தமிழ் மக்களுக்கு வரப்போகும் தைப்பொங்கல் புதிய ஆண்டும்
புதிய சகாப்தமும் ஆகும். நீண்ட காலம் தொட்டு தமிழ் மரபு தைப் பொங்கலைத்தான்
புத்தாண்டாக வைத்துக் கொண்டாடி வந்தது. இடையில் ஏற்பட்ட மாற்றம்தான் மேஷ ராசியில்
சூரியன் புகும்போது அதாவது சித்திரை மாதத்தைப் புது ஆண்டாகக் கொண்டாடிய பழக்கம்.
இன்றைய தமிழ் நாடு கலை, மொழி, மதம், அரசியல்
தலைமை இத்தனையிலும் சீரழிந்து சின்னாபின்னப்பட்டு நிற்கிறது. இந்த நிலை
நீடிக்காது. சீக்கிரம் மாற்றமும் மாண்பும் ஏற்படப் போகிறது.
‘தமிழர்கள் தமிழ் பாஷைக்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்’ என்று வேகமாகப் பேசுகிறதோடு, ‘தமிழ்ப்
பண்பு ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டது’ என்று பறைசாற்றுகிறதோடு, தமிழனை
நாஸ்திகப் பாதைக்கு இழுத்துச் சென்று இழிவுபடுத்துகிற நிலைமைக்கு முனைந்து
நிற்கிறார்கள். முழு மூச்சாகவும் பாடுபடுகிறார்கள். இது ‘இந்தியாவின் தேசீயம்’ வேகமாகப் பேசிய நபர்களால்
மறைமுகமாக காமன்வெல்த் உறவிற்கு இழுத்துச் சென்ற கதைபோல, தமிழை
முன்னேற்ற நினைக்கும் கூட்டம் தமிழனை இழிவுபடுத்திய நாசத்தன்மையாகும்.
ஆலய வணக்கம்,
பூஜை வழிபாடு,
கூட்டுப் பிரார்த்தனை இவை எல்லாம் ஆரியர் கூற்று என்று
சொல்லப்படுகிறது சீர்திருத்தவாதிகளால். ஆரியரென்பர் சரித்திரப்படி இந்தியாவில்
நுழைந்த காலம் கிட்டத்தட்ட 3500 வருஷங்களாகும். தமிழ் மன்னன்,
தமிழ்ச் சங்கம்,
தமிழ்க் கலை,
தமிழ் சித்திரம் வாழ்ந்த காலம் பல வருஷங்களுக்கு முன்பே
இருந்தாகும்.
இன்றைக்கு,
இந்து மகாசமுத்திரமாகக் கிடக்கின்ற நீர்ப் பரப்பு நிலமாக
இருந்த காலத்தில் மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கா ஓரமுள்ள தீவை மேற்கு எல்லையாகவும், ஆஸ்திரேலியக்
கண்டத்தை கிழக்கு எல்லையாகவும் வைத்துப் பரந்து கிடந்ததொரு பூமிப் பரப்பு.
அதற்குப் பெயர் லெமோரியாக் கண்டம். அதுதான் ஆதி பூகோளம், அப்பொழுது
விந்தியா- சார்ப்பூரா என்ற மலைகள் இந்தியாவின் வட
எல்லையாக இருந்தன. அதற்கு வடக்கிலுள்ள ஐக்கிய மாகாணம், பஞ்சாப், காஷ்மீரம், நேபாளம், இமயமலை, ரஷ்யாவின்
தென்பகுதி இவைகளெல்லாம் நீர்ப்பரப்பாக சமுத்திரத்திற்குள் கிடந்தன.
அக்காலத்திலேயே சங்கம் ‘சிற்றகத்தியம்’, ‘பேரகத்தியம்’ என்னும்
பெருநூலை ஆதாரமாகக் கொண்டு அழகாக அமைந்து நின்ற ஒரு பழம் பெருமை
ஆராய்ச்சிகாரர்களுக்கும்,
சங்க நூலை படித்தவர்களுக்கும் தெரியாமற் போகாது. இதை
ஆங்கிலேயனும் லாஸ்ட் ஆஃப் லெமோரியா என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறான்.
சீர்திருத்தவாதி வாங்கிப் படிக்கவும்.
அகஸ்தியார் மாணாக்கர் பலருள் ஒருவரான தொல்காப்பியரைக்
கொண்டு இலக்கணப் பாதையில் நின்ற காலம். அதற்குப் பிற்பட்டது பாண்டிய நாட்டின்
தமிழ் எல்லையை - மதுரையைத் தலைமையாக வைத்து கடைச் சங்கம் அமைத்து, கடைசியில்
நக்கீரரைத் தலைவராக வைத்து வாழ்ந்து,
இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் அழிந்த காலம்.
முதல் சங்கம்,
இடைச் சங்கம்,
பாண்டியன் காலமே. இந்தப் பண்டைய தமிழ்நாட்டை - சர்வ நூலும்
கண்ட ஒரு தமிழ் பாஷையை அவர்கள் கையாண்ட பழக்க வழக்கத்தை - மதத்தை - வழிபாட்டை -
தெய்வீக வாழ்க்கையை சிதறடிப்பது,
சீர் குலைப்பது தமிழுக்குப் பாடுபடுவதாகாது. இதில்
தமிழர்கள் உஷாராக வாழ்ந்து தமிழன் என்ற மானத்தோடு தலைநிமிர்ந்து நடக்கத் தமிழன்னை
வருகிற புத்தாண்டில் புத்துணர்ச்சி அளிப்பாளாக
வாழ்க தமிழ்த்தாய்!
வளர்க தமிழ்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கண்ணகி
இதழில் 17.01.1960-ல் எழுதிய கட்டுரை