(ரஜினிகாந்த்
அரசியலுக்கு வரக் கூடாது, ஏன்?)
“தமிழகத்தின்
கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்”, “இப்ப இல்லனா எப்பவும் இல்ல” என்று ஒரு புத்தகத்தை இணையத்தில்
பரிந்துரைத்தார்கள். இந்தப் புத்தகத்தில் பேசப்படாத விஷயங்கள் பேசப்படுவதாக குறிப்பிட்டார்கள்.
எனவே இதனை படிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. உடனே அதனை தரவிறக்கிப் படித்துப்
பார்த்தேன்.
இந்தப்
புத்தகத்திற்கான மறுப்பு அல்லது விமர்சனம் என்று இந்த கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.
முதலில், அரசியல் மீது அக்கறை கொண்ட ரஜினி ரசிகர்களின் இதுபோன்ற முயற்சியை நிச்சயமாகப்
பாராட்ட வேண்டும். காவலன் கதிர் சுதா, அனாமிகா என்ற இரண்டு ரஜினி ரசிகர்கள் இணைந்து
இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.
இந்தப்
புத்தகத்தில் 30 பிரச்சனைகளைக் கூறி அதற்கான தீர்வுகளையும் விவரித்துள்ளனர். முதல்
பிரச்சனையாக இவர்கள் எடுத்திருப்பது “தண்டனைகளைக் கடுமையாக்கினால் குற்றங்கள் குறையும்
என்பது சரியா” என்பதுதான். ஆனால் இவர்கள் கூறும் தீர்வானது 100% கண்காணிப்பின் மூலமாக
குற்றங்களை குறைக்க முடியும் என்பதுதான். இது ஓரளவு உண்மை என்றாலும் பல்வேறு பிரச்சனைகளுக்கும்
அரசின் கண்காணிப்பை தீர்வாக கூறுகிறார்கள். கண்காணிப்போடு கண்டறிதலையும்
(tracing) தீர்வாக இவர்கள் கூறுகிறார்கள்.
தற்போது
தமிழர்கள் எல்லாவித எல்லைகளைக் கடந்தும், அரசியல் பற்றி சிந்தித்து எழுதி பேசி செயல்படுத்தி
வருகிறார்கள். தமிழர்களின் அரசியல் தமிழர் கையில் இல்லை என்பதை உணர்ந்து, அதை எழுதியும்
பேசியும் வருகிறார்கள். இந்த நிலையில், மக்களைக் கண்காணித்தல் என்பது இன்றைய முதலாளித்துவத்தின்
நோக்கமாக இருக்கிறது, ஒரு தனிமனிதனின் படுக்கை அறையைக் கண்காணித்தாலும் தவறில்லை என்ற
கருத்தைப் புகுத்தும் விதமாகவே பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன,
இதன் அடுத்த கட்டமாக மனிதனை சிப்-பின் மூலமாக கண்காணித்து, அவனை கட்டுப்படுத்துவது
போன்ற முயற்சியின் தொடக்கமாக உள்ளது என்று விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில்
அரசின் கட்டுப்பாடு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டிய
விஷயமாக உள்ளது.
இவர்கள்
மாற்றம் காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று கூறி மாற்றத்தை வலியுறுத்துகிறார்கள். ஊதியமில்லா
வேலைநேரம், தொழிலாளர்கள் சுரண்படப்படுதல் போன்றவற்றுக்கும் கண்காணிப்பே தீர்வு என்று
கூறுகிறார்கள். வேலை வாய்ப்பு பற்றி பேசும்போது தேவை ஏற்பட்ட பின்னரே வேலைகள் உருவாக்கப்படுகின்றன
என்று சொல்லி தேவைக்கு முன்னரே வேலைகளை அளிக்க வேண்டும் என்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின்
எண்ணிக்கை மாறாதிருப்பது ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில்
மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தொகை வளர்ச்சி வீத மாறுபாட்டால்
அது நிறுத்தப்பட்டது என்பதை இவர்கள் அறியாதிருப்பதில் ஆச்சரியமில்லை. மக்கள் தொகையில்
பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தென் மாநிலங்கள் பெருமளவு பிரதிநிதிகளை இழக்க வேண்டியிருக்கும் என்ற உண்மையை இனி இவர்கள்
தெரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். லாரி
ஓட்டுனர் பிரச்சனைகள், சான்றிதழ் பெறும் பிரச்சனைகள் கவனிக்கத் தக்கவையே.
காவிரியும்
பெரியாறு அணையும்தான் நம் பிரச்சனையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கான தீர்வாக
குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் தேவைக்கு மாநிலம் சுயசார்பு நோக்கி
நகர வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்தவிதமான தண்ணீர் பிரச்சனைக்கும் சுயசார்பை நோக்கி
நகர்வது வரவேற்கத் தக்கது. ஆனால், இயற்கை வளங்கள் மீதான நம் உரிமையை எவ்வாறு விட்டுக்
கொடுக்க முடியும்? சர்வதேச நீர் ஆதாரப் பகிர்வு சட்டங்கள் பற்றியும், அதில் புனல்
பகுதிகளுக்கே அதிக நீர் உரிமை உள்ளது என்பதையும் இவர்கள் பிற்காலத்தில் அறிந்து கொள்வார்கள்
என்று நம்புகிறேன்.
தனியார்
கல்லூரிகளுக்கு அரசு ஆதரவு கூடாது, தேர்வு முறையில் மாற்றம் தேவை என்ற கருத்துக்கள்
வரவேற்கத் தக்கவையே. நீட் தேர்வை வரவேற்கும் இவர்கள் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில்
இடம் கிடைக்கா விட்டால் வெளி மாநிலங்களில் சென்று இடம் பெற்று படிக்கலாம் என்ற அரிய
கருத்தைக் கூறுகிறார்கள். நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும், நுழைவுத்
தேர்வை தாய் மொழியில் நடத்த வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அளவு மருத்துவக்
கல்லூரிகள் வடமாநிலங்களில் இல்லாதபோது இந்தத் தேர்வு தமிழக இடங்களை தமிழர் அல்லாதவர்
பயன்படுத்தவே வழிவகுக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் தமிழக மாணவர்களை வட மாநில மாணவர்கள்
தாக்கும் போக்கு உள்ளது என்பதையும் இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
வாடகை
வாகனங்களின் கட்டண நிர்ணயம், பணியிடப் பாதுகாப்பு,
கிராமங்களில் மருத்துவ வசதி தேவை போன்ற கருத்துக்கள் வரவேற்கத் தக்கவை.
நியாய
விலைக் கடைகள் பற்றிப் பேசும் இவர்கள் விற்பனை நேரம் குறித்து குறை கூறுகிறார்கள்.
உண்மையில் நியாய விலைக் கடை என்பதே பெரும் மோசடியாக இருப்பதுதான் உண்மை. இந்த அமைப்பில்
அடி முதல் நுனி வரை அத்தனையும் ஊழல் செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் சரியான
அளவில், தரத்தில் அளிக்கப்படுவதில்லை. அதனை கீழ்நிலை ஊழியர்களால் சரி செய்ய முடியாது.
அதோடு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டிய கட்டாயம் போன்ற பிரச்சனைகள் உள்ளன. இதனால்
ஒவ்வொரு கடையிலும் லட்சக் கணக்கில் ஊழல் நடைபெற வேண்டிய சூழல் உள்ளது. இன்னும் அரசு
கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமுள்ள அரிசி மற்றும் மற்ற பொருட்கள் கொடுக்கப்படுகின்றனவா
என்ற கேள்வியும் உள்ளது. அரசு போக்குவரத்து துறையும் இந்த வரிசையில் இடம் பிடிக்கிறது.
இதையெல்லாம் சரி செய்ய மண்ணின் மீதும் மக்கள் மீதும் அளவற்ற அக்கறை கொண்டோரால் மட்டுமே
முடியும்.
நகை
விற்பனையை ஒழுங்குபடுத்துதல், உணவுப் பொருட்களில் கலப்படத்தை தடுத்தல், நோய்த் தடுப்பு
நடவடிக்கைகள், மொழி வளர்ச்சியை முன்னெடுத்தல் போன்றவை வரவேற்கத் தகுந்தவை. ஆனால்,
மொழி குறித்த அக்கறையும், “தமிழ்”, “தமிழர்” என்று நூற்றுக் கணக்கான இடங்களில் பேசும்
இந்தப் புத்தகத்தில் ஆங்கில வார்த்தையை நேரடியாக பயன்படுத்துவதையும் காண முடிகிறது.
வசனங்களில், பாடல்களில், புத்தகங்களில் வேற்று மொழிக் கலப்பு இருந்தால் அதற்கேற்ப
வரிவிதிக்க வேண்டும் தீர்வு சொல்லும் இவர்கள், ஒரு தமிழர் நடிக்க வேண்டிய இடத்தில்
வேற்று மொழியாளர் நடிப்பதற்கு என்ன வரி விதிக்க வேண்டும் என்று சொல்லத் தவறி விட்டார்கள்.
திராவிடக்
கட்சிகளை அதிகம் சாடும் இவர்கள், சாதிச் சான்றிதழ் ஒருமுறை மட்டுமே வழங்க வேண்டும்,
சாதிப் பாகுபாடு பார்க்கக் கூடாது என்ற போன்ற விஷயங்களில் திராவிடத்தின் நீட்சியாக
நின்று பேசுகிறார்கள். துப்புறவு பணியாளர்களுக்கான சம்பள உயர்வு, கட்டிட பராமரிப்பு
தேவை, அதற்காக தனிக் குழு அமைத்தல் போன்றவை வரவேற்கத் தகுந்தவை. வாடகை வீடுகள் - இருப்பிட
மாறுதல் சவால்கள், நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல் போன்றவை வரவேற்கத்
தகுந்தவை. தொழிற் சங்கப் பிரச்சனைகளில் கட்சி சார்ந்த தொழிற் சங்கங்கள் இருக்கக்
கூடாது என்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பல பிரச்சனைகளிலும் எல்லாரும் தனிநபர்களாகவே
இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரான முதலாளித்துவச்
சிந்தனை ஆகும். சாலைப் பாதுகாப்பு தேவை, சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிச்
செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் வரவேற்கத் தகுந்தது என்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு பிரதிநிதிக்கென ஒதுக்கப்படும் செலவினத்தை அவர் விருப்பதிற்கு எதிராக அல்லது அதைக்
கண்காணித்தல் என்பது எவ்வளவு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.
அரசு
கொடுக்கும் இலவச பொருட்களால் மின் தேவை அதிகரித்திருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
இது ஏற்புடையதாகத் தெரியவில்லை. இலவசத் திட்டங்களை சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே
செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆளும் கட்சியானது ஒருத் திட்டத்தை செயல்படுத்தினால்
அது பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றதாகத்தானே பொருள்? பெண்களை
சுதந்திரமாக திரிய அனுமதிக்க வேண்டும் என்று புரட்சிகரமான கருத்தைக் கூறாமல் பெண்களின்
பாதுகாப்புப் பற்றி பேசுவது வரவேற்கத் தக்கது. மனையிட அங்கீகார ஒழுங்குகள் வரவேற்கத்
தக்கது. வாக்கு அரசியலுக்காக உருவாக்கப்படும் விழாக்கள் என்ற பிரச்சனையில் தேசத் தலைவர்களின்
சாதிப் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்பது வேடிக்கையானது. பாவம், இவர்களால் தமிழகம்
தவிர வெளியே இவ்வாறு பேச முடியுமா என்று இவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள
வேண்டும்.
சாமானியர்கள்
தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலை பற்றி பேசும்போது சாதாரண மனிதர்களால் அரசியலே செய்ய
முடியாத நிலை உள்ளதைப் பற்றி பேசாமல் விட்டு விட்டு அவர்கள் ரஜினியின் பின்னால் திரள
வேண்டும் என்கிறார்கள்.
இருபெரும்
கட்சிகளை காரசாரமாக விமர்சிக்கும் இவர்கள் சிறு, குறு கட்சிகளை போகிற போக்கில் விலாசிவிட்டுச்
செல்கிறார்கள். ஜனநாயக நாட்டில் சிறு, குறு கட்சிகள் இருக்கக் கூடாது என்பது என்னவிதமான
மனநிலை என்று தெரியவில்லை.
முதல்
பாகத்தில் பிரச்சனைகள் குறித்துப் பேசும் இவர்கள் இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க
ரஜினிகாந்தின் அரசியல் முக்கியத்துவம், அவரை ஏன் இருபெரும் கட்சிகள் எதிர்க்கின்றன
என்பது குறித்து விளக்கி இருக்கிறார்கள். வராது வந்த மாமணியாக இருக்கும் ரஜினிகாந்தை
மக்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
தமிழக
மக்கள் மூன்றாவதாக ஒரு தேர்வாக ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ரஜினிகாந்த்
தான் என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தால் தங்கள் அரசியலுக்கு பாதிப்பு வந்துவிடும்
என்பதால், இவர்கள் ரஜினிகாந்த் மீது அவதூறு பரப்புவதாக கூறுகிறார்கள்.
மக்களாகிய
நாம் தனித்தனி வாக்காளர்களாக, கட்சி, சாதி, மதம், இனம் வாரியாகப் பிரிந்து கிடைப்பது
அரசியல்வாதிகளுக்கு லாபமாக அமைகிறது என்று கூறும் இவர்கள் மேற்கண்ட பேதங்களை மறந்து
அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் அதிகாரத்தை ரஜினிகாந்தின் கையில் அளிக்க வேண்டும் என்கிறார்கள்.
யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஒரு புள்ளியாக இணைய வேண்டும் என்கிறார்கள். அரசியல்
என்கிற “குழந்தை” நல்ல வழியில் செல்ல நாம் நமது தேர்வை மாற்றிக் கொள்வது அவசியம் என்கிறார்கள்.
ரஜினியின்
அரசியல் பயணத்தை திராவிடக் கட்சிகள் எதிர்ப்பதால் அக்கட்சிகளின் கொள்கையான “கடவுள்
மறுப்பு” என்பதை தவறு என்று சுட்டிக் காட்டுகிறார்கள். தமிழர்கள் மற்ற சமுதாயங்களின்
நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டார்களே தவிர இறை மறுப்பாளர்களாக இருந்ததில்லை என்பதையும்
சுட்டிக் காட்டுகிறார்கள்.
“யார்
தமிழர் என்று ஆராய்ச்சி செய்து, இன்னும் வரும் காலத்திற்கும் மொழி உணர்வைத் தூண்டி
அரசியல் செய்பவர்களின் பின்னால் சென்று, பயன்படாமல் போகும் ஐந்து சதவீத வாக்காளர்களாய்
நிற்பதற்கு பதிலாக, அவர்கள் நாங்கள் தமிழர்கள் என்று வீதிக்கு வீதி நின்று கூச்சல்
போடுகிற நேரத்தில், தமிழை முழுதாகப் படித்து உணர்ந்து, ஆன்மீகம் அரசியல் பற்றிய தெளிவை
அடைந்து, தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய செல்வாக்கு மிக்க வாய்ப்புகளை மக்களுக்கும்
இளைஞர்களுக்கும் தரத் தயாராக இருக்கின்ற ஒருவரின் பின்னால் நின்று, மாற்றத்தை சாத்தியப்படுத்துகிற
பெரிய வாக்காளர் கூட்டத்தில் ஒருவராய் இருப்பதுதான் நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும்
நல்லது.” இந்த வாசகம் இந்தப் பகுதியில் வருகிறது. இதுவே இவர்களின் மனநிலையை வெளிக்காட்டுவதாக
உள்ளது. ரஜினிகாந்த் சுய ஒழுக்கம் மிக்கவர் என்று சொல்கிறார்கள். பாவம், இவர்கள் ரஜினியின்
கடந்தகால வாழ்க்கையைத் தெரியாதிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதே
வார்த்தைகளை ஒரு பாஜக ஆதரவாளரும் சொல்லலாம். இவர்கள் பாஜக ஆதரவாளர்கள் என்று நான்
சொல்லவில்லை. அப்படிச் சொல்வது மாதிரி உள்ளது என்று கூறுகிறேன்.
“நடிகரைத்
தலைவராக ஏற்றுக் கொண்ட முட்டாள் ரசிகர்கள்” என்று ரஜினி ரசிகர்களை மற்றவர்கள் சொல்வதாகக்
கூறுகிறார்கள். நிச்சயமாகத் தமிழர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு நடிகர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு நடிகர்.
தமிழக அரசியலில் கால் பதித்த ஓரளவு வெற்றியும் கண்ட விஜய்காந்த் ஒரு நடிகர். நடிகர்
திலகம் சிவாஜி கணேசனும் அரசியலில் ஈடுபட்டவரே.
சாதாரண
இளைஞர்களால் அரசியலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது, அவர்களுக்கு ரஜினிகாந்த் வாய்ப்பளிக்க
வந்திருப்பதாக கூறுகிறார்கள். ரஜினிகாந்தின் பலமாக, “அவர் பிரதிபலன் எதிர்பார்க்காதவர்,
அரசியலுக்குத் தேவைப்படும் “விளம்பரம்” உள்ளவர், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும்
அவர்களிடம் “பேசி காரியம் சாதிக்கக் கூடியவர்”, பதவிக்காக கோஷ்டி பூசலில் ஈடுபடாமல்
அரசியல் செய்யத் தயாராக உள்ள கூட்டத்தை வைத்திருப்பவர், அரசியலில் ஈடுபட தேவையான “பண
பலமும்” கொண்டவர்” என்ற கருத்துக்களை உதிர்த்திருக்கிறார்கள்.
சமூக
வலை தளங்களில் ரஜினியை பற்றி கேள்வி எழுப்புபவர்கள் வீணாக அவ்வாறு செய்கிறார்கள். இதற்கு
ஜனநாயகமே காரணம் என்ற வகையில் பேசுகிறார்கள்.
“ரஜினிகாந்த்
மக்களுக்கான களத்தில் இறங்கிப் போராடாமல் நேரடி அரசியலுக்கு வர பார்கிறார் என்றும்
குற்றச்சாட்டு” பற்றியும் பேசுகிறார்கள். போராட்டங்களால் அரசியல்வாதிகளுக்குப் பாதிப்பில்லை,
பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறும் இவர்கள் போராட்டங்கள் என்பவையே
தேவையில்லாதவை என்கிற பாணியில் பேசுகிறார்கள். தொழிற்சங்கங்கள் கட்சிகளின் கீழாக இருக்கக்
கூடாது என்ற அரிய கருத்தையும் சொல்கிறார்கள். குடியேற்ற உரிமை திருத்தச் சட்டம் நல்லது என்று கூறும்
இவர்கள் தமிழர்களுக்கு அதில் உரிமை மறுக்கப்பட்டது பற்றி பேசவில்லை. முத்தாய்ப்பாக,
மக்களாட்சியில் போராட்டமென்பது மக்களை பாதித்து அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஆதாயம்
பெற்றுத் தருவதே அன்றி வேறு ஒன்றும் செய்யாது என்ற கருத்தை உதிர்க்கிறார்கள்.
ரஜினிகாந்த்
ஆன்மீகப் பகுத்தறிவுவாதி என்றும் அரசியல் பகுத்தறிவுவாதிகள் அவரை மதவாதியாகச் சித்தரிக்க
முயல்கிறார்கள் என்று கூறும் இவர்கள் ரஜினிகாந்த் திரைப்பட வசனங்களை மேற்கோள் காட்டுவது
முரண்பாடுகளின் உச்சமாக உள்ளது. திரைப்படங்கள் இலக்கிய தரங்கொண்டவையாகவும் உள்ளன.
ஆனால் ரஜினிகாந்தின் படங்கள் எப்படிப்பட்டவை என்று மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.
இதில் கிருஷ்ணர், புத்தர், ஏசு முகமது நபி போன்றோரின் ஆன்மீகத் தேடல்கள் பற்றிப்
பேசுகிறார்கள். பெரியாரின் ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது உண்மையே என்று
சொல்லும் இவர்கள் பெரியாருக்கு முன்பே ஈஷ்வர சந்திர வித்யாசாகர், ராஜா ராம் மோகன்
ராய் போன்றோரின் சமூக சீர்திருத்தம் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆன்மீகம்
“ஆன்மா” சார்ந்தது என்றும் அது “மதம்” சார்ந்தது அல்ல, இல்லறத்தில் இருப்பதும் ஆன்மீகமே
என்று சொல்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பின்னால் போகக் கூடாது என்று
கூறுவதோடு ஆங்காங்கே திருக்குறளை மேற்கோள் காட்டும் இவர்களின் தமிழ் உணர்வு ஆச்சரியத்தை
ஏற்படுத்துகிறது. போராட்டமே கூடாது என்று பேசும் இவர்கள் “எனக்காக ரத்தம் சிந்துங்கள்
நான் உங்களுக்காக சுதந்திரம் பெற்றுத் தருகிறேன்” என்று சொல்லி அதனைச் சாதித்துக்
காட்டிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை ஆன்மீக அரசியலுக்காக உதாரணம் காட்டுவது நகைச்சுவையைத்
தருகிறது.
ரஜினியின்
கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பும் மற்றவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசும்
இவர்கள், “கொள்கை என்ற ஒன்று யாரிடமும் இல்லை” என்ற வகையில் பேசுகிறார்கள். அப்படி
ஒரு கொள்கை எங்களுக்கு இருக்காவிட்டால் தவறும் இல்லை என்கிறார்கள். முதலில் அரசியல்
என்றால் என்னவென்று இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிலப்பரப்பையும் அதில் வாழும்
மக்களையும் பாதுகாப்பதுதான் அரசியல். இது குறிக்கோள். அவ்வாறு பாதுகாக்கப்படும் மக்களின்
உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் விதம், அவர்களுக்கு முன்னேற்றத்தை வழங்க
எந்த வழியில் பயணிக்கப் போகிறோம் என்பதே கொள்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மொழி
உணர்வை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று பேசும் இவர்கள் பெரும் போராட்டத்தின் அடிப்படையில்தான்
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது அந்தந்த மொழி பேசுவோருக்கான அரசியலை அந்தந்த
மொழி பேசுவேரே செய்ய வேண்டும் என்பது வகுக்கப்பட்டு விட்டது. அதை தமிழகத்தில் மட்டும்
தெலுங்கர்கள் மாற்றினர். அதையே பின்பற்றி மராட்டியரான சிவாஜி ராவ் கெய்க்வாடும் தமிழர்
தலையில் மிளகாய் அரைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். சிறப்பான விமர்சனத்திற்கு
இவர்கள் பரிசு அளிப்பார்களாம். இந்த நூலே ஒரு விலை கொடுக்கப்பட்ட பரப்புரை புத்தகம்
என்றால் மிகையாகாது.
“தமிழ்நாட்டில்
தமிழர் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும்” என்பது இங்கு அரசியல் செய்யும் அனைத்து அரசியல்
கட்சிகளின் கொள்கையாக இருக்க வேண்டும். தமிழர் அல்லாதோர், தமிழ் அறிந்தோர், தமிழ்ப்
புலமை பெற்ற அயலார் யாரும் தமிழக அரசியலில் இருந்து விலகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல்
தமிழர் முன்னெடுக்கும் அரசியலுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்புத் தரவேண்டும்.
“அரசியல்
வெற்றிடத்தை நிரப்ப வருகிறாரா” என்று மற்றவர்கள் முன்வைக்கும் கேள்விக்கு ரஜினிகாந்த்,
தான் முதல்வர் ஆவது பற்றியும், சட்டமன்றம் செல்வது பற்றி நினைத்தும் பார்க்கவில்லை
என்ற ரீதியில் பேசுகிறார்கள். ரஜினிகாந்த் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதாக கூறும் இவர்கள்
ரஜினிகாந்திற்குப் பிறகு யார் கட்சியை நடத்துவார்கள் என்று பேசவில்லை. ரஜினிகாந்தின்
மருமகனான தனுசு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றியும் பேசவில்லை. எல்லாவற்றுக்கும்
மேலாக ரஜினியின் வயது ஒரு முக்கிய காரணி ஆகும். தற்போது 70 வயதாகும் அவரால் இன்னும்
ஒரு 10 ஆண்டுகளுக்கு பின்னர் செயல்பட முடியாது. அதன் பின்னர் அவர் யாருக்கு வாய்ப்பு
அளிப்பார்? இதையெல்லாம் ரஜினிகாந்தை நம்பி அவர் பின்னே செல்ல நினைக்கும் இளைஞர்கள்
யோசித்துப் பார்க்க வேண்டும்.
புத்தகத்திற்கு
“தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்” என்று இவர்கள் தலைப்பு வைத்திருப்பதே தமிழினத்தை
அவமதிப்பதாகும். இதற்காக இவர்கள் தமிழினத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும். தமிழினம்
உலகின் மூத்த இனமாக இருந்து அறிவியலையும், கலையையும், இலக்கியத்தையும், மருத்துவத்தையும்
ஒருங்கே வழங்கிச் சென்றுள்ளது. இந்த இனம் சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன்,
சோழன் ராஜராஜன் போன்ற மாபெரும் அரசியல் தலைவர்களை வழங்கிய இனம். அண்மை வரலாற்றில்
அறம் தவறாத போராளி பிரபாகரனை வழங்கிய இனம். இந்த இனம் மலட்டு இனமல்ல, இது போன்ற ஆயிரம்
தலைவர்களை உருவாக்கக் கூடிய இனம். உலகிற்கே அறம் கூறும் நல்லிலக்கியங்களை வழங்கிய இனம்.
ரஜினிகாந்த் அந்த இனத்தின் வாய்ப்பைப் பெற்று பிழைக்க வந்தவர். ரஜினியின் பெயரும்,
புகழும், செல்வாக்கும் தமிழினம் அவருக்குப் போட்ட பிச்சை. அதற்கு நன்றி விசுவாசமாக
ரஜினியும் அவரது வாரிசுகளும் தமிழினத்திற்கு காலகாலமாக உழைத்தாலும் போதாது. அதை லாகவமாக
மறந்து விட்டு “தமிழனித்திற்கு வாய்ப்புத் தருகிறேன், இப்போ இல்லானா எப்போதும் இல்லை”
என்பதெல்லாம் பிதற்றலே அன்றி வேறொன்றும் இல்லை.
போராட்டம்
என்பது ஜனநாயக அரசியலில் ஒரு பகுதியாகும். “போராடுபவர்கள் சமூக விரோதிகள்” என்று
கூறிய ரஜினிகாந்த் மக்கள் மன்றத்திற்கு வர தகுதியற்றவர் ஆவார். ஆன்மீகம் பற்றி பேசும்
இவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது “வேற, வேற கேள்வி இருக்கா?” என்று அதட்டும்
தொணியில் பேசியதும் விஜயகாந்த் சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்திப் பேசியதும் ஒன்றுதான்.
இவர்கள், முதலில் நடிகர்களாக இருந்து அரசியல் செய்தவர்களுடன் ரஜினிகாந்தை ஒப்பிட்டுப்
பார்க்க வேண்டும். திமுக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆணிவேராக இருந்து எந்தவித
பதவியையும் எதிர்பார்க்காமல் அரசியலுக்காக பட வாய்ப்புகளை துறந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.
ராஜேந்திரன் பற்றி இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசியலையும்
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ரஜினிகாந்திற்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் அவருக்கு
ஒன்றும் இழப்பில்லை என்பது அரசியலின் உச்சகட்ட அறியாமை. ஒரு தலைவன் என்பவன் தன் உடல்
பொருள் ஆவி அனைத்தையும் தன் அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் என்னை ஏற்காவிட்டால்
எனக்கு ஒன்றும் இழப்பு இல்லை என்று பேசினால் உங்களுக்கு அரசியல் ஆர்வமே இல்லை என்றுதான்
பொருள்.
இவர்கள்
பேசாது விட்ட விஷயங்களில் பல உள்ளன. எடுத்துக் காட்டாக, தனியார் மயம், லஞ்ச ஊழல், அரசியல்
கட்சிகள் நிதி திரட்டுதல், எரிவாயு உருளை வழங்குவோரை வைத்து நடைபெறும் கொள்ளை, பெட்ரோல்
டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி இப்படி பலவற்றைச் சொல்லலாம். குறிப்பாக ரஜினிகாந்த்
சொல்வதுபடி “சிஸ்டம் (அரசியலமைப்பு) சரியில்லை” என்ற பிரச்சனை. அரசியலமைப்பு என்றால்
அது இந்திய அரசியலமைப்பையே குறிக்கும். அதில் எது சரியில்லை, எது சரியானது என்றெல்லாம்
ரஜினிகாந்தின் அறிவாளி ரசிகர்கள் விளக்க வேண்டும்.
தமிழர்கள்
ஏன் அரசியலில் அயலாரை வெறுக்கத் தொடங்கினர் என்பதை ரஜினி ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறப்பால் தெலுங்கரான பெரியார் என்ற ராமசாமி நாயக்கரை தலைவராக ஏற்று அவரது மூளைச் சலவைகளுக்கு
ஆளானதால் தமிழ்ச் சமூகம் ஏராளமான இன்னல்களுக்கு ஆட்பட்டு வருகிறது. பிறப்பால் மலையாளியான
எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்த காலத்தில்தான் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை
குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் சென்று நீர் மட்டத்தை
உயர்த்த உத்தரவு பெறப்பட்டது. இதற்குள் இடைப்பட்ட காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாகி
விட்டது. பிறப்பால் தெலுங்கரான கருணாநிதி அடித்த கொள்ளைகளை பற்றி யாரும் கவலைப்படவில்லை.
ஆனால் ஈழப்போரின்போது அவர் அரங்கேற்றிய நாடகம் கண்டு எல்லாரும் ஆத்திரமடைந்தார்கள்.
தமிழர்களின் அரசியல் அதிகாரம் அந்நியரின் கைக்குச் சென்றதால் ஏராளமான இழப்புகளை சந்திக்க
வேண்டியிருந்தது. மேற்படி மூன்று தலைவர்களும் தமிழினத்திற்கான தலைவர்களாக நடித்தவர்கள்.
ஆனால், தமிழின நலனிற்காக இது வரை நடிக்கக் கூட செய்யாத மராட்டியரான ரஜினிகாந்தின் கையில்
அதிகாரத்தைக் கொடுத்தால் என்னவாகும் என்பதுதான் எங்களுக்கெல்லாம் உள்ள உச்சபட்ச அச்சம்.
ரஜினிகாந்திற்கு செல்வாக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி செல்வாக்கு இருந்தால்
அரசியலில் இறங்கி நிரூபிக்க வேண்டியதுதானே? ஏன் தயக்கம்? எழுச்சி ஏற்பட வேண்டுமாம்.
இவர் வந்து நோகாமல் நோம்பு கும்பிடுவாராம்.
*****