Wednesday, May 30, 2012

தேவை தமிழர்களுக்கான குறைந்தபட்ச பொதுத் திட்டம்




கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரச்சாரமும் ஒரு காரணமாக அமைந்தது. ஈழ இனப்படுகொலையால் கொதித்துப் போன இளைஞர்கள் சாதிமத வேறுபாடின்றி சீமானின் பின்னால் திரண்டு நின்றனர். அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பு கருணாநிதிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த சீமான் தேர்தலுக்குப் பின்னர் அமைதியாகி விட்டார். இதனால் இவர் ஜெயலலிதாவின் ஆதரவாளர் அல்லது அவருக்கு பயந்தவர் என்று திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


ரசிகர் மன்றங்களும் ரசிகர்களும்

தமிழர்கள் பொதுவாக எப்போதுமே கவர்ச்சிகரமான, மேலேட்டமான, பொய்யான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்காளாக இருக்கிறார்கள். உதாரணமாக திரைப்பட நடிகர்களின் ரசிகர்களை கூறலாம். திரையுலகின் ஆரம்ப காலங்களில் நடிகர்கள் பி.யூ. சின்னப்பா – எம்.கே. தியாகராஜ பாகவதரின் ரசிகர்கள் மோதிக்கொண்டனர். (http://www.lakshmansruthi.com/legends/puc.asp) அதன்பின் எம்ஜிஆர் – சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். அதேபோல கமல்ஹாசன் – ரஜினிகாந்த் ரசிகர்களும் தற்போது விஜய் – அஜீத் ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள். இந்த ரசிகர்களுக்கு இவர்களின் உலகம்தான் பெரிது. இவர்கள் திரைத் துறையின் ரகசியங்களை அறியாதவர்கள். திரையுலகின் பின்னணி என்ன? அதில் எவ்வளவு பணம் புரளுகிறது? தேவையான இதர திறமைகள் என்ன? ஒரு தனிப்பட்ட மனிதரின் திறமையால் ஒரு திரைப்படம் உருவாகிறதா? அதில் ஒரு நடிகரின் பங்கு என்ன? என்பது போன்ற ரகசியங்களை அறிந்தால் ரசிகர் மன்றம் என்ற ஒன்று தேவையா? நாம் நமது ரசிப்புத் தன்மையை எதற்காக யாருக்கும் அடகு வைக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழலாம்.

நடிகர்கள் நிச்சயமாக கலைச் சேவை செய்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் சேவையாக மட்டுமே அதைச் செய்து விடவில்லையே? அப்படி இருக்கும்போது எதற்காக ஒரு ரசிகர் தனது கலா ரசனைக்காக மற்றொருவருடன் மோதிக் கொள்ள வேண்டும்? ஆனால் இதுபோன்ற ரசிகர் கூட்டத்தினர்தான் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாத ஒன்றாக்கியுள்ளனர். இந்த நம்பிக்கையில்தான் நடிகர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். உதாரணத்திற்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது தவிர்க்க முடியாதது என்று அவரது தந்தை இயக்குனர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு அரசியலின் அடிப்படை என்ன வென்று தெரியுமா? (இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்) இவருடைய கொள்கை என்ன? தமிழ் மக்களின் பொது பிரச்சனைகளை பற்றிய கருத்து என்ன? மக்கள் சேவை என்ன? மக்களை சந்திக்க தயாரா? அரசியலில் இறங்கித்தான் சேவை செய்ய வேண்டுமா? தனது புகழை - செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு சேவைகளை, சாதனைகளை செய்து காட்டலாமே? ஏதாவது ஒரு கிராமத்தை தத்து எடுத்து அந்த கிராமத்தை முன்னேற்றி காட்டலாமே? அதன்பின் அரசியலுக்கு வரலாமே? இதையெல்லாம் விஜய் ரசிகர்களும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தங்களை தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள். ரசிகர் என்பது ஒருவகையிலான உளவியல் பணிவு நிலை என்றே சொல்லலாம். இந்த மனநிலையே அந்நியர்கள் நம்மை ஆள்வதையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதாக உள்ளது.  

இவர்களைப் பற்றி ஏன் பேச வேண்டியுள்ளது? என்றால் இவர்கள்தான் எதிர்கால தமிழர்கள். இவர்கள்தான் எதிர்கால தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரத்தை நிர்ணயிக்க உள்ளவர்கள். எனவே ரசிகர்கள் தாங்கள் எந்த நடிகருக்கான ரசிகர்களாக இருக்கிறோம் என்பதை பொருட்படுத்தாமல் தங்களின் தேவை என்ன? சமுதாயத்தின் தேவை என்ன? நம்மால் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்ன? என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். இவர்கள் ரசிகர் மன்றங்களை கலைக்கவோ அல்லது தங்கள் அபிமான நடிகர்களை வெறுக்கவோ தேவையில்லை. தங்கள் ரசிகர் மன்றங்களைக் கொண்டே நாட்டு மக்கள் மீதும் கவனம் செலுத்தலாம். நாட்டு மக்களுக்காக பாடுபடலாம். அது போன்ற கருத்தொற்றுமை அனைத்து ரசிகர்கள் இடையே ஏற்பட வேண்டும். இவர்கள் எதிர்கால தமிழர்களின் அரசியல், சமூக நலனை கருத்தில் கொண்டு கற்பனையான உலகிலிருந்து உண்மையான உலகுக்கு வந்து அரசியல் அக்கறையுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

கட்சி விசுவாசிகள்

என்னை பொறுத்தவரை ரசிகர் மன்றங்களுக்கும் அரசியல் கட்சி விசுவாசிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்றே சொல்வேன். இவர்கள் முன்னாள் ரசிகர்களாக இருந்த காரணத்தினாலோ என்னவோ அரசியலிலும் அதேபோல நடந்து கொள்கின்றனர். கட்சித் தொண்டர்கள் என்பவர் யார்? அவர்களும் பொதுமக்களின் ஒரு பகுதிதானே? பொது மக்களின் நலனில் அவர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தானே அவர்கள் அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள் அல்லது இருக்க வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக ஒரு ஜனநாயக நாட்டில் கட்சித் தொண்டர்கள் எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் ஒரு கட்சியில் உறுப்பினர்களாக இருந்தாலும், மாற்றுக் கட்சிகள் மட்டுமல்லாமல் தங்கள் கட்சியின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். கண்மூடித்தனமாக தனது கட்சியின் தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது.

ஆனால் என்ன நடக்கிறது? கருணாநிதியை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், அவர் ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பவர் என்று கருணாநிதியின் விசுவாசிகள் சொல்கிறார்கள். இதே நிலைதான் அதிமுகவிலும். ஜெயலலிதாவை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அவர் கருணாநிதியின் கட்சிக்காரர் என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆக இந்த இரு தரப்பினரும் ஒரே நிலையில்தான் உள்ளனர். அதாவது தங்கள் தலைவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை யாரும் பரிசீலிக்கத் தயாரில்லை. ஆனால் பதிலுக்கு அவர்கள் மீது குற்றம் சாட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனை ஒவ்வொரு கட்சியில் இருப்பவர்களும் புரிந்துகொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சித் தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்று தமிழர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.


•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

Monday, May 28, 2012


அடுத்தவரின் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பதை விட நாம் நமது திறன், சேவை, சாதனைகளை செய்து காட்டினால் பலரும் நம்மை வரவேற்பர். குறைசொல்பவர்களை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. 

Thursday, May 10, 2012

இந்தியாவும் ஈழமும்!


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,

இந்தியா,தமிழீழம் வரைபடம்
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.
லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.
யாழ்ப்பாணத்தின் ஆண்ட சங்கிலி மன்னன்
அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
சோல்பரி பிரபு மற்றும் டட்லி சேனாநாயக்க
1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.
சத்யாகிரக போராட்டத்தில் தந்தை செல்வா
இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.
தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முதல் பகுதி
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார்.
மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.
இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
வங்க தேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.
இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
சீனா இராணுவத்துடன் கொலைவெறியன் கோத்பாய
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.
தமிழீழ விடுதலை ஒன்றே வழி
தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல
இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம்,
தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.
நன்றி – தினமணி

Thursday, May 3, 2012

தமிழர் அரசியலின் சாபம்


யமுனா ராஜேந்திரன்


  உணர்ச்சி அரசியலும், முற்றிலும் பிறரைச் சார்ந்திருத்தலும், மறுதலையில் விரக்தி அரசியல் பேசுதலும் என இந்த மூன்றும் தான் தமிழர் அரசியலின் மீது படிந்திருக்கிற சாபம். தேர்தல் முறைமைக்குள் முழுக்க மூழ்கிய அண்ணாதுரை அவர்கள் முன்னெடுத்த தமிழக திராவிட அரசியலும், திராவிட தேசிய அரசியலின் அரசியல் பிரச்சார வடிவத்தை அவ்வாறே ஏற்றுக் கொண்ட ஈழ தேசிய அரசியலும், உணர்ச்சி அரசியலின் ஒரே அச்சிலான வார்ப்புக்கள்தான்.   திராவிட அரசியலுக்கும் சரி, ஈழ தேசிய அரசியலுக்கும் சரி, பொருளாதாரப் பார்வை என்பது இல்லை என்பது கா.சிவத்தம்பி போன்ற கோட்பாட்டாளர்களின் விமர்சனம். இந்த இல்லைகளில் முக்கியமானது, திராவிட அரசியலுக்கும் சரி, ஈழ தேசிய அரசியலுக்கும் சரி சர்வதேசிய அரசியல் குறித்த நிதானமான பார்வைகள் என்றும் இருந்ததில்லை என்பதுதான்.  

ஏன் தமிழக-ஈழ தமிழ் தேசிய அரசியல் இவ்வாறு இருக்கிறது? தமக்கென ஏன் அது சர்வதேசிய அரசியல் பகுப்பாய்வுகளைக் கொண்டிருக்கவில்லை? இந்தப் பார்வையைப் பெறவெண்டுமானால் தம்மை முன்னிறுத்திய, தாம் செயல்பட நேர்ந்த சமூகத்தின் ஜனநாயகமயமாக்கலை முன்நிறுத்திய சொந்த அரசியல் செயல்பாடுகள் இதற்கு வேண்டும்.   இந்தியாவை முழுக்க நம்புவது, மறுதலையில் வெறுப்பது. அமெரிக்காவை முழுக்க நம்புவது, மறுதலையில் அமெரிக்காவினால் ஒன்றும் ஆகாது என நிராகரிப்பது எனும் நிலைபாடு ஏன் வருகிறதுதன்னுடைய சமூகத்திலுள்ள தோழமைச் சக்திகளை இனம் கண்டு, தமது சமூகத்தை ஜனநாயகமயப்படுத்த முடியாமல் இருப்பதற்கான இடர்களை இனம் கண்டு, ஓரு கூட்டுமனநிலை கொண்ட அரசியல் தலைமையை தமிழ் தேசிய அரசியல் ஒரு போதும் அவாவி நிற்கவில்லை. ஆயுதமேந்திய அரசியலின் போதும், இப்போது அதன் பின்னான காலத்திலும் தமிழ் தேசியத் தலைமையினது பண்பு என்பது குறுங்குழுத் தன்மையும், அதிகாரத்தை ஒரு சில நபர்களிடம் குவித்துக் கொள்கிற ஜனநாயகமற்ற தன்மையையும்தான் கொண்டிருந்து வருகிறது.

ஈழத் தமிழ் அரசியல் என்பது ஜனநாயக மயப்படுத்தப்படவில்லை. ஜனநாயக மயப்படுத்தல் என்பது ஒரு சமூகத்தின் மக்கள் திரளுடன் உயிரூக்கமுள்ள உறவைப் பேணுவதால் உருவாவது. வர்க்கம், சாதியம்,பெண்ணொடுக்குமுறை, இதுவன்றி இலங்கும் படிநிலை ஒடுக்குமுறைகளை இனம் கண்டு உரையாடலின் வழி அதனைக் களைவதனால் உருவாகுவதுதான் ஜனநாயக மயயப்படுத்துதல் எனும் செயல்போக்கு. ஆயுதமுனையில் தேர்ச்சி பெற்றவர்கள், சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் மேதமைகளை வெகுமக்கள் கீழ்நிலையிலிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் மேல்தட்டு மனோநிலைதான் தமிழ் தேசிய அரசியலின் பண்பாக இருந்து வந்திருக்கிறது.   இவர்கள் அரசுகள், உள்நாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் இவர்களோடு பேசுவதன் மூலம் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என மேடையில் நின்று கீழிருக்கும் மக்களுக்குச் சொல்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு மக்கள் திரளினால் உருவாக்கப்படும் நெருக்கடிகளை இவர்கள் ஒருபோதும் கவனம் கொள்வதில்லை. அரசியல் என்பதனை அலுவலக நிர்வாகம் என்பது போல அறுதியில் இவர்கள் குறுக்கி விடுகிறார்கள்.  

இந்த மனநிலையில் இருந்துதான் இவர்கள் முழுமையாக இந்தியாவை, அமெரிக்காவை நம்புவது, அல்லது வெறுப்பது எனும் நிலைபாட்டுக்கு வருகிறார்கள்.  அரசியல் சமவேளையில் இரு முகம் கொண்டது. தமது சொந்த நிலத்தின் மக்கள் திரளுடனான உயிரூக்கமுள்ள தொடர்பிலும் பகிர்விலும் உருவாவது. அதே வேளை வெளிச்சக்திகள் குறித்த பகுப்பாய்வு உடனான நகர்வுகளிலும் உருவாகி வருவது. இன்றைய தமிழ்தேசிய அரசியலில் அரசியல் தீர்வும் மனித உரிமைகட்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான வலியுறுத்தலும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டது. இது இரண்டு தொடர்பாகவும் ஒரு அரசியல் தலைமை வெகுமக்களுடன் ஊடாட்டம் கொணடிருக்க வேண்டும். நடந்தது என்ன என்பதனைப் பொதுமக்களைச் சந்தித்து விளக்க வேண்டும். சாத்தியம் சாத்தியமின்மைகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.   யதார்த்த அரசியல் குறித்த அறிதல் என்பது வெகுமக்களிடம் உருவாக்கப்பட வேண்டும்.  

தலைமையை நம்புங்கள். தலைவர்களை நம்புங்கள். இதனது தொடர்ச்சியாக இப்போது இந்தியாவை நம்புங்கள் அல்லது அமெரிக்காவை நம்புங்கள் என அதீத நம்பிக்கைளை உருவாக்குதல் அரசியல் உணர்வை அல்ல, மாறாக பக்தி மார்க்கத்தையே உருவாக்கும். ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் என்பது ஈழத்தமிழர்களை அரசியல் பிரக்ஞை பெற்ற வெகுமக்கள் திரளாக உருவாக்கவில்லை. மாறாக, நம்பிக்கை வைக்கும், தவறினால் விரக்தியில் வீழும் தன்னிலைகளையே உருவாக்கி இருக்கிறது.  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டும, ஊர்வலம் போகும் மனிதர்களுக்கும், இதனை விமர்சிக்கும் போக்கில் இந்தியாவினால், அமெரிக்காவினால் ஏதும் ஆகாது என இன்னொரு தீவிர எல்லைக்குச் செல்லும் மனிதருக்கும் குணரீதியில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே சர்வதேசீய அரசியல் குறித்த நிதானமற்ற பார்வையிலிருந்து வருவதாகும்.   அரசியலை வெறுமனே ஊடகம் மூலமே அறிந்து, ஊடகம் மூலமே வாழ்ந்து, ஊடகம் மூலமே கடந்து போகும் மனநிலையிலிருந்து வருவதாகும். வெகுமக்களுடன எந்தப் பகிர்தலும் ஊடாட்டமும் அற்ற தமிழ் அரசியலின் தன்மையே இத்தகைய மனநிலையின் ஊற்றுக் கண். 

சர்வதேசிய அரசியலை நாம் எப்படி மதிப்பிடலாம்? சாத்தியமேயில்லை என நினைத்த இந்தியாவின் அரசியல் மாற்றம் எவ்வாறு நேர்ந்தது? இது மொன்னை மாற்றம் என்பவர்களுடன் பேசுவதற்கு ஏதுமில்லை. இந்த மாற்றம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசுடன் பேசியதால் நேர்ந்தது இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா பெரிய மனது வைத்ததால் நேர்ந்தது இல்லை. தமிழக மக்கள் பெருமளவில் இப்பிரச்சினையை வைத்து மன்மோகனுக்கு, கருணாநிதிக்கு. ஜெயலிதாவுக்கு அரசியல் அதிகாரம் இல்லாது செய்வார்கள் என்பதனை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களது வாழ்வுக்கு அதிகாரம் இல்லாது அர்த்தம் இல்லை. இதுதான் நேர்ந்த மாற்றத்துக்கான அடிப்படை.   வெகுமக்கள் திரளுக்குள் இந்த மாற்றம் உருவாகுவதற்கு அங்கு இடைவிடாத இயக்கத்தினை பல்வேறு இயக்கத்தினர் மேற்கொண்டனர். மக்கள் திரளால் நேரந்த மாற்றமேயல்லாது இது வெள்ளைக் காலர் அரசியல்வாதிகளினால் உருவான மாற்றம் இல்லை.  இந்தியாவில் நேர்ந்த மாற்றம் இத்தகையது என்றால், அமெரிக்கா இந்த நிலைபாடு எடுக்க காரணம் என்ன? அமெரிக்கா தனது புவியியல், பொருளியல் நலன்களுக்காக உலகின் பொருண்மையான நெருக்கடிகளை உபயோகித்துத் தனது பொறியமைப்பை விரிக்கும்.  

இலங்கையைப் பொருத்து பொருண்மையான காரணங்கள் என்ன? இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான, மனித உரிமை மீறல்களுக்கான துல்லியமான சாட்சியங்கள் இருக்கிறது. சேனல் நான்கு ஆவணப்படம் மிகப்பெரும் ஆதாரம். மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்களின் திரட்சி, இந்தத் திரட்சி அந்தந்த நாட்டின் தேர்தலில் அரசியலில் முக்கியமான சக்தியாக இருக்கிறது. இதனை அதிகாரம் வேண்டும் அரசியல்வாதி புறந்தள்ள முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தனது நோக்கின் பொருட்டு அமெரிக்கா அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தும். இதுதான் அந்தப் பொருண்மைப் பண்புகள்.     இலங்கையின் மீது அமெரிக்கா முன்னின்று கொணர்ந்த தீரமானத்தை இஸ்ரேல், கியூபா மீதான தீர்மானம் போல ஒப்பிட முடியாது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் தமது அதிகாரத்தின் பொருட்டு செயல்படும் சக்திகள். அவை பொருளாதாரத் தடைகள் கொணரும். ராணுவத் தலையீடுகள் செய்யும். அமெரிக்காவை எதிர்க்கும் ரஸ்யா, சீனா போன்றவை வெறும் பொருளாதார இலாபம் மட்டுமே நோக்கம் கொண்டவை.

இவைகள் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது, குறிப்பாக இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளோ அல்லது ராணுவத் தலையீடுகளோ செய்யாது. வெறும் வாய்வீச்சு பொருளாதார நலன்களும்தான் இந்த நாடுகளது அரசியல்.   கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்தாலும், கியூபா மீது போர்க் குற்றங்களையோ, பாரிய மனித உரிமை மீறல்களையோ, இனவழிப்பு குற்றச்சாட்டுக்கள் போன்ற பொருண்மையான தலையீட்டுக்கான காரணங்களை ஒரு போதும் கியூபா மீது எவரும் சுமத்தமுடியாது. அமெரிக்காவைப் பொறுத்து இலங்கை மீதான அதனது அணுகுமுறை இஸ்ரேல், கியூபா போன்றது அல்ல. அது ஈராக், லிபியா, சிரியா மீதான அணுகுமுறை போன்றது. இந்த வித்தியாசத்தைத் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும்.   மகிந்தா, கடாபி போலத் தன்னைக் கொல்லத் தமது மக்கள் விடமாட்டார்கள் என்பதும், இத்தீர்மானம் ஒரு பொறி என தாயன் ஜயதிலகா சொல்வதும் இந்த அர்த்தத்தில்தான்.  

இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும்தான் ஆயுதம் கொடுத்தது எனக் கியூபா சொல்வது வெறும் சொல் ஜாலம். எந்த இஸ்ரேல் மீது கியூபா கண்டனத் தீர்மானம் கொணர்ந்ததோ அந்த இஸ்ரேலிடமிருந்தும் மகிந்த அரசு ஆயுதம் வாங்கியதே, அதற்கு கியூபா என்ன சொல்கிறதுஉண்மையிலேயே கியூபாவுக்கு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் இஸ்ரேல் மீதான விமர்சனமும், ஓடுக்குப்பட்ட மக்கள் மீதான ஓர்மையும் இருந்திருந்தால் எவனையும் பார்க்காது அது இலங்கையை அல்லவா விமர்சித்திருக்க வேண்டும்?   இலங்கை மீதானது மென்மையான தீர்மானம் எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தீர்மானம் ஏன் மென்மையாக ஆனது என்பதற்கான காரணம் இந்தத் தீர்மானத்தின் மீதான இந்தியாவின் தாக்கத்தில் உள்ளது.   மென்மையான தீர்மானம் என்பதால் இதனது எதிர்கால முக்கியத்துவம் குறைகிறதா? நிச்சயமாக இல்லை. கடாபியை முதலில் மென்மையான அணுகு முறையினால்தான மேற்குலகும் அமெரிக்காவும் அணைத்தது. சலுகைகளை அள்ளி வழங்கியது. திட்டங்கள் போட்டது. ஹிலாரி உள்பட ஜான் மேஜர் போன்ற தலைவர்கள் லிபியா போய் கடாபியை கட்டித் தழுவினார்கள். கடாபிக்கும் மேற்குக்குமான கசப்பு, தேனிலவில்தான் துவங்கியது. இலங்கையைப் பொறுத்தும் பயங்கரவாத எதிர்ப்புத் தேனிலவில்தான், அதனது அங்கமாகத்தான் இந்த மென்மையானதீர்மானம் வரை வந்திருக்கிறது. சதாம் போல, கடாபி போல, மகிந்த தேர்ந்தெடுக்கப்படாத எதேச்சாதிகாரி அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக இனவாதி. இதனை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இப்படித்தான் துவங்க முடியும்.

இது நெடிய செயல்போக்கு. தமிழ் தேசிய அரசியலின் வயது அறுபது ஆண்டுகள். இலங்கை இனவாத அரசியலின் வயதும் இதுதான். இன்று ஈழத்தமிழர்கள் கடக்க வேண்டிய தூரத்தை மின்னற்பொழுதில் கடக்க முடியாது. இந்தச் சர்வதேசிய அரசிலை நிதானமாகப் புரிந்து கொள்கிற எவரும் இந்தத் தீர்மானத்தைத் துச்சமாக மதிப்பிடுகிற உணர்ச்சிகரமான எல்லைகளை நாடிப் போகமாட்டார்கள்.   ஆம், ஈழத்தமிழர் அரசியல் கடக்க வேண்டிய தூரம் மின்னற்பொழுதில் இல்லை.

Courtesy to Desathinkural

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...