ்வித தகவலும் எங்களுக்கு வரவில்லை' என்றனர்.

நன்றி - தினமலர்
http://www.dinamalar.com/News_detail.asp?Id=390938

எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்!



ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம்.
மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவருகிறார்.

அவருடன் உரையாடியதில் இருந்து.

நீங்கள் சந்தித்த ஈழத்துக் கொடுமைகள் என்னென்ன?'

பதுங்கு குழியே படுக்கும் பாய் ஆகவும் செத்துவிழும் பாடையாகவும் மாறிப்போனது எங்களது வாழ்க்கை. ஆளுக்கு ஒரு மாற்றுத் துணி, குழந்தைகளுக்குக் கொஞ்சம் பால், குடிக்கச் சிறிதளவு தண்ணீர், கொஞ்சம் பருப்பு என இதை மட்டுமே தூக்கிக்கொண்டு... ஷெல் அடிக்கும் திசைக்கு எதிராக... காற்று அடிக்கும் திசையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்போம்.

ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்து அங்கு பதுங்கு குழி தோண்டுவோம். குழந்தைகளை அதில் படுக்கவைத்துவிட்டு, நாங்கள் களைப்பு தீருவதற்காகக் குழியின் மேல் அமர்ந்து இருப்போம்.

திடீரென ஷெல் தாக்குதல் ஏற்பட்டால், குழிக்குள் குதித்து விடுவோம். சில இடங்களில் மேற்கூரை அமைத்து, அதன் மேல், மணல் மூட்டைகளைவைத்து பாதுகாப்பாகச் சில நாட்கள் வசித்தும் இருக்கிறோம்.

அந்த நேரங்களில், உணவுக்காக நாங்கள் பட்டபாடு எதிரிக்குக்கூட நேரக் கூடாது. ஆங்காங்கு இருந்த கிணறுகள் எங்கள் தாகத்தையும் பல நேரங்களில் பசியையும் தணித்தன.

பெரியவர்கள் நாங்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தாலும், பாலுக்கு அழும் குழந்தையை என்ன செய்வது? ரூ. 245 மதிப்புள்ள பால் மாவுப் பைகள் ரூ.2,000 வரை விற்கப்பட்டன.

கடைசியாக, அது ரூ. 3,000-க்குப் போய்விட்டது. சாயத் தண்ணீர் குடித்துதான் எங்கள் பிள்ளைகள் பிழைத்தன. எங்கள் குடும்பம் ஓர் இடத்தில் வசித்தபோது, என் மகன் இறந்துவிட்டதாகத் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில் நான் என் பேரப் பிள்ளைகளுக்கு பால் மாவு வாங்குவதற்காக அலைந்துகொண்டு இருந்தேன். என் கவனம் முழுவதும் கதறிக்கொண்டு இருந்த குழந்தைகள் மீதே இருந்ததால், அவர்கள் கூறிய தகவலைக் கேட்டும், 'இங்கு எங்கே பால் கிடைக்கிறது?

என்றுதான் விசாரித்துக்கொண்டு இருந்தேன். ரொம்ப நேரம் அலைந்து கொஞ்சம் பால் மாவு வாங்கி வந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டேன்.

அன்று இரவுதான், திடீரெனத் தோன்றியது. மகன் இறந்துவிட்டதாகச் சொன்னார்களே என்று!சற்றுத் தொலைவில் என் மகள் ஒரு பதுங்கு குழியில் இருந்தாள்.

உடனே, சென்று அவளுக்குத் தகவல் சொன்னேன். அப்போதுகூட எங்களுக்கு அழுகை வரவில்லை. இதுதான் அனைத்து மக்களின் மனநிலை. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்குக் கண்ணீர் என்பதே கிடையாது. அது எந்தக் காலத்திலோ வற்றிவிட்டது.''

நீங்கள் பிரபாகரனைச் சந்தித்து இருக்கிறீர் களா?'

தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தேன். அங்கு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். பல நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன்.

அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்த தலைவர், என்னைப் பல முறை அழைத்துப் பேசிப் பாராட்டி இருக்கிறார். நான்கு முறை அவரிடம் விருது வாங்கி இருக்கிறேன். மூன்று முறை அவருடன் சேர்ந்து உணவருந்தி இருக்கிறேன்.

என் நிகழ்ச்சிகள் குறித்த அவரது கருத்தை, பிறர் மூலமும் சொல்லி அனுப்பி என்னைப் பரவசப்படுத்தி இருக்கிறார். தமிழ்ப் பண்பாடு குறித்து நிறையப் பேசுவார். அவர் என்னுடைய விசிறி என்று சொல்லியதாகச் சொல்வார் கள்.

ஒரு முறை மேடை நாடகம் ஒன்று நடத்தினேன். அதற்கு வந்திருந்தவர், நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னை அழைத்துப் பாராட்டினார். அப்போது, நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

அவருடன் வந்திருந்த மெய்க்காப்பாளர்கள், 'அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இதற்கு மேல் அனுமதிக்க முடியாது’ என்று கூறினர். தலைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றார். தலைவரைப் பற்றிய நினைவுகள், அவருடைய கருத்துக்கள் என்னுள் இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன... இருக்கும்.''

பிரபாக இறந்துவிட்டதாகச் சொல்வது உண்மையா?''

''2009 மே 19-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 14-05-2009-ம் தேதி, தனது நண்பர்களுடனும் வளர்ப்பு நாய்களுடனும் கடற்கரையில் தலைவர் பிரபாகரன் நடந்து செல்வதை நான் பார்த்தேன்.

அப்போது, அவர் சிவிலியன் உடையில்தான் இருந்தார். (அதாவது புலி களின் சீருடையில் இல்லை!) ஆனால், 19-ம் தேதி பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அது, போர் முனையில் இருக்கும் புலிகளை நிலைகுலையவைக்க ராணுவம் செய்த சதி என்றுதான் நம்பினோம்.

அதற்கு முன்பே போர்க்களத்தில் இருந்து அவரை வெளி யேற்றத் தளபதிகள் எவ்வளவோ முயற்சி எடுத்தனர். ஆனால், தலைவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 'கடைசி வரை தமிழர்களுக்காகப் போராடுவேன்’ என்று கூறிவிட்டார்.

குண்டடிபட்டு இறந்தது பிரபாகரன்தானா என்று இலங்கை ராணுவத்துக்கு மட்டும் அல்ல... அவர் உடலை அடையாளம் காட்டியவர்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் மரணச் சான்றிதழ் தரவில்லை.

''இறுதிக்கட்டப் போர் நடந்த நேரத்தில் பிரபாகரனுடைய திட்டம் என்னவாக இருந்தது என அறிவீர்களா?''

போர் உக்கிரம் அடைந்திருந்த நேரத் திலும் நம்பிக்கையை இழக்காமல் மன உறுதியோடுதான் இருந்தார். 2008-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இயக்கத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைவர் பிரபாகரன், 'இப்போது நம்மிடம் தேவையான அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால், ஆயுதங்கள் இல்லை. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம், நவீன ஆயுதங்களால் நம்மைத் தாக்குகிறது. இருந்தாலும், நாம் கடைசி வரை போராடுவோம். நான் வீர மரணம் அடைந்தால், இந்த உரிமைப் போரைத் தமிழர்கள் நிறுத்திவிடக் கூடாது.

எனக்கு அடுத்து யார் இருக்கிறார்களோ... அவர்கள் ஒற்றுமையுடன் இந்தப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இதுதான் நமது லட்சியம்’ என்று முழங்கினார். 10 நிமிடங்கள்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது நானும் இருந்தேன். தலைவர் உடனே கிளம்பிச்சென்றுவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் கூரை பிரிக்கப்பட்டு, அங்கு கூட்டம் நடந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்குத் தடயங்கள் அழிக்கப்பட்டன.',

இன்றைய நிலைமைகளைச் சொல்லுங்கள். மீள்குடியேற்றம் என்பது சரியாகத்தான் நடக்கிறதா? ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த தமிழர்கள் தங்களுடைய சொந்த இடத்துக்கு முழுமையாகத் திரும்பிவிட்டார்களா?''

50 சதவிகிதத் தமிழர்கள்தான் இது வரை விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கும் வீடுகள் இன்னும் கட்டித் தரப்படவில்லை. நாலு தகர ஷீட், நான்கு கொம்புகள், நாலு மூட்டை சிமென்ட் இவைதான் கொடுக்கின்றனர்.

இதை வைத்து நாமாக வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவம் இதுவரை 50 வீடுகளைத்தான் தமிழர்களுக்குக் கட்டித் தந்துள்ளது. தமிழர்கள் வசித்த பகுதிகளில், சிங்களர்களும் ராணுவத்தினரும் குடி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

ராணுவத்தினர் பல்வேறு தொழில்களைத் தொடங்கிவிட்டனர். சலூன் கடைகூட ராணுவ வீரர்கள்தான் நடத்துகின்றனர். போரில் ஏராளமான குண்டுகள் விழுந்ததால், பல இடங்களில் விவசாயம் செய்யும் தன்மையை நிலம் இழந்துவிட்டது. தமிழர் கள் கூலி வேலைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் அக வாழ்க்கை மட்டும் அல்ல... புற வாழ்க்கை யும் இருட்டாகத்தான் இருக்கிறது.''

''இப்படிப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புகிறீர்களா?''

நிச்சயமாக! இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!''

நன்றி - மனிதன்
http://manithan.com/view-2012012216111.html

Saturday, January 21, 2012

தமிழர்களைக் குறிவைக்கும் புதிய இராணுவ நடவடிக்கை

நிராஜ் டேவிட்

'ஒப்பரேஸன் ட்ரஸ்ட்?

(ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பு OGPU என்ற பெயரில்தான் செயற்பட்டுவந்தது. பின்நாட்களில்தான் கே.ஜீ.பி. என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் பின்னாட்களில் பிரபல்யமான கே.ஜீ.பி. என்ற பெயரையே பரிட்சயம் காரணமாக இந்தக் கட்டுரையில் பாவிக்கின்றேன்.)

ரஷ்யப் புரட்சி முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ரஷ்யாவில் மன்னராட்சியை உருவாக்கும் நோக்கோடு ஒரு புரட்சிகர அமைப்பு உருவானது. அதன் பெயர் Monarchist Union of Central Russia (MUCR). 1921ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம், ரஷ்யாவில் எப்படியும் மீண்டும் மன்னராட்சியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வந்தது. சோவியத் ஒன்றியம் முழுவதிலும் அப்போதைய போல்ஸ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த பல்வேறு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் மும்முரமான போராட்டத்தை மேற்கொண்டுவந்தது இந்த MUCR அமைப்பு.

இந்த நேரத்தில்தான் கே.ஜீ.பி. ஒரு இரகசிய ஒப்பரேஸ்னை மேற்கொண்டது. மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, நிதானமாக, மிகவும் இரகசியமாகக் காய்களை நகர்த்தியது. கே.ஜீ.பி. இனது நோக்கமும், திட்டமும் வெறும் MUCR இயக்கத்தை முடக்குவது மாத்திரமல்ல. அதனையும் தாண்டி நீண்ட, விரிந்த திட்டத்தைத் தீட்டியது.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருந்த அனைத்து இயக்கங்களையும் கூண்டோடு அழித்துவிடத் திட்டம் தீட்டியது. அது மாத்திரமல்ல. சோவியத்தில் இருந்து வெளியேறி மேற்குலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து அங்கிருந்தபடி போராடி வரும் அமைப்புகளுக்கும் சேர்த்து கே.ஜீ.பி. வலை விரித்தது. நுணுக்கமானதும், மிகவும் கஷ்டமானதுமான ஒரு உளவுச் சதி. ஆனாலும் அதனை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரபல்யமான ஒரு உலகச் சாதனை கே.ஜீ.பி. படைத்தது. இந்த இரகசிய உளவு நடவடிக்கைக்கு கே.ஜீ.பி. சூட்டிய பெயர் Operation Trust.

முதலில் அந்தப் புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களைச் சுதந்திரமாகச் செயற்படவிட்டார்கள். அழைத்துப் பேசினார்கள். பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்ய, கூட்டம் கூட, கருத்துக் கூறவெல்லாம் அனுமதித்தார்கள். திடீரென்று ஒருநாள் ஒட்டுமொத்தமாக அனைத்துச் செயற்பாட்டாளர்களையும் தலைமையையும் கைதுசெய்தார்கள். ஆனால், இந்தக் கைது விவகாரம் வெளியே யாருக்குமே தெரியாது. காதும் காதும் வைத்தாற்போன்று அனைவரையும் பிடித்து உள்ளேபோட்டு விட்டு, கே.ஜீ.பி. ஏஜன்டுகள் MUCR இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போன்று செயற்பட ஆரம்பித்தார்கள். கைதுசெய்யப்பட்ட MUCR இயக்கத் தலைமைகளையும் மிரட்டி, சித்திரவதை செய்து பணிய வைத்துத் தங்களது கைப்பாவைகளாகச் செயற்பட வைத்தார்கள். (மனைவி, பிள்ளைகளை இரகசியச் சிறைகளில் பணயம் வைத்துக்கொண்டு, தாம் சொல்கின்றபடி நடந்தாகவேண்டும் என்று மிரட்டினால் பாவம் அந்த இயக்க உறுப்பினர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்?)

MUCR இயக்கத்தினரைப் போன்று வேடமணிந்து செயற்பட ஆரம்பித்த கே.ஜீ.பி. உறுப்பினர்கள், முன்னர் இருந்த MUCR இயக்கத்தைவிட இன்னும் வேகமாகப் புரட்சி பேசினார்கள். செயற்பட்டார்கள். வெற்றிகரமாகச் சில தாக்குதல்களைக்கூட மேற்கொண்டார்கள். அத்தோடு, சோவியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபடி ரஷ்யாவிலும் வேறு பல நாடுகளிலும் செயற்பட்டு வந்த மற்றைய அமைப்புகளுக்கு நிதி உதவிகளும் வேறு பல உதவிகளும் செய்யத் தலைப்பட்டார்கள்.

இது, MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்குச் சோவியத் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்ட அனைத்துத் தரப்பினர் பற்றிய முழு விபரங்களையும் திரட்டுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. விபரங்களைத் திரட்டினார்கள். முக்கியமானவர்களைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்ய முடியாதவர்களைப் படுகொலை செய்தார்கள். பல்வேறு இயக்கங்கள் மத்தியிலும் இயக்கங்களுக்கு உள்ளேயும் கூடப் பிளவுகளை ஏற்படுத்தினார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த அனைத்து இயக்கங்களையும் முடக்கிவிடுவதில் கே.ஜீ.பி. உளவு அமைப்பு வெற்றி பெற்றிருந்தது.

ஆனால், இந்த ஒப்பரேஷனைப் பொறுத்தவரையில் கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது, அவர்கள் சோவியத்தில் மாத்திரமல்லாமல் மேற்குலக நாடுகளில் செயற்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களையும், செயற்பாட்டாளர் களையும் ஒடுக்குவதின் ஊடாகத்தான் கிடைத்தது. ஆம், சோவியத் ஒன்றியத்தில் மாத்திரமல்ல ரஷ்யர்கள் புலம்பெயர்ந்து செயற்பட்ட மேற்குல நாடுகளிலும் கூட, கே.ஜீ.பியின் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது.

ரஷ்யாவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்து தஞ்சம் அடைந்த சில கே.ஜீ.பி. ஏஜன்டுகள், தம்மை MUCR இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிக்காண்பித்து நடித்துக்கொண்டு சோவியத் அரசிற்கு எதிராகப் புரட்சி பேசினார்கள். தம்மைத் தீவிரவாதிகளாக வெளிக்காண்பித்துக் கொண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வதாகப் ‘பவ்லா’ காண்பித்தார்கள். புலம்பெயர் நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு சக்திகளையும் ஒன்றுதிரட்டிச் சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைத் தாம் வீழ்த்தப்போவதாக அறைகூவல் விடுத்தார்கள்.

சோவியத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளிலும் சோவியத் ஆட்சிக்கு எதிராகக் கொதித்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பெரும் பணக்காரர்கள், ஊடகவியலாளர்கள் இந்த MUCR இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரிவுடன் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள். பலவிதமான உதவிகள் ஒத்தாசைகளை வழங்கினார்கள். பணத்தை அள்ளி இறைத்தார்கள். MUCR என்ற அந்தப் புரட்சிகர அமைப்பைப் பயன்படுத்தி எப்படிச் சோவியத் ஆட்சியைக் கலைக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள். ஆனால் MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட சோவியத்தின் உளவுப் பிரிவினரோ மிகவும் கவனமாகச் செயற்பட்டு ஒரு பெரிய உளவுச் சதியை அரங்கேற்ற ஆரம்பித்தார்கள். அந்த உளவுச் சதி, உலகின் போரியல் வரலாற்றில் மிகவும் உறுதியாகப் பதியப்படும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சோவியத்தின் உளவுப் பிரிவான கே.ஜீ.பிக்குப் பெற்றுக்கொடுத்தது.

இப்பொழுது ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பார்ப்போம்.

எங்கள் அனைவருக்கும் ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற சினிமா கதாபாத்திரத்தை நன்றாகத் தெரியும். இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் ஒரு பிரித்தானிய இரகசிய உளவாளி. மிகப் பெரிய வீர சாகசங்களைத் தனி ஒருவனாகச் செய்வதில் வல்லவனாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற வீர கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளரின் பெயர் இயான் பிளேமிங். தனது இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் பற்றி இவர் பின்நாட்களில் கருத்துத் தெரிவிக்கும் பொழுது, “சிட்னி ரெய்லி என்ற ஒரு பிரித்தானிய உளவாளியின் உண்மையான வீர சாகசம்தான் என்னை ஜேம்ஸ் பொண்ட் 007 கதாபாத்திரத்தை உருவாக்க வைத்தது. இந்தப் பிரித்தானிய உளவாளியையும் அவனது சாகசங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் நான் ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

அந்த அளவிற்குப் பிரபல்யமான இந்த சிட்னி ரெய்லி என்ற பிரித்தானிய உளவாளி உண்மையிலேயே ஒரு ரஷ்யர். ரஷ்யாவில் பிறந்த இவர் ஏதோ காரணத்திற்காக ரஷ்ய ஆட்சியை வெறுக்கத் தொடங்கினார். சிறு வயதிலேயே தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். பிரித்தானியாவின் இரகசியப் பொலிஸ் பிரிவில் இணைந்து இவர் செய்த சாகசங்கள் கொஞ்சநஞ்சமல்ல. உளவாளியாக ரஷ்யாவிற்குச் சென்று அங்கிருந்து பலவிதமாக இரகசியங்களைத் திருடிப் பிரித்தானியாவிற்குக் கொண்டு வந்து பல சாதனைகளைப் புரிந்தார்.

அந்தக் காலகட்டத்தில் ரஷ்யா என்பது உலகைப் பொறுத்த வரையில் ஒரு இரும்புத் திரையின் பின்னால் இருந்த ஒரு தேசம். அங்கு என்ன நடக்கின்றது என்று உலகில் யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ரஷ்யாவிற்குள் பல்வேறு வேஷங்களில் நுழைந்து, அங்கிருந்து இரகசியங்களைத் திருடுவதும், அந்த இரகசியங்களைப் பிரித்தானியாவுக்குக் கடத்தி வருவதும் இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால், அதனைச் சாதித்துக் காட்டினார் சிட்னி ரெய்லி. அது மாத்திரமல்ல, அப்பொழுது இருந்த லெனினின் ஆட்சியைக் கலைத்துவிட்டுச் சிட்னி ரெய்லியை அதிபராக்கும் இரகசியச் சதித்திட்டமும் பிரித்தானியாவிடம் இருந்தது. அந்த நோக்கத்திலும் பல காய்கள் ரஷ்யாவில் நகர்த்தப்பட்டுக்கொண்டி ருந்தன.

சோவியத்தின் இராணுவத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தில் சிட்னி ரெய்லி என்ற இந்த மோசமான உளவாளி பற்றித் தெரியவந்த பொழுது, ரஷ்யாவில் தங்கியிருந்த அவர் மிகவும் சாதூர்யமாகத் தப்பிப் பிரித்தானியா வந்து சேர்ந்தார். மிகவும் பாதுகாப்பாக அங்கு அமர்ந்தும் கொண்டார். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்தபடியே ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் சதிவேலை களைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். இந்தச் சிட்னி ரெய்லியைக் கைதுசெய்ததுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கையின் மிகப் பெரிய வெற்றி என்று வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.

எப்படிக் கைதுசெய்தார்கள்?

கைது செய்யவில்லை, ஒரு வகையில் சதி செய்து கடத்திச் சென்றார்கள் என்று கூறலாம். லெனினின் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று சதா சிந்தித்துக்கொண்டிருந்த சிட்னி ரெய்லிக்கு, MUCR என்ற புரட்சிகர அமைப்பின் ஐரோப்பிய வருகை பற்றிய செய்தி இனிப்பாகக் கிடைத்தது. அந்த அமைப்பைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். மிகவும் சந்தோசம் என்று அவரைக் கைகுலுக்கி வரவேற்றது MUCRஇனது ஐரோப்பியப் பிரிவு. MUCR என்ற பெயரில் ரஷ்யாவின் கே.ஜீ.பி. உறுப்பினர்கள்தான் அங்கு வந்திருக்கின்றார்கள் என்று சிட்னி ரெய்லிக்குத் தெரியாது. தானாகவே சென்று வலையில் வீழ்ந்தார். லெனினின் ஆட்சியை எப்படி வீழ்த்தலாம் என்று அவர்களுடன் சேர்ந்து நுணுக்கமாகத் திட்டம் தீட்டினார்.

ஆனால், இங்கே லண்டனில் அமர்ந்துகொண்டு லெனினை வீழ்த்துவது எப்படி? ரஷ்யாவில் ஆட்சிதான் அமைப்பது எப்படி? அதற்கு ரஷ்யாவிற்கு நேரில் போகவேண்டும் அல்லவா? 'ரஷ்யாவில் மிகவும் பலமாகச் செயற்படும் எங்களது உறுப்பினர் களூடாக உங்கள் இரகசியப் பயணத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருகின்றோம்’’ என்றது MUCRஇனது ஐரோப்பியப் பிரிவு. 'நீங்களே நேரடியாகச் சென்று ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் பற்றி விளக்கிச்சொன்னால் அங்குள்ள எங்கள் உறுப்பினர்களுக்குத் தெம்பாக இருக்கும்.. மேலும் உற்சாகமாகச் செயற்படுவார்கள்.’’ சிட்னி ரெய்லிக்கு ஐடியா கொடுத்தார்கள் MUCRஇனது ஐரோப்பியப் பிரிவு.

ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு என்று மிகவும் இரகசிய மாகப் புறப்பட்ட சிட்னி ரெய்லி, ரஷ்யாவில் பகிரங்கமாகக் கைது செய்யப்பட்டார். அவரை ரஷ்யாவிற்கு இரகசியமாக அழைத்துச் சென்ற கே.ஜீ.பி. உறுப்பினர்களே, ரஷ்ய எல்லையை அடைந்ததும் அவரைக் கைதுசெய்தார்கள். சித்திரவதைகள், விசாரணை, துப்பாக்கிச் சூடு என்று மிகவும் சோகமாக முடிவடைந்தது பிரபல்யமான, திறமையான ஒரு வீரனின் வாழ்க்கை.

அது மாத்திரமல்ல, இவர் போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் ரஷ்ய ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த பல புரட்சியாளர்கள், தேசப்பற்றாளர்கள், தேசியவாதிகள் ஏமாற்றப் பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். காணாமல் போனார்கள், கடத்தப்பட்டார்கள். செயலிழக்க வைக்கப் பட்டார்கள். இதுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை. உலக அளவில் மிகவும் வெற்றிகரமான ஒரு உளவு நடவடிக்கை.

உலக நாடுகளின் புலனாய்வுப் பிரிவினருக்கான ஒரு முக்கிய பாலர் பாடம்தான் Operation Trust என்ற இந்த இராணுவ நடவடிக்கை. இப்பொழுது உள்ள மிகப் பெரிய கேள்வி இதுதான். Operation Trust போன்ற ஒரு உளவு நடவடிக்கையைப் புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்துச் சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ளு கின்றதா?

கொஞ்சம் சிக்கலான கேள்விதான். ஆனாலும் புலம்பெயர் தமிழர்கள் பெரிதாக யோசித்தேயாக வேண்டிய கேள்வி. ஆம் மேற்கொள்ளப்படுகின்றது என்று உறுதியாகக் கூறுவதற்கு என்னிடம் போதியளவு ஆதாரம் கிடையாது. ஆனால், அப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான சந்தர்ப்பங்களும், சாத்தியங்களும் நிறையவே இருக்கின்றன என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

அந்தச் சாத்தியங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள், தளபதிகள், போராளிகள் என்று ஏராளமானவர்கள் கொத்தாகச் சிறிலங்கா இராணுவத்தின் கரங்களில் கிடைத்தார்கள். அவர்களை முழுக்க முழுக்கச் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர்தான் கையாண்டு வருகின்றார்கள். அப்படித் தமது கரங்களில் கிடைத்தவர்களை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்ற சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு, அவர்களை நிச்சயம் தமது புலனாய்வுத் தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் வைத்திருக்கமாட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துச் செயற்பாடுகளும்; இலங்கையில் ஓரளவு முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள்வசம் இருந்த ஆயுதங்கள், அவற்றை இயக்கக் கூடியவர்கள் என்று அனைத்துமே சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுவிட்ட நிலையில், புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள்தாம் சிறிலங்கா தேசத்தைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்தும்படியாக இருந்து வருகின்றன. எனவே, சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு தனது அத்தனை பலத்தையும் நிச்சயமாகப் புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்துத்தான் திருப்பி விட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சரி, புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்துச் சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு என்ன செய்யலாம்?

செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்கள், சமூகத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை விலைபேசலாம். மிரட்டலாம். ஆனால், விலைபோகக்கூடியவர்கள் அனைவரும் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே விலைபோய்விட்டார் கள். சிங்களத்தின் மிரட்டல்களுக்குக் கலங்கக்கூடிவர்கள் மீதும் சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவும் அதன் கூலிகளும் கைவைத்து நீண்டநாட்களாகிவிட்டன. இவை எதற்கும் அகப்படாமல் எஞ்சியிருப்பவர்கள்தான் சிங்களத்திற்குத் தற்பொழுது பிரச்சினை. எதற்கும் அஞ்சாமல், எதற்கும் விலைபோகாமல் புலம்பெயர் தேசங்களில் ஓர்மமாக நின்றுகொண்டிருப்பவர்கள் பற்றித்தான் சிறிலங்கா கொஞ்சம் சிந்திக்கின்றது. கவனமெடுக்கின்றது.

எதற்கும் அடிப்பணியாமல் வீரமாகப் புலம்பெயர் தேசங்களில் நின்று போராடும் அப்படிப்பட்ட மறத் தமிழர்களை என்ன செய்யலாம்?

இது பற்றிப் பார்ப்பதானால், சுமார் ஒன்றரை வருடங்கள் நாம் பின்நோக்கிச் செல்லவேண்டும். முள்ளிவாய்க்கால் முடிவினைத் தொடர்ந்து அப்பொழுது ஒரு பெரிய வெற்றிடம் காணப்பட்டது. புலிகளைத் தாம் முற்றாகவே அழித்துவிட்டதாகச் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. தளபதிகள், போராளிகள், ஆதரவாளர் கள், மக்கள் என்று அனைவரையுமே சிறைக்குள் தள்ளிவிட்டு, தனது வெற்றியைப் பல நாட்கள் கொண்டாடியது சிங்களத் தலைமை.

ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் தமது வெற்றிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய சில ஆபத்துகள் இலங்கையில் பரவலாக மறைந்து இருந்ததைச் சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு உணர்ந்தது. அதாவது, வடக்கு கிழக்கு மற்றும் தென் இலங்கைக் காடுகளில் ஆயுதங்களுடன் புலிகளின் சிறிய சிறிய அணிகள் நிலைகொண்டி ருந்தன. அதேபோன்று கொழும்பிலும், தென் இலங்கையிலும், புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள். உத்தரவு கிடைத்ததும் செயற்படுவதற்கென்று ஏராளமான தற்கொலைப் போராளிகளும் பல இடங்களிலும் மறைந்திருந்தார்கள். புலிகள் மீதான வெற்றி என்று கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களத்திற்கு, இந்த விடயம் ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே இருந்தது.

வடக்கு கிழக்கில் உள்ள காடுகளிலும், தென் இலங்கை மற்றும் தலைநகர் கொழும்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருக்கும் நூற்றிற்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். அழிக்கவேண்டும். இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு, ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நடவடிக்கை கிட்டத்தட்ட Operation Trust உளவு நடவடிக்கையை ஒத்ததாகவே இருந்தது.

தம்மிடம் சரணடைந்த அல்லது தம்மால் கைதுசெய்யப்பட்ட சில விடுதலைப் புலி முக்கியஸ்தர்களைச் சித்திரவதை செய்து, அவர்களது மனைவி குழந்தைகளைப் பணயம் வைத்து, மிகவும் கவனமாக ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு. அதாவது, முள்ளிவாய்க்கால் நடவடிக்கையின் பொழுது சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்படாமல் சில தளபதிகள், ஒரு தொகுதி விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பித்து வன்னிக் காடுகளில் உள்ள நிலக்கீழ் சுரங்கங்களில் மறைந்திருந்து செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்பாடு செய்த குழு, பல்வேறு இடங்களில் மறைந்திருந்த போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தாம் மீள ஒருங்கிணைந்து போராடவேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள். தம்மை அழித்த சிறிலங்காப் படையினரைப் பழிவாங்கவேண்டும் என்று சபதம் எடுத்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் புலம்பெயர் நாடுகளில் தேசியம் பேசிக்கொண்டிருந்த ஒரு தரப்பினரால் அவிழ்த்துவிடப்பட்ட கதைகளும், மாயைகளும் கூட, சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினரின் இந்த இரகசிய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவவே செய்தன. “அதோ அவர் அங்கே இருக்கின்றார்’’. “இதோ ஐயாயிரம் பேருடன் அந்தத் தளபதி வன்னியில் மறைந்திருக்கிறார்’’. ‘‘புலிகள் வன்னியில் இன்று தாக்குதல்’’ “பல இராணுவத்தினர் காயம் ஆனால் செய்தியைச் சிறிலங்கா அரசாங்கம் மறைத்துவிட்டது’’. “வன்னியில் பல சிறிலங்கா படையினரைக் காணவில்லை.’’- இதுபோன்று புலம்பெயர் தமிழர்களில் ஒரு பிரிவினர் ஆர்வக்கோளாறினால் மேற்கொண்ட பிரச்சாரங்கள், சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட அந்த இரகசிய நடவடிக்கைக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது.

மீள ஒருங்கிணைய முயன்றவர்கள் சிறிலங்காப் படையினரிடம் வசமாகவே மாட்டிக்கொண்டார்கள். பல கரும்புலிகள்கூட இந்த இரகசியச் சதி நடவடிக்கையின் பொழுது அகப்பட்டுக்கொண்டார்கள். பல ஆண்டுகள் கொழும்பிலும் அதன் சுற்றுவட்டத்திலும் இரகசியமாகச் செயற்பட்டு வந்த புலிகளின் பல உளவாளிகள் சிறிலங்காப் படையினரிடம் மிக இலகுவாகவே அகப்பட்டுக் கொண்டார்கள்.

சிறிலங்காப் புலனாய்வாளர்களால் இயக்கப்பட்ட இந்த அணியினர் புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட முக்கியச் செயற்பாட்டாளர்களையும் தொடர்புகொண்டு, பல்வேறு தகவல்களைப் பெற்றார்கள். பெருமளவு பணத்தை அனுப்பிவைக்கும்படி கேட்டு அதனைப் பெற்றார்கள். வெளிநாடுகளில் இருந்த செயற்பாட்டாளர்களுடன் இலங்கையில் தொடர்புகளில் இருந்த நபர்களையும் தமது இந்த நடவடிக்கையினூடாகக் கண்டுபிடித்தார்கள்.

இப்பொழுது மறுபடியும் பழைய கேள்விக்கு வருவோம்.

இதே வகையிலான நடவடிக்கையைப் புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்துச் சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு செய்வதற்குச் சந்தர்ப்பம் உள்ளதா?

நிச்சயமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்த் தேசியத்தின் மீது புலம்பெயர் தமிழர்கள் கொண்டுள்ள வெறி புலம்பெயர் தமிழர்களின் மிகப் பெரிய பலம் என்பது உண்மையே. அதேவேளை இந்த ‘வெறி’தான் புலம்பெயர் தமிழர்களின் மிகப் பெரிய பலவீனம் என்பதையும் நாம் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். ‘தமிழ்த் தேசியம்’ என்று கூறிக்கொண்டு யாரும் எம்மை இலகுவாக ஏமாற்றிவிடும் அளவிற்கு இந்த வெறிக்கு நாம் அடிமையாகிக் கிடக்கின்றோம். பல வியாபாரிகள் தேசியம் பேசி எம்மை, எமது பொருளாதாரத்தை வளைத்துப் போடுவதை நாம் தெரிந்துகொண்டே அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்- தேசியத்தின் பெயரால்.

எனவே, எமது மிகப் பெரிய பலமாக நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற தேசியத்தின் மீதான எமது கண்மூடித்தனமான பற்று, மிதமிஞ்சிய வெறி -இவற்றினையே எமக்கு எதிரான தமது நகர்வுகளுக்கு எமது எதிரி பயன்படுத்த முனையும் சந்தர்ப்பம் இருக்கவே செய்கின்றது.

“இல்லை இல்லை. அது ஒருபோதும் முடியாது.’’ என்று சிலர் கூறலாம்.

ஆனால், தாம் நேசிக்கின்ற தேசியத்தின் பெயரால் இன்று சில தேசியவாதிகள் தெருவில் நின்று சட்டையைக் கிழித்துக்கொண்டு அடிபடுவது எமது பலவீனத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்.

எம்மைவிட வேகமாகத் தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு Operation Trust உளவு நடவடிக்கை எம்மத்தியில் மேற்கொள்ளப்படக்கூடியதற்கான சாத்தியத்தை நாம் இலகுவாக உதறித் தள்ளிவிட முடியாது.

இந்தியாவில் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என்ற கதை எம்மவர்கள் மத்தியில் தற்பொழுது மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கதையின் தோற்றுவாய் எது என்று பார்த்தால் சிறிலங்காவின் பாராளுமன்றத்தில்தான் இந்தக் கதை முதன்முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. அதுவும் சிறிலங்காவின் பிரதமர்தான் இந்தக் கதையைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவர் சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள்காட்டித்தான் இந்தக் கதையைத் தெரிவித்திருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள், திடீரென்று புலம்பெயர் நாடுகளில் தோன்றித் தேசியம் பேசுவது இன்று சாதாரண நிகழ்வாக மாறி வருகின்றது. “நான் வன்னியில் தலைவருடன் நின்றனான்..’’ என்று கூறிக்கொண்டு நிறையப் பேர் ஐரோப்பாவில் தற்பொழுது அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். தலைவருடன் நின்ற நீங்கள் எப்படித் தப்பி வந்தீர்கள்? ஏன் தலைவரை விட்டுவிட்டு இங்கு வந்தீர்கள்? இதுபோன்ற கேள்விகளை நாங்களும் கேட்பதில்லை. அதற்கான பதிலை அவர்களும் சொல்வதில்லை.

இன்றும் குறிப்பாகப் பார்த்தால், இவர்களில் அனேகமானோர் சிறிலங்கா விமான நிலையம் வழியாகவே வந்திருக்கின்றார்கள். இவர்களில் பலர், வவுனியாவில் சிறிலங்காத் தடுப்பு முகாமில் மாதக் கணக்காகச் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். வன்னியில் புலிகளுக்குச் சாப்பாடு கொடுத்தவர்கள், சென்றியில் நின்றவர்கள், எல்லைக் காவல் கடமைகளில் ஈடுபட்டவர்கள் என்று பலரும் இப்பொழுது கூடச் சிறிலங்கா படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைவரும் அறிந்த விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள், தலைவருடன் இருந்தவர்களால் எப்படிச் சிறிலங்கா இராணுவத்தின் வாய்களுக்குள் இருந்து வெளியேற முடிந்தது? எப்படிச் சிறிலங்காப் படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுச் சிறிலங்காவின் ஒரே சர்வதேச விமான நிலையம் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு வர முடிந்தது? இது பலராலும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றது. இவர்கள் Operation Trust உளவு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டவர்களா என்கின்ற கோணத்திலும் சிந்திக்கவேண்டிய நிலையில்தான் இன்று புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய எதிரிகளாக வலம் வந்தவர்களின்; செயற்பாடுகளைச் சற்று ஆழமாக நோக்குகின்ற பொழுது இந்தச் சந்தேகம் மேலும் வலுவடைகின்றது. ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த் தேசியவாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சாதாரணமான ஒரு மே தின ஊர்வலத்திலேயே புகுந்து கலாட்டா பண்ணுகின்ற மாற்றுக் குழுவினர் அல்லது சிறிலங்காவின் கைக்கூலிகள், தற்பொழுது புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளுகின்ற போராட்டங்கள் தொடர்பில் பெரிய அளவில் அக்கறை காண்பிப்பதைக் காணமுடிவதில்லை.

மகிந்தவிற்கு எதிராகப் புலம்பெயர் மண்ணில் ஒரு பெரிய வேள்வியே நடைபெற்று வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூட, இப்படிப்பட்டவர்கள் ஒரு புன்சிரிப்புடன் மௌனம் கடைப்பிடித்து வருவதை ஒரு வித்தியாசமான – அதேவேளை அவதானிக்கப் படவேண்டிய ஒரு நகர்வாகவே நான் பார்க்கின்றேன். இது, சிறிலங்கா இராணுவம் புலம்பெயர் மண்ணில் மேற்கொள்ளுகின்ற Operation Trust போன்ற ஒரு ஒரு உறுதியான, நீண்ட காலச் செயற்பாட்டுக்கான வழிவிடுதலாகக் கூட இருக்கலாம்.

புலம்பெயர் தமிழர்கள் சற்று ஆழமாகச் சிந்திக்கவேண்டிய தருணம் இது.

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகின்றேன். வன்னி மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பித்து, உயிரைக் கையில் பிடித்தபடி மேற்குலகில் தஞ்சடைந்திருக்கும் பலர் இன்று எம்மத்தியில் இருக்கின்றார்கள். அவர்களின் உண்மையும் தூய்மையும் உண்மையிலேயே மெச்சத்தக்கது. அவர்களது வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் புலம்பெயர் தமிழர்களுக்கு நிச்சயம் தேவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் இவர்கள் மத்தியில் கலந்து சிறிலங்காப் புலனாய்வாளர்களால் அனுப்பப்படும் உளவு ஏஜன்டுகள் பற்றிய எச்சரிக்கை உணர்வையும் நாம் கொண்டிருப்பது இச்சந்தர்ப்பத்தில் மிக மிக அவசியம்.

இல்லாவிட்டால், புலம்பெயர் தமிழர்களின் விடுதலை உணர்வைத் திசைதிருப்பும் ஒருவகை Operation Trust உளவு நடவடிக்கைக்கு அநியாயமாகப் பலியாகிப்போன மற்றொரு இனம் என்கின்ற பெயர் வரலாற்றில் எமக்குக் கிடைத்துவிடும்.

நன்றி

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17969

இந்திய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம்

2011ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி அந்தேரி டிஎன் நகரில், இந்திய ஜனநாயக கட்சி, பாரி மன்றம், பார்கவ முன்னேற்ற குல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Friday, January 20, 2012

பிரஸ் மீட்-க்குப் பிறகு

2011ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மும்பை பிரஸ் கிளபில் மே17 அமைப்பின் சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள மர்மங்கள் குறித்து பிரஸ் மீட் நடத்தப்பட்டது.

பத்திரிகையாளர்களுடன் உரையாடிய திருமுருகன் காந்தி, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன் ஆகியோருடன்.

(அப்போதைக்கு மேற்படி 3 பேரும் தெலுங்கர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள்தான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டார்கள். )

ஆறுமுக கோனாராக தீர்ப்பு நாடகத்தில்

2011 ஏப்ரல் 19ம் தேதி மும்பை, செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில், மும்பை ஆர்ட் லவர்ஸ் நாடக குழுவின் சார்பாக தீர்ப்பு நாடகத்தில் ஆறுமுக கோனாராக நடித்த காட்சி. இந்த நாடகம் தமிழகத்தில் மேஜர் சுந்தர் ராஜனால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நாடகம் ஆகும்.

மும்பையில் குடிசை மக்கள் வாழ்வுரிமை போராட்டம்

2011ம் ஆண்டு மே 2ம் தேதி மும்பை, வடாலா, எம்எம்ஆர்டிஏ டிரான்சிட் கேம்ப் மக்களின் குடியுரிமை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக டிவி9 35 வது கிளையின் தலைமையில் மஹாராஷ்டிரா சிட்டிசன் ஃபோரம் சயான் கோலிவாடா மற்றும் இதர பொது நல அமைப்புகளை இணைத்து மும்பை ஆஜாத் மைதானத்தில் போராட்டம் நடத்தினோம். நான் இந்த போராட்டத்திற்காக பெரு முயற்சி செய்தேன்.

Tuesday, January 17, 2012

தமிழா! நீ பேசுவது தமிழா? -----காசி ஆன‌ந்த‌ன்

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன்

இத்தாலிச் சனியாள்

இத்தாலியில் பிறந்து
இங்கிலாந்தில் பிழைத்து
இந்தியாவில் புகுந்து
இலங்கையில் தமிழரை
அழித்த சனியே!
-வேல்தர்மா
http://veltharma.blogspot.com/2012/01/blog-post_17.html?spref=fb

Sunday, January 15, 2012

சிறு உளி கெண்டு வந்தான்

சிறு உளி கொண்டு வந்தான்

பெருமலை பெயர்த்தான்

அழகுச் சிலை வடித்தான்

என்ற இசை பெறட்டும் இவன்

ஒபாமாவிற்கு மஹிந்தருடன் டீல் வைப்பது சுலபமாக இருப்பதால்.....


I am sorry,I cannot do anything because....

தற்போதைய உலக ஓட்டத்தினைப் பார்த்து தமிழர்கள் நினைத்தனர் மஹிந்தரை சர்வதேசம் விடாது இறுக்கிப் பிடிக்கும் ஆகவே சர்வதேசத்துடன் சேர்ந்து நாங்களும் ஓடி தக்க நேரத்தில் சில விடயங்களை சாதிப்போம் என்று. ஆனால் ஒபாமாவின் ஓட்டமோ வித்தியாசமானது.

ஏன் ஒபாமா மட்டும் அல்ல ஏனைய நாடுகளும் தான். அராபிய நாடுகளில் செய்வதனைப்போல ஆசிய நாடுகளில் அமெரிக்கா ஒன்றும் செய்ய முடியாது.அதற்கான காலம் முற்றுபெற்றதாகவே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. அமெரிக்கா நேரடியாகவோ அன்றி, மறைமுகமாகவோ அதாவது ஐக்கிய நாடுகள் சபை ஊடகவோ ஆசிய நாடுகளில் நடவடிக்கை எடுப்பது என்பது அது ஒரு கடினமான பாதையாகவே கருதுகின்றது. மேற்குலகின் பொருளாதார நெருக்கடிகள் இந்த கடின பாதைகளை தேர்வு செய்ய இனி அனுமதிக்கப் போவதில்லை. ஆகவே தமது இலக்கை எட்ட எது இலகுவான பாதையோ அதாவது பொருட்செலவில்லாத பாதையினையே தேர்ந்தெடுக்கும்.

இந்த வகையில் பராக் ஒபாமா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் அதில் வெல்லவேண்டும் என்றால் அமெரிக்காவிற்கு தலையிடிகளை குறைக்கும் டீல்களையே செய்வார். என்பது எல்லோருக்கும் புரிந்துவருகின்ற பார்வையாக இருக்கின்றது. ஆகவே ஆசியாவில் எதைச் செய்தாலும் இப்போதைக்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நலன்களை மீறி அல்லது அவர்களின் ஆலோசனைகளை மீறியதாக அமெரிக்கா எதனையும் செய்ய மாட்டாது. ஆகவே இருக்கின்ற அரசுகளுடன் அவர்களுக்கு சில சலுகைகளைக் கொடுத்து தமது நலன்களை எப்படி அடையலாம் என்பதே ஒபாமாவின் டீல். இந்த டீல்களுக்குள் மூன்றாம் தரப்பின் பிரச்சினைகள், மனித உரிமைகள், உட்பட எந்தவொரு சர்வதேச நடைமுறைகளும் இருக்காது.

மறைமுகமாக கூறப்போனால் எந்த பிசாசுகளுடனும் ஒபாமா நிர்வாகம் தமது நாட்டிற்காக டீல் பேசும் நிலையிலேயே இருக்கின்றது. இதற்குள் மஹிந்த என்ற பிசாசும் உள்ளடங்கும். அல் கைதாவுடன் பேசுகிறது ஒபாமா நிர்வாகம், தனது எதிரிகளுடன் பேசுகின்றது, பர்மாவில் அரசியல் அணுகுமுறையில் மாற்றம், ஏன் வடகொரியாவுடனும் பேச ஒபாமா தயங்கமாட்டார். இப்போதைக்கு ஈரான் நாடே ஒரே ஒரு எதிரி என்பதால் அதனை மட்டும் வேறு மாதிரி கவனித்துக்கொண்டு மற்றவர்களுடன் சல்லாபம்தான்.

இந்த சூழலில் தமிழர்களின் பிரச்சினையும் அடிபட்டுப்போகலாம். அதற்கு எடுத்துக்காட்டாக மஹிந்தருக்கு அமெரிக்கா (ஒபாமா) வழங்கிய ராஜ தந்திர சிறப்புரிமையினை கூறலாம்.அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக ஒபாமா அமெரிக்க அரசாங்கம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

காசிப்பிள்ளை மனோகரன் மற்றும் இருவரால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கிலேயே, இலங்கை அதிபருக்கு ராஜதந்திர சிறப்புரிமை உள்ளதென ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக் களத்தின் நீதித் திணைக்கள சட்ட ஆலோசகர் ஹரோல்ட் ஹோ இந்த போர்க்குற்ற வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு இலங்கை அதிபருக்கு ராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் கொலம்பியா மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர் கொட்டேலி, இந்த விவகாரத்தில் ராஜாங்கத் திணைக்களத்தின் பரிந்துரைகளை ஜனவரி 13ம் நாளுக்குள் தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று அமெரிக்க நீதித் நீதித் திணைக்களத்தின் உதவி சட்டமா அதிபர் ரொனி வெஸ்ட் மற்றும் பிரதி கிளை பணிப்பாளர் வின்ஸ் எம்.காலர்வே ஆகியோர் இலங்கை அதிபருக்குள்ள ராஜதந்திர சிறப்புரிமை குறித்த பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து நீதிபதி கொட்டேலி, இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு இலங்கை அதிபருக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறியுள்ளன.

அமெரிக்கா மட்டும் அல்ல ஐகிய நாடுகளிலும் இதே கதைதான் நடக்கும் ஆக மஹிந்தரை மிரட்ட மட்டுமே தமிழர்கள் பிரச்சினை தேவையே தவிர தமிழர்களுக்கான உரிமையில் உள்ள அக்கறை என்பது பூச்சியம்தான்.

எதிர்காலத்தில் தமிழர்களின் வாக்குகளை ஓரளவு நம்பி இருக்கின்ற நாடுகள் சில தமிழர் உரிமைகள் பற்றி பேசுவார்கள். ஏனையோர் எல்லோரும் மஹிந்தவுடன் வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்கள்.

சர்வதேசத்திற்கு என்ன தேவை?

வட்டிக்கு கடன் கொடுக்க கூடியதாக இருக்கவேண்டும்

கொடுத்த கடனை அறவிடக்கூடியதாக இருக்கவேண்டும்.

வியாபாரத்தினை தங்கு தடை இன்றி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.

தமது நாட்டு மக்கள் பிரச்சினை இன்றி மலிவாக சுற்றுலா சென்று வரக்கூடியதாக இருக்கவேண்டும்.

தாம் விதிக்கின்ற சில சட்டங்களுக்கு இலங்கை தீவிரவாதப் பிரச்சினையை காரணம் காட்டக்கூடாது (இப்போதுதான் அதுபற்றி கூறமுடியாதே)

மேற்குலகின் கடற்போக்குவரத்தான இந்து சமுத்திர பிராந்தியம் அமைதியாக இருகவேண்டும்.

ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முடக்கபட்டதால் சர்வதேசத்திற்கு இவை அனைத்தும் சுமுகமாக நடக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சிங்களம் ஏமாற்றுக்காரர் என்றால் மேற்குலகம் மகா ஏமாற்றுக்காரர் என்றே கூறலாம்.

இந்த மகா ஏமாற்றுக்காரர்களுடன் டீல் பேச எம்மிடம் என்ன உள்ளது? ஒன்று மட்டும் இருந்தது அதாவது மிகப்பெரிய ஆயுத இயக்கமும் அதன் கீழான ஒரு நடைமுறை அரசாங்கம் இருந்தது. அதுதான் சிங்களத்துடன் என்றாலும் சரி சர்வதேசத்துடன் என்றாலும் சரி பேசுவதற்கு அதுவே அடிப்படையாக இருந்தது. ஆனால் இப்போ எதுவுமே இல்லை.

ஒசாமா கொல்லப்பட்டபின்னரும் ஏன் ஒபாமா அல் கைதாவுடன் பேசுகிறார். காரணம் எங்காவது சில நேரம் கண்ணிவெடியை வைத்து விடுவார்கள் என்பதுதான். அல்லது ஏதாவது ஒரு சக்தி அல் கைதாவை பயன்படுத்தி என்றோ ஒரு நாள் அமெரிக்காவிற்கு குடைச்சல் கொடுக்கலாம் என்பதுதான்.

தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களமும் சரி, சர்வதேசமும் சரி எல்லாமே முடிந்து விட்டது. இனி மீண்டும் தலையெடுக்காமல் எப்படி பார்ப்பது என்பதுதான் அவர்களின் இலக்கு. அதற்காக சிங்களம் என்ன செய்கின்றது என்றால் வடக்கு கிழக்கை சிங்கள மயமாக்கிவிடுவோம் பிரச்சினை தீரும் என நினைக்கின்றது. சர்வதேசம் என்ன நினைக்கின்றது என்றால் ஏதாவது ஒரு தீர்வினை கொடுத்து ஆயுதப் போராட்டம் ஒன்று இப்போதைக்கு வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்று. ஆனால் தமிழர்கள் என்ன நினைக்கின்றார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நினைத்துக்கொண்டு செயல்படுகின்றார்கள்.

எதிர்காலம் போட்டிமயமானது, சர்வதேசத்துடன் என்றாலும் சரி, சிங்களத்துடன் என்றாலும் சரி எமது உரிமை பற்றி பேசுவதற்கு எம்மிடம் என்ன இருக்கின்றது? அவர்கள் எதற்காக எம்முடன் பேசவேண்டும் என்பதற்கு ஒரு காரணி இருக்க வேண்டும். (அதனைத்தான் தலைவர் உருவாக்கினார்) அந்தக்காரணி வெறும் மனித உரிமையாகவோ,இனவிடுதலை என்ற கருப்பொருளாக மட்டும் இருப்பதில் பயனில்லை. மாறாக இவற்றை அடையும் ஓர் சக்தி, பலம் எம்மிடம் உருவாகவேண்டும் அந்த சக்தியை தாமும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் மேற்குலகிற்கு வரும்போதுதான் எமக்கான ஓர் இடம் அங்கு இருக்கும்.

அது ஜனநாயக சக்தி என்றால், மக்கள் எழுச்சி என்றால் தற்போதைய உலக சூழலில் தமிழ் நாட்டுத் தமிழர்களும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டும், மக்கள் எழுச்சி என்றால் அவர்களும் அதாவது எட்டுக்கோடி மக்களும் எழவேண்டும்; நடக்குமா? யாரால் எப்போது அதனைச்செய்ய முடியும்? அதற்கான காலம் இதுதான், இப்போதுதான்; ஏனென்றால் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்று சேர்ந்துள்ள சூழலில் இதுதான் தருணம். அனால் அது நடப்பதற்கான சூழல் அரிதாகவே காணப்படுகின்றது.

கடந்த காலம் கஸ்டமானது, கசப்பானது, பேரழிவினைக் கொண்டது என நாம் எதிர்கால சந்ததிக்கு பயத்தினை ஏற்படுத்த வேண்டாம், பீதியினை கிளப்ப வேண்டாம். கடந்த காலத்தினை மீட்டிப்பார்த்து சரி செய்து கொண்டு அதனை பின்பற்றவேண்டிய கால நேரம் வரலாம். சாமி எதற்கும் பதில் சொல்ல மாட்டார், எதையும் உடனே கையில் கொடுக்கவும் மாட்டார் ஆனால் மீண்டும் மீண்டும் அந்த சாமியிடம்தான் போகின்றோம் ஏன்? வேறு வழி இல்லை. அப்படித்தான் எமது உரிமை போராட்டத்திலும் வேறு வழி இல்லாவிடில் பல வருட அனுபவங்களைக்கொண்ட வழிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் என்றோ ஒரு நாள் வரும்.

இந்தியா, சீனா, சிங்களத்தினை பயன்படுத்துவது போல ஒபாமாவும் அவர்களை பயன்படுத்தலாம், ஏன் ஐரோப்பிய ஒன்றியமும் பயன்படுத்தலாம், பான் கி மூனும் டீல் பேசலாம். அதற்காக அவர்களை எதிர்த்து எப்படி போராட முடியும், இறைஞ்ச முடியும்?

நன்றி - ஈழநாதம்
http://www.eelanatham.net/story/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...