1. தமிழருக்கான மதச் சட்டம்
மதம் என்பது ஒரு முக்கியமான சமுதாய அமைப்பாக
உள்ளது. உலகில் மனிதன் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே மதங்கள் உருவாக்கப்பட்டன.
அவை மனித குலம் மேம்பட பல்வேறு கருத்துக்களைச் சொல்லியுள்ளன.
ஆனால் காலம் செல்லச் செல்ல அதில் பல திரிபுகள்,
பிரிவுகள் ஏற்பட்டன. எனவே மதங்களின் பெயரால் விரும்பத்தகாத செயல்களும், பல அழிவுகளும்
நடந்தேறின. எனவே மதத்தில் எந்த அளவு சிறப்புக்கள் உள்ளனவோ அந்த அளவுக்கு கேடுகளும்
உள்ளன.
எனவே மதத்தை முறைப்படுத்துவது அவசியமாகிறது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மதச் சட்டங்களைக் கொண்டுள்ளன. ஒருசில நாடுகள் தங்களுக்கென ஏதாவது
ஒரு மதத்தை தழுவியுள்ளன. அவ்வாறு இருக்கும்போது அந்த மதத்தின் கொள்கைகள் அந்த நாட்டு
மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அங்கு வாழும் மாற்று மதத்தவர் அல்லது சிறுபான்மை
மதத்தவர் அந்த கொள்கையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மதம், மதமாற்றம், மதப் பிரச்சாரம்
போன்றவற்றைப் பற்றி தெளிவான கருத்துக்களும் சட்டங்களும் இருப்பது அவசியமாகிறது. தமிழர்கள்
இந்த விஷயத்தில் தங்களுக்கென ஒரு கொள்கை, சட்டத்தை இயற்றிக் கொள்வது நல்லது.
அந்த வகையில் இந்த மதமாற்றச் சட்ட வரைவை
எழுதுகிறேன்.
எந்த ஒரு நாடுமே மதச் சட்டங்களை பின்பற்றக்
கூடாது. ஆனால் மத நம்பிக்கைகளைப் பொறுத்து சில விலக்குகளை அளிக்க வேண்டும். அந்த விலக்குகளும்
ஒட்டுமொத்த சமுதாய நலனை கருத்தில் கொண்டவையாக இருக்க வேண்டுமே தவிர அந்த மதத்தினர்
அதை தவறாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கக் கூடாது.
மதங்களின் அடிப்படை நோக்கம் நாட்டு நலன்,
பல சமுதாயங்களின் கூட்டு நலன், ஒரு சமுதாயத்தின் நலன், குடும்ப நலன், தனிநபர் நலன்களை
சார்ந்து அவற்றை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நிலையில் இந்த நலன்கள்
பாதிக்கப்பட்டால் அந்த இடத்தில் மதத்தின் தேவை தோல்வியுற்றது என்று கருத்தில் கொண்டு
அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1.1 மதச் சுதந்திரம்
பண்டைத் தமிழரின் வாழக்கை முறை மதச் சுதந்திரத்தை
அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. தமிழர்கள் பொதுவாக மதப்பிரிவுகளை, மதக் கருத்துக்களை,
மாற்று மதக் கருத்துக்களை ஏற்பவர்களாக, மதச் சஹிப்புத்தன்மை கொண்டவர்களாகவே இருந்து
வந்துள்ளனர், இருந்து வருகின்றனர். எனவே அவர்கள் தொடர்ந்து மதச் சுதந்திரத்தை பின்பற்றுவதே
நல்லது.
ஆனால், இந்த மதச் சுதந்திரத்தை எந்த தனிப்பட்ட
மதமும் சுரண்ட, தவறாக பயன்படுத்த முயற்சிக்கக்
கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதாக குற்றச் சாட்டு எழுந்தால், குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால்,
அவ்வாறு ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழரின் நலன்
கருதி, இந்த மதச் சுதந்திரத்தை தக்க வைப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
1.2 மத ஒழுங்குமுறை வாரியம் (அமைச்சகம்)
தமிழர் தமக்கென மத ஒழுங்குமுறை வாரியத்தை
உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வாரியம்தான் அனைத்து மதங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.
இந்த வாரியத்தில் எல்லா மதப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவும் அதன் கீழாக ஒவ்வொரு
மதத்திற்கும் ஒரு பிரதிநிதிகள் குழுவும் இருக்க வேண்டும். இந்த பிரதிநிதிகள் குழுவில்
அந்தந்த மதப் பிரிவுகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அந்தப் பிரதிநிதிகளை அந்தந்த மதங்களைச்
சேர்ந்தவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அந்த மதத்தின் பிரதிநிதிகுழு வாரியத்திற்கான
பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அதாவது கிறிஸ்தவ மதத்தில் 3 பிரிவுகள் உள்ளன
என்றால் இந்த 3 பிரிவுகளும் தங்களுக்குள் ஒரு பிரதிநிதிகள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும்.
இந்த பிரதிநிதிகள் தங்களுக்குள் ஒருவரைத்
தேர்ந்தெடுத்து மத ஒழுங்கு வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். மேற்படி 3 கிறிஸ்தவ பிரிவுகளும்
தங்களுக்கான பிரதிநிதிகளை அப்பிரிவைச் சேர்ந்த மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்க
வேண்டும். இந்த 3 பிரிவுகளுமே தங்களுக்குள் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி அவர்களில்
ஒருவரை வாரியத்துக்கான பிரதிநிதியை நேரடியாக தேர்ந்தெடுக்கலாம். இதுவே விரும்பத் தக்கதும்
ஆகும். மற்ற மதங்களும் இதே போன்ற தேர்தல் முறையை பின்பற்ற வேண்டும்.
1.3 மதப்பிரச்சார உரிமை
ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவருக்கும் தங்கள்
மதத்தைப் பிரச்சாரம் செய்ய உரிமையுள்ளது. மதப் பிரச்சாரமானது தங்கள் மதத்தில் உள்ள
நல்ல தன்மைகளை மற்றவர்களுக்குச் சொல்லி அதன் மூலம் அவரை ஆன்மீக ரீதியில் பயனடையச் செய்வது
என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதேநேரத்தில் ஒருவரது பிரச்சாரம் மாற்று
மத நம்பிக்கைகள், கொள்கைகளை தாக்குவதாக அமையக் கூடாது. வேறு மதங்களில் உள்ள கருத்துக்களை
ஒப்பிட்டுப் பேசலாம். ஆனால் அதைக் குறை கூறுவதாக, இழித்துப் பேசுவதாக இருக்கக் கூடாது.
ஒருவரது மதப் பிரச்சாரம் மாற்று மத நம்பிக்கையுள்ளவர்களுக்கு
பிரச்சனையை ஏற்படுத்துவதாக அமைந்தால், அதனால் அசாதாரண சூழல் ஏற்பட்டால் அந்த பிரச்சாரகர்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சாரகர்கள் மதங்களால் நடத்தப்படும் தேர்வுகளில்
வெற்றி பெற்று தங்களை பதிவு செய்து கொண்ட பின்னரே பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒருவர்
அவ்வாறு செய்யாமல் பிரச்சாரம் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு பிரச்சாரம் செய்பவர் தொடர்ந்து
இருமுறைக்கும் மேலாக மதத் துவேஷத்தை தூண்டுவதாக புகார் செய்யப்பட்டால் அவரது பிரச்சார
உரிமை பறிக்கப்பட வேண்டும்.
1.4 மதமாற்ற உரிமை
ஒரு தனிநபர் தனது விருப்பத்திற்கேற்ப தனது
மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமையுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக அவர் தனது
மதத்தைப் பற்றி முழுவதும் அறிந்திருக்க வேண்டும். அதற்காக அவர் மத வாரியம் நடத்தும்
தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒரு தனிநபர் ஒரு மதத்தில் (1) அடிப்படை அறிவு,
(2) பொது அறிவு, (3) மதப்புலமை என மூன்று நிலைகளில் மத அறிவைப் பெறலாம்.
ஒரு மதத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறக்கும்
குழந்தை அந்த மதத்தைச் சேர்ந்ததாக கருதப்படும். அந்தக் குழந்தை 18 வயதை அடையும்போது
மத அடிப்படை அறிவுத் தேர்வை எழுத வேண்டும். அவ்வாறு எழுதாதபட்சத்தில் அவர் மத அறிவற்றவராக
கருதப்படுவார். மத அறிவற்றவரால் மதச் சட்டங்களின் கீழான நன்மைகளை கோர முடியாது. அடிப்படை
தேர்வில் வெற்றி பெற்றிருந்தால்தான் ஒருவரால் மதம் சார்ந்த நெறிகளை பின்பற்ற, நன்மைகளை
பெற இயலும், விலக்குகளை பெற இயலாது. அவ்வாறு உள்ள ஒரு நபர் தொடர்பான வழக்குகள் பொதுச்
சட்டத்தின் கீழாகவே விசாரிக்கப்பட வேண்டும்.
ஒரு மதத்தில் இருப்பவர் ஒவ்வொருவரும் அடிப்படை
அறிவைப் பெற்றிருப்பது அவசியம். பொது அறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரால் மட்டுமே
மாற்று மதத்தை தழுவ முடியும். அதுவே மத மாற்றத்திற்கான தகுதியாகும். அதேபோல அவர் எந்த
மதத்திற்கு மாறுகிறாரோ அந்த மதம் பற்றிய அடிப்படை அறிவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
அதன் பின்னர் பொது அறிவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன்பின்னர் இரண்டு மதங்களில்
உள்ள கருத்துக்களைக் கூறி தன்னை கவர்ந்த கருத்துக்களை கூறி தனது மதத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இடையிலான கால அளவு 1 வருடமாக இருக்க வேண்டும். அவ்வாறு
இல்லாதபட்சத்தில் அவரது மத மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படாது.
மதப்புலமை தேர்வில் வெற்றி பெற்றவரே ஒரு
மதத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யும் தகுதி பெற்றவராவார். அவர் ஒரு மதத்தில் தேர்வு
பெற்றால் அந்த மதம் பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும். மாற்று மதங்களை ஒப்பிட்டுப்
பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் மாற்று மதங்களின் 3 நிலைத் தேர்வுகளிலும் வெற்றி
பெற வேண்டும்.
1.5 தனிநபர் மதப் பிரச்சாரம், புதிய மதக் கருத்துக்கள், புதிய மதங்கள்
மேற்படி பிரச்சாரம் அல்லாமல் ஒரு தனிநபர்
ஒரு மதம் சார்ந்த, ஆனால் தனக்கென ஒரு தனிக் கொள்கைகளை, அல்லது புதிய கொள்கைகளை உருவாக்கி
அவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள அவருக்கு உரிமையுள்ளது.
உதாரணமாக, இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர்
தான் இந்து மதம் சார்ந்த, அதேவேளையில் தனக்கென ஒரு தனிப்பட்ட கொள்கையை உருவாக்கி அதனை
பிரச்சாரம் செய்யலாம். இவர் முதலில் இந்து மதத்தில் உள்ள 3 கட்ட தேர்வுகளிலும் வெற்றி
பெற வேண்டும். அதன் பின் தனது கருத்துக்களை தொகுத்து அதனை இந்து மதப் பிரதிநிதிகளின்
குழுவில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் குழு
அதை அங்கீகரித்த பின்னரே அதனை வெளியிட வேண்டும்.
அதன் பின் அவர் தனது தனிப்பட்ட, ஆனால்
இந்து மதம் சார்ந்த பிரச்சராத்தை முன்னெடுக்கலாம். அவரது பிரச்சாரம், செயல்பாடு அதே
மதத்திற்கு எதிராக அல்லது மாற்று மதங்களுக்கு எதிராக அமைவதாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பிரச்சாரம் செய்யும் அந்த நபருக்கு
குறிப்பிட்ட காலக் கெடு கொடுக்க வேண்டும். அதன் பின் அவருக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கைப்
பொறுத்தே அவரது பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவரது
கருத்து புதிய கருத்தாக மட்டுமே அங்கீரிக்கப்பட வேண்டும்.
ஒரு தனிநபருக்கு ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிக்கும்
உரிமையுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உள்ள மதங்களின் கருத்துக்களை தெளிவுறக் கற்றிருக்க
வேண்டும். அதாவது அவர் ஏற்கனவே உள்ள மதங்களின் 3 கட்ட தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.
அதன் பின் உலகில் உள்ள பொதுவான மதங்களுக்கான ஒரு பொதுத் தேர்வை எழுத வேண்டும்.
அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர்
அவர் தனது புதிய மதம் பற்றிய கருத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு அதனை மதப் பிரதிநிதிகள்
குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கருத்துக்களை மத அறிஞர்கள் சர்ச்சை செய்து
தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். அந்தக் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அந்த
மதத்தை நிறுவ, அதன் கருத்துக்களைப் பரப்ப அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவரது
கருத்துகளுக்கு மக்களிடையே உள்ள ஆதரவை பொறுத்தே அவரது மதத்திற்கான பிரச்சாரத்திற்கு
தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட வேண்டும். அவரது பிரச்சாரம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்தினால்
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1.6 பொதுச் சட்டம், மதச்
சட்டங்கள்
ஒரு நாட்டில் மதச் சட்டங்கள் இருக்கக்
கூடாது. ஆனால் ஒரு மதத்தவர் தங்களுக்குள் மதச் சட்டங்களைப் பின்பற்றலாம். அந்தச் சட்டம்
அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்தச் சட்டம் மாற்று மதத்தவரை கட்டுப்படுத்தாது.
ஆனால் அந்தச் சட்டம் மொத்தத்தில் நாட்டு நலன், சமுதாய நலன், குடும்ப நலன், தனிநபர்
நலனை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். எங்காவது ஓரிடத்தில், ஒரு பிரச்சனையில் இது இந்த
நலன்களை பாதிப்பதாக இருந்தால் பொதுச் சட்டமே செல்லுபடியாகும்.
ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதச் சட்டங்களை
தங்கள் நாட்டிற்கு ஏற்ற வகையில் தொகுக்க வேண்டும். அவ்வாறு தொகுக்கும்போது அவற்றில்
உள்ள முரண்களை விலக்கிவிடலாம். இதனை நாட்டின் நலன் கருதி செய்ய வேண்டும். ஒரு நாட்டுக்கு
எதிரான மதச் சட்டங்கள் இருக்கக் கூடாது. அது போன்ற சட்டங்களுக்கு ஏன் விலக்கு அளிக்கப்படுகிறது
என்பதை அந்த மதத்தின் பிரதிநிதிகள் அந்த மதம் சார்ந்த மக்களுக்கு விளக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு மதமும் மாற்று மதங்கள்/ அம்மதங்களைப் பின்பற்றுபவர்களைப் பற்றிய கருத்தை
வெளியிட வேண்டும். இது ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களைப் பற்றி
தவறாக பிரச்சாரம் செய்வதை தடுக்க உதவும். மேலும் அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட
வழிவகுக்கும்.
1.7 மதம் சாராத உரிமை
ஒரு தனிநபர் எந்த மதத்தையும் பின்பற்றாமல்
சுதந்திரமாக இருந்து கொள்ளலாம். ஆனால் அந்த தனிநபரின் உரிமைகள், கடமைகள் மொத்தத்தில்
நாட்டு நலன், சமுதாய நலன், குடும்ப நலன், தனிநபர் நலனை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
மதம் சார்ந்தவர்களுக்கு வாரியம் இருப்பது போல, மதம் சாராதவர்களுக்குத் தனியான வாரியம்
அமைக்க வேண்டும். இதனை மொத்தத்தில் நாட்டு நலன், சமுதாய நலன், குடும்ப நலன், தனிநபர்
நலனை நோக்கமாக கொண்டு செய்ய வேண்டும். மேலும் இதனை மதம் சாராதவர்களின் நலனை கருத்தில்
கொண்டு அமைக்க வேண்டும்.
அவ்வாறு சுதந்திரமாக உள்ள தனிநபருக்கு
எந்த மதத்தையும் பேச, விமர்சிக்க உரிமை கிடையாது. அவர் மதங்களைப் பற்றி பேச விமர்சிக்க
விரும்பினால் அவர் சம்பந்தப்பட்ட மதங்களின் முதல், இரண்டாம் கட்டத் தேர்வுகளில் வெற்றி
பெற வேண்டும்.
அதன் பின்னரே அவர் அவ்வாறு பேச இயலும்.
அவ்வாறு செய்யாமல் அவர் ஒரு மதத்தை விமர்சித்தால், அது அந்த மதத்தவரின் உணர்வுகளைப்
புண்படுத்தினால் அது மதத் துவேஷமாக கருதப்படும். அவ்வாறு நடைபெறும்போது அவர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.
தனது உறவுகளை அவ்வாறு சுதந்திரமாக உள்ளவர்களிடேயே
வைத்துக்கொள்ளலாம். அல்லது அவர் ஒரு மதம் சார்ந்தவரை
திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு மதத்தில் இருப்பவரை திருமணம் செய்தார் என்றால் அவர்
அந்த மதத்தை தழுவ வேண்டும். அல்லது அவர் அந்த மதத்தில் உள்ளவரை அந்த மதத்தை விட்டு
வெளியேற்றி திருமணம் செய்யலாம். மதத்தை விட்டு வெளியேறுபவர்கள் அதனை பதிவு அலுவலகத்தில்
பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்திருந்தால்தான் அவர் மதத்திலிருந்து வெளியேறியவராக
கருதப்படுவார்.
அவர் அந்த மதத்தை தழுவி திருமணம் செய்யும்போது
அவர் அந்த மதச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மதத்திலிருந்து வெளியேறும்போது
அவரை மதச் சட்டங்கள் கட்டுப்படுத்தாது. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் மதத்திலிருந்து
வெளியேறிவிட்டார், ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அந்த மதத்தில் இருக்கிறார்கள்
என்றால் அந்தக் குடும்பத்திற்கான பிரச்சனைகள் மதச் சட்டத்தின்படி தீர்த்துக் கொள்ளப்பட
வேண்டும்.
அந்தப் பிரச்சனையில் அந்த தனிநபருக்கு
தீங்கிழைக்கப்பட்டதாக கருதப்பட்டால் அவர் பொதுச் சட்டத்தின்படி தனது உரிமைகளைக் கோரலாம்.
இதில் ஒரு தனிநபருக்கும் அதிக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில்
பெரும்பான்மை நபர்களின் நலனே கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
1.8.
தனிநபர் மதப் பிரச்சனைகள்
இரண்டு தனிநபர்களுக்கு இடையே உருவாகும்
பிரச்சனையை இரண்டு மதங்களுக்கு இடையேயான பிரச்சனையாக மாற்றக் கூடாது. உதாரணமாக ஒரு
இந்துவிற்கும் ஒரு இஸ்லாமியருக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்து அவர்களிடையே கொடுக்கல்
வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டால் அதை மதப் பிரச்சனையாக
மாற்றக் கூடாது. அவர்கள் இருவரும் பொதுவான நபர்களின் உதவியுடன், பொதுச் சட்டப்படி தங்கள்
பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஏற்படும் பிரச்சனையை மதப் பிரச்சனையாக
ஆக்கினால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல அடிப்படை மத
அறிவு இல்லாதவர்களின் இடையே ஏற்படும் பிரச்சனைகள் இரண்டு தனிநபருக்கு இடையே ஏற்பட்ட
மதப் பிரச்சனையாக கருதப்படும். ஒருவர் அடிப்படை மத அறிவு கொண்டவராக இருந்து அடிப்படை
மத அறிவு இல்லாதவர் அவரிடம் மதம் சார்ந்த பிரச்சனை செய்து அது நிரூபிக்கப்பட்டால் அது
மதத் துவேஷத்தை ஏற்படுத்தியதாக கருதப்படும். அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
1.9.
மதக் கல்வி
ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்கான கல்விக்
கூடங்களை அமைத்துக் கொள்ளலாம். இந்த கல்விக் கூடங்களில் மத அடிப்படை, பொது, புலமைக்கான
கல்வி வழங்கப்பட வேண்டும். இந்தக் கல்விக் கூடங்களில் மதக் கல்வி மட்டுமே அளிக்கப்பட
வேண்டும்.
மதங்கள் பொதுக் கல்விக் கூடங்களையும் நடத்தலாம்.
ஆனால் இது இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடாது. அந்த பொதுக் கல்விக் கூடங்களில் எந்தவித
மதப் பிரச்சாரமும் செய்யக் கூடாது. மதப் பிரச்சாரம், வழிபாடு என்பது மதக் கல்விக் கூடங்களில்
மட்டுமே செய்யப்பட வேண்டும். அதை மீறினால் அந்த கல்விக் கூடத்திற்கான அனுமதி ரத்து
உடனே செய்யப்பட வேண்டும். அதை நடத்திய நிர்வாகிகள் வேறு எந்த கல்விக் கூடங்களையும்
நடத்த அனுமதிக்கக் கூடாது.
ஒரு மதத்தவர் மாற்று மதத்தவருக்கான மத
கல்விக் கூடங்களுக்குச் சென்று தங்கள் மதத்தைப் பற்றி பேசலாம், கலந்துரையாடலாம். இது
மதங்களுக்கிடையேயான புரிதலை ஏற்படுத்தும் முகமாகவே செய்யப்பட வேண்டும். அல்லது பல மதங்கள்
இணைந்து மத கருத்துக்களை சர்ச்சை செய்யலாம். இதனை பல்வேறு மதங்களில் இருப்போரிடையே
ஆரோக்கியமாக மதக் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக செய்ய வேண்டும்.
1.10.
வழிபாட்டு முறைகள், ஒத்துழைப்பு
ஒவ்வொரு மதத்தினரும் முன்னதாகவே முடிவு
செய்யப்பட்ட, வழக்கத்தில் உள்ள, சடங்குகள் வழிபாட்டு முறைகளை பின்பற்றலாம். ஒரு மதத்தைச்
சார்ந்தவர்கள் மாற்றுத் மதத்தவரின் விழாக்கள் திருவிழாக்களில் தலையிட முடியாது, இடையூறு
செய்யக் கூடாது.
அவ்வாறு திருவிழாக் கொண்டாடும் ஒரு மதத்தவரை
வேற்று மதத்தவர் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைய தடை விதிக்க முடியாது. அதேபோல
விழாக் கொண்டாடும் ஒரு மதத்தவர் வழக்கத்திற்கு மாறாக மாற்று மதத்தவர் வசிக்கும் பகுதிக்குள்
செல்ல முயற்சிக்கக் கூடாது.
புதிதாக வழிபாட்டுத் தளங்கள் அமைப்பதற்கு
முன்பாக அது மாற்று மதத்தவருக்கோ, மற்ற பொதுமக்களுக்கோ இடையூறாக இருக்க வாய்ப்புள்ளதா
என்று ஆராயப்பட வேண்டும். அவ்வாறு இல்லாபட்சத்தில் மட்டுமே அதற்கு அனுமதி தரப்பட வேண்டும்.
மதங்களின் ஒட்டுமொத்த நோக்கமும் தங்கள் மதம் சார்ந்த மக்கள், பொதுமக்களின் நலனாக இருக்க
வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
1.11. சட்ட மன்றத்தில் மதங்களின் பங்கு
மதங்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது
என்பதால் சட்டமன்றத்தில் மதங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். மத விகிதாச்சாரப்படி
இந்த மதப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த பிரதிநிதிகளை மக்களே நேரடியாக
தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் மதப்புலமை தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இவர்கள் அறிஞர்கள் அவையான சட்டமன்றத்தின்
மேலவை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கீழவைக்கு விகிதாச்சார அடிப்படையிலான மக்கள்
பிரதிநிதிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
உதாரணமாக, கிறிஸ்தவர்கள் மக்கள் தொகையில்
10% இருக்கிறார்கள் என்றால் அதற்கான மக்கள் பிரதிநிதிகள் தனியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இவர்களுக்கு மதப் புலமை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதேவேளையில் இந்த 10% மக்கள் தொகைக்கான
கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் தனியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் மேலவையில் இடம்பெறுவார்கள்.
இவர்கள் இருவரையும் ஒரே பிரதிநிதியாக கருதக் கூடாது. இது மற்ற மதங்களுக்கும் பொருந்தும்.
மக்களுக்கான பிரதிநிதிகளும் மதங்களுக்கான பிரதிநிதிகளும் தனித்தனியே இருக்க வேண்டும்
என்பதால் இப்படிச் செய்வது நலம்.
*******