Thursday, December 5, 2019

நாட்டார்

நாட்டார்           {The beginning}
•-•-•-•-•-•-•
கல்வெட்டுகளில் நாட்டார் எனப்படுவோர் நாடாக வகைப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளின் முக்கிய அவையினர் ஆவார்கள். இவர்கள் ஆளும் வர்க்கங்களில் ஒருவராகத் திகழ்ந்தனர்.

பொதுவாக ஆய்வாளர்களிடையே நாட்டாரை முதன்மைப்படுத்துவதற்கு மாறாக, நாடு எனும் நிர்வாகப்பிரிவை முன்னிலைப்படுத்தும் போக்கே அதிகம் காணப்படுகிறது. ஆனால் இத்தகைய செயல்களை வருங்காலங்களில் மாற்றி நாட்டார்களையே முன்னிலைப் படுத்தவேண்டும் என்பதே நமது வேண்டுகோள் ஆகும். நாட்டார்களைப் பற்றிய உண்மையான செய்திகளை வெளிக்கொண்டு வர உதவும் சுப்பராயலு மற்றும் ஹைய்ஸ்மன் ஆகியோரது ஆய்வுகள் இந்தப் பதிவிற்குப் பயன்படுகின்றன. தொடக்கத்தில் நாடு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இயல்பாகவே  அமைநத வேளாண் குடியிருப்புகளின் தொகுப்பாகும். இதுவே காலப்போக்கில் நிர்வாகப் பிரிவாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வேளாண் குடியிருப்புகளின் தொகுப்பாக அமைந்த நாடானது ஒரு சமூக இனக்குழுவினர் {Kinship group} மட்டும் வாழும் நிலப்பரப்பாக ஒருமித்த இயல்பைக் கொண்டிருந்தது. ஆனால் பிரமதாயங்களின் தோற்றம், ஆக்கிரமிப்பு ஆகியவை காரணமாக நாட்பட நாடானது தனது ஒருமித்த இயல்பை இழந்து பன்முகத் தனமை கொண்டதாக மாற்றமுற்றதாக திரு.சுப்பராயலு அவர்கள் கூறுவார்.

{ political Geography of the chola country, chennai: Tamilnadu state Department of Archaeology} & { 'The pulankurichi inscriptions' ; A side light cola officialdom; The sale Deeds in cola inscriptions; 'The Cola state ' In Rajagopal 2001}

- எனவே நாட்டிலுள்ள அனைத்து வெள்ளான் வகைக் குடியிருப்புகளின் பிரதிநிதிகளே தொடக்கத்தில் நாட்டாராகச் செயல்பட்ட நிலையில் ஒத்த இயல்பு கொண்ட நாட்டார் அவை இனக்குழுவின் அவையாகவே {Tribal assembly} செயல்பட்டது எனக் கருதலாம்.
நாட்டாரின் பணிகள்
~~~~~~~~~~~~~~
நாட்டாரின் செயல்பாடுகளை மூன்று காலப்பிரிவுகளில் பகுத்து ஆய்வு செய்துள்ள சுப்பராயலு 6,10ம் நூற்றாண்டுகளில் நாட்டவராகச் செயல்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூறப்படவில்லை எனவும், நாட்டார் அமைப்பில் பன்முகத் தன்மை தோன்றிய பின்னரே , அதாவது 11ம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலத்திலேயே நாட்டாராகச் செயல்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூறப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார். சோழரின் அதிகாரத்தை மையப்படுத்தும் போக்கு காரணமாக 12, 13ம் நூற்றாண்டுகளில் நாட்டாரின் செயல்பாடு சோழ மண்டலத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. 13ம் நூற்றாண்டிற்குரிய பாண்டியரின் கல்வெட்டுகளிலேயே நாட்டாரின் செயல்பாடுகள் மீண்டும் கூறப்படுகின்றன. 

புதுக்கோட்டைப் பகுதி மற்றும் சோழ மண்டலத்தின் நான்கு வருவாய் வட்டங்கள் அடங்கிய நிலப்பரப்பில் காணப்படும் கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ள ஹைய்ஸ்மன் அவர்கள் நாட்டாரின் செயல்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்..

"பதிப்பிக்கப்பட்டுள்ள சுமார் 2400 கல்வெட்டுகளில், 49 கல்வெட்டுகள் நாட்டார் செயல்பாடு பற்றி கூறுகிறது. இவற்றுள் கி.பி.985 வரையில் 13 கல்வெட்டுகளிலும், கிபி. 985- முதல்- 1178 வரை 5 கல்வெட்டுகளிலும், அதன் பின்னர் 17 கல்வெட்டுகளிலும் நாட்டார்களின் செயல்பாடுகள் சொல்லப்படுகின்றன. சோழரின் அதிகாரக் குவிப்பு காரணமாக கி.பி.985 -1178 வரையான காலங்களில் நாட்டாரின் செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. புதுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் 21 கல்வெட்டுகளில் நாட்டார் செயல்பாடுகள்  காணப்படுகிறது. சோழ மண்டலத்தில் அரசின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கவனித்த வரி நிர்வாகம் மற்றும் பொதுப்பிரச்சனைகளைத் தீர்த்தல் ஆகிய பணிகளைப் புதுக்கோட்டை பகுதியில் நாட்டாரே ஆற்றியுள்ளனர். ஆகையால் இப்பகுதியில் அரசு அலுவலர்களின் தேவையானது நாட்டார்களால் குறைந்து காணப்படுகிறது" 

-ஹைய்ஸ்மனின் இந்த கருத்து சோழரின் ஆட்சிக்காலத்தில் மற்ற பகுதிகளை விட புதுக்கோட்டை பகுதியில் நாட்டார்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்ததை அறிவிக்கிறது.
ஆகவே நாம் நாட்டார்கள் பற்றி புதுக்கோட்டை பகுதி கல்வெட்டுகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றியும், கானாடு- கோனாடு -தென்கவிர்நாடு நாட்டார்களைப் பற்றியும் இனி விரிவாகக் காண்போம்.
 புதுக்கோட்டை பகுதியில் நாடு தொடர்பான முதல் குறிப்பு கி.பி.500க்குரிய பூலாங்குறிச்சி கல்வெட்டுகளில் கூறப்படும் ஒல்லையூர் கூற்றம், கூடலூர் நாடு ஆகிய பெயர்களாகும். இதனையடுத்து தந்திவர்மனின் மலையடிப்பட்டிக் கல்வெட்டில் {I.P.S.18} கீழ் செங்கிளி நாட்டவர் வழங்கிய அறக்கொடையைத் தெரிவிக்கிறது.

[ " ....... கீழ் செங்கிளி நாட்டு நாட்டா.......நாட்டார்க்கு செய்த "  ]
12ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில், சுமார் 10 கல்வெட்டுகளில் நாட்டார் குறித்த செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால் , நாட்டவராகப் பணியாற்றிய தனிநபர்கள் பற்றிய விபரங்களை இக் கல்வெட்டுகள் கூறவில்லை. 

மூன்றாம் குலோத்துங்கனின் திருவப்பூர் கல்வெட்டில் {IPS.155} நாட்டாரின் செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும்  நாட்டின் பிரதிநிதிகளாக தனிநபர்கள் கூறப்படுகின்றனர்.
[ " ..... ஜயசிங்க குலகால வளனாட்டுத் தென்கவிர் நாட்டு நாடாய் இசைந்த நாட்டோம்..." ]

 -இவ்விதம் நாட்டார் அவையின் உறுப்பினர்களைக் குறிப்பிடும் நடைமுறை 15ம் நூற்றாண்டு வரைத் தொடர்ந்து காணப்படுகிறது. வேளாண் குடியிருப்புகளே நாடாவதால் இக் குடியிருப்பின் பிரதிநிதிகளான 'ஊரவர்' தானே நாட்டாராகவும் செயல்பட்டிருப்பர்? சோழமண்டலத்தில் "ஊர்க்கு சமைந்த ஊரவர் " என நாட்டார் கூறப்படுவது {Dr.சுப்பராயலு/ political Geography of the chola country, chennai: Tamilnadu state Department of Archaeology} இதைத் தெளிவு படுத்தும். புதுகைப் பகுதிகளிலும் இத்தகைய குறிப்புகள் கிடைக்கின்றன.  {IPS. 546}

 [ "...... செயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயின்னாட்டுக்கு சமைந்த நாஞ்சில் ஊற்கு சமைந்த ஊரோமும் பெருஞ்செவூர் ஊற்கு சமைந்த ஊரோமும் விரைக் குடிக்கு சமைந்த ஊரோமும் கணையக்குடி ஊற்கு சமைந்த ஊரோமும் இவ்வனைவோம் எங்களில் இசைந்து...."]

- எனும் குறிப்பு இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும். பூவாலைக்குடிச் சிவாலயத்தில் 'மறமாணிக்கன் சந்தி' நிறுவப்பட்டதைக் கூறும் கல்வெட்டிலும் {IPS.444} இதே போன்ற குறிப்பு, கூடலூர்நாட்டின் செவ்வலூர் உள்ளிட்ட வடபற்று நாட்டவர்கள் ஊரவராகவும் செயல்பட்டதை விளக்குகிறது.
["....தெ ன்கோனாட்டுக் கூடலூ ர் நாட்டு செவ்வலூர் உள்ளிட்ட வடபற் று நாட்டவரோம் கூளிபிறை செம்பூதி மதியாணி அரசர்மிகாமன்நிலை இவ்வூர்க ளில் ஊராயிசைந்த ஊரவர்கள்]
- எனவே நாட்டின்கண் அமைந்துள்ள குடியிருப்புகளின் பிரதிநிதிகளான ஊரவரே நாட்டாராகவும் செயல்பட்டனர் என்பது தெளிவு. இனி அடுத்த பதிவில் புதுக்கோட்டை பகுதியின் கானாடு-கோனாடு ஆகிய பிரிவுகளில் நாட்டார்களின் பணிகளைப் பார்ப்போம்.
தொடரும்..
Reference..
1. political Geography of the chola country, chennai: Tamilnadu state Department of Archaeology
2.'The pulankurichi inscriptions' ; A side light cola officialdom; The sale Deeds in cola inscriptions; 'The Cola state ' In Rajagopal 2001
3.IPS: 18, - 155, - 546, - 444.
4. புதுக்கோட்டை 1600 வரை , முனைவர். மாணிக்கம். பக்:333 -335.
Thanks to
கல்வெட்டு தகவல்கள் அளித்தவர்கள்.
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
நன்றி.
அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.





No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...