"வேளான்" - எனும் சொல் பலரால் பொதுவாக வேளாண் குடியினைரைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. வேளான்-வேளாளன் எனும் சொற்களின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு வேளான்களே வேளாளர் என்று கருதுவர். ஆனால் ..,வெள்ளாளர் என வழங்கும் இன்றைய சொல்லாட்சியின் ஆதிவடிவம் வேளாளன் என்பதாகும் என்பதை பரிபாடல் கூறுகிறது,{பரிபாடல்:20}
[ "மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
தொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம்,
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?‘ என்னாமுன்-- 65"
- பரிபாடல்: 20]
-அதே பரிபாடலில் வேள் {செவ்வேள்-நெடுவேள்-வெல்வேள்}என்று குறிஞ்சிநிலத் தெய்வம் முருகனையும், காமக்கடவுள் மன்மதனையும் {கருவேள்} குறிக்கிறது. . எனவே தலைமையின் உயர்தரத்தைக்குறிக்கும் "வேள்"-எனும் சொல் வெள்ளாளரையே குறிக்கும் எனக் கருதுவது பொருத்தமற்றதாகும்.
பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் வேளான் அல்லது வேளிர் எனும் சொல் ஒரு இனக்குழுவின் தலைவர்களுக்கு சூட்டப்பெற்ற சொல்லாகும்.
'வேள்' எனும் வினைச்சொல் விரும்புதல் என விளக்கம் பெறும். இதுவே பெயர்ச்சொல்லாகும்போது, விரும்பப்படும் நபர் என்ற பொருள்படும். இந்த சொல்லிற்கு தமிழ் அகராதி அளித்துள்ள விளக்கங்களுள் ஒன்று, "சிறந்த ஆண்மகன்" என்பதாகும். வேள் அதாவது வேளிர் எனும் சொல் வெண்மை அல்லது ஒளிபொருந்திய எனவும் பொருள்படும். புறநானூறில் {24} வரும், "தொன்முதுவேளிர்" என்பதை வைத்து வேளிர் என்பார் தொன்மையான குடியினர் என்பதை அறியலாம். இவர்கள் சமுதாய அமைப்பில் வேந்தருக்கு அடுத்த படிநிலையில் வைக்கப்பட்டனர் என்பதை "வேந்தரும் வேளிரும்" எனும் தொடர் {பதி: 30, 49, 75, 88} உணர்த்தும்.
வேதகாலத்தில், இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்த நிலையில், இனக்குழுக்களின் மூத்த கிளையினர் {Senior lineage} 'ராஜன்ய' எனப்பட்டனர். இக்குழுவிலிருந்தே இனக்குழுவின் தலைவன் 'ராஜா' தேர்வாகிறான். ராஜா எனும் இச்சொல் 'ரஜ்' {ஒளிபொருந்திய} எனும் வேர்ச்சொல்லிலிருந்து பெறப்படுகிறது. {Romila Thapar: / From Lineage to state O.U.P} பிற்றை நாட்களில், அரசு உருவாக்கம் கருக்கொள்கிறது. புதிதாகத் தோன்றிய அரசுகள் இனக்குழுக்களை ஒவ்வொன்றாக வெற்றி கொண்டு ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்கின்றன. அரசு உருவாக்கத்தின் உச்சத்தை மௌரியப்பேரரசின் வடிவில் காணலாம். இப்பேரரசின் சூத்ரதாரியான கௌடில்யர் தாம் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் இனக்குழுக்களை அழிப்பதற்கென்றே உள்ளிருந்தே அழித்தல் {boring from within} எனும் உத்தியைக் குறிப்பிடுகிறார். { D.D.Kosambi/ The Culture and Civilisation of Ancient india in historical outline }
மேற்கூறிய வடபுலச் சூழலின் பின்னணியில் வேளிர் குறித்த ஆய்வைத் தொடரலாம். ரஜ்-வேள் எனும் சொற்களுக்குரிய விளக்கத்தை ஒப்புநோக்கி வடபுலத் தலைவர்களின் இனக்குழுத்தலைவர்களான ராஜா எனும் சொல் போன்று தமிழகத்தின் இனக்குழுத் தலைவரைச் சுட்டும் வேளிர் எனும் சொல்லைக் கருதலாம். வடபுலத்தில் அரசு உருவாக்கத்திற்குப் பிறகு ராஜா எனும் சொல்லே அரசனைக் குறித்தது. ஆனால் தமிழகத்தில் இக்குழுத் தலைவர்கள் வேளிர் என்றே அறியப்பட , அரசனைச் சுட்டுவதற்கு வேந்தன் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரு.சிவத்தம்பி அவர்களின் அரசு உருவாக்கம் குறித்த ஆய்வு இந்நிலையினைத தெளிவாக எடுத்தரைக்கும். {K.Sivathamby/ Studies in Ancient Tamil Society}
பழந்தமிழ்ப்பாக்களில் ஆட்சியதிகாரத்தைக் குறிப்பிடும் இறை- கோ- கிழான்- மன்னன்-வேந்தன்- ஆகியோர் பல இனக்குழுக்கள் கொண்ட நிலப்பகுதிக்கு உரியவராவார்கள். தமிழ்ச் சமூகத்தின் புதிய வரவான "வம்ப வேந்தர்கள்" வடபுலத்தைப் போன்று இனக்குழுக்களை அழித்துத் தம் ஆதிக்கத்தை விரிவாக்க முனைந்தனர்.இதனால் இக்குழுக்களின் தலைவர்களான வேளிர்களில் பலர் பெரு வேந்தரின் ஏவலர்களாயினர். நாங்கூர்வேள், வேள் ஆவி, போன்றோர் பெரு வேந்தர்களுக்கு தம் புத்திரிகளை மணம் செய்வித்தனர். மென்புலப் பகுதியில் வேந்தர்கள் ஆதிக்கம் பெற, வன்புலப்பகுதியை நோக்கி வேளிர் நகர்ந்தனர். மேலும் வன்புலப்பகுதியில்தான் இனக்குழுச் சமுதாயம் இறுக்கமாக காணப்பட்டு அங்கு வேளிரின் ஆட்சி தொடர்ந்தது. தமக்கு அடிபணியாத அல்லது தமக்கு மகற்கொடை மறுத்த வேளிர்தலைவர்களை அகற்றும் முயற்சியில் பெருவேந்தர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர். புதுக்கோட்டைப் பகுதியான கோனாட்டின் தென்மேற்கெல்லைக்கு அருகாமையிலுள்ள பிரான்மலை என அறியப்படும் பாரிவள்ளலின் பரம்புமலை மூவேந்தரின் முற்றுகைக்கு ஆளாகியது. வேள் எவ்விக்கு உரியதான "முத்தூரு" {முத்தூற்றுக் கூற்றம்} "மிழலை" {மிழலைக் கூற்றம்} மற்றும் வைகையாற்றின் கரையிலிருந்த அகுதைவேளின் அரசு ஆகியவை பாண்டியரால் அகப்படுத்தப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
வன்புலத்தில் இனக்குழுச் சமூகத்தின் சிறப்பியல்புகளான பகுத்துண்ணல், கொடை வழங்கல் ஆகியன தொடர்ந்து காணப்பட்டதால் அவை புலவர்களின் பாராட்டிற்குரியதாயின. {புறம்: 335} இனக்குழுத் தலைவர்களான வேளிர்கள் புலவரை மதித்துக் கொடையளித்த செயலால் அவர்கள் பாக்களில் புகழப்பட்டனர். இத்தகைய புகழைப் பெறமுடியாத வேந்தர்கள் பாரியின் மீது பொறமையால் போர் தொடுத்தனர். தொல்குடியினராகத் தம்மைக் கருதிய வேளிர் வேந்தருக்கு மகற்கொடை மறுத்ததில் வியப்பேதுமில்லை!, கூத்தாடிகள் போல வேடம் தரித்து வந்தால் பாரியின் பரம்பைப் பெறலாம் எனும் கபிலரின் எள்ளல் மொழி 'உள்ளிருந்தே அழித்தல்' எனும் அர்த்தசாஸ்திர உத்தியை நினைவு கூர்வதாக உள்ளது.
மேற்கண்ட கருத்துக்களிலிருந்து பெறப்படும் செய்திகளாவன, தொன்முதுவேளிர் இனக்குழுக்களின் தலைவராவார். மென்புலப்பகுதியின் செல்வ வளம் காரணமாக, இப்பகுதியில் இனக்குழுச் சமூகம் சிதைவடைந்து அரசுச் சமுதாயம் தோற்றம் பெறுகிறது. இப்பகுதியின் இனக்குழுத் தலைவர்களான வேளிர்கள், வேந்தர் எனும் பெயரைப் பெறுகின்றனர். புதிதாகத் தோன்றிய வம்ப வேந்தர்கள் ஆதிக்க விரிவாக்கத்தின் பொருட்டு இனக்குழுச் சமூகத் தலைவர்களை வென்று வேளிர்களைத் தமது ஏவலராக்கினர். எதிர்ப்போரை அழிக்கின்றனர். இருப்பினும் வன்புலப் பகுதியில் வேளிரின் ஆதிக்கம் தொடர்ந்தது. சமுதாய அமைப்பில் வேந்தருக்கு அடுத்த படிநிலையில் வேளிர்கள் கருதப்பட்டமையால் "வேந்தரும் வேளிரும்" எனும் சொல்லாட்சி தோன்றியிருக்க வேண்டும். வரலாற்றுத் தொடக்க காலச் சமூகம் சமனற்ற, மாற்றமுறும் இயல்பைக் கொண்டது எனும் கருத்தைக் கவனத்தில் கொண்டால், அரசு உருவாக்கத்தின் படிநிலை வளரச்சியில் வேளிர் எனும் சமூகத்தரம் {Status} வேந்தருக்கு அடுத்த நிலைக்குரியது எனத் தெளியலாம். இடைக்காலச் சமுதாயத்திலும் "வேள்" என்பது சமூகத்தரத்தைக் குறிப்பிடும் சொல்லாகக் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேளான்-எனும் சொல்லை இடைக்காலத்தில் வேளிராகிய இருங்கோவேள்களும் பெற்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, குடுமியான்மலைக் கல்வெட்டில் {IPS: 255, ..."பிராந்தகன் குஞ்சிரமல்லனான வீரசோழ இளங்கோ வேளா னேன்"....} சுட்டப்படும் பிராந்தகன் குஞ்சிரமல்லனான இருங்கோவேளானைக் குறிப்பிடலாம். வேள்-வேளிர்-வேளான் தொடர்பைக் கவனத்தில் கொண்டால் பண்டைய வேளிர் எனும் சொல்லே வேளானாகியது எனலாம். பண்டு ஆட்சியதிகாரத்தைக் குறிப்பிட்ட வேளான் எனும் சொல் இடைக்காலத்தில் சமூகத்தரத்தைச் சுட்டும் விருதுப்பெயராக மாற்றம்பெற்றிருக்கிறது. முதலாம் ஆதித்தனின் தில்லைத்தானம் கல்வெட்டில் { 286 of 1911} சோழனும் சேரனும் இணைந்து விக்கியண்ணன் இனும் படைத்தலைவனுக்கு "செம்பியன் தமிழ்வேள்" எனும் விருதுப்பெயரும், விருதுச் சின்னங்களும் வழங்கப்படும் செய்தி கூறப்படுவதை ஈண்டு கவனத்தில் கொள்ள வேண்டும். "தென்கவிநாட்டு வேளான் அழகனான செம்பியன் வேளிர்" எனும் திருவெப்பூர் கல்வெட்டுச் செய்தி {IPS: 475} வேளிர்- வேளான் தொடர்பைப் புலப்படுத்தும். எனவே பண்டைய தமிழ்ச் சொல்லான வேளிர் இடைக்காலத்தில், சமூகத்தரத்தைக் {Social status} குறிக்கப் பயன்பட்டது என்று தெளியலாம். ஆய்வாளர்களில் பலர் வேளான்கள் யாவரும் வெள்ளாளர் எனக் கூறுவதைத் தவிர்த்து, உயர்தரம் பெற்ற வெள்ளாளரும் வேளான் எனும் விருதுப்பெயரைப் பெற்றனர் என்றே கூற முற்படவேண்டும்.
வேளான்களுள்ளும் படிநிலைகள் உள்ளதை சாசனங்கள் மூலம் அறியமுடிகிறது. ஊர்வேளான் என்பது முதல் படிநிலை!{ IPS: 386, ...."மேற்படியூரில் வேளான் சொக்கநாயநயினார்க்கும்"...."சோலையர்க்கும்".... } , அடுத்ததாக, நாட்டு வேளான், -பெரியநாட்டு வேளான்- மூவேந்தவேளான் என சமூகத்தரம் {promotions} உயர்வடைகிறது. இதைக் காரையூர் வேளான்கள் குறித்த கல்வெட்டுகளால் {IPS: 229, 266, 399} அறிந்து தெளியலாம். காரையூர் என்பது புதுக்கோட்டைப் பகுதியின் அதிகார மையங்களில் ஒன்று. இங்கே 12-13ம் நூற்றாண்டுகளுக்குரியதான எட்டுக் கல்வெட்டுகளில் காரையூர் வேளான்களின் செயல்பாடுகள் கூறப்படுகின்றன. இவர்களுள் முதலாமவன் 'செம்பியன் கானாட்டு வேளான் {IPS: 229} ஆவான். அடுத்து வருபவன் காரையூர்த் தேவன் கிழவனான சோழதிவாகர மூவேந்தவேளானாவான் {IPS: 266}
வேளான் எட்டியான செங்கதிர்ச் சோழ மூவேந்த வேளானும் அவனது தம்பி வேள் சான்றான் ஆகியோரும் அரசுக்கு வரி செலுத்தாத நிலையில், வேள் சான்றானின் நிலம் ஏலத்தில் விடப்படுகிறது. {IPS: 399} -15ம் நூற்றாண்டின் இரு கல்வெட்டுகளில் {IPS: 703-715} காரையூர் வேளான் பாடிகாவல் பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைத்த செய்திகள் கூறப்படுகின்றன. காரையூர்- வெள்ளக்குடி-நாவற்குடி-கூடலூர்-புலவர் நாவற்குடி-இடையாத்தூர் ஆகிய குடியிருப்புகள் இவனது அதிகாரத்திற்குட்பட்டவையெனவும், இவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் பங்கும், தனக்குரிய அரசு சின்னங்கள் மற்றும் விருத்தாவளிகளை பாடிகாப்போர்க்கு உரித்தாக்குவதாகவும் கூறப்படுகிறது. தன்னைச் திருச்சிராப்பள்ளியுடையான் என ஒருநபர் கூறிக்கொள்வது {IPS:705-755} திருச்சிராப்பள்ளியிலும் நில உடைமை பெற்றிருந்ததைக் குறிக்கும். 16ம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் {IPS: 755-909} ஊரார் சார்பாக காரையூர் வேளான் கம்மாளர்களுக்குச் சலுகை அளித்துள்ள செய்தி கூறப்படுகிறது. {IPS:909,-"கம்மாளர்களை 'முகச் சவரம்' செய்யுமாறு பணித்து, அவர்கள் மறுத்து ஊரை விட்டு செல்லுதலைத் தடுத்துச் சலுகை அளித்தல்"}
மேற்கூறிய செய்திகளிலிருந்து காரையூர் வேளான்கள் ஊர்வேளான் எனும் நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, கோனாட்டு வேளான்- எட்டி- மூவேந்த வேளான்- எனும் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்வு பெற்றுள்ளனர்.இவ்வாறாக ஊர்வேளானிலிருந்து மூவேந்தவேளான் மரத்திற்கு உயர்ந்து சிறிய அரசு அளவில் இயங்கியுள்ளனர்.மேலும் உயர் அரசு அலுவலர்கள் நிலையிலும் மூவேந்தவேளான் எனப்பட்டோர் பணியாற்றியுள்ளனர். இந்த வேளான் எனும் தகுதியைப் பெறவேண்டுமெனில் அவர்கள் உடையான் எனும் தகுதியைப் பெறவேண்டும். அதை அடுத்தடுத்த பதிவுகளில் விளக்குகிறேன்.
Reference
1.பரிபாடல் மூலமும் உரையும் {புலியூர் கேசிகன்}
2. புறநானூறு : 24-355
3.பதிற்றுப் பத்து : 30, 49, 75, 88.
4. From Lineage to state O.U.P. { Romila Thapar}
5. The Culture and Civilisation of Ancient india in historical outline { D.D.Kosambi}
6. Studies in Ancient Tamil Society { K.Sivathamby}
7.IPS: - 475 - 229 - 266 - 399 - 705 - 755 - 909
8. ASI 286 of 1911
நன்றி!
அன்பன்: கி.ச. முனிராஜ்வாணாதிராயன்
No comments:
Post a Comment