Saturday, September 24, 2011

இனப் படுகொலையையும்....மறைத்து விட முடியும்!

இனப் படுகொலையையும்....மறைத்து விட முடியும்!



இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை பொறுத்தவரை உலகம் அமைதி காத்து வருகிறது. ஏன்? அதற்கு என்ன காரணம் என்றால், பெரும் வல்லரசு நாடுகளான இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா இதில் இணைந்து செய்யப்பட்டுள்ளன என்பதால்தான். இந்த நாடுகளே இந்த போரை நடத்தி, உதவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட துணை நின்றன. இப்போது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டடால் இலங்கை தனது கடைசி துருப்புச் சீட்டான, ‘‘நீங்கள் ஆசைப்பட்டீர்கள், நான் செய்தேன்‘‘ என்று சொல்வதை பயன்படுத்தலாம்.
இந்தியாவின் சோனியா காங்கிரஸ், தொழிலாளர் கட்சியை சேர்ந்த டோனி பிளேர் மற்றும் ஜனாதிபதி புஷ் ஆகியோர்தான் கூட்டுச் சதி செய்து இந்த இனப்படுகொலை அரங்கேற வழி செய்து கொடுத்தனர். இதுதான் உண்மை. அமெரிக்காவை குற்றம்சாட்டும் உணர்வு யாரிடமும் இல்லை. அவ்வாறு ஒரு மாயத் தோற்றம் உருவாகியுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கண்ணோட்டத்தில், மனித உரிமைகள் என்பது சர்வதேச விவகாரம் கிடையாது. சர்வதேச ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படும் மனித உரிமைகள் சர்வதேச சமுதாயம் அக்கறை கொள்ள வேண்டிய விஷயமாகும். ஜனாதிபதி ஒபாமா ஓராண்டுக்கு முன்பு இந்தியா சென்றபோது அந்த நாட்டிற்கு ஒரு பாடம் கற்பித்தார். ஹிலாரி கிளிண்டன் மீண்டும் அதனை உறுதி செய்தார். நாம் அரசியலை விட்டுவிடுவோம். இந்த விஷயத்தில் உள்ள தீவிரத்தன்மை குறித்து ஆலோசனை செய்வோம். அதற்கும் மேலாக உங்களது நட்பு நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருமே பொய்யர்களாக மாறும்போது ஜனநாயகம் என்னவாகும்.

இந்திய அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான இடைவெளி அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக காரணமாக அமைந்தது. இதற்கு வேறு எதையும் காரணம் கூற முடியாது. பாக் சந்தியின் இருபுறமும் கொதித்தெழுந்த மக்கள் இந்திய பாதுகாப்பிற்கு இடையூறாக அமையும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டது. உண்மையில் புலிகள் ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை.
புலிகளின் ஆயுதங்களில் ஒன்று தற்கொலைப்படை. கறுப்பு புலிகள் அதற்காக தங்களது இன்னுயிரை ஈந்தனர். இப்படை போர் நிறுத்த காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது தமிழர்களுக்கான தனி நாடு மற்றும் கடற் வரம்புகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதைக்கண்ட புஷ்-பிளேயர் கூட்டணி திடீரென ஆத்திரமடைந்தது. உடனே அவர்கள் ஆயுதம் ஏந்திய போராடுவதால் புலிகளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அவர்கள் இந்தியாவின் சோனியாக காங்கிரஸுக்காக இதை செய்யவில்லை.
சில படித்த அறிவிலிகள், “புலிகள்தான் தற்கொலை தாக்குதலை கண்டுபிடித்தனர். அது உலகம் முழுவதும் தீவிரவாதிகளால் பின்பற்றப்பட்டதுஎன்று தங்கள் மனம்போன போக்கில் எழுதுகின்றனர். என்னவொரு முட்டாள்த் தனமான தர்க்கம் இது. இது பெண்கள் அணியும் மார்பு கச்சையான ஒண்டர் பிராவை“, ஹவாயை சேர்ந்த இயற்கை அழகு படைத்த பெண்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று சொல்வதற்கு இணையானதாகும்...
அடுத்தது குழந்தை போராளிகள். புரட்சியாளர்கள் தங்களது நாட்டிற்காக போராடும்போது, மக்கள் தாங்களாகவே அந்த போராட்டத்தில் பங்கேற்பர் என்பதை உலகம் புரிந்துகொள்ளாதா? அதில் சிறுவர்களை பார்ப்பது சாதாரணமான ஒன்றே. குழந்தைப் போராளிகள் என்பது ஒரு கவர்ச்சிகரமான சர்ச்சைப்பொருள் மட்டுமல்ல. அது பணத்திற்காக எழுதும் பத்திரிகையாளர்கள், திறமையற்ற அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் கூட மீண்டும் மீண்டும் சர்ச்சை செய்ய விரும்பும் ஒரு விஷயமாகும். 
இந்தியா தனது பாதையை மறந்து நடைபெறும் நிகழ்வுகளுக்கு மட்டும் எதிர்வினை புரிந்து வருகிறது. சோனியா காங்கிரஸ் அரசாங்கம், தான் கொழும்புவுடன் சேர்ந்து செய்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச அழுத்தம் ஏற்படுவதை கலைக்க முயல்கிறது.          தற்போது ராணுவ கொடுமையின் கீழ் அச்சத்தில் வாழும் தமிழர்கள் இந்தியாவும் இலங்கையும் எதை செய்து கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் பாதுகாவலர்களான புலிகள் இருக்கின்றனரோ இல்லையோ, தமிழர்களுக்கு சுதந்திரமான ஈழதேசம் வேண்டும் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் தனிமைப்படுத்தப்பட்டது மற்றும் அவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கச் சர்வதேச சமுதாயம் உதவியது ஆகிய நிகழ்வுகள் காரணமாக புலிகளும் மக்களும் அதனை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனரே தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. இதன் பின்விளைவுகள்தான் இப்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் வெளிவேசம் மற்றும் முட்டாள்த்தனம் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது.
விடுதலைப் புலிகளிடம் கண்ட பாராட்டுதலுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த நோக்கத்தை கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் இருந்ததே. தமிழ் மக்கள் புலிகள் மீது இந்த நம்பிக்கையை வைத்து அவர்களுக்கு ஆதரவளித்தனர். அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு புலிகளை நம்புவதைவிட வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போது உலக வல்லரசுகள் ஒன்றிணைந்து புலிகளின் ராணுவ பலத்தை அழித்து விட்டனர். எப்படி, ஏன், யார் என்ற கேள்விகளுக்கு மெள்ள மெள்ள பதில் கிடைத்து வருகிறது. ஆனால் புலிகள் தமிழர்களின் குரலாக இருந்தனர் என்பதே உண்மை.
இலங்கை புலிகளையும் தமிழர்களின் உரிமைகளையும் சமமாகவே பார்த்தது. ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சனைகள் ஆகும். அவற்றை தனித் தனியாகத்தான் பார்க்க வேண்டும். அதை ஒன்றாக்கி உங்களால் இனப் படுகொலையையும் மறைத்து விட முடியுமா?
யூகோஸ்லாவியாவை பிரிவினையிலிருந்து பாதுகாக்க நடத்தப்பட்ட இறுதி கட்டப்போரில் செரப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டது. இதனை அறிந்ததிலிருந்தே அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் கொள்கை முடிவு வட்டாரத்தில் ஆர்2பிவிவகாரம் சர்ச்சை செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவாக, முறையற்ற நிர்வாகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பற்ற மற்றும் அழிக்கப்பட்டு வரும் மக்களை பாதுகாக்கும் பொறுப்புஜனநாயக நாடுகளுக்கு உண்டு என்ற கருத்து உருவாகியுள்ளது. அரபு நாடுகளின் விடுதலை உள்ளேயிருந்து அல்ல, ஆனால் வெளியே இருந்து வந்தது என்று கருதப்படுகிறது. ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை.  
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அடையாளத்தையே அழிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. வட கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்களையும் ஆக்கிரமித்து அவர்கள் அங்கு திரும்பிச் செல்லவும் தடுக்கப்படுகின்றனர். இதன் மூலம் வட கிழக்கில் உள்ள ராணுவத்தை வைத்து தமிழர்களின் மொழி, கலாச்சார, சமூக மற்றும் மத அடையாளங்கள் மற்றும் பொருளாதார வாழ்க்கையை அழிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் இறுதி நோக்கம் தமிழ் மக்களின் வாழ்வை ஒரு செல்லாக் காசாக்குவதாகும். வல்லரசு சக்திகள், கடந்த 60 ஆண்டுகாலமாக செய்யப்பட்டுவரும் கொடுமைகள் மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் அரங்கேற்றப்பட தாங்களும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 
தமிழ் ஈழத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ தமிழ் ஈழம் உருவாக்கப்படுவது தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் சுய மரியாதைக்கு இன்றியமையாதது ஆகும்.
நடராஜா பாலசுப்ரமணியம்,

தலைவர், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, லண்டன்.
தமிழ் மொழிபெயர்ப்பு: Perumal A. Thevan, Mumbai.
நன்றி- http://pflt.org/

Tuesday, September 20, 2011

யார் ஹிட்லர்?



என் எதிர்நிலை தம்பியே
என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்?
என் அண்ணனா ஹிட்லர்?
உன்னை நீயே கேட்டுக்கொள்.

எந்த குண்டை உலகம் தடை செய்ததோ?
அந்த குண்டை என் அண்ணனா
நம் சொந்தங்களின் தலைமேல் போட்டான்?

நீ சொல்லும் ஹிட்லர் சித்ரவதை முகாம்களை அமைத்தான்.
என் அண்ணனா தாக்குதல் இல்லா பகுதி என்று
திறந்தவெளி கொலைக்களத்தை அமைத்தான்?

அந்த கொலைக்களத்தில் என்னவெல்லாம் செய்தன
ஹிட்லரின் மிருகங்கள்?
நம் சகோதரிகளின் முலைகளை மட்டுமா அறுத்தார்கள்?
நம் பெற்றோரின் முன்னாலேயே புணரவில்லையா?
நம் தம்பிகளை கண்ணைக் கட்டி
ஆடையில்லாமல் சுட்டுக் கொன்றவர்கள் யார்?

அப்போதெல்லாம் ஹிட்லர் யாரென்று தெரியாத உனக்கு
இப்போது எப்படி ஞானோதயம் வந்தது?
உலகமே சொல்கிறது அவன்தான் ஹிட்லர் என்று
நீ சொல்கிறாய் என் அண்ணன் ஹிட்லர் என்று.

அவன்தான் ஹிட்லர் என்று
சொல்ல உனக்கு துணிவில்லையா?
உன் நாக்கு குலைந்து விட்டதா?
பற்கள் கிட்டித்துக் கொண்டனவா?

அப்போது நீ எங்கே இருந்தாய் என்று சொல்?
அந்த ஹிட்லரின் முதுகை தட்டிக் கொடுத்தாளே
முசோலியின் வாரிசு,
அவளுக்கு பின்னால் இருந்தானே தமிழ் பேசியே
கழுத்தை அறுத்த நயவஞ்சக நாய்,
அவனுக்கு பின்னால் அல்லவா இருந்தாய்?

ஹிட்லர் சொன்னான் உலகே உன்னை அழிப்பேன் என்று
என் அண்ணன் சொன்னான் உலகே என் இனத்தை காப்பாற்று என்று
இப்போது சொல் என் அண்ணனா ஹிட்லர்?

ஈழத்தில் நடந்தது கேட்டு பதறிய என் அண்ணனின்
ரத்தம் துடித்தது, அது வார்த்தைகளில் கொட்டியது
என் அண்ணனின் வார்த்தைகள் செருப்பால் அடித்தது போல இருக்கிறதா?
இல்லை துப்பாக்கி தோட்டாவாக இருக்கிறதா சொல்?

இவ்வளவும் நடந்த பின்னும் பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறானே?
அவன் காந்தியின், வல்லளாரின் வழிவந்தவன் அல்லவா?

இப்போது சொல்
நாயிடம் இல்லை, பன்றியிடம் இல்லை,
என் தாயின் மாரில்தான் நீயும் அமுதுண்டாயா என்று?

நீ எங்கே நிற்க வேண்டும் என்று நீயே யோசி.
இந்த சொற்கள் உன்னை புண்படுத்த அல்ல
உன் வார்த்தைகளை தவிர்க்க. புரிந்துகொள்வாய்.

Sunday, September 18, 2011

பரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்




வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார், எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் கல்லால் ஆன சிலைகள் மட்டும் அல்ல அவை என யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். அந்த சிலைகளில் இருந்துதான் அதிகாரத்திற்கான வேட்கையும், அதற்கான அரசியலும் பிறக்கின்றன.


சிலைகளைத் திறப்பதும், பிறகு அவற்றையே அவமதிப்பதும், அதன் வாயிலாக கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரைப் பிடுங்குவதுமாக பல்வேறு வேடங்களில் உலா வருகிறது சாதீயத்தின் இழிவான அரசியல். இறந்துபோன தலைவர்களுக்கு இடையே அந்தக் காலக்கட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பத்தினை நாளது தேதி வரை பொத்தி பொத்தி பாதுகாப்பதில் தான் இருக்கிறது தனிப்பட்ட சிலருக்கான சில்லறை அரசியல். சாதீயத்தின் கூர்முனைகளை தீட்டாமலிருக்க யாருக்கும் விருப்பமில்லை. சாதீயத்தின் பேரில் நடக்கும் அரசியலையும், கிடைக்கும் அதிகாரங்களையும் எந்த சாதீயத்தலைவரும் இழக்க விரும்புவதில்லை. சாதீய கட்டுமானங்களின் அடிப்படையாகத் திகழும் சுயசாதிப் பெருமிதம் என்ற உணர்வே சாதீயக் கட்சிகளின் மூலதனமாக‌ விளங்குகின்றது. அரச அதிகாரத்தில் இருப்பவர்களும் சாதீயத்தின் முனை கூர்மழுங்காமல் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் பரமக்குடிகள் போன்ற பல ஊர்கள் முளைப்பது அரச அதிகாரத்திற்கும், சுயலாப அரசியலின் இழிவான சாட்சிகளாக இருக்கும் சாதீயக் கட்சிகளுக்கும் தேவையாக இருக்கின்றன.

 அரச அதிகாரங்களை பாதுகாக்கும் மிக முக்கிய அரணாக சாதி இருக்கிறது. சாதி இழிவினைப் போக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த‌ தந்தை பெரியாரின் வழி வந்ததாக சொல்லிக் கொண்டு அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதீய இழிவினைப் போக்கலாம் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளை உதிர்த்துத் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளே கடந்த பல ஆண்டுகளாக சாதீயத்தினைப் பாதுக்காக்கும் அமைப்புகளாக செயல்படுகின்றன. திராவிடம் என்ற சொல்லில் தான் பெரியாரியம் முழுவ‌தும் அடங்கி இருக்கிறது என்பது போன்றான புனைவுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி திராவிடர்களின் நல வாழ்விற்கான உண்மையான கட்சி திமுக என இன்று வரை பேசிக்கொண்டிருப்பதிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு, நமக்கும்-தெலுங்கனுக்கும், நமக்கும்- மலையாளிக்கும், நமக்கும்-கன்னடனுக்கும் நதிநீர் உட்பட பல முனைகளில் முரண்கள் தோன்றும்போது திராவிடம் என்ற சொல்லுக்கான அவசியம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வினா எழுப்புகையில், இந்த சாதீயம்தான் அவர்களுக்கு எதிரான முனையாக முன்நிறுத்தப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு அப்பாலும் பெரியாரியம் பரந்து விரிந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழனின் சாதி இழிவைப் போக்க, தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய, தமிழர்களின் ஒற்றுமைக்காக, பெண்ணுரிமைக்காக என பல தளங்களில் மூர்க்கமாக போராடிய அந்த கிழவனைத்தாண்டி இந்த மண்ணுக்கான தத்துவங்கள் ஏதுமில்லை. ஆனால் அவர் வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரத்தில்தான் சாதீயத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. சொல்லப் போனால் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரம் தான் சாதியைப் போற்றி, பராமரித்து, பாதுகாக்கின்ற அரணாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒட்டுமொத்த இன ஒற்றுமையை உரத்துப் பேசும் தமிழ்த் தேசியர்கள் இது போன்ற சமூக உட்குழு பிணக்குகளில் பெருத்த பின்னடைவினை சந்திக்கின்றனர். பண்பாட்டு பெருமிதங்கள் மூலம் கட்டமைக்கப்படும் இனத்தின் ஒற்றுமையை சமூக உட்குழுவான சாதி சிதைப்பது தமிழ்த் தேசிய கருத்தின் பலத்தினை குறைக்கும். எனவே சாதி முரண்களால் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. காலங்காலமாக ஆதிக்கச் சாதியின் இறுக்கத்தினில் இருந்து வெளியேற ஒடுக்கப்பட்ட சாதிக்கு என்றைக்கும் அரசியல் துணை நின்றதில்லை. துவக்கத்தில் அரசியல் மூலம் மாற்றத்தினை கொண்டு வர விழைந்த அண்ணல் அம்பேத்கர்கூட, இறுதியில் சமூக வழி செயலான மத மாற்றத்தினைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய லாபங்களுக்காக தனி நபர்கள் சுயசாதி பெருமிதத்தின் மீது கட்டமைக்கும் அரசியல் இதுவரை எவ்விதமான விளைவினையும் இங்கே ஏற்படுத்திவிடவில்லை என்பது உண்மையானது.
தேர்தல்களில் சாதி மக்களின் எண்ணிக்கையை காட்டி சாதிக்கட்சிகள் தங்களின் கூட்டணி தலைமையிடம் இடங்களுக்காக நிற்கின்றன. சாதி ஒழிப்பிற்காக, பிற்படுத்தப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சமூக நீதிக்காக தோன்றிய திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட தேர்தல்களில் பெருமளவு சாதி பார்த்து, இடம் பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. தமிழனின் சமூக நுகர்வில் சாதிக்கான இடம் மிகப் பெரியது. இந்தப் புள்ளிதான் இன ஒற்றுமையை நிறுவ முயலும் தமிழ்த் தேசியர்களுக்கான உண்மை சவால்.

பரமக்குடி படுகொலைகளின் மூலம் அரச அதிகாரம் ஆதிக்க உளவியலில் இருந்து பிறந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறை போக்கிற்குத் தீர்வாக காவல் துறை தூப்பாக்கிகளைக் கையாண்டது எதன் பொருட்டும் ஏற்கக் கூடியதல்ல. மக்களுக்காகத்தான் அரசு. எனவே அவர்களை மீறி, அவர்களைக் கொன்று அந்த நாளில் காவல் துறை காப்பாற்றியது எவற்றை என்பதை நாம் ஆராயும்போது அரச அதிகாரத்தின் ஆதிக்க சாதி முகத்தினை நாம் நேரிடையாக சந்திக்கிறோம். பார்த்தவுடன் பதற வைக்கிறது பரமக்குடி. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு அரச வல்லாத்திக்கத்தின் கோர முகம் தெரிகிறது.

வரையறுக்கப்பட்ட, திட்டமிட்ட செயல்களால் பெருகி வந்த வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் துவக்குகளையும், ரவைகளையும் தீர்விற்கான வழிகளாக காவல்துறை நம்பியது கண்டிக்கத்தக்கது. அரச பயங்கரவாதம் நிகழ்த்திய வன்முறைகளுக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சாதி சார்பு என இவற்றை நாம் குறுக்கி விட இயலாது. மாறாக அரசதிகாரம் தந்த ஆணவமும், வரையறையற்ற அதிகாரமும் இவற்றிற்கான காரணங்கள். இந்த வன்முறையில் பலியானவர்கள் குறித்த தகவல்களை அறியும்போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எளிய மனிதர்கள் சுடப்பட்டு இருக்கின்றார்கள். அதிகாரம் தந்த ஆணவத்தினால் கக்கிய காவல்துறையின் துப்பாக்கிக் குழல்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லை. சுடப்படுபவர் வன்முறையாளரா என்ற வரைமுறை இல்லை. ஆதிக்கத்தின் துப்பாக்கி குழல்களுக்கு தேவை வீழ்த்த ஒரு உடலம். அவ்வளவே. காரண, காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆதிக்க சாதி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின்போது நிகழும் வன்முறைகளை இயல்பாக அனுமதிக்கும் அரச அதிகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சி செய்தால் உயிரைப் பறிக்க துவக்குகளைத் தூக்குகிறது. இராணுவத்திற்கு எதிராக கல்லெறிந்து போராடி வரும் காஷ்மீர் மக்களைக் கூட அந்த அரசாங்கம் சுட்டுக் கொல்வதில்லை.

பல்வேறு சாதி மக்கள் வாழக்கூடிய ஒரு நிலத்தில், பெரும்பான்மை சாதிக்குழுவின் முக்கிய ஆளுமையின் விழா நாளில் ஏற்படும் விபரீதங்கள் அதற்கு இணையான, எதிரிடையாக இருக்கும் மற்றொரு சாதிக்குழுவின் மீது சாட்டப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. மறைந்த தலைவர்களின் விழாக்களின்போது பதட்டம் ஏற்படுவதை சாதீயக்கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் விளையும் பதட்டம்தான் அடுத்த ஒரு வருடத்தின் அரசியலுக்கான மூலதனம். சாதீயத்திற்கு எதிராக, இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ்த்தேசியர்களை இதில் வலுக்கட்டாயமாக வம்புகிழுப்பதில்தான் இருக்கிறது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.

சாதிதான் பெரிதென்றால் சுயசாதிப் பெருமிதத்தினை, சாதி பேரில் திரளும் மக்களை வைத்து அரசியல் நடத்தியிருக்கலாம். ஆனால் இன ஒற்றுமையையும், அதன் வாயிலாக சாதீய ஒழிப்பினையும் சிந்திக்கும் தமிழ்த் தேசியர்கள் மூன்றாம் தர சொல்லாடல்களால் விமர்சிக்கப்படுவது எதன் பொருட்டும் நியாயமல்ல. தமிழ் உணர்வாளர்கள் பாகுபாடின்றி மறைந்த தமிழ் ஆளுமைகளின் விழாக்களிலும் கலந்து கொள்வதை மோசடியாக புனைய துடிப்பவர்கள் அதன் மூலம் நிகழும் பொதுமை உணர்ச்சியை நிகழ விடாமல் தடுக்க எண்ணுகிறார்கள். சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் இனத்து ஆளுமைகளை அவர்களுக்குள் அக்காலத்தில் நிலவிய முரண்களுக்கு அப்பாற்பட்டு பார்க்கின்ற பொதுமை உணர்ச்சி நிகழ்கால அமைதி வாழ்வின் பாற்பட்டது.

ஒரு சமூகத்தின் இரு தலைவர்கள் அன்று நிலவி வந்த சாதீயச் சூழல் காரணமாக, ஆண்டான், எதிர்ப்போன் என பிளவுபட்டு கிடந்தார்கள். அவர்கள் இறந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இதே சாதியை இறுகப் பிடித்துக் கொண்டு, அடித்துக் கொண்டு செத்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இன்றைக்கும் தலைவர்களின் பேரால் அடித்துக் கொண்டு சாகிறார்கள். இந்தப் பகையை, இந்த வன்மத்தினை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு கொண்டு போகப் போகிறோம் என்று கேட்டாலே சாதி வெறியன்களாக சித்திரித்து விடுவது அரச பயங்கரவாதத்தினை விடக் கொடுமையானது. தமிழ்த் தேசியர்களை இழித்துப் பேசுவதன் மூலம் தங்களைத் தாங்களே சொறிந்து கொண்டு, தங்களின் குற்ற உணர்ச்சியை மற்றவர்களின் மீது பழி போடுவதன் மூலம் தணித்துக் கொண்டு சுகம் காணும் ‘இணையத்தளப் போராளிகளை’ நாம் இச்சமயத்தில் சரியாக இனம் காணுவோம்.

பரமக்குடி சம்பவங்களில் நிகழ்ந்த ஏழுத் தமிழர்களின் படுகொலைகளுக்கு எதிராக அய்யா.பழ.நெடுமாறன், அண்ணன் தொல்.திருமாவளவன், அண்ணன் சீமான் போன்ற தமிழுணர்வு கொண்ட தலைவர்களும், மே 17 போன்ற இயக்கத்தினரும் அறிக்கைகள் வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். யாராலும் ஏற்க இயலா, குறிப்பாக தமிழ்த் தேசியர்கள் முற்றிலும் எதிர்க்கிற பரமக்குடி கொலைகளை, திட்டமிட்டு இன நலனிற்காக போராடிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக நிறுத்துவது அருவருப்பான செயல். முகநூலில் போகிற போக்கில் முகப்புப் பக்கத்தில் தமிழ்த் தேசியர்களைப் பற்றியும், தமிழ் அமைப்புகள் குறித்தும் நஞ்சாய் இந்த 'இணையத்தளப் போராளிகள்’ கக்கியிருக்கின்ற மூன்றாம் தர விமர்சனங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. கணினித் திரைக்கு அப்பால்தான் உலகம் இருக்கிறது என்பதை அறிய மறுக்கிற இவர்களின் விமர்சனங்கள் நாகரீகமற்றவை. மேலும் காலங்காலமாய் பகைமை கொண்டிருக்கும் இரு குழுக்களிடையே நிலவும் வன்மத்தினை கொஞ்சமும் குறைய விடாமல் பாதுகாப்பதில் தான் இவர்களின் அரசியலே இருக்கிறது. நடந்து முடிந்த பரமக்குடி படுகொலைகளை எந்த தமிழ்த்தேசிய அமைப்பாவது ஆதரித்திருக்கிறதா என்றால் இவர்களிடத்தில் பதிலில்லை. அப்படி இருக்கையில் எதற்காக இத்தனை விமர்சன அம்புகள் என்றால்.. சமீப காலமாக இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற, மக்களிடம் தோன்றியிருக்கின்ற 'நாம் ஒரு இனம்’ என்ற உளவியல். தேசியத் தலைவர் பிரபாகரன் தான் எம் இனத்தின் ஒரே தலைவர் என்ற உளவியல். ஈழம் போலவே சாதிகளற்ற சமூகம் இந்த மண்ணிலும் விளைய வேண்டும் என்ற உளவியல். இந்த உளவியல் போக்குகளே மூன்று தமிழர் உயிர் காக்க தமிழக வீதிகளில் போர்க் குரல்களாய் மூண்டெழுந்தன. இந்த உளவியல் போக்குகள் தான் எப்போதும் ஊரை பிரித்துப் பார்த்து ரசிக்கும் இந்த இரண்டகன்களுக்குப் பிடிக்கவில்லை.

தமிழ்த் தேசியர்கள் அழிந்த தம் இனத்தின் வலியை சுமந்து நிற்கிறார்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனுக்காக தீக்குளித்து, தன்னுயிரைத் தந்த கொலுவைநல்லூர் முத்துக்குமார், பெரம்பலூர் அப்துல்ரவூப் எந்த சாதி, மத மக்களுக்காக ஈகை செய்தார்கள்?- இனத்தின் மேன்மைக்காக, இனத்தின் ஒற்றுமைக்காக தியாகம் செய்த அந்த மாவீரர்களை சாதியின் பேரால் நிகழும் இழிவான அரசியல்களால் அவமானப்படுத்துகிறோம். மூன்று தமிழர்களின் தூக்குதண்டனைகளுக்கு எதிராக மூண்டெழுந்த தமிழினம் ஏழு தமிழரை பறிகொடுத்து விட்டு எழுபதாக பிரிந்து கிடக்கின்றது. அதிகாரத்தின் உதடுகளில் தோன்றும் நமுட்டுச் சிரிப்பினை உணர்ந்து ஒன்றாகக் கிளம்ப வேண்டிய தருணம் இதுவாகும். எடுத்துக்காட்டாக நாம் இங்கே சாதியாய் பிளவுற்று செத்துக் கொண்டிருக்கையில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசு நீர்வழிப் பாதையை ஆய்வு செய்து முடித்து விட்டது. இன்னமும் ஈழப் போரின்போது நடைபெற்ற சிங்கள பேரினவாத குற்றங்களுக்கு நமக்கு உலக சமூக நியாயம் கிடைக்கவில்லை. கூடங்குளம் அணுமின் உலையை மூடச் சொல்லி 15,000/- தமிழர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். தூக்கு மேடையில் நிற்கும் மூன்று தமிழர்களின் உயிருக்கு உள்ள ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில் தமிழர்களின் உள்ளங்களில் மூண்டிருக்கிறது சா’தீ’. திசைதிருப்பல்கள் மூலமாகவே திசையற்றுப் போனான் தமிழன்.

பரமக்குடி சம்பவங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் வாழ்வும், அவர்கள் மீதான கொலைகளும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு உயிருக்கு விலை ஒரு லட்சம் அல்ல. விலை மதிப்பில்லா மனித வாழ்வினைப் பறிகொடுத்த ஏழு தமிழின சகோதரர்களின் குடும்பங்களை அரசே பராமரிப்பதுதான் ‍ இப்போதைக்கான இயன்ற தீர்வாக இருக்க இயலும்.
சாதீய முரண்கள் களையப்பட வேண்டுமானால், சுயசாதிப் பெருமிதம் சாக வேண்டும். சுயசாதிப் பெருமிதம் அழிய வேண்டுமானால் அதற்கு நேர் எதிராக, முரணாக நிற்கும் ஒட்டுமொத்த இனம் சார்ந்த, மொழி சார்ந்த சிந்தனைகள் மேலோங்க வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகளின் வளர்ச்சியும், எழுச்சியுமே பிளந்து கிடக்கும் இனத்தினை ஒற்றுமைப்படுத்தும். சாதிக்க வேண்டிய தமிழினம் சாதிக்காக நின்றால் இழப்புகள் இன்னும் அதிகமாகும்.
மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிர் தந்த செங்கொடியின் தியாகம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத இடைவெளியில் ஏழு தமிழினச் சகோதரர்களை அரச வல்லாத்திக்க துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி விட்டு அமர்ந்திருக்கிறோம். விலங்குகளை சுட்டுக் கொன்றால் தண்டனை விதிக்கும் இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதான் அவலமான முரண்.


சாதியால் பற்றெரியும் நிலத்தின் நாற்றம் தாங்காமல்
சிதையில் புரள்கிறான் முத்துக்குமார்...
பற்றெரியும் மூர்க்கத்தின் வெப்பம் தாங்காமல்
இருமிக் கொண்டிருக்கிறாள் செங்கொடி..
தூக்குக் கயிற்றினை அறுக்க நினைத்தவர்களின்
கரங்கள் இரண்டாக கிடக்கின்றன.
விரல்களை இழந்த கரமும்
கரங்களை இழந்த விரல்களும்
துடித்துக் கொண்டிருக்கின்றன..
தீ எரிகிறது.
சா’தீ’

- மணி.செந்தில் advmsk1@gmail.com)
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்












 


More
எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ தமிழீழம்வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவர்என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவிஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள்; ஆங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அர்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்த பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேலிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்தாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ள நரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காரி உமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை மாமனிதன்என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

கிளர்ச்சியாளன்
வழக்கறிஞர் - சேசுபாலன்
மற்றும் குழுமம்.

தாய்த் தமிழ்நாடு"

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...