Wednesday, August 16, 2017

பார்வர்டு பிளாக் , அதிமுக - எது முக்குலத்தோரின் கட்சி?



தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலில் முக்குலத்தோர் மத்தியில் ஒரு குழப்பமான கருத்து நிலவி வருகிறது. தேவரின் கட்சியான பார்வர்டு பிளாக் கட்சி இருக்கும்போது தேவர்கள் அதிமுகவிற்கு ஆதரவளிக்கக் கூடாது என்று பார்வர்டு பிளாக் கட்சியினர் கருதுகிறார்கள். அதேபோல தேவர்களின் கட்சி என்று கருதப்படும் அதிமுகவின் தலைமை முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான கள்ளர் சாதியைச் சேர்ந்த டிடிவி தினகரனுக்கு வரும்போது தேவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு முக்குலத்தோர் கருதுகிறார்கள். பார்வர்டு பிளாக் மற்றும் அதிமுக கட்சிகளில் உள்ள முக்குலத்தோரிடையே ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை தெளிவுபடுத்தும் நோக்கத்தில்தான் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.



முதலில் இந்த இரண்டு கட்சிகளின் பின்னணியைப் பார்ப்போம்:

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற புரட்சித் தலைவனாம் சுபாஷ் சந்திர போஸால் 1939-ம் ஆண்டு துவக்கப்பட்ட கட்சி பார்வர்டு பிளாக் (முன்னேற்றக் கட்சி). காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் பரப்பி பெரும் எழுச்சியை ஏற்படுத்திய காந்தி அடிகள், மக்கள் புரட்சிக்குத் தயாராகி விட்டார்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்களை புரட்சிப் பாதையில் வழிநடத்தி உடனடியாக சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார் சுபாஷ் சந்திர போஸ். ஆனால் போஸின் வேகத்தை காந்தியும் அவரது தலைமையில் செயல்பட்ட மிதவாதிகளும் விரும்பவில்லை. அதேபோல துவக்கத்தில் இடதுசாரிகளாக (ஏழைகள் ஆதரவு) இருந்த காங்கிரஸ் கட்சியினர் பின்னர் வலதுசாரிகளாக (முதலாளிகள் ஆதரவு) மாறிவிட்டார்கள், எனவே காங்கிரஸ் கட்சியை இடதுசாரிகள் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட போஸ் பின்னர் இடதுசாரிகளின் ஒத்துழைப்போடு பார்வர் பிளாக் கட்சியை துவக்க முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிக்கு மற்ற இடதுசாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பது தனிக்கதை.

இவ்வாறு அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே என்ற கொள்கையின் அடிப்படையில் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினருக்காக, அவர்களைக் கொண்டு துவக்கப்பட்ட கட்சிதான் பார்வர்டு பிளாக். போர்க்குணம் கொண்ட நேதாஜியின் பின்னே தமிழகத்தின் போர்க்குடிகள் அணிவகுத்ததில் ஆச்சரியமில்லை. நேதாஜி உருவாக்கிய போர்க்குழுவில் இடம்பெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக செயல்பட்டார். பார்வர்டு பிளாக் கட்சி இந்தியாவின் சுதந்திரத்தை ஏற்கவில்லை. அது காங்கிரஸ் வலதுசாரிகளுக்கும் வெள்ளையர்களுக்கும் ஏற்பட்ட அதிகார கையளிப்பு ஒப்பந்தம் என்று தேவர் கூறினார். இதன் காரணமாகவே இன்று வரை பார்வர்டு பிளாக் கட்சி இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடுவதில்லை.

இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்த வெள்ளையர்கள் இந்தியத் தலைவர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தார்கள். அது என்னவெனில் சுபாஷ் சந்திரபோஸ் வந்தால் அவரைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். இதன் காரணமாகத்தான் இன்று வரை போஸ் பற்றிய உண்மைகளை மறைக்க வேண்டிய நிர்பந்த்ததிற்கு ஆளாகி வந்தது இந்திய அரசு. இது தொடர்பான ஏராளமான ஆவணங்களை இந்திய ஆட்சியாளர்கள் அழித்து விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டங்களில் சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் நேரு. ஆனால் சீனா சென்று போஸை சந்தித்த தேவர் அவர் உயிரோடு இருப்பதாக பகிரங்கமாக பேட்டிகளை கொடுக்கத் துவங்கினார். இது நேருவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே நேருவும் நேருவின் கீழாக காமராஜரும் தேவரின் அரசியல் செல்வாக்கை குறைக்க பல்வேறு வழிகளில் முயன்றனர். அதில் ஒரு பகுதிதான் முதுகுளத்தூர் கலவரம். அந்த விஷ விருட்சம்தான் இன்று தமிழகத்தில் சாதிப் பிணக்குகளாகி பரந்து கிடக்கிறது. காரணமே இல்லாமல் முக்குலத்தோரை சாதிவெறியர் என்று பலரும் தூற்றுகிறார்கள்.

நேரு, பார்வர்டு பிளாக் கட்சியை உடைக்கவும், காங்கிரஸ் கட்சியோடு இணைக்கவும் முயற்சி செய்தார். தேவருக்கு மத்திய மாநில அரசுகளில் எந்த பதவி வேண்டுமானாலும் கொடுக்கவும் முன் வந்தார். புரட்சித் தலைவனை தலைவனாக ஏற்ற தேவர் புறக்கடை வழியாக பதவியை அடைவாரா? அவரது முயற்சிகள் அனைத்தையும் முறியடித்தார். நேதாஜியின் வழி சென்றோர் தீவிரவாதிகள். அவர்கள் தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இருந்தாலும் மக்களாட்சியிலும் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க அடையாள அரசியல் செய்து வந்தனர்.

காமராஜர், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களை மதிப்பதில்லை, பணக்காரர்களை பார்த்து, சாதி பார்த்து வேட்பாளர்களை நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே எழுந்தது. அவ்வாறு காமராஜரை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் புதுக்கட்சி தொடங்குவது பற்றி ராஜாஜியின் ஆதரவை நாடினர். அவர் தேவரின் ஆதரவை பெறுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார். அதன் பின் தேவரின் ஆதரவோடு அவர்கள் “சீர்திருத்த காங்கிரஸ் கட்சி” என்ற கட்சியைத் துவக்கினார்கள்.

1957-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேவர், சீர்திருத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அதற்காக தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் 80 இடங்களில் போட்டியிட்ட இந்தக் கூட்டணி 29 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சி இல்லாதிருந்த காலத்தில் உருவான எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் தேவர் சீர்திருத்தக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் பார்வர்டு பிளாக்கின் சுய பலத்தில் 80 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தாலும் 29 இடங்களை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் அவர் அடையாள அரசியல் காரணமாக 6-7 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1963-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் தேவர் மறைந்தார். தேவரின் மறைவுக்குப் பின்னர்தான் திமுகவால் தென் தமிழகத்தில் நுழைய முடிந்தது. தேவரின் மறைவுக்கு பசும்பொன் வந்த அண்ணாதுரை தேவரின் வழியில் காங்கிரஸை ஒழித்துக் கட்டுவோம் என்று சொல்லித்தான் முக்குலத்தோரின் ஆதரவைப் பெறுகிறார். தேவரால் பெயர் சூட்டப்பட்டு தேவரின் ஆதரவு பெற்றவரான நடிகர் எஸ்எஸ்ஆர் அவருக்கு வாரிசாக இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்தார். திமுகவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட நடிகர் எஸ்எஸ்ஆர் தேவரின் மறைவுக்குப் பின்னர் திமுக தென்தமிழகத்தில் நுழைய காரணமாக அமைந்தார். முதுகுளத்தூர் துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியினரால் தொகுதிகளுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. கீழத்தூவலில் 5 பேரை கண்ணைக் கட்டி துப்பாக்கியால் சுட்ட காங்கிரஸ் அமைச்சர்களுக்கு தென் மாவட்டங்களில் கல்வீச்சு, சாணி வீச்சு, செருப்பு வீச்சு போன்றவை பரிசாக கிடைத்தன.

தமிழகத்தில் தேவருக்குப் பின் மூக்கையாத் தேவர், ஆண்டித்தேவர், அய்யனன் அம்பலம், பி.என். வல்லரசு போன்ற வலிமையான தலைவர்கள் பார்வர்டு பிளாக் கட்சியை வழிநடத்தினர். இருந்தாலும் கட்சி மதுரை, உசிலம்பட்டி போன்ற ஒருசில பகுதிகளிலேயே இருந்து வந்தது.  நடிகர் கார்த்திக் கட்சியில் இருந்தாலும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனதும் தொண்டர்கள் ஏராளமாக குவியத் தொடங்கினர். ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அவரால் கட்சிப் பணியைத் தொடர முடியவில்லை. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் தற்போதைய மாநில பொதுச் செயலாளரும், தேசியத் துணைத் தலைவருமான டாக்டர் பி.வி. கதிரவன் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். அவரது சீரிய பணியால் இன்று பார்வர்டு பிளாக் 24 மாவட்டங்களில் செயல்படும் கட்சியாக உள்ளது. பார்வர்டு பிளாக் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. கதிரவன் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்க வேண்டிய பொதுக் கணக்குத் துறை தலைவர் பதவியை கதிரவனுக்கு வழங்கினார்.

ஆனால் 2016 தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க பார்வர்டு பிளாக் கட்சி தனது அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் அந்த நிபந்தனைக்கு கட்டுப்படாமல் கூட்டணியிலிருந்து வெளியேறியது. தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

இந்த இடத்தில் திமுக முதன்முதலில் பார்வர்டு பிளாக் கட்சியுடன் கூட்டணி வைத்துதான் மதுரை மாநகராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது. அதேபோல 1967-ல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க மூக்கையாத் தேவர் எடுத்த பெரும் முயற்சியும் குறிப்பிடத் தக்கது.

பார்வர்டு பிளாக் கட்சியின் பின்னணி இவ்வாறு இருக்க, இனி நாம் அதிமுகவின் பின்னணியைக் காண்போம். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தேவரின் மறைவுக்குப் பின்னரே திமுகவால் தென் மாவட்டங்களில் நுழைய முடிந்தது. திமுகவில் முக்கிய பிரமுகராக இருந்து வந்த எம்ஜிஆர் தனிக் கட்சி துவங்கிய பின்னர் அவர் நம்பியது தென் மாவட்ட மக்களையே. திமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட வடமாவட்டத் தொகுதிகளை அவர் நம்பவில்லை. இதற்கு மற்றொரு காரணம், எம்ஜிஆருக்கு துணை நின்ற எஸ்எஸ்ஆர்தான். அவரே எம்ஜிஆரை தேவரின் தொகுதியான அருப்புக் கோட்டையில் போட்டியிட வைத்தார். அதேபோல எம்ஜிஆர் ஆண்டிபட்டி தொகுதிக்கும் எஸ்எஸ்ஆர் மதுரை தொகுதிக்கும் போட்டிபோடும்போது ஒருவருக்கொருவர் மாற்று வேட்பாளர்களாகவும் மனுத் தாக்கல் செய்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

திமுக சாதி ஒழிப்பு பற்றி பேசி வந்தபோது அதிமுக போர்க்குடிகளான முக்குலத்தோரின் ஆதரவு பெற்ற கட்சியாக மாறியது. பின்னாளில் அது தேவர் கட்சி என்றே அழைக்கப்பட்டது. இருந்தாலும் அக்கட்சி தேவர் மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்டு தேவர் பெயரில் மாவட்டம் அமைத்தல், தேவர் குருபூஜையை அரசு விழாவாக அறிவித்தல், தேவருக்கு தங்க காப்பு அணிவித்தல் போன்ற ஒப்பனைச் சேவைகளை மட்டுமே செய்து வந்தது. குருபூஜைக்கு கட்டுப்பாடுகள் என்ற பெயரில் விதித்த கடுமையான ஒடுக்குமுறைகளை தேவரின் தொண்டர்கள் உணராமல் இல்லை.

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் திராவிடக் கட்சிகளும் தமிழின அரசியலை மரத்துப் போகச் செய்து அவர்களுக்கு எதிரான மூலைச்சலவை அரசியலையே நடத்தி வந்தன. இவ்வாறான சூழலில் ஈழப்போருக்குப் பின்னர் தமிழரின் கண்கள் திறக்கப்பட்டன. நடப்பது அந்நியரின் ஆட்சியே என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. தமிழரிடையே இன அரசியல் எழுச்சி வேகமாக ஏற்பட்டு வருகிறது. சாதி ஒழிப்பு என்பது பொய் என்பதையும், சாதி என்பது இனத்தின் கூறு என்பதையும் எல்லாச் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் உணர்ந்து வருகிறார்கள். பல்வேறு வடிவங்களில் இன அரசியல் எழுச்சி பெற்று வருகிறது. இனி இனம்சார்ந்த அரசியலே வெல்லும் என்பது உறுதி.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக 3 அணிகளாக பிரிந்துள்ளது. தமிழர்களின் வரலாற்றில் கள்ளர் சாதியினருக்குள்ள அளப்பரிய பங்கை உணர்ந்த அந்நிய சக்திகள் ஜெயலலிதாவுக்குப் பின்னர் அவரது அதிகாரம் கள்ளர் சாதியைச் சேர்ந்த சசிகலாவுக்குச் சென்று விடக் கூடாது என்பதில் உறுதியாய் நிற்கின்றன. எனவே சசிகலா குடும்பத்தினர் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். சசிகலா சிறையில் தள்ளப்பட்டார். தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். சின்னம் முடக்கப்பட்டது.

அதிமுகவின் மற்ற அணிகளுக்கு தலைமை வகிக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் முக்குலத்தோரில் மற்றொரு பிரிவினரான மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தற்போதைய முதல்வர் தமிழகத்தின் மற்றொரு போர்க்குடியான கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த இருவரும் பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணராமல் இல்லை. அதிமுகவை வழிநடத்த தகுதியும் செல்வாக்கும் படைத்தவர்கள் சசிகலா குடும்பத்தவரே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது. இருந்தாலும் பல்வேறு சக்திகள் மேற்படி இருவரையும் பகடையாக பயன்படுத்தி தங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்களை அரங்கேற்ற முயற்சிக்கின்றன.

இதுபோன்ற சூழலில்தான் தினகரன் தனது முதல் பொதுக்கூட்டத்தை கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி மேலூரில் நடத்தி தனது செல்வாக்கை நிரூபித்தார். இந்தக் கூட்டத்திற்கு செல்வது பற்றித்தான் பார்வர்டு பிளாக் மற்றும் அதிமுக கட்சிகளில் உள்ள முக்குலத்தோர் மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இவர்கள் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு கட்சிகளுமே தேவர்களுக்கான கட்சி கிடையாது. அனைவருக்குமான பொதுக் கட்சிகளாகும். இரண்டு கட்சிகளுக்குமே சாதி முத்திரை குத்தப்பட்டது. தேவர்கள் எனப்படுவோர் தங்களுக்காக மட்டுமே அரசியல் செய்யக் கூடியவர்கள் அல்ல. எல்லாருக்குமான அரசியலை முன்னெடுப்பவர்கள். அவர்கள் அப்படியொரு அரசியலைத்தான் முன்னெடுக்க வேண்டும்.

அவர்கள் வெள்ளையருக்கும் முந்தைய அரசியல் வரலாற்றைக் கொண்டவர்கள். முதலில் வெள்ளையனுக்கு சவால் விட்டவன் மாவீரன் பூலித்தேவன், வெள்ளையனிடம் இழந்த மண்ணை மீட்டவர் வீரமங்கை வேலுநாச்சியார். தீரத்துடன் போராடியவர்கள் மருது சகோதரர்கள். வெள்ளையரின் ஆயுத பலத்தையும் தங்களது அரசு அமைந்துள்ள இடத்தையும் கணித்து வெள்ளையனுடன் கூட்டுச் சேர்வதுதான் பாதுகாப்பு என்று கருதி வெள்ளையனுடன் கூட்டு வைத்து அரசியல் செய்தவர்கள் புதுக்கோட்டை தொண்டைமான்கள். சுதந்திர இந்தியாவில் ஏராளமான கையிருப்பு பணத்துடன் தங்களது அரசை இந்தியாவுடன் இணைத்த பெருமை கொண்டவர்கள் அவர்கள். இறுதி காலத்தில் வெள்ளையன் முத்துராமலிங்கத் தேவரின் பேச்சுத் திறத்தைக் கண்டே அச்சமடைந்தான். இப்படி இந்த மண்ணோடு, மண்ணின் அரசியலோடும் ஆழமான தொடர்பு கொண்டவர்கள் முக்குலத்தோர். முக்குலத்தோர் சுதந்திரமாக வாழ்ந்து பழக்கப்பட்ட இனக்குழுவினர். அவர்கள் எந்தவிதமான அடிமைத்தனத்திற்கும் எளிதில் ஆளாக மாட்டார்கள்.

எனவே இப்போதும் அவர்களின் அரசியல் ஆதிக்கம் தொடருவதில் ஆச்சரியம் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் முக்குலத்தோரை ஒதுக்கி வைத்துவிட்டு யாராலும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. தற்போதைய முக்குலத்தோர் இளைஞர்களுக்கு பார்வர்டு பிளாக் கட்சியின் கொள்கையும் வரலாறும் தெரியாதிருக்கலாம். அதை அறிந்துகொண்டால் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். பார்வர்டு பிளாக் என்பது சுதந்திரத்தை விரும்பும் கட்சி. அது அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் கட்சி. இடது சாரி கொள்கை வழியில் கட்டி எழுப்பப்பட்ட கட்சி.

ஆனால் அதிமுக அவ்வாறான கொள்கை எதுவும் இல்லாத கட்சி. அது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின் ஆளுமையால் வளர்ந்த கட்சி. அவ்வாறான ஆளுமைகள் இல்லாத நேரத்தில் அக்கட்சிக்கு ஒரு வலிமையான கொள்கை தேவையாக உள்ளது. அந்தக் கொள்கை இனநலன் சார்ந்ததாக இருந்தால் இன்னும் நலம். அதுவே அதனை எதிர்காலத்தில் காப்பாற்றுவதாக அமையும். தற்போதுள்ள நிலையில் அதிமுக மறுபிறவி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பார்வர்டு பிளாக் கட்சி தற்போதுள்ள வேகத்தில் விரைவிலேயே தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சி என்ற நிலையை எட்டும். எனவே முக்குலத்தோரைச் சேர்ந்த அதிமுக, பார்வர்டு பிளாக் தொண்டர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளத் தேவையில்லை. எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டால் போதும்.

நேதாஜியின் கொள்கை என்ன, தேவரின் கொள்கை என்ன, அவர்கள் காட்டிய வழி என்ன? அக்கட்சி எவ்வாறு இவ்வளவு காலம் நிலைத்து நிற்கிறது? அதிமுகவின் கொள்கை? அதன் பாதை என்ன? என்ன என்பது பற்றியெல்லாம் யோசித்து சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். பின்னர் தாங்கள் விரும்பும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

- அ. பெருமாள் தேவன்,
பொருளாளர், தேனி மாவட்டம்,
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
தொடர்புக்கு - 9047440542

---------------------------------------------------

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...