Sunday, October 22, 2017

காமராஜர் தோல்வியுற்றது ஏன்?



தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் ஒரு பெருந்தலைவராக, மைல் கல்லாக கருதப்பட்டு வருகிறார். அவர் நல்லாட்சியை வழங்கினார் என்று அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அவரது ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் பல தரப்பினராலும் பேசப்படுகிறது. காமராஜரின் பணிகள் அளப்பரியவை. அவர் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணியும் அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமும் ஈடிணையில்லாதது. அவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளும் அவரது ஆட்சி சிறப்பை பறை சாற்றுகின்றன.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைவர் ஒரு 29 வயது இளைஞனால் தோற்கடிக்கப்பட்டார். அதன் பின் அவர் சார்ந்த கட்சியும் தமிழகத்தில் வீழ்ச்சி பெற்று இன்று வரை ஒரு பெயரளவுக் கட்சியாக இருந்து வருகிறது. காமராஜரின் ஆட்சி மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலமுமே நடுநிலையுடன் ஆய்வு செய்யப்படவில்லை, அதேபோல காமராஜரின் தோல்விக்கான காரணமும் நடுநிலையுடன் ஆய்வு செய்யப்படவில்லை என்றே கூறவேண்டும்.

எப்படி ராஜாஜியின் வீழ்ச்சிக்குப் பிறகு காமராஜர் அதிகாரத்திற்கு வருகிறாரோ அதேபோல தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் நடத்தைகள் காரணமாக அமைந்தன. காமராஜரின் தோல்வி என்பது காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஆகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் பணி அளப்பரியது. அதேவேளையில் முதல் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது.

அகிம்சை வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த காந்தி அந்தக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் பல நேரங்களில் ஆங்கிலேயருடன் இணக்கமாக பயணிக்க வேண்டியதாயிற்று. அது காங்கிரஸ் கட்சிக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்தியது. பல ஜனநாயக மரபுகளை கொலை செய்தது. பிராந்திய உணர்வுகளை அலட்சியப்படுத்தியது. இவற்றையெல்லாம் அமைதியாக கவனித்து வந்த மக்கள் இறுதியில் வாக்கு மூலமாகவே காங்கிரஸ் கட்சிக்குப் பாடம் புகட்டினர். குறிப்பாக அகிம்சை பற்றி பேசி வந்த காங்கிரஸ் சுதந்திரம் அடைந்த பிறகு துப்பாக்கியை கையிலேந்தி தாண்டவமாடியது. இது மக்கள் மனதில் தீரா வெறுப்பை ஏற்படுத்தியது. அதுவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தியது. காமராஜர் காங்கிரஸ் கட்சியின் இறுதி அத்தியாயத்தை எழுதினார்.

காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு காமராஜரின் ஆட்சி பற்றி மட்டும் சிலாகித்துப் பேசுவோர்  காமராஜரின் தோல்வி குறித்து நடுநிலையுடன் பேசுவதில்லை. காமராஜரின் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்வதே இந்தக் கட்டுறையின் நோக்கமாகும்.

காமராஜரின் தோல்விக்கான காரணங்கள்:-

1. 1942-ம் ஆண்டு பம்பாய் மாநாட்டில் காங்கிரஸ் கட்சிவெள்ளையனே வெளியேறுதீர்மானத்தை நிறைவேற்றியது. காந்தி முன்னிலையில், அந்த தீர்மானம் சிறுபிள்ளைத் தனமானது என்று கண்டித்து விட்டு ராஜாஜி அங்கிருந்து வெளியேறினார். இந்த தீர்மானத்தை தொடர்ந்து வெள்ளை அரசாங்கம் காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் கைது செய்து சிறை வைத்தது. இதனால் கொந்தளித்த மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் காவலர்கள், அரசு அலுவலகங்கள் என எல்லாவற்றையும் தாக்கத் தொடங்கினர். இது ஆகஸ்டு புரட்சி என்று கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த மக்கள் போராட்டத்தை ரவுடிகள், காலிகள் போராட்டம் என்று சொல்லி கண்டித்தது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட்ட ராஜாஜி அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுத்து கைது செய்ய உதவி வந்தார். பின்னாளில் அந்தப் போராட்டம் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்தான் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு நேரு தள்ளப்பட்டார்.

2. துவக்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் ராஜாஜி கோஷ்டி - சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு கோஷ்டிகள் இருந்தன. பின்னர் அது ராஜாஜி கோஷ்டி - காமராஜ் கோஷ்டி என்று மாறியது. இவர்களிடையே தொடர்ச்சியாக பதவிப் போட்டி நடைபெற்று வந்தது.

3. காந்தியின் மகனுக்கு ராஜாஜியின் மகளை திருமணம் முடித்திருந்த காரணத்தால் காந்தி காமராஜரை விட ராஜாஜியே காங்கிரஸ் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்றே விரும்பினார். அதோடு அவருக்கு காமராஜர் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. 1946-ம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி, காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரிடம் ஆலோசனை செய்யாமல் ராஜாஜியிடம் ஆலோசனை செய்தார். மேலும் தமிழக காங்கிரஸில் ஒரு (காமராஜ்) கோஷ்டி இருப்பதாகக்ளிக்என்ற வார்த்தையின் மூலமாக குறிப்பிட்டு தனது கட்டுரையில் எழுதினார். இதனால் ஆத்திரமடைந்த காமராஜர் காந்திக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதோடு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவிலிருந்தும் விலகினார்.

4. பாகிஸ்தான் கொடுத்து விட்டால்முஸ்லீம்களால் பிரச்சனை இருக்காது, முஸ்லீம்களுக்கு தனி நாடு கொடுக்காதது, பாண்டவர்களுக்கு நாடு கொடுக்காது போன்றதுஎன்ற பிரிவினை கருத்தை முன்மொழிந்து அதை பிரச்சாரம் செய்தார் ராஜாஜி. சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த காமராஜர் அத்தகைய ராஜாஜியின் உதவியை நாட வேண்டியதாயிற்று.

5. இரண்டாம் உலகப்போர் வெள்ளையருக்குச் சாதகமாக திரும்புகிறது என்பதை உணர்ந்த காந்தி ராஜாஜியின் நட்பை நாடினார். காந்தி உண்ணாவிரதம் இருந்த காலங்களில் அவருக்காக வெள்ளையரிடம் தூது சென்றவர் ராஜாஜியே.

6. ஆகஸ்டு புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களை ரவுடிகள், காலிகள் என்று கூறி அவர்களை காட்டிக் கொடுத்த ராஜாஜி பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்குவது கண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைய முயற்சித்தார். அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருக்குத் தெரியாமல் திருச்செங்கோட்டில் ஒரு மாநாட்டை நடத்தி அதில் தன்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்துகொண்டார். ஆனால் அது செல்லாது என்று காமராஜர் அறிவித்தார்.

7. ராஜாஜி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை அடைய முயற்சிப்பதை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திருப்பரங்குன்றத்தில் ஒரு மாநாடு நடத்தி ராஜாஜியின் தேர்வு செல்லாது என்று அறிவித்தனர். ஆனால் திருப்பரங்குன்றம் மாநாடு நடந்த இரவே காங்கிரஸ்காரர்களுக்கும் காந்தியவாதிகளுக்கும் இடையே ஒரு ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தான் தங்களுக்கு விரோதி அல்ல என்றும், தேவர் காரணமாகவே திருப்பரங்குன்றம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றும் காமராஜர் ராஜாஜிக்கு ஒரு எழுத்துப்பூர்வமான தகவலை  அனுப்பி வைத்தார்.

8. 1946-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் மாகாண பிரதமர் (முதல்வர்) தேர்வு நடைபெற்றது. தெலுங்கரான டி. பிரகாசம் போட்டியிட்டார். காமராஜர் முத்துரங்க முதலியாரை முன்மொழிந்தார். ஆனால் தெலுங்கு உறுப்பினர்கள் அதிகமாக உள்ள காரணத்தால் டி. பிரகாசம் வெற்றி பெற்றார். அவர் காமராஜர் பரிந்துரைத்த அமைச்சர்களின் பெயர்களை ஏற்கவில்லை. இவ்வாறு கட்சித் தலைவரான காமராஜருக்கும் டி. பிரகாசத்திற்கும் கருவேறுபாடு ஏற்பட்டது.

9. கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் 1947-ம் ஆண்டு காமராஜரின் ஆதரவு பெற்ற, தெலுங்கு பேசக் கூடிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுகிறார். அவர் கொண்டு வந்த வகுப்புவாரி இடஒதுக்கீட்டுச் சட்டம், அறநிலைய மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது. முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்த காமராஜர் பின்னர் அவருக்குப் பதிலாக குமாரசாமி ராஜாவை முதல்வராக்க முடிவு செய்தார்.

10. 1949-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி குமாரசாமிராஜா காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த குமாரசாமி ராஜா 1942-ம் ஆண்டு நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியின்போது பெண்களை மானபங்கப் படுத்திய வெள்ளை காவல் அதிகாரிகளுக்கு தேனீர் விருந்துகொடுத்து உபசரித்தவர் ஆவார்.

11. சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் வந்தது. தேர்தலுக்கு முன்பாக சென்னை மாகாணத்தில் கடுமையான அரிசிப் பஞ்சம் நிலவியது. பஞ்சத்தை சமாளிக்க முதல்வர் குமாரசாமி குடும்பம் ஒன்றுக்கு ஆறு அவுன்ஸ் அரிசியே வழங்கப்படும் என்று அறிவித்தார். இது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.  

12. 1947-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கோட்டா பெர்மிட் முறைகள் மூலமாக லட்சம் லட்சமாக சம்பாதிக்கத் துவங்கினர். அதேபோல முன்பு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தாங்களும் காங்கிரஸ் கட்சியினர் என்று சொல்லி செயல்படத் துவங்கினர். இது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்பை உருவாக்கி இருந்தது.

13. 1952 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள், திமுக, பெரியார், தேவர் போன்றோர் பிரச்சாரம் செய்தனர். இதனால் ஒருங்கிணைந்த சென்னை ராஜ்யத்தில் மொத்தம் 375 தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் 223 தொகுதிகளை கைப்பற்றினர். காங்கிரஸ் கட்சியால் 152 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்தத் தோல்வி காமராஜருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

14. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ராஜாஜியின் உதவியை நாடினார். பிரகாசம் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 168 சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று தங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

15. பொறுப்பு முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ராஜாஜியை நியமிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு அவரை நியமித்த ஆளுநர் ஸ்ரீ பிரகாசா, ராஜாஜியை அழைத்து ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். ராஜாஜியின் நியமனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

16. அப்போது 152 மற்றும் 168 இதில் எது பெரிய எண்ணிக்கை என்று கேள்வி எழுப்பியபோது 152 தான் பெரியது, அதனால்தான் அவர்களை ஆட்சியமைக்க அழைத்தாக ஆளுநர் ஸ்ரீபிரகாசா விளக்கம் அளித்தார். மேலும் ஒரே கட்சி, சின்னத்தில் போட்டியிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர்தான், பல கட்சி, பல சின்னங்களில் போட்டியிட்ட சுயேட்சைகளை ஒரே கட்சியாக ஏற்க முடியாது என்று விளக்கம் அளித்தார். இந்திய அரசியலில் நடத்தப்பட்ட முதல் ஜனநாயக படுகொலை இதுவே.

17. இவ்வாறு தனது தந்திரத்தால் ஆட்சியமைத்த ராஜாஜி, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எஸ். படையாட்சி, மாணிக்கவேல் நாயக்கர் ஆகியோரையும், அவர்களின் கட்சிகளான உழவர் உழைப்பாளர் கட்சி, காமன் வீல் கட்சிகளை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். மாணிக்க வேல் நாயக்கருக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்த ராஜாஜி அவர்களின் கட்சிகளை கூட்டணி கட்சிகளாகவோ அல்லது அமைச்சரவையை கூட்டணி அமைச்சரவையாகவோ அமைக்கத் தயாராக இல்லை.

18. 1952-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலே, அரசு இயந்திரத்தைக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கெடுபிடியுடன் நடத்தப்பட்டது. குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்த ராஜாஜி முதல்வராக இருந்த மமதையில், ‘‘நான் வேண்டுமானால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள்என்று  சவால் விடுக்கும் வகையில் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மக்கள் பார்வர்டு பிளாக் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தனர். எங்கே எதிர்க்கட்சிகள் ராஜினாமா செய்யக் கோருவார்களோ என்று அஞ்சிய ராஜாஜி தங்கள் கட்சி பெரும்பான்மை பலம் கொண்ட சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற ஒரு கேலிக் கூத்தை அரங்கேற்றினார். இது காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயகத்தின் மீதாக நடத்திய இரண்டாவது தாக்குதல் ஆகும்.

19. ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம்குலக் கல்வித் திட்டம்என்று அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜாஜி பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இந்தச் சூழலில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் அரசியல் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. பிராமணரான சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக் கொண்ட காமராஜர் பதவிக்கு வருவதற்காகபிராமணர், பிராமணர் அல்லாதோர் பிரச்சாரத்தை துருப்புச் சீட்டைப் பயன்படுத்துகிறார்.


20. 1953-ம் ஆண்டு ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட சித்தூர் பகுதியை தமிழகத்துடன் இணைக்க கோரி போராட்டம் நடத்திய .பொ.சி.க்கு ஆதரவாக திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நேரு முட்டாள்கள் என்று கூறினார். கல்லக்குடியில் கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியானர்கள். போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.

21. இதே காலகட்டத்தில்தான் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்ட. ஆந்திர, கர்நாடக, கேரள பகுதிகள் அந்த மாநிலங்களுடன் சென்று விடுகின்றன. மேற்படி மாநிலங்கள் அந்தந்த மாநிலப் பெயரால் அழைக்கப்பட்டபோது சென்னை மாகாணம் மட்டும் எஞ்சியுள்ளசென்னை மாகாணம்என்றே அழைக்கப்பட்டு வந்தது. அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் தலைவர் காமராஜர் முதல்வராக ஆகிறார். பின்னர் குடியாத்தம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து அதில் காமராஜர் வெற்றி பெறுகிறார். அந்த தேர்தலில் அவர் தோற்றிருந்தால் சி. சுப்ரமணியம் முதல்வர் ஆகியிருப்பார். அவர் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக திராவிடர் கழகமும், திமுகவும் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்தன.

22. மொழிவாரி மாகாணப் பிரிவினையின்போது காமராஜரின் நடத்தை தமிழ் மக்களின் உணர்வையும், நலனையும் மிகவும் பாதிப்பதாக அமைந்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பெரும் நிலப்பரப்பு ஆந்திர, கர்நாடக, கேரள எல்லைக்குள் சென்றன. அதோடு நீர்வள ஆதாரங்களும் சென்றன. கேரள எல்லையில் உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டில் சேர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல ‘‘மேடாவது, குளமாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளேதானே இருக்கு?’’ என்று கிண்டலடிக்கும் பாணியில் பதிலளித்தார் காமராஜர். அந்தப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டிருந்தால் இன்று முல்லைப் பெரியாறு பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. தனக்கு பூகோள அறிவு உள்ளது என்றும் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த மக்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று தனக்குத் தெரியுமென சொல்லிக்கொண்ட காமராஜர் எல்லையை சரியாக பிரிக்கா விட்டால் ஆற்றுநீர் உரிமையை இழந்து விடுவோம் என்பதை அறியாமல் போய்விட்டார்.

23. அதேபோல தமிழர்கள் முன்னெடுத்த எல்லைப் போராட்டங்களை காமராஜர் அலட்சியப்படுத்தினார். .பொ.சி., மார்ஷல் நேசமணி போன்றோர் எல்லைப் போராட்டத்தை வலுவாக முன்னெடுத்தனர். மா.பொ.சி.-யால் திருத்தணியும், மார்ஷல் நேசமணியால் குமரி மாவட்டமும் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன.

24. மொழிவழி பிரிவினையை ஏற்காமல் தட்சிண பிரதேசத்தை உருவாக்குவதற்கு எதிர்ப்பு, தமிழக எல்லைப் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும், சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைப்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் 1956-ம் ஆண்டு பிப்ரவதி 20-ம் தேதி போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்ட ஊர்வலத்தில் போலீசார் திடீரென புகுந்து தடியடி நடத்தினர். இதில் கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜீவா, எம்.வி. வெங்கட்ராமன் ஆகியோர் காயமடைந்தனர்.

25. தூய காங்கிரஸ் தியாகியான சங்கரலிங்கம் நாடார், சென்னை மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 1956 ஜூலை 27 முதல் உண்ணாவிரதத்தை துவக்கினார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரம் நடைபெற்ற இடத்தில் அல்வா துண்டுகள், உணவுப் பொட்டலங்களை வீசிச் சென்றனர். நாட்கள் கடந்தன. அவரது உடல் நிலை மோசமடைந்து. கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமூர்த்தி, அண்ணாதுரை ஆகியோர் அவரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவர் அனுப்பிய கோரிக்கை கடிதங்களில் ஒன்றில் மரண வாக்குமூலம் போல, தான் இறந்தால் தனது உடலை கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். காமராஜர் அவரை கண்டுகொள்ளவேயில்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டினால் தமிழகத்திற்கு முதலீடுகள் கிடைக்காது என்று காமராஜர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அவர் இறந்த பின்னால் மெட்ராஸ் ஸ்டேட்டை தமிழ்நாடு என்று எழுதிக் கொள்ளலாம் என்று காமராஜர் அறிவித்தார். சங்கரலிங்கத்தின் மறைவு தமிழகத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை தூண்டியது. (.பொ.சி., மார்ஷல் நேசமணி, சங்கரலிங்கம் ஆகிய மூன்றுபேருமே நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

26. எந்த ராஜாஜியால் பாகிஸ்தான் கொடுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டதோ அதே ராஜாஜிதான் சென்னை நகரம் தமிழகத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்தார். இல்லாவிட்டால் சென்னையும் ஆந்திராவுக்கு சென்றிருக்கும். தெலுங்கர்களின் அழுத்தத்தில் இருந்த நேரு சென்னையை ஆந்திராவுடன் இணைக்கவே விரும்பினார். ஆனால் அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, அவ்வாறு செய்தால் நடக்கும் விளைவுகளுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பின்னரே நேரு அந்த முயற்சியை கைவிட்டார்.

27. திமுகவும், மாணவர்களும் இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் காமராஜர் இந்தி மொழிக்கான ஆதரவாளராகவே இருந்து, அதற்கு ஆதரவாகவே பேசி வந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அரசாங்கத்தின் கணக்கு மிகச் சிலரே.

28. அதேபோல ராஜாஜி, காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் அமைச்சர்களின் திமிரான பேச்சுக்களை அளவிட முடியாது. பஞ்சகாலத்தில் உணவு கிடைக்காவிட்டால் மக்களைபுண்ணாக்கு தின்னுங்கள்என்று சொன்னார் ஒரு அமைச்சர். உள்துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம் “தேவரை சிசுபாலனை வதம் செய்தது போல வதம் செய்வோம்” என்று பேசினார்.

29. பொதுவாகவே சுதந்திரம் வரை அகிம்சை பற்றி பேசிவந்த காங்கிரஸ் கட்சியினர் சுதந்திரத்திற்குப் பின்னர் துப்பாக்கிக் கலாச்சாரத்தை முன்னெடுத்தனர். கம்யூனிஸ்ட்கள் மற்றும்  எதிர்க்கட்சியினரை ஒழித்துக் கட்டும் வேலையிலும் இறங்கினர். இதில் தமிழக காங்கிரஸ் கட்சி விதிவிலக்காக இருக்கவில்லை. விவசாயிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைவெறி தாண்டவமாடியது.

30. மதுரை மில் தொழிலாளிகளை மண்டைகளை பிளந்தது, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை சுட்டுக் கொன்றது, தூத்துக்குடி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு, இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட்டுத் தள்ளியது, முதுகுளத்தூர் துப்பாக்கிச் சூடு போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

31. காமராஜர் சர்வாதிகாரியாக நடந்துகொள்கிறார், ஆளைப் பார்த்து, பணத்தைப் பார்த்து, சாதி பார்த்து வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார், அவர் உண்மையான காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினராலேயே குற்றம் சாட்டப்பட்டது. அவ்வாறு குற்றம் சாட்டிய தலைவர்கள் சீர்திருத்தக் காங்கிரஸ் என்ற கட்சியைத் துவங்கி பார்வர்டு பிளாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி தமிழக வரலாற்றில் ஏற்பட்ட முதல் எதிர்க்கட்சி என்றால் மிகையாகாது.

32. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்து பெரியார் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அவர் பச்சைத் தமிழர் காமராஜரின் கரத்தை வலுப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, அண்ணாதுரைஅந்தக் கரம் வலுப்பெற்றால் தமிழரின் குரல்வளையை நெறிக்கும். வடநாட்டவருக்கு காவடி தூக்கும். காமராஜர் எதில் வல்லவர்? தமிழ் மொழியைக் காப்பதில்- வளர்ப்பதில் வல்லவரா? தமிழர்தம் உரிமைகளை காப்பதில் வல்லவரா? தமிழர்களின் எல்லைகளை காப்பதில் வல்லவராக இருந்தாரா? இல்லையேஎன்று கேள்வி எழுப்பினார்.

33. 1957 ஜூன் 12-ம் தேதி திருநெல்வேலியில் பேசிய தேவர், “வருகிற தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காமல், தேர்தல் சட்டத்தை மீறாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் தனது சொந்த தொகுதியாகிய சாத்தூரில் காமராஜ் நின்றால், அவரை நாங்கள் தோற்கடிப்போம். இல்லையேல் நான் அரசியல் துறவறம் பூணத் தயார்பகிரங்க சவால் விடுத்தார். இவ்வாறு சவால் விட்டதற்கு காரணம், 1952-ம் ஆண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட காமராஜரை எதிர்த்து தேவரின் ஆதரவு பெற்ற ஜிடி நாயுடு போட்டியிட்டார். காமராஜரின் தோல்வி உறுதி என்று இருந்த நிலையில் தில்லுமுல்லு வேலைகளைச் செய்தே வெற்றி பெற்றார். சாத்தூர் தேர்தலிலும் காமராஜர் தனது வழக்கமான வேலைகளை காட்டினார். தேர்தல் நடக்கும்போதே 48 கிராமங்களுக்கு மின் இணைப்பு, 23 கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரப்பட்டது, 18 பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் சர்வசாதாரணமாக நடந்தது. இவ்வளவு வேலைகளுக்குப் பிறகும் அவரால் மூவாயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.

34. சீர்திருத்தக் காங்கிரஸ் - பார்வர்டு பிளாக் கூட்டணியின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்த முத்துராமலிங்கத் தேவர், காமராஜருக்கும் கள்ளநோட்டு அடிப்போருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டினார். முதல்வராக இருக்கும் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் தீவிரத் தன்மையை தான் உணர்ந்தே பேசுவதாக கூறிய தேவர், குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும், இது பொய் என்றால் தன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சவால் விடுத்தார். ஆனால் காமராஜர் இறுதிக் காலம் வரை இந்தக் குற்றச் சாட்டை மறுக்கவும் இல்லை. தேவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

35. முதுகுளத்தூர் கலவரம் தமிழகத்தில் நடத்தப்பட்ட மாபெரும் அரச பயங்கரவாதம் என்று சொன்னால் மிகையாகாது. முதுகுளத்தூர் சட்டமன்றத் தேர்தலில் பல தில்லுமுல்லுகளைச் செய்தும் வெற்றி பெற முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அந்தத் தொகுதியில் கலவரம் உருவாகும் சூழலையும், அதில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்படும் சூழலையும் உருவாக்கினர். இந்த விஷயத்தில் காமராஜரின் அரசாங்கம், காங்கிரஸ்-பார்வர்டு பிளாக் கட்சிகளின் மோதலை மறவர்-பள்ளர் மோதலாக மாற்றிக் காட்டியது. மேலும் அரசு இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி மறவர் தரப்பினரை மட்டும் பழிவாங்குவதற்காக செயல்பட்டது. இருதரப்பினருக்கும் பெரும் சேதம் ஏற்பட்டபோதும் மறவர்களின் இழப்பு பற்றி பேசப்படவே இல்லை.

36. கீழத்தூவலில் இம்மானுவேல் கொலையாளிகள் என்ற பெயரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் கண்கள் கட்டப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் கூட அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினரால் தென் மாவட்டங்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் அமைச்சர்கள் சாணி வீச்சு, செருப்பு வீச்சு, கல் வீச்சுக்கு ஆளாகினர். அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரங்களில் ‘‘கண்ணைக் கட்டிச் சுட்ட காமராஜருக்கா உங்கள் ஓட்டு?’’ என்ற கேள்வி எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்பட்டது. 1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத் தேர்தலின்போது கூட காமராஜர் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதற்கு பதிலடி கொடுத்த எம்ஜிஆர், “முதுகுளத்தூர் பிரச்சனையைத் தூண்டிவிட்டவரே காமராஜர்தான். முதுகுளத்தூரில் குற்றம் செய்தவர்கள் பலராக இருக்கலாம். ஆனால் தேவர்களை மட்டும்தான் சுட்டார்கள். காமராஜரின் ஸ்தாபனா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் எங்கள் கட்சியில் இணைவதால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக அவர் எங்களை விமர்சிக்கிறார்” என்று பேசினார்.

37. முதுகுளத்தூர் கலவரம் நடைபெற்ற காலத்தில் மா.பொ.சி., சிவந்தி ஆதித்தனார் போன்றோர் காமராஜர் - தேவர் இடையே ஒரு பேச்சு வார்த்தையை நடத்தி சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட காமராஜர் பின்னர் அதற்கு மறுத்து விட்டார். அதேபோல கலவரம் நடைபெற்ற காலத்தில் 3 நாட்கள் மதுரையில் தங்கியிருந்த காமராஜர் கலவரப் பகுதிக்குச் செல்லவேயில்லை. கலவரம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் காமராஜர் அரசாங்கம் ஒரு அதிகாரியை மட்டுமே வைத்து விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது.

38. முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் சேகரன் கொலை காரணமாகத்தான் இணக்கமாகவே இருந்து வந்த மறவர்- பள்ளர்கள் இடையே துவேஷம் பரவியது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்தே, தமிழகத்தில் சாதிவெறி தலை விரித்தாடத் துவங்கியது. இதுபோன்ற ஒரு பின்விளைவுக்கு காமராஜரின் நடவடிக்கைகளே அடித்தளமாக அமைந்தன.

39. காமராஜர் அரசாங்கம் இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட பின்னர் 18 நாட்கள் கழித்து தேவரை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது. மேலும் அந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்த்தது. இந்த வழக்கில்தான் தீவிரவாதிகளுக்கு அமைக்கப்படுவது போல முதன் முதலாக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தேவர் கொலைக் குற்றவாளி என்று நிரூபிக்கும் முயற்சியிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது. ஆனால் வழக்கில் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காமராஜர் அரசாங்கம் வழக்கை மேல் முறையீடு செய்யவோ, கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கலாமா என்று விசாரணை செய்யவோ தயாராக இல்லை.

40. சாதி ஒழிப்பு போராட்டம் நடத்தும் பெரியார் ஒரு பைத்தியக்காரர், திமுக நடத்தும் இந்தி எதிர்ப்பு போராட்டம் சிறுபிள்ளைத்தனம், எல்லைப்போரட்டம் நடத்திய மபொசியின் செயல் முட்டாள்தனம் என்று சொன்ன நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 1958 ஜனவரி 6-ம் தேதி சென்னை வரும் நேருவுக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டது. இதை அறிந்ததும் ஆத்திரமடைந்த காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்றோரை சிறையிலடைத்தார். இருந்தும் கருப்புக்கொடி காட்டிய திமுகவினரை காவல்துறை கொத்துக் கொத்தாக கைது செய்தது. இதில் தப்பியவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இதில் இரண்டுபேர் கொல்லப்பட்டார்கள். பின்னர் இதுபற்றி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணா, கருணாநிதியை கைது செய்தவர்களுக்கு அவரது கார் டிரைவரும் அச்சமூட்டும் நபராக தென்படுகிறார். இப்படி அஞ்சி அஞ்சி சாவதை விட, ஒருமுழக் கயிறு கிடைக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

41. அண்ணாதுரை பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிட முனைந்ததால் பெரியார், அண்ணாதுரையையும் அவரது ஆதரவாளர்களையும்கண்ணீர்த் துளிகள்என்று சொல்லி கடுமையாக விமரிசிக்கத் தொடங்கினார். அதுவரை காங்கிரஸை கடுமையாக எதிர்த்து வந்த அவர், காமராஜரைபச்சைத் தமிழர்என்று பாராட்டி அவரது நடவடிக்கைகளை புகழ்ந்து தள்ளத் தொடங்கினார். காமராஜர்-பெரியார் கூட்டணி, காமராஜரின் கொள்கை இழப்பின் இறுதி கட்டமாக அமைந்தது. பதிலுக்கு காமராஜர் பெரியாரின் நாத்திக, தமிழர் விரோத போராட்டங்களுக்கு துணை போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

42. 1960-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு வழக்கறிஞராக நீதிபதியான அழகிரிசாமி நியமிக்கப்பட்டார். இது வழக்கறிஞரை இந்தப் பதவிக்கு நியமிக்கும் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் வழக்கறிஞர் சங்கம் இந்த நியமம் முறையற்றது என்று தீர்மானம் நிறைவேற்றியது. அமைச்சர் சி. சுப்பிரமணியத்திற்கு நெருக்கமானவர் என்ற காரணத்தாலேயே காமராஜர் அரசு நீதிபதியாக இருந்த அழகிரிசாமியை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. “ஜனநாயக நாடுகளில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுப்பது சகஜமானதுதான் என்று ஜெகதீச அய்யர் என்ற நீதிபதி கருத்துத் தெரிவித்தார். இந்தப் பிரச்சனை நீதிமன்றம் எடுத்துச் செல்லப்பட்டு சட்டமன்றம் - நீதிமன்றம் இடையே விரோதப் போக்கை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்சனையை தீர்க்க காமராஜர் சட்டமன்ற கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சமாளிக்க வேண்டியதாயிற்று.

43. 1960-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி குமாராபாளையத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் ஜனாதிபதியின் இந்தித் திணிப்பு உத்தரவை திருப்பி பெறவேண்டும், இல்லாவிட்டால் தென்னகத்தை விடுவிக்கும் சுதந்திரப் போராட்டம் தொடங்கும் என்று தீர்மானித்து அண்ணா தலைமையில் போராட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் ஆத்திரமடைந்த காமராஜர் திமுக போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். குறிப்பாக, துப்பாக்கி இருக்கிறது, அதில் தோட்டாவும் இருக்கிறது என்று காமராஜர் பேசியதாக அண்ணாவுக்கு செய்தி கிடைத்தது. அதற்கு பதிலளித்த அண்ணா, மொழிப்போர் நடந்தபோது மூன்று இளைஞர்கள்தான் உயிர் தியாகம் செய்தார்கள். தற்போது மூன்று லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார். இந்தப் பதில் முடிந்தால் சுட்டுப்பாருங்கள் என்பதாக இருந்தது.

44. 1962 தேர்தலில் திமுக 50 இடங்களை கைப்பற்றியது. ஆனால் அண்ணாதுரை வெற்றி பெறவில்லை. இது பற்றி ஒரு கட்டுரை எழுதிய அண்ணாதுரை, “காமராஜர் ஒருமுறை என்னிடம் கேட்டார். ‘‘ஒரு ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டால் உன்னை தோற்கடிக்க முடியாதா? என்று. அதை அவர் இப்போது செய்து காட்டினார். எங்களை தோற்கடிக்கச் செலவு செய்யப்பட்ட பணம் ஐந்து லட்சம் அல்ல. கணக்கில்லா லட்சங்களை செலவழித்திருக்கிறார்கள். அதனால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்என்று கூறினார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு காமராஜர் தரப்பிலிருந்தோ, காங்கிரஸ் தரப்பிலிருந்தோ எந்தவித விளக்கமோ, மறுப்போ கொடுக்கப்படவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைக்க முயன்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் முன்பு பெற்றிருந்த இடங்களில் 12 இடங்களை இழந்திருந்தது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை துவக்கி வைத்தவர் காமராஜர் என்றால் மிகையாகாது.

45. 1961-ம் ஆண்டு நடந்த சீனப் போரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்தப் போரின் தோல்வி நேருவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் தனது ஆத்திரத்தை திமுக மீது திருப்பினார். பிரிவினை பேசும் கட்சிகளை தடைசெய்யும் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தார். இதிலிருந்து தப்பிக்க திமுக தனது திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதாக தீர்மானம் இயற்றியது. இத்தனைக்கும் அண்ணாதுரை போருக்காக நிதி திரட்டி மத்திய அரசுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

46. 1959-ம் ஆண்டு திமுக மதுரை, கோவை, திருச்சி நகராட்சிகள் மற்றும் சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது. 1963-ம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் திருவண்ணாமலை இடைத் தேர்தலில் தோல்வி பெற்றது. இது காமராஜருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய பிரதமராக நேருவின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திலும், காந்தியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதைத் தொடர்ந்தே காமராஜர், மூத்த தலைவர்கள் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து முன்மாதிரியாக தானே ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக ஆன பக்தவத்சலத்தால் மக்களின் அபிமானத்தை பெற முடியவில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்த நிலையில் 1967-ம் ஆண்டு தேர்தல் நெருங்கியது. காமராஜர் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்ற நிச்சயமில்லாத நிலையில் விலைவாசி உயர்வு குறித்து மிகவும் கவலைப்பட்டார்.

47.  அண்ணாதுரை 1967-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, ஆதித்தனாரின் நாம் தமிழர், மாபொசியின் தமிழரசு கழகம் என சிறிய கட்சிகளைக் கொண்ட பெரிய கூட்டணியை ஏற்படுத்தினார். இது பற்றி பேசிய காமராஜர், “எட்டு நொண்டிகளைக் கொண்ட கூட்டணியை படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்” என்று கேலியாக பேசினார். இதற்கு பதிலளித்த ராஜாஜி, “காமராஜர் படுப்பது நிச்சயம், ஜெயிப்பது சாத்தியமல்ல” என்று பேசினார்.  இந்த நிலையில்தான் காமராஜர் தோல்வி பெற்றார்.

1938-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்கத் தேவர் போன்றோர், “வெள்ளையருடன் இணக்கமாகச் சென்று சுதந்திரம் பெறுவது நாட்டிற்கு கேட்டையே ஏற்படுத்தும், காங்கிரஸ் கட்சியில் முதலாளித்துவ சக்திகள் ஆதிக்கம் பெற்று வருகின்றன, தலைவர்களுக்குள் பதவி சண்டை நடைபெறுகிறது, கட்சி பொதுமக்களை விட்டு விலகி வருகிறது” போன்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த காமராஜர் தன் இறுதி காலத்தில்தான் அதை உணர்ந்துகொண்டார். அந்த புரிதல் அவருக்கு கைகொடுப்பதாக இருக்கவில்லை.

எப்போதுமே ஒரு பொருளால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டே அதன் தேவை நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், காந்தி, நேரு, ராஜாஜியின் நடவடிக்கைகள், அவற்றுடன் காமராஜரின் நடவடிக்கைகள் என்ற பல காரணங்களின் ஒட்டுமொத்தச் சேர்க்கையால்தான் காமராஜர் தோல்வியுற்றார். அரசியல்வாதிகள் எப்போதும் “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்என்ற சிலப்பதிகார வரிகளை நினைவில் கொள்வது நல்லது.

ஆதார நூல்கள்
- தமிழக அரசியல் வரலாறு - சுதந்திரம் முதல் எமர்ஜென்ஸி வரை - ஆர். முத்துகுமார்
- காமராஜர் வாழ்வும் அரசியலும் - மு கோபி சரபோஜி
- முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர் - ஏ.ஆர். பெருமாள்

https://www.youtube.com/watch?v=9UaJzYB_Uwg

---------------------------------------------------------------------------------------

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...