Monday, December 24, 2018

பெரியார் தனிமனிதர் இல்லை, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான தத்துவக் குறியீடு.

"பெரியார்" தனிமனிதர் இல்லை...!

அநேக நெருக்கடியான சூழலில் இதை எழுத வேண்டாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் சிலவற்றை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் இந்த பதிவு தேவையாகிறது.

இன்றைய சூழலில் பெரியார் மீது வைக்கப்படுகின்ற விமர்சனம் தேவையா ? தேவையற்றதா ? என்பதை உங்களில் பார்வையில் இருந்தே விளக்குறேன். பெரியாரை நீங்கள் இறந்துபோன ஒரு நபராக, ஒரு தத்துவத்தை பிடித்து நடந்து, அவரின் தத்துவ வாரிசுகளை தமிழர் அரசின் அதிகாரத்து உயர்த்திய தனிமனிதனாக பார்க்கிறீர்களா ? இல்லை இறந்துபோன ஒரு தத்துவத்தை உயிர்ப்பிக்க, அந்த தத்துவத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட, பொய்யான வரையறைகளின் படி புனிதப்படுத்தப்பட்ட, அந்த தத்துவத்தின் நீட்சி இந்த இனத்திற்கு செய்த, செய்துகொண்டு இருக்கிற துரோகங்களை எல்லாம் பத்திரமாக மூடி மறைக்கிற ஒரு கேடயமாக பார்க்கிறீர்களா ?

உண்மையில் எனது பார்வை இரண்டாவது. ஏன்எனில் ஐம்பது ஆண்டுகாலமாக இந்த மண்ணில் திராவிட அரசியல் செய்த துரோகங்கள் விமர்சிக்கப்படும் போதெல்லாம், மண்ணுரிமை நாம் இழந்துபோனது திராவிடர்களால் மட்டுமே என்று பேசும் போதெல்லாம், தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் முற்றிலுமாக சீரழிக்க பட்டுவிட்டதே அதற்கு காரணம் திராவிட அரசியலே என்று நாம் பேசுகிற போதெல்லாம், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் உறவுகள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸும் அதனுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் மட்டுமே என்று நாம் பேசுகிற போதெல்லாம், நமது பேச்சுக்கு தொடர்பற்று "பெரியார் மட்டும் இங்கு இல்லாவிட்டால், நீங்கள் ?" என்று திராவிட கூடாரங்கள் கூக்குரல் எழுப்பும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது பெரியார் ஒரு தனிநபரல்ல, திராவிடர்களின் துரோகங்களை, திராவிடம் செய்த அயோக்கியதனைகளை மூடி மறைக்கின்ற பேராயுதம்.

இப்போது சொல்லுங்கள், போர்க்களத்தில் நிற்கின்ற ஒருவன், நூற்றாண்டுகால எதிரியை போர்க்களத்தில் வெல்லவேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற ஒருவன், எதிரியின் பலவீனங்களையெல்லாம் மூடி மறைக்கும், அவர்களை சரியவிடாமல் பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தும் பொய்யாக புனிதமாக்கப்பட்ட கேடயத்தை கட்டுடைக்க வேண்டாமா ? இல்லையா ?.

எமது பெரியாரிய விமர்சனகள் கூட, தனிநபரை நோக்கியது அல்ல, எதிர்த்தளத்தின் தத்துவமாக முன்னிறுத்தப்படுகிற தனித்த பெயரினை மட்டுமே.

பெரியார் இந்த மண்ணில் புனிதமாக்கப்படுவதால் என்ன நிகழப்போகிறது ? என்று நமது உறவுகள் கூட சிந்திக்கலாம். ஆம் அது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. ஏன் என்றால், ஏற்கனவே புனிதமாக்கி கட்டமைக்கப்பட்ட ஒன்றை, ஒரு தத்துவத்தின் குறியியிடாக இருக்கும் ஒன்றை உண்மையான விமர்சனத்தை கூட வைக்காமல் நகர்ந்துவிட முடியாது. எதிர்கால சந்ததிக்கு உண்மையான அரசியலை நாம் அடையாளம் காட்டவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது, நமது அண்ணன் சீமான் நமக்கு காட்டியது போல.

உங்கள் ஆழ்மனதில் ஒன்றை கேட்டுக்கொள்ளுங்கள், 1970 களில் நமது தந்தையர்கள் அரசியல் அறிவில் தெளிவுபெறாமல் இருந்தது போல, இன்று நாம் இருந்திருந்தால் இன்று பெரியாரை இவர்கள் கொண்டாடத்தேவையில்லை, கருணாநிதியையே கொண்டாடி இருப்பார்கள். ஆனால் காலச்சூழலில் இப்போதை தலைமுறையாகிய ஓரளவிற்கு அரசியல் அறிவுபெற்று வருகின்ற இந்த சூழலில், கருணாநிதியை புனிதப்படுத்ததுதலில் எந்த பயனும் இல்லை, எவரும் நம்பப்போவதுமில்லை. திராவிட அரசியலில், நிகழ்காலத்தில் புனிதப்படுத்த எந்த அடையாளங்களும் இல்லாத சூழலில் திராவிடம் தனது இருப்பை தக்கவைத்து கொள்ள ஏற்கனவே புனிதப்படுத்தப் பட்ட ஒன்றை தனது அடையாளமாக கட்டமைத்து தனது துரோகங்களை மறைக்க நினைக்கிறது. திராவிட அரசியலில் இந்த மண்ணில் நிகழ்ந்த துரோகங்களுக்கெல்லாம் மறைக்க பயன்படுத்தும் புனிதப்படுத்தப்பட்ட அடையாளம் "பெரியார்"

உண்மையில் பெரியார் மட்டும் "போலி கடவுள் மறுப்பு" கொள்கையை முன்மொழியாமல் இருந்திருந்தால் இன்றைய சூழலில் திராவிட தளகர்த்தர்கள் அனைவரும் பெரியாருக்கு ஊருக்கு ஊர் கோவிலை கட்டி, ஆறுகால பூஜை செய்து, திராவிடத்தை தனி மதமாக அறிவித்து இந்நேரம் பல்கி பெருகி இருப்பார்கள். ஆனால் கடந்தகால வாழ்க்கை அதற்கும் இடம்தரவில்லை.

எனவேதான் இந்த பெரியார் புனிதப்படுத்தும் படலம் முழுவீச்சாக இங்கே நடக்கிறது. திருச்சியில் "கருஞ்சட்டை ஊர்வலம், மாநாடுகூட" பெரியார் புனிதப்படுத்துதலின் வந்த தொடர்ச்சிதான்.

ஸ்டாலினிடம் இருந்து கட்டளை திராவிட இயக்கங்களுக்கு வருகிறது, திராவிட இயக்கங்கள் ஏற்கனவே திமுகவின் இரண்டாவது பிரிவு என்பதால் இந்த இயக்கங்களால் பொதுவான ஒரு ஒருங்கிணைப்பை செய்ய இயலவில்லை. அதை செய்ய ஒரு ஆள் தேவைப்படுகிறது. 160 இயக்கங்கள், அவற்றில் பெரும்பாலான இயக்கங்களிடம் அவர்களின் பெயரை பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை. தமிழகத்தில் பெரிய ஆளுமைகள் அனைவரையும் அவர்களிடம் ஒப்புதல் பெறாமலேயே அவர்களின் பெயரினை போட்டு துண்டுசீட்டுகள் பிரசுரிக்கப்பட்டது (இன்று ஊர்வலத்திற்கு வராதவர்கள் எவரிடமும், அவர்களின் பெயரினை பயன்படுத்த அனுமதி பெறவில்லை என்பதே உண்மை). இப்படியான அவசரகதியாக கருஞ்சட்டை ஊர்வலத்தையும், கைத்தடியும் தூக்கவேண்டிய அவசியம் என்ன ?

காவிகளை எதிர்க்கவா ? காவிகள் இங்கே எங்கு இருக்கிறார்கள் ? உண்மையில் காவிகளை எதிர்க்கவே இந்த கருஞ்சட்டை பயணம் என்றால், முறைப்படி காவிகள் கொட்டாரமடிக்கிற மாநிலங்களில் இதை செய்து இருக்கலாமே ? குறைந்த பட்சம் இந்த கருஞ்சட்டை பயணத்தை காவிகளை எதிர்க்கும் பொருட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலிலாவது அவர்கள் செய்திருக்கலாமே ? இது உண்மையில் காவிகளை எதிர்க்கும் பேரணியல்ல.

மாறாக எல்லா எலிக்களையும் மயக்கி இசைவாசித்து, ஆற்றில் இறங்கிவிடும் சூதகம்தான், ஸ்டாலின் அரசியலுக்கு பலியிடப்படும் கறுப்பாடுகள் அவை. இவைகளை முன்னின்று நடத்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் வாழும் வல்லபாய் படேல் திருமுருகன் காந்தி.

இந்த கருஞ்சட்டை ஒருங்கிணைவு முழுக்க முழுக்க தமிழ்த்தேசியத்தின் எதிர்நிலை தத்துவமான ஆரியம் போலவே திராவிடம் செய்கின்ற இன்னொரு சூது. உண்மையில் திராவிட அரசியல், தமிழ்த்தேசியத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற பயத்தின் வெளிப்படையான வெளிப்பாடு.

இன்றைய கருஞ்சட்டை மாநாட்டில் ஆரிய-பார்ப்பன அரசியல் அதிகாரத்தை எதிர்த்து ஏதேனும் தீன்மானம் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை தீர்மானம் காவிகளுக்கு எதிராக நிறைவேற்ற பட்டிருந்தால், அந்த பார்ப்பன எதிர்ப்பு தன்னைத்தானே காஸ்மீர் பார்ப்பனன் என்று பேரறிவுப்பு செய்து கொண்ட காங்கிரசின் தலைவர் ராகுல் காந்திக்கும் பொருந்துமா ? ஒருவேளை பொருந்தினால் நாளை காங்கிரசோடு திமுக கூட்டணி அமைத்தால் இந்த கருஞ்சட்டை கூட்டம் எதிர்க்குமா ?

அப்படியெல்லாம் நிகழவில்லை என்றால் இன்று புனிதப்படுத்தப்படும் பெரியாரும் அவரின் தடியும் ஆரிய-பார்ப்பனர்களை எதிர்க்க இல்லை என்பது உண்மைதானே ?.

கருஞ்சட்டையின் நோக்கம் ஆரிய-பார்ப்பன எதிர்ப்பு இல்லை என்ற பட்சத்தில்,அவர்களின் இந்த நோக்கமற்ற ஒன்றுகூடலின் நோக்கமென்ன ?

இந்த மண்ணில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியலை எதிர்க்கத்தானே இந்த ஒன்றுகூடல்?

அப்படியெனில் அங்கே புனிதப்படுத்தப்பட்டு, கட்டமைக்கப்படும் பெரியார் எனும் பிம்பம் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கத்தானே ?

இந்த கேள்விகளின் தொடர்ச்சி, பெரியார் என்ற புனிதப்படுத்தட்ட பிம்மம், மேலும் புனிதப்படுத்த படுவதன் நோக்கம் தமிழ்த்தேசியத்தின் களங்களை சமாளிக்கவே. எனவே களத்தில் தடைகளை உடைப்பதே நமக்கான வெற்றியாக இருக்க முடியும்.

தமிழ்த்தேசியத்தின் அடையாளத்தை தவிர, இந்த மண்ணில் புனித்தபடுத்தப்படும் எந்த அடையாளங்களும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதே. எனவே நாம் இந்த மண்ணில் விழிப்போடு இருக்கவேண்டும்.

இங்கே துரோக அரசியல்கள் சில புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் பின்னே மறைந்துகொண்டு தப்பிக்க நினைக்கிறது.

காவிகளும் - கருஞ்சட்டைகளும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களே...!

இன்னும் பெரியார் வழியில் உங்களுக்கு சொல்லப்போனால்...

எப்படி ஆரிய-பிராமண எதிர்ப்பை, அதன் புனிதப்படுத்தப்பட்ட வடிவமாக இருந்த பிள்ளையாரை எதிர்த்து தனது பகுத்தறிவை பெரியார் நிலைநாட்டினாரோ...

அதேபோல திராவிட அரசியலின் எதிர்ப்பை, அந்த திராவிட அரசியலின் புனிதப்படுத்தப்பட்ட பிம்பமாக திராவிடர்கள் கட்டமைக்கும் "பெரியார்" எனும் பிம்பத்தை எதிர்ப்பதும் ஒருவகையான, இந்த நேரத்தில் மிகவும் அவசியமான செயல்பாடு என நான் உளமார நம்புறேன்.

அதை மிகவும் நெகிழ்ச்சியோடு செய்வேன்.

பெரியார் தனிமனிதர் இல்லை, தமிழ்த்தேசியத்திற்கு எதிரான தத்துவக் குறியீடு.

Senthilnathan Dhurai

https://www.facebook.com/senthilnathan.dhurai.3/posts/124128801949083

Tuesday, December 18, 2018

மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்


அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 18வது தேசிய மாநாடு 2018 டிசம்பர் 12 முதல் 16 வரை கொல்கத்தா. மௌலாஅலி பகுதியில் ராம் லீலா மைதானத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேனி மாவட்டத்தின் பொருளாளரான எனக்கு மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

Sunday, December 2, 2018

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத்தேவர்


தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.
"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.
அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.
சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.
பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.
அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-
தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.
அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.
உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
சங்கம் தோன்றக் காரணங்கள்
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
சங்க நோக்கங்கள்
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
2. பாண்டியன் புத்தக சாலை.
3. நூலாராய்ச்சி சாலை.
4. கல்விக் கழகம்.
5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.
சேது சகோதரர்களின் கொடைகள்
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.
இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்
அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக – முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் குழு
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும்.
நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!

Wednesday, November 28, 2018

ரத்ததான முகாம்


இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் சந்திப்பு


கடந்த 15-11-2018 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அதியமான், மறத்தமிழர் சேனைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புதுமலர் பிரபாகரன், வீரகுல அமரன் இயக்கத் தலைவர் கீ.ரா. முருகன், சந்திரபோஸ், சரவணன் ஆகியோருடன் நானும் தமிழக அரசியலில் நிலவும் அந்நியர் ஆதரவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு உதவுமாறு கோரி இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து பேசியபோது எடுத்த படம்.




"காதல் முக்கியமா ஜாதி முக்கியமா" என்ற விவாத நிகழ்ச்சி


கடந்த 14-11-2018 அன்று மறத்தமிழர் சேனைக் கட்சியின் தலைவர், புதுமலர் பிரபாகரன், பொதுச்செயலாளர் முத்துக்குமார், வீரகுல அமரன் இயக்கத் தலைவர் கீ.ரா. முருகன், ராஜா மறவன், கள்ளர்நாடு ராஜேஷ், தேவர் மீடியா மகேஸ், உசிலை ஏ.ஆர். வினோத், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் கே.சி. திருமாறன் உட்பட நானும் பங்கேற்ற
"காதல் முக்கியமா ஜாதி முக்கியமா" என்ற தலைப்பிலான தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். 18-11-2018 அன்று இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பானது. தொகுப்பாளர் கரு. பழனியப்பன் போன்ற முற்போக்கு ஆசாமிகள் எங்களை சாதி வெறியர்களாக சித்தரிக்க முயன்றார்களே தவிர எங்கள் தரப்பு நியாயத்தைப் பேச அனுமதிக்கவில்லை. காலம் மாறும், காத்திருப்போம்.

https://www.zee5.com/ml/tvshows/details/tamizha-tamizha/0-6-1109/tamizha-tamizha-episode-2-november-18-2018-full-episode/0-1-151768_106212593

Tuesday, May 29, 2018

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்



சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வருவதாகவும், அதற்கு மின் இணைப்பு பெற அண்டை வீட்டுக்காரர் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தும்போது அந்தப் புறம்போக்கு நிலத்தில் ஒரு பகுதியை அண்டை வீட்டுக் காரருக்கு விட்டுக் கொடுத்து விட்டால் பிரச்சனை முடிந்து விடும் என்று மத்தியஸ்தம் செய்தவர்கள் சொன்னதாகவும் தெரிவித்தார்.

அந்த நிலம் தொடர்பான ஆவணம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். நீதிமன்றம் சென்று வழக்கில் வெற்றி பெற்றதாகச் சொன்ன அவர் அதற்கான ஆவணத்தைக் காட்டினார். அதில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்று கேட்டபோது எதிர் தரப்பினர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை என்று சொன்னார். மேலும் அந்த நிலம் அவரது உறவினரிடம் எழுதி வாங்கிய ஒன்று என்றும் சொன்னார். அதன் பின்னர் பதிவு பத்திரத்தின் பிரதியைக் காட்டினார்.

பதிவு செய்யப்பட்ட நிலத்தை ஏன் புறம்போக்கு நிலம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டேன். நாங்கள் இன்னமும் பட்டா வாங்க வில்லை என்று சொன்னார். அவரது அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். பதிவு செய்யப்பட்ட நிலம் என்றாலே அது புறம்போக்கு ஆகாது என்பதை அவருக்கு கூறினேன். உடனே பட்டாவிற்கு விண்ணப்பிக்குமாறு கூறினேன். பதிவுத் துறையில் தனது நில உரிமையை பதிவு செய்த ஒருவர் பட்டாக் கேட்டு விண்ணப்பிக்கும்போது நிர்வாகத் துறை பட்டா தர மாட்டேன் என்று மறுக்க முடியாது. வேறு ஒருவர் தக்க ஆதாரங்களுடன் அந்த நிலத்தை உரிமை கோரினால் நிர்வாகத் துறை பட்டாத் தர மறுக்கலாம். நீதிமன்றம் மூலம் உரிமை நிலைநாட்டப்படும்போது பட்டா கொடுத்தே ஆக வேண்டும்.

தற்போது ஒருவர் சட்டப்படியே நிலத்தை வாங்கி இருந்தும் தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய, நிலத்தின் மதிப்பைப் பொறுத்து கிராமங்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. பட்டா மாறுதல் செய்பவர் விவரமான ஆளாக இருந்தால் நூறு இருநூறில் வேலை முடிந்து விடும். அதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிறிது அலைய வேண்டியிருக்கும்.

பட்டா நிலம்

வெள்ளையர் காலத்திலேயே ஏறக்குறைய பெரும்பான்மை நிலத்தை அளந்து புல எண்கள் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் 1980களில் மறு அளவை செய்து புல எண்களும் பட்டாக்களும் வழங்கியுள்ளனர். ஆக புல எண் இல்லாமல் எந்தவொரு நிலமும் இருக்காது. அந்த நிலத்திற்கு ஒரு உரிமையாளர் இருந்து அது அரசாங்க பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது தனியாருக்குச் சொந்தமான நிலமாகும். அவரிடம் ஒருவர் அந்த நிலத்தை தானமாகவோ அல்லது விலை கொடுத்தோ வாங்கியிருந்தால் அந்த நிலத்தின் உரிமையாளராக அவர் பதிவு செய்யப்படுவார். இது பதிவுத் துறையில் செய்யப்படும் பதிவு ஆகும்.

பின்னர் அவர் நிர்வாகத் துறையான கிராம நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் மனுச் செய்து அந்த நிலத்திற்கான உரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவுத் துறையில் தனது உரிமையைப் பதிவு செய்த ஒருவர் ஏதாவது காரணத்தால் நிர்வாகத் துறையில் தனது உரிமைச் சான்றிதழைப் பெறாமல் இருந்து விடலாம். அப்போது அந்த நிலத்தின் உரிமைச் சான்றானது பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருக்கும். நிலம் விலைக்கு வாங்குவோர் குறைந்தது 30 ஆண்டுகாலம் வில்லங்கச் சான்று எடுத்துப் பார்த்துக் கொள்வது நலம்.

அதேபோல 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நில உரிமைப் பிரச்சனைகளில் உள்ள சிக்கல்களைப் போக்க நிலத்தை அனுபவிப்போருக்கு உரிமைச் சான்று (பட்டா) வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி பலரும் சட்டப்படி தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களுக்கு பட்டா வாங்கியுள்ளனர். பதிவுத் துறையில் பதிவு செய்த உரிமையாளர் அல்லது அவரது வாரிகள் கேள்வி எழுப்பாத வரை அவ்வாறு உரிமை பெற்ற ஒருவர் அந்த நிலத்தை தன் விருப்பப்படி அனுபவித்துக் கொள்ளலாம். வில்லங்கச் சான்றிதழ் எடுக்கும்போது அந்த நிலம் யார் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒத்தி, ஈடு எழுதி வாங்கினாலும் அதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நபருக்கும் பட்டா வைத்திருப்பவருக்கும் என்ன தொடர்பு? அந்த நிலம் அவரது கைக்கு எப்படி வந்தது என்பதை தெரிந்து கொண்டால் அந்த நிலத்தை வாங்குவதில் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

அவ்வாறு இல்லாது பட்டா வேறொருவர் வைத்திருக்க பதிவு செய்த உரிமையாளரின் வாரிசுகள் வந்து உரிமை கோரினால் பட்டா வைத்திருப்பவர் உரிமையை விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. 1987-ம் ஆண்டிலிருந்து பத்திரப் பதிவு கணிணி மயமாக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய பதிவுகளை ஊழியர்கள் பதிவேடுகளைத் தேடி சான்று வழங்கி வந்தார்கள். தற்போது 1967-ம் ஆண்டு முதலான பதிவுகள் கணிணியில் ஏற்றப்படுவதாக சொல்கிறார்கள். இவ்வாறு ஏற்றினால் நிலச்சிக்கல்கள் பெருகும் என்று பதிவு துறையில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். பல சொத்துக்களை காட்டி எழுதப்படும் உயில் சாசனங்கள் விலங்கச் சான்றில் இடம் பெறாமல் போகலாம்.

புறம்போக்கு நிலம்

இது இப்படி இருக்க புறம்போக்கு நிலம் என்றால் என்னவென்று பார்ப்போம். சாலைகளின் இருபுறமும் உள்ளதுதான் புறம்போக்கு நிலம். போக்குவரத்திற்கு புறமாக உள்ள நிலம். இது அல்லாமல் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், அணைகள், மலைகள், குன்றுகள் அருகேயும் புறம்போக்கு நிலங்கள் இருக்கும். இந்த நிலங்களுக்கு புல எண்கள் இருக்கும். இதில் ஆறு, ஏரி, கால்வாய், அணைகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் மலைகள், குன்றுகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் வருவாய் துறை, வனத்துறையின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

வருவாய் துறை, பொதுப்பணித்துறை நிலங்களை ஒருவர் அனுபவித்து வந்தால் அதற்கு தண்டத் தொகை வசூலிக்கப்படும். அந்தத் தொகையை செலுத்துவதற்கு வழங்கப்படும் ரசீதை 2சி பட்டா (தூசி பட்டா), பி மெமோ (பீமா) இது போன்ற ரசீதுகளை வைத்திருப்போர் புறம்போக்கு நிலத்தின் மீது உரிமை கோரி நீதிமன்றம் செல்லலாம். ஆனால் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அல்லது அரசுத் திட்டங்களுக்குத் தேவைப்படுவதாக இருந்தால் இந்த நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். பழங்குடியினர், மலைச் சாதியினர் போன்றோர் புறம்போக்கு நிலத்தில் வசித்தாலும் அவர்களுக்கு அந்த நிலத்திற்கு உரிமை வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளில் எனது நிலப் பிரச்சனைகளின் மூலமாக கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதியுள்ளேன். சட்ட வல்லுனர்கள் இன்னும் மேலான தகவல்களைத் தரலாம். (ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களே நில உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்)

Sunday, May 27, 2018

அடையாளம் காண வேண்டிய தலைவர்கள்


தமிழின விரோத கருத்துக்களால் பெரியார் என்ற ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் தமிழர்களுக்கு பெருந்தீங்கு செய்திருக்கிறார் என்பதை இன்று தமிழ் மக்கள் புரிந்து ஈவெராவை அடையாளம் கண்டுள்ளனர். அதுபோல அடையாளம் காண வேண்டிய கடந்த காலத் தலைவர்தான் காமராஜர். இவர் ஈவெராவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை.

இவர் தமிழ் மண்ணை அண்டை மாநிலங்கள் பறிப்பதை வேடிக்கை பார்த்தவர் ஆவார். அதுபற்றி கேட்டபோது
மேடாவது குளமாவது என்று எள்ளி நகையாடியவர் ஆவார். தமிழ் மொழியை அலட்சியப்படுத்தி இந்தியை கற்கவேண்டும் சொன்னவர் ஆவார். அதைவிட முக்கியமான விஷயம் தமிழினத்தின் முக்கிய இனக்குழுக்களான மறவர்-பள்ளர் இடையே பகைமை ஏற்பட காரணமாக இருந்தவர்.  அதுவே இன்று பட்டியல் சாதியினர் - முக்குலத்தோர் இடையேயான பகைமையாக மாறி நிற்கிறது. இவர் முதுகுளத்தூர் கலவரத்தை உருவாக்கி இந்தப் பகைமையை ஏற்படுத்தினார். முதுகுளத்தூர் கலவரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதாகக் கூறிக் கொண்டு மறவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதம் ஆகும். (அதற்கான பலனை அந்த ஆட்சியாளர்கள் பெற்றார்கள் என்பது வேறு விஷயம்). தமிழ் மக்கள் இதனை உணராமல் இந்தப் பகைமை போகாது. எனவே தமிழ் மக்கள் காமராஜரின் ஆட்சிகாலத்தை, செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசுவது, நாடார் - முக்குலத்தோர் இடையே பகைமையை ஏற்படுத்தும், எனவே காமராஜர் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையில் தமிழின நலன் என்று வரும்போது தமிழ் மக்கள் தங்கள் சொந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கி எறிவார்கள், தூக்கி எறிய வேண்டும். அந்த வகையில் நாடார் மக்களும் காமராஜரை அடையாளம் கண்டு அவ்வாறு செய்வார்கள் என்று நம்புவோம்.

ஈவெராவை அடையாளம் காணாமல் தமிழின மீட்சி எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே காமராஜரை அடையாளம் காணாமல் பட்டியல்சாதி மக்கள் மற்றும் முக்குலத்தோர் இடையேயான பகைமை போகாது.

முதன் முதலில் ஈவெரா பற்றிப் பேசியபோது நாயக்கர் மக்களின் பகைமையை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். இன்று ஈவெராவின் இரண்டகங்களை அவர்களும் புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். காமராஜர் விஷயத்திலும் அதுவே நடைபெறும். 

Friday, May 25, 2018

சாதியும் வகுப்பு பிரிவினையும்


இங்கே வகுப்பு பிரிவினை இல்லை, சாதிப் பிரிவினை மட்டுமே உள்ளது, அதனால் கம்யூனிஸம் என்பது இந்தியாவுக்குச் சம்பந்தம் இல்லாதது என்று என் நண்பர்கள் வாதம் செய்கிறார்கள்.
ஆனால் தூத்துக்குடி ஒரு பொதுவான எடுத்துக்காட்டாக உள்ளது. இங்கே கொல்லப்பட்டவர்களில் பாதிப்பேர் நாடார் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தச் சாதியில் பணக்காரர்கள் சொகுசு வாழ்க்கையும், ஏழை மக்கள் தலித்களைப் போல எளிய வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.
இதுவரை எந்தவொரு பணக்கார நாடாரும் கொல்லப்பட்ட ஏழை நாடார்களுக்காக குரல் கொடுக்க வில்லை. தமிழகத்தின் மிகப்பெரிய ஊடகமான தினத்தந்தி ஒரு நாடாருக்குச் சொந்தமானது. ஆனால் இது வெளிப்படையாக அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பணக்கார மாஃபியாவான விவி மினரல்ஸ் மனிதத் தன்மையைக் காட்டுவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒரேயொரு மத்திய அமைச்சர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். கொலைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அவர் மோதிக்கு வாக்களித்திருந்தால் இப்படி நடக்குமா என்று கேட்கிறார். தமிழக பாஜக தலைவியான தமிழிசையும் ஒரு நாடாராவார். அவர் அமைச்சரின் வாக்குமூலத்திற்கு ஆமாம்சாமி போடுகிறார்.
ஒரே சாதி, ஆனால் வேறுபட்ட வகுப்புக்கள். சாவுக்குப் பின்னரும் இந்த வகுப்பு வேறுபாடு நீடிக்கிறது.
பி.கு. - பணக்காரர்கள் நாடார்கள் என்றும் ஏழைகள் சாணார் என்றும், இந்த இரண்டு பிரிவினைகள் இன்னமும் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையில்லை.
-ஆங்கிலத்தில் எழுதியவர் #Andez Raj A Fernando

Wednesday, May 16, 2018

சாதியால் சாதித்தது என்ன???


தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள உணவகங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள பொட்டிக்கடைகளையும் உள்ளடக்கி வர்த்தகம் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,

தமிழ்நாட்டின் நிலங்கள் அனைத்தும் தமிழருடையது தான் என்றும், உழவர் சங்கத்தலைவர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,

அதுபோக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் அனைத்திலும் தமிழர் தலைமைதான் என்றிருந்தேன்,

இதுபோக இன்னும் விடுபட்டுள்ள அனைத்திலும் தமிழர்தான் ஆதிக்கத்தில் உள்ளனர் என்றிருந்தேன்,

இப்போதுதான் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது, எல்லாத்திலும் தமிழராக இருந்திருந்தும் பின்பு ஏன் ஈழம் சுடுகாடாகியது,தமிழ்நாடு ஆகிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது,

கேள்விக்கான விடையை தேடும்போது ஆதிக்கத்திலுள்ள ஒரு கருத்தியலின் சித்தாந்தம் இறுதியாக சாதியொளிப்பில் நின்றது,

எதற்காக இந்த சாதியொளிப்பு நாடகம் என ஆராய்ந்து ஆணிவேரை பிடித்திழுக்க முயன்றால், அவ்வேரை வலுவாக பிடித்திருந்தது தமிழரல்லாத வேற்றினச் சாதிகள்,

பிறகுதான் அரசியலையும், அரசியல் அதிமுக்கிய தலைகளின் பூர்வீகத்தையும், ஒவ்வொரு துறையிலும் ஊடுறுவியிருந்த வேற்றினச் சாதிகளையும் பலருடைய தேடலின் மூலம் அறிய நேரிட்டது,

ஒரு இனம் தன் தொன்மையை இழந்து நிற்கவேண்டும் என்பதற்காகவும், உடமை, உரிமை,ஆளுமை, அரியணையை தக்கவைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவும்,

மன்னராட்சி அநாகரிக கூட்டம் மொழியை கவசமாக்கி, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி, அதையும் இனமென்று பொய்யுரைத்து ஒரு தொன்மை வாய்ந்த இனத்தை காயடித்துக்கொண்டிருக்கிறது என்பதை,

இவ்வளவையும் அறிய புதைக்க நினைத்த சாதி எனப்படும் குடிவழியை தோண்டியெடுத்து அக்குவேர் ஆணிவேராக பிரித்து வகைப்படுத்த முடிந்தது,

யாருக்கு எப்படியோ, யாருக்கு எத்தனைக் கேள்விகள் எழுந்தாலும், தமிழ்நாட்டில் வாழ்வோரெல்லாம் தமிழரே என்ற பிம்பத்தை உடைத்தெறிய சாதி என்னும் குடிவழியை வைத்தே இனங்காண முடிந்தது,

இக்குடிவழியில்,வந்தவனாலும், உள்ளவனாலும் ஏற்பட்டுள்ள விரிசலை, காழ்ப்பை, பகையை,பொறாமையை, சுயநலத்தை களைய என்ன செய்ய வேண்டுமோ அதைமட்டும் ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும்.

இரா. வேல்முருகன்

Saturday, May 12, 2018

எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதன்



படத்தில் இருப்பவர் எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதன். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இவர் மதுரை மட்டுமல்லாமல் வடுகபட்டி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய ஊர்களில் எலும்பு வைத்தியம் செய்து வருகிறார்.

இவரது தாத்தா காலத்திலிருந்து இவர்கள் இந்தத் தொழிலைச் செய்து வகிறார்கள். இவரது தந்தைக்குப் பின் இவர் தனது வைத்திய சேவையை தொடர்கிறார். பொதுவாக இவர்களின் வைத்திய முறை நமது பாரம்பரிய வைத்திய முறையாகும். எலும்பு முறிவுகளுக்கு கட்டுப் போட்டு மருந்து கொடுப்பார்கள்.

ஆங்கில வைத்தியம் என்பது உடலைக் கிழித்துச் செய்வது. நமது பாரம்பரிய வைத்தியம் வெளிப்புறம் இருந்தே சிகிச்சை அளிப்பது. ஆங்கில வைத்தியர்கள் எலும்பு முறிவை எக்ஸ்ரே எடுத்து அதன் அடிப்படையில் கட்டுப் போடுதல், அறுவைச் சிகிச்சை செய்தல், முறிந்த எலும்புகளை போல்ட்-நட் போட்டு இணைத்தல் போன்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் ஆங்கில வைத்திய முறையை சிகிச்சை என்று சொல்வதை விட சித்ரவதை என்றே சொல்லலாம். இது போன்ற இணைப்புகளால் அந்த உறுப்புகள் இணைக்கப்பட்டிருக்குமே தவிர செயலற்றதாக இருக்கும். ஆனால் பாரம்பரிய வைத்திய முறையில் அந்த உறுப்பு மீண்டும் இயங்கத் தொடங்கும்.

அப்படி பலரும் தங்கள் எலும்பு முறிவுகளை ஆங்கில வைத்திய முறையில் சரி செய்ய முடியாமல் பெரும் பணத்தை இழந்து இவரிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதைக் காணலாம். பாரம்பரிய வைத்திய முறையில் வைத்தியத்திற்காக சிறிதளவு செலவு செய்தாலே போதுமானது.

ஒருநாள் காலையில் எழும்போது என் மனைவியால் நிமிர முடியவில்லை கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே நாங்கள் வழக்கமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆங்கில வைத்தியரிடம் காட்டினோம். சோதனை செய்த மருத்துவர் முதுகெலும்பு டிஸ்க் லேசாக விலகியுள்ளது. மூன்று நாட்கள் ஊசி போட்டால் சரியாகிவிடும். பின்னர் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதன்படி தினமும் 2 ஊசி என்ற கணக்கில் 3 நாட்கள் தொடர்ந்து ஊசி போட்டுக் கொண்டோம் வலி குறைந்தாலும் நிற்கவில்லை. பெல்ட் போட்டுக் கொள்ளச் சொன்னார். பெல்ட் போட்டும் பலனில்லை.

அதுபற்றி சொன்னதும் இனி எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். எந்த வழியிலும் அது விரும்பத் தகாத ஒன்றாகவே இருக்கும் என்பதை உணர்ந்தோம். இது பற்றி நண்பர்கள் சிலரிடம் விசாரித்தபோது எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதனைப் பற்றிச் சொன்னார்கள். அவர்கள் சனிக்கிழமை தோறும் எங்கள் ஊரின் அருகேயுள்ள வடுகபட்டி, பெரியகுளத்திற்கு வந்து சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது.

அவரைச் சந்தித்து ஆங்கில வைத்தியர் சொன்ன தகவலைச் சொன்னோம். முதுகெலும்பு விலகி இருந்தால் உங்களால் நகரக் கூட முடியாது என்று சொன்ன அவர் முதுகு சவ்வு விலகி இருக்கிறது. வாரம் ஒருமுறை கட்டுப் போட வேண்டும். 3 முறை கட்டுப்போட்டால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதன்படி அவர் கட்டுப் போட்டு மருந்துகளைக் கொடுத்து  அனுப்பினார். சரியாக ஒரு மாத காலத்திற்குள் சரியாகி விட்டது.

இவ்வாறு கட்டுப் போடச் சென்றபோது பனை மரத்தில் இருந்து விழுந்து கை எலும்பை முறித்துக் கொண்ட ஒருவர் சிகிச்சைக்காக வருவதை பார்க்க முடிந்தது. அவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து ஓரிரு லட்சங்களை இழந்திருந்தார்.

முறிந்த எலும்பில் நான்கு துளைகளைப் போட்டு எலும்புகளை இணைக்க முயன்றிருந்தார்கள். அதற்கான எக்ஸ்ரேக்கள் அவரிடம் இருந்தன. எலும்பு இணைக்கப்பட்டிருந்தது ஆனால் கை செயலற்று இருந்தது. அதைப் பார்த்த வைத்தியர் கையை சரி செய்து விடலாம் என்று சொல்லி கட்டுப்போடும் வேலையைத் துவங்கினார். இன்று வைத்தியரைச் சந்தித்த போது அந்த நபர் தேறி வருவதாகச் சொன்னார்.

எலும்பு தொடர்பான சிறு  வலி, முதல் முறிவு வரை இவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை செய்து கொள்ளலாம். எலும்பு வைத்தியம் முக்கியமாக இருந்தாலும் இவர் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார். மதுரை, தேனி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இவரை அணுகலாம். வைத்தியரின் தொடர்பு எண் 99426 47440

Friday, April 13, 2018

தமிழ்க் குலத்தின் தனிப்பெருந் திருநாள்




தமிழ் மக்களுக்கு வரப்போகும் தைப்பொங்கல் புதிய ஆண்டும் புதிய சகாப்தமும் ஆகும். நீண்ட காலம் தொட்டு தமிழ் மரபு தைப் பொங்கலைத்தான் புத்தாண்டாக வைத்துக் கொண்டாடி வந்தது. இடையில் ஏற்பட்ட மாற்றம்தான் மேஷ ராசியில் சூரியன் புகும்போது அதாவது சித்திரை மாதத்தைப் புது ஆண்டாகக் கொண்டாடிய பழக்கம்.

இன்றைய தமிழ் நாடு கலை, மொழி, மதம், அரசியல் தலைமை இத்தனையிலும் சீரழிந்து சின்னாபின்னப்பட்டு நிற்கிறது. இந்த நிலை நீடிக்காது. சீக்கிரம் மாற்றமும் மாண்பும் ஏற்படப் போகிறது.

தமிழர்கள் தமிழ் பாஷைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேகமாகப் பேசுகிறதோடு, ‘தமிழ்ப் பண்பு ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டது என்று பறைசாற்றுகிறதோடு, தமிழனை நாஸ்திகப் பாதைக்கு இழுத்துச் சென்று இழிவுபடுத்துகிற நிலைமைக்கு முனைந்து நிற்கிறார்கள். முழு மூச்சாகவும் பாடுபடுகிறார்கள். இது இந்தியாவின் தேசீயம் வேகமாகப் பேசிய நபர்களால் மறைமுகமாக காமன்வெல்த் உறவிற்கு இழுத்துச் சென்ற கதைபோல, தமிழை முன்னேற்ற நினைக்கும் கூட்டம் தமிழனை இழிவுபடுத்திய நாசத்தன்மையாகும்.

ஆலய வணக்கம், பூஜை வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை இவை எல்லாம் ஆரியர் கூற்று என்று சொல்லப்படுகிறது சீர்திருத்தவாதிகளால். ஆரியரென்பர் சரித்திரப்படி இந்தியாவில் நுழைந்த காலம் கிட்டத்தட்ட 3500 வருஷங்களாகும். தமிழ் மன்னன், தமிழ்ச் சங்கம், தமிழ்க் கலை, தமிழ் சித்திரம் வாழ்ந்த காலம் பல வருஷங்களுக்கு முன்பே இருந்தாகும்.

இன்றைக்கு, இந்து மகாசமுத்திரமாகக் கிடக்கின்ற நீர்ப் பரப்பு நிலமாக இருந்த காலத்தில் மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கா ஓரமுள்ள தீவை மேற்கு எல்லையாகவும், ஆஸ்திரேலியக் கண்டத்தை கிழக்கு எல்லையாகவும் வைத்துப் பரந்து கிடந்ததொரு பூமிப் பரப்பு. அதற்குப் பெயர் லெமோரியாக் கண்டம். அதுதான் ஆதி பூகோளம், அப்பொழுது விந்தியா- சார்ப்பூரா என்ற மலைகள் இந்தியாவின் வட எல்லையாக இருந்தன. அதற்கு வடக்கிலுள்ள ஐக்கிய மாகாணம், பஞ்சாப், காஷ்மீரம், நேபாளம், இமயமலை, ரஷ்யாவின் தென்பகுதி இவைகளெல்லாம் நீர்ப்பரப்பாக சமுத்திரத்திற்குள் கிடந்தன.

அக்காலத்திலேயே சங்கம் சிற்றகத்தியம்’, பேரகத்தியம் என்னும் பெருநூலை ஆதாரமாகக் கொண்டு அழகாக அமைந்து நின்ற ஒரு பழம் பெருமை ஆராய்ச்சிகாரர்களுக்கும், சங்க நூலை படித்தவர்களுக்கும் தெரியாமற் போகாது. இதை ஆங்கிலேயனும் லாஸ்ட் ஆஃப் லெமோரியா என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறான். சீர்திருத்தவாதி வாங்கிப் படிக்கவும்.

அகஸ்தியார் மாணாக்கர் பலருள் ஒருவரான தொல்காப்பியரைக் கொண்டு இலக்கணப் பாதையில் நின்ற காலம். அதற்குப் பிற்பட்டது பாண்டிய நாட்டின் தமிழ் எல்லையை - மதுரையைத் தலைமையாக வைத்து கடைச் சங்கம் அமைத்து, கடைசியில் நக்கீரரைத் தலைவராக வைத்து வாழ்ந்து, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் அழிந்த காலம்.
முதல் சங்கம், இடைச் சங்கம், பாண்டியன் காலமே. இந்தப் பண்டைய தமிழ்நாட்டை - சர்வ நூலும் கண்ட ஒரு தமிழ் பாஷையை அவர்கள் கையாண்ட பழக்க வழக்கத்தை - மதத்தை - வழிபாட்டை - தெய்வீக வாழ்க்கையை சிதறடிப்பது, சீர் குலைப்பது தமிழுக்குப் பாடுபடுவதாகாது. இதில் தமிழர்கள் உஷாராக வாழ்ந்து தமிழன் என்ற மானத்தோடு தலைநிமிர்ந்து நடக்கத் தமிழன்னை வருகிற புத்தாண்டில் புத்துணர்ச்சி அளிப்பாளாக

வாழ்க தமிழ்த்தாய்!
வளர்க தமிழ்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கண்ணகி இதழில் 17.01.1960-ல் எழுதிய கட்டுரை

Thursday, March 15, 2018

திராவிடத்தை தூக்கி எறிந்த தினகரன்


தினகரனின் புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். மேடையில் அவருக்கு தமிழ்க் கடவுளான முருகனின்ன சின்னமான வேல் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் அவர் திராவிடத்தை விட்டு விலகி விட்டதைக் காட்டுகிறது.

கொடியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளார். கொடியில் இனப்பகை ஈவெராவின் படமோ, திராவிட நாடு பற்றி பேசிப் பின்னர் அதைக் கைவிட்ட அண்ணாவின் படமோ இருப்பதை விட ஜெயலலிதாவின் படம் இருப்பது ஒன்றும் பெரிய குறை அல்ல.

நான் ஏற்கனவே சொன்னது போல தினகரன்தான் அடுத்த அதிமுகவின் தலைவர் என்பதை பாஜக தனது சொந்த செலவில் விளம்பரம் செய்தது. அதுவே அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் விரும்பும் தலைவராக தினகரனை மாற்றியுள்ளது.

இந்த நிலையில் அவர் அடுத்த முதல்வராகவும் தமிழர்களின் சிறந்த ஆளுமையாகவும் ஆக அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. எனவேதான், தமிழ்த் தேசியம் பேசக் கூடிய என்னைப் போன்றோர் தினகரன் உண்மையிலேயே தமிழர்களுக்கான ஒரு தலைவராக வரவேண்டும் என்று விரும்புகிறோம். அதேவேளையில் அதிமுகவின் அடுத்த தலைவராக மாறும் அவர் திராவிடத்தை உதறித் தள்ள அவருக்குள்ள சிக்கல்களையும், அதை அவர் எப்படி
சமாளிப்பார் அல்லது ஊடக, பொதுப் புத்திகளைக் கடந்து அவர் அதைச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு இருந்தது.

ஆனால் இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் குக்கர் சின்னத்தில் பெற்ற மாபெரும் வெற்றி அவரை திராவிடத்தை தூக்கி எறியும் துணிச்சல் மிக்க மனிதராக மாற்றியுள்ளது என்று கருதுகிறேன். அதேபோல மத்திய ஆளும் பாஜகவிற்கு எழுதித் தராத அடிமைகளாக உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ்களை மக்கள் தூக்கி எறிந்தார்கள். இந்த நிலையில் தினகரன் மத்திய அரசுக்கு, தேசிய கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதுவே தமிழ்த் தேசிய அரசியலாகும்.

எனவேதான் என்னைப் போன்ற உண்மையான தமிழத் தேசியவாதிகள் தினகரனை கூர்மையாக கவனித்து அவரது அரசியல் நகர்வுகளை கணித்து வருகிறோம். எங்களது நோக்கம் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து பாதுகாப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே.

அதிமுக கட்சியிலிருந்து தினகரன் ஆதரவாளராக மாறியுள்ளவர்கள் தினகரன் திராவிடத்தை தூக்கி எறிந்து விட்டார் என்ற கருத்தை கிண்டல் செய்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தினகரன் திராவிடப் பாதையில் பயணித்தால் தமிழர்கள் அவரையும் தூக்கி எறிவார்கள் என்பதை காலம் சொல்லும். இல்லாவிட்டால் அவர் தமிழர் தலைவர் என்று கொண்டாடப்படுவார்.

Wednesday, March 14, 2018

(தமிழ் ராணுவம்) தென்னிந்தியா மற்றும் இலங்கையில் தோற்றமும் பரவலும் - பகுதி 1


பகுதி 1 - (தமிழ் ராணுவம்) தென்னிந்தியா மற்றும் இலங்கையில்  தோற்றமும் பரவலும்

தமிழ் ராணுவம் பற்றி  - டி. சிவராம்

அறிமுகம்

தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் தமிழ்தேசியத்தைப் பொறுத்தவரை அது இரண்டு வகை கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளால் ஆனவை என்று சொல்லலாம். ஒன்று தமிழின் தனித்தன்மை, ஒப்பற்ற தன்மை மற்றும் கலாச்சாரம். மற்றொன்று ராணுவ ஒழுக்கம் மற்றும் கருத்துக்களை புகழும் தமிழ் பாரம்பரியங்கள். இந்த கருத்துக்களும் நம்பிக்கைகளும் 1950 மற்றும் 1960-களில் தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மற்றும் பிரிவினை போரட்டங்களில் ஆதிக்கம் செலுத்தின. 1956-க்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மொழி உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி பற்றி அதிகம் பேசப்பட்டது.

எல்டிடிஈயின் தேசியமும் இந்த இரண்டு கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே பேசப்பட்டது. ஆனால் ராணுவத்தில், ராணுவ ஒழுக்கம் மற்றும் கருத்துக்களை புகழும்தன்மை முதன்மையானதாக இருந்தது. அதுவே துவக்கத்தில் எல்டிடிஈயின் தமிழ்த் தேசிய கட்டமைப்பை வடிவமைப்பதாக இருந்தது. புலிகளின் நோக்கம் தற்கால ராணுவத்தை கட்டமைப்பது என்று  சொல்லப்பட்டது. (1) திறமையான மற்றும் நவீன ராணுவ அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ராணுவ கருத்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எல்டிடிஈ தனது ராணுவ அதிகாரிகளிடையே வழக்கமான தற்கால ஒழுக்க முறைகள், அமைப்பு மற்றும் பயிற்சிக்கு கூடுதலாக இந்தக் கருத்தை விதைத்தது. இந்தக் கருத்தை தமிழ் மக்களிடையேயும் பரப்புரை செய்தது. இதுவே கடுமையான, தொடர்ச்சியான  சண்டையிடும் ராணுவத்தை உருவாக்குவதற்கான சக்தி வாய்ந்த பண்டைக்கால ராணுவ பாராம்பரியத்தின் பகுதியாகும்.

புலிச் சின்னம் இந்தப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான வெளிப்பாடாக என்று கருதப்பட்டது.

பிரபாகரன் தமிழீழத்தின் தேசியச் சின்னமாக புலியை தேர்ந்தெடுக்க காரணம் உள்ளது. புலிச் சின்னம் திராவிட நாகரீகத்தில் ஊறியது. அது தமிழர்களின் ராணுவ வரலாறு (வீரவரலாறு) மற்றும் தேசிய எழுச்சியை காட்டும் சின்னமாக உள்ளதுநமது தேசியக் கொடி, உருவாக்கப்பட உள்ள சுதந்திரமான தமிழீழத்தின் சின்னமாகும். அது தமிழர்களின் ராணுவ பரம்பரையில் (வீர மரபுகள்) வேர்விட்டது.” (2)

 “திராவிட நாகரீகம்மற்றும் தமிழர் பாரம்பரியத்தில்தான் ராணுவம் வேர்விட்டது என்று எவ்வாறு எல்டிடிஈ-யால் வரையறுக்க முடிந்தது? இலங்கைத் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தில் ஈடுபாடு காட்டி, அதன் மூலமே அவர்களால் கல்வி, அரசாங்க வேலைகள், வர்த்தகம் மற்றும் விவசாயத்தில் எவ்வாறு ஈடுபாடு காட்ட முடிந்தது? உண்மையில் தமிழ் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் இதுபோன்ற சமூக முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகத்தான் தமிழ்த் தீவிரவாதம் உருவானது என்று கூறினார்கள். தமிழ் ராணுவம் ஆராயப்படாத ஒன்றாக இருந்து, அதுவே தமிழ்க் கலாச்சாரம் மற்றும் தேசியத்தின் முக்கியமான அம்சமாக இருந்த காரணத்தால்தான் எல்டிடிஈ-யின் தமிழர் அடையாளத்திற்கான ராணுவ வரையறை சாத்தியமானது.

எனவேஇந்த ஆய்வு கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் தமிழர்களின் அரசியலை ஆராய்வதை நோக்கமாக கொண்டதாக உள்ளது

) தமிழ் ராணுவம் என்றால் என்ன?

பி) தென்னிந்திய மற்றும் இலங்கை மக்களின் சமூக மற்றும் அரசியல் நிலை மற்றும் அதன் பரவல் என்ன?

தென்னிந்தியாவில் பிராமணர்கள் அல்லாத தலைவர்களின் ஆங்கிலேய ஆதரவு பிராந்திய அரசியலைப் பொறுத்தவரை, பிராமணர் - பிராமணர் அல்லாதவர்களைப் பொறுத்தவரை திராவிடர் இயக்கம் முதலில் (3) தனித் தமிழ் மற்றும் சுயமரியாதை இயக்கங்கள், மொழிவாரி தேசியம் மற்றும் பிரிவினைவாத்தை (4) ஆய்வு செய்தது

ஆனால் தமிழ்த் தேசியத்தின் முக்கியமான மற்றொரு உட்பொருள் - ராணுவம் ஆகும். ஆனால் திராவிட இயக்கங்களின் ஆய்வுகளில் இது இடம்பெறவில்லை. (5) இது திராவிட ஆய்வுகளில், தமிழ் கலாச்சாரம் மற்றும் சமுதாயக் கருத்துக்களை வடிவமைத்த வரலாற்று பாரம்பரியத்தின் ஆதிக்கத்திற்காக தன் பங்கிற்கு வேலை செய்தது. தமிழ் மக்கள் அமைதியானவர்கள் மற்றும் போரை விரும்பாதவர்கள் என்று தமிழர்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் காட்டியதிலிருந்து துவக்க கட்ட திராவிடக் கருத்து உருவானது.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலை அடிகள் ஆங்கிலத்தில், “கிமு 1500 ஆண்டு காலத்தில் படைக்கப்பட்ட பண்டைத் தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து பண்டை தமிழர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது, மிகவும் அமைதியான உயர் நாகரீகம் கொண்ட சமுதாயமாக பார்க்கிறோம். ஆனால், தமிழ் அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதையும் பார்க்கிறோம். தமிழ் மக்களின் அமைதியான வாழ்க்கை மற்றும் உயர் நாகரீகம் ஆகியவை காரணமாகவே தமிழ் இன்றும் கன்னித் தமிழ் என்ற பெருமையுடன் இருந்து வருகிறதுஎன்று எழுதுகிறார். (6)

மறைமலை அடிகளின் கருத்துக்கள் துவக்ககால திராவிட இயக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. துவக்க கால திராவிட தமிழ் ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் தமிழ்த் தேசியத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது மிகக் குறைவே, அது தற்போதைய தமிழர்களின்தொடர் அமைதி மற்றும் உயர் நாகரீகத்தை குறிப்பதாகவே உள்ளது”  என்பதை நாம் காணலாம்.

இதுதான் திராவிட இயக்கத்தை நிறுவியவர்களின் கருத்தாக இருந்தால், தமிழ் ராணுவத்தின்பிறப்பிடத்தைஎப்படிக் கண்டறிவது? பொதுவாக இந்தியாவின் தற்கால ராணுவத்தில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் - தென்னிந்தியாவுக்கான ஒரே படைப்பிரிவு மெட்ராஸ் ரெஜிமென்ட் மட்டுமே. தமிழ் ராணுவத்தின் துவக்கம் இந்திய ராணுவம் மற்றும் சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டதாகும்.

இந்திய ராணுவத்தில் உள்ள வடஇந்தியர்களின் ஆதிக்கம், துணைக்கண்டத்தில் வடக்குப் பகுதிகளில் உள்ள சமுதாய மற்றும் அரசியல் பரிணாமத்தின் முக்கிய பகுதியாக மட்டுமே இந்திய ராணுவத்தை ஆய்வு செய்ய வழிவகுத்தது. எங்கும் வட இந்திய ராணுவச் சாதிகளின்  எழுச்சி மட்டுமே திறமையாக ஆராயப்பட்டது. (7) தற்கால ராணுவத்தில்  பாரம்பரியமாக ராணுவச் சேவை செய்த இன, மத மற்றும் சாதிக் குழுக்களே சிறந்த போர்வீரர்களாக இருப்பார்கள் என்ற கருத்தே இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்கு கித்தது.

ராணுவ இனங்கள் என்ற கருத்தே 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயே ஆட்சேர்க்கை கொள்கையில் பரவலாக காணப்பட்டது. இது ராணுவ வட இந்தியா - ராணுவமல்லாத தென்னிந்தியா என்று இந்திய மக்களைப் பற்றிய தற்கால கருத்து உருவாக்குவதற்கான வழிமுறையாக அமைந்தது. இவ்வாறு இந்திய ராணுவத்தில்(8) ராணுவ பாரம்பரியமுள்ளவர்களை சேர்ப்பது பற்றி இந்திய அரசாங்கத்தால் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய ராணுவத்தில் ராணுவ பாரம்பரியம் பற்றி ஆய்வு செய்யும்போது அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு சாதியோ அல்லது பிரிவோ கூட கிடையாது. (9) சுதந்திர இந்திய ராணுவத்தின்ராணுவ இனங்களாக’  சீக்கியர், ராஜ்புத்கள், ஜாட்கள், கூர்க்கர்கள், மராத்தியர்கள், பஞ்சாபிகள், டோக்ராக்கள், கர்வாலிகள், மஹர்கள் மற்றும் கோமானிசாரே ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வட இந்திய சாதிகள் மற்றும் பிரிவினரே. இந்திய ராணுவத்தின் வரலாற்றில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தக் காரணமான முக்கிய போர்களில் தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் போன்ற தென்னிந்திய இனங்கள் தங்களின் வீரத்தைக் காட்டியதை நாம் காண முடிகிறது. (10)

இந்திய ராணுவத்தில் தென்னிந்தியர்களின் குறைவுக்கு காரணமாக இரண்டு கட்டங்கள் உள்ளன.  பொதுவாக வட இந்தியாவில் மற்றும் குறிப்பாக வடமேற்கு துணைக்கண்டத்தில்ராணுவ சாதிகளில்ஆட்சேர்ப்பு நடத்தியதில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக அமைந்ததுஇதனை இந்திய ராணுவத்தை பஞ்சாபியர் மயமாக்குதல் என்று ஸ்டீபன் கோஹென் சொல்கிறார். (11)

முதல் கட்டத்தில் 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தின் அடிப்படையில் 1859-ம் ஆண்டின் பீல் கமிஷன் மற்றும் 1879-ம் ஆண்டின் ஈடன் கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிரித்தாளும் கொள்கையின்படி  ஒவ்வொரு பகுதியையும் அடிப்படையாகக் கொண்டு சேவை மற்றும் ஆட்சேர்ப்பு வரையறுக்கப்பட்ட. பெங்கால் ராணுவத்தில் மிகவும் ஆட்குறைப்புச் செய்யப்பட்டது. பிராமணர்கள் மற்றும் உயர் சாதி இந்துக்கள் பெருமளவு நீக்கம் செய்யப்பட்டார்கள். சிப்பாய்களுக்கான ஆக்கப்பூர்வமான சேவை தங்களது சொந்த மாகாணத்திற்கானதாக மட்டுமே சுருக்கப்பட்டது. மேலும் பம்பாய் மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் பெரிதாக உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவை ராணுவத்திற்கான தங்குமிடங்களாகவே பயன்பட்டன. இந்தப் பகுதியிலான மக்களின் போராடும் தரம் சீர்கெட்டுவிட்டது என்று கூறி இவ்வாறு செய்யப்பட்டது. பம்பாய் மற்றும் மெட்ராஸ் ராணுவங்களில் ஆட்குறைப்பு பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இரண்டாவது கட்டத்தில், 1885-ல் ஆங்கில அரசுக்கு வடமேற்குப் பகுதியில் ரஷ்ய அரசால் ஏற்பட்ட அச்சுறுத்தல், அதைத் தொடர்ந்து 1887-1889 பர்மிய   போர்மிகவும் நம்பகமான ராணுவ தன்மை கொண்ட இனங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்களின்  தேவையை உருவாக்கியது. (12) இதன் காரணமாக பகுதிவாரியான பிரித்தாளும் கொள்கை கைவிடப்பட்டு ஏராளமான போர்கள் நடைபெற்ற பகுதியான வடமேற்குப் பகுதியிலிருந்து பரவலாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது. ராணுவ ஆட்தேவையை உறுதி செய்ய இந்த மக்களுக்கு விசேஷ சமூக மற்றும் பொருளாதார முன்னுரிமைகள் வழங்கப்பட்டன. “அவர்களின் விசுவாசத்தை பாதுகாக்க, அவர்களின் ராணுவ ஆர்வத்தை பாதுகாக்க மற்றும் அவர்களின் கௌரவத்தை அதிகரிக்க, காலனி அரசாங்கம் வடக்குப் பகுதியில் அனைத்து முயற்சிகளையும் செய்தது.” இவ்வாறு இந்திய ராணுவத்தில் ராஜ்புத்கள், சீக்கியர்கள், ஜாட்கள், பஞ்சாபி முஸ்லீம்கள் மற்றும் கூர்க்கர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. ராணுவ இனக் கொள்கை என்ற இந்த கருத்தின் செயல்முறை 19-ம் நூற்றாண்டின்அறிவியல்உபகரணங்களுடன் இந்தியாவின் மக்கள் மற்றும் பகுதிகள் பற்றி தற்கால கருத்தாக்கம் உருவாக பெருமளவு காரணமாக அமைந்துள்ளது. அது ஏன் இந்தியர்களின் சில பிரிவினர் (அளவுக்கதிகமாக சேர்க்கப்பட்டவர்கள்) ராணுவ சாதிகளாக இருந்தனர் மற்றவர்கள் (பெருமளவு நீக்கப்பட்டவர்கள்) அவ்வாறு இல்லை என்பதை நிரூபிக்க விரும்புவதாக உள்ளது.

அடிக்குறிப்புகள்

(1) ‘விடுதலைப்புலிகள்’ (எல்டிடிஈயின் அதிகாரப்பூர்வமான இதழ்), ஏப்ரல்-மே 1991, தலையங்கம்
(2) விடுதலைப் புலிகள், புலிச் சின்னம் பற்றிய கட்டுரை, பக்கம் 3, பிப்ரவரி-மார்ச் 1991. புலிச் சின்னம் கொண்ட கொடி தமிழீழத்தின் தேசியக் கொடியாக 1990 நவம்பர் 27 மாவீரர் தினத்தில் அறிவிக்கப்பட்டது.
(3) பேக்கர், சி.ஜே. 1976: தென்னிந்தியாவின் அரசியல்(1920-1937). விகாஸ், டெல்லி, இர்ஷக், யூஜின் எஃப் 1969: தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் சமூக மோதல்கள், பெர்க்லி, கலிஃபோர்னியா.
(4) சிவதம்பி. கே : இலக்கிய முறையில் அரசியல், சமூக விஞ்ஞானி, எண் 68, மார்ச் 1978.
(5) இது மற்றொரு சூழலில் குறிப்பிடப்பட்டது, “...(திமுகவின்) அனைத்து செயல்களும் நடவடிக்கைகளும் போர்வீரர்கள் போருக்குப் புறப்படுவதைப் போல இருந்தது. இந்திக்கு எதிரான போராட்டங்கள் புறாநனூற்று போர்கள் போல இருந்தன...” சி.எஸ்.லக்ஷ்மி:தமிழ் நாட்டில் தாய்-தாய் சமுதாயம் மற்றும் தாய்-அரசியல்’, பொருளாதாரம் மற்றும் அரசியல் வாராந்திரி, அக்டோபர் 20-29, 1990.
(6) மறைமலை அடிகள்: பக்கம் 34-35, சிந்தனைக் கட்டுரைகள், முதல் பதிப்பின் ஆங்கில முன்னுரை, கழகம், 1961.
(7) ஸ்டீபன் பி. கோஹன்: தி இண்டியன் ஆர்மி- இட்ஸ் கான்ட்ரிபியூஷன் டூ த டெவலப்மென்ட் ஆஃப் ஏ நேஷன், ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், புதுடெல்லி, 1990. மறுபதிப்பு. முதல் பதிப்பு 1971-ல் வெளியிடப்பட்டது. “இந்த புத்தகம் வெளியிடப்பட்ட பின்னர் 18 ஆண்டுகளில் இதுபோலவோ அல்லது இதற்கு மாறாகவோ வேறு எந்த ஆய்வும் செய்யப்படவில்லை.” மறுபதிப்பின் அறிமுகம், 11.
(8) தரம்பால்: டிரேடிஷன்ஸ் ஆஃப் த இண்டியன் ஆர்மி, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், இந்திய அரசாங்கம், 1961. தேசிய புத்தக அறக்கட்டளை, டெல்லி.
(9) இந்திய ராணுவத்தில் உள்ள பனிரெண்டுவீரப் பாரம்பரியங்கள்முதல் பகுதியைச் சேர்ந்தவை. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரே ராணுவ பிரிவு  மதராஸி. இது மெட்ராஸ் படைப்பிரிவுக்கான ஒரு உருவமற்ற சொல்லாகும். இது பாரசூட் படைப்பிரிவைப் போல முழுவதும் கலப்பு படைப் பிரிவாகும். இதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தகுதி படைத்த வீரரும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மற்ற வீரப் பராம்பரியங்களில் வட இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட இனம், சாதி, மதம் அல்லது பிராந்தியக் குழுக்களை குறிக்கராஜ்புத் வீரர், சீக்கிய வீரர்என்று அழைக்கப்படுகிறார்கள்.
(10) மெட்ராஸ் இன்ஃபேன்டரி, 1748-1943. லெப்டினென்ட் கர்னல் எட்வர்ட் கிவ்ன் பைதியன்-ஆதம்ஸ், மெட்ராஸ் அரசாங்க அச்சகம், 1943. ஹிஸ்டரி ஆஃப் மெட்ராஸ் ஆர்மி, லெப்டினென்ட் கர்னல். டபிள்யூ.ஜே.வில்சன், மெட்ராஸ் அரசாங்க அச்சகம், 5 வால்யூம்கள், 1882-89.
(11)  ஸ்டீபன் பி. கோஹன்: ஓபி.சிட், அத்தியாயம் 2
(12) மெட்ராஸ் மாகாணத்திற்காக ஆட்சேர்ப்பு நடத்த அறிவுறுத்தும்போது பயன்படுத்தும் வாக்கியம்.
(13) டேவிட் வாஷ்ப்ரூக்: தெற்கு ஆசியா, தி வோர்ல்டு சிஸ்டம் அண்ட் கேபிடாலிஸம், ஜர்னல் ஆஃப் ஆசியன் ஸ்டடீஸ், 49, எண் 3 (ஆகஸ்டு 1990), பக்கம் 480.

http://tamilnation.co/forum/sivaram/920501lg.htm


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...