Tuesday, May 29, 2018

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்



சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வருவதாகவும், அதற்கு மின் இணைப்பு பெற அண்டை வீட்டுக்காரர் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தும்போது அந்தப் புறம்போக்கு நிலத்தில் ஒரு பகுதியை அண்டை வீட்டுக் காரருக்கு விட்டுக் கொடுத்து விட்டால் பிரச்சனை முடிந்து விடும் என்று மத்தியஸ்தம் செய்தவர்கள் சொன்னதாகவும் தெரிவித்தார்.

அந்த நிலம் தொடர்பான ஆவணம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். நீதிமன்றம் சென்று வழக்கில் வெற்றி பெற்றதாகச் சொன்ன அவர் அதற்கான ஆவணத்தைக் காட்டினார். அதில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்று கேட்டபோது எதிர் தரப்பினர் நீதிமன்றத்திற்கு வரவேயில்லை என்று சொன்னார். மேலும் அந்த நிலம் அவரது உறவினரிடம் எழுதி வாங்கிய ஒன்று என்றும் சொன்னார். அதன் பின்னர் பதிவு பத்திரத்தின் பிரதியைக் காட்டினார்.

பதிவு செய்யப்பட்ட நிலத்தை ஏன் புறம்போக்கு நிலம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டேன். நாங்கள் இன்னமும் பட்டா வாங்க வில்லை என்று சொன்னார். அவரது அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். பதிவு செய்யப்பட்ட நிலம் என்றாலே அது புறம்போக்கு ஆகாது என்பதை அவருக்கு கூறினேன். உடனே பட்டாவிற்கு விண்ணப்பிக்குமாறு கூறினேன். பதிவுத் துறையில் தனது நில உரிமையை பதிவு செய்த ஒருவர் பட்டாக் கேட்டு விண்ணப்பிக்கும்போது நிர்வாகத் துறை பட்டா தர மாட்டேன் என்று மறுக்க முடியாது. வேறு ஒருவர் தக்க ஆதாரங்களுடன் அந்த நிலத்தை உரிமை கோரினால் நிர்வாகத் துறை பட்டாத் தர மறுக்கலாம். நீதிமன்றம் மூலம் உரிமை நிலைநாட்டப்படும்போது பட்டா கொடுத்தே ஆக வேண்டும்.

தற்போது ஒருவர் சட்டப்படியே நிலத்தை வாங்கி இருந்தும் தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய, நிலத்தின் மதிப்பைப் பொறுத்து கிராமங்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. பட்டா மாறுதல் செய்பவர் விவரமான ஆளாக இருந்தால் நூறு இருநூறில் வேலை முடிந்து விடும். அதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிறிது அலைய வேண்டியிருக்கும்.

பட்டா நிலம்

வெள்ளையர் காலத்திலேயே ஏறக்குறைய பெரும்பான்மை நிலத்தை அளந்து புல எண்கள் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் 1980களில் மறு அளவை செய்து புல எண்களும் பட்டாக்களும் வழங்கியுள்ளனர். ஆக புல எண் இல்லாமல் எந்தவொரு நிலமும் இருக்காது. அந்த நிலத்திற்கு ஒரு உரிமையாளர் இருந்து அது அரசாங்க பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது தனியாருக்குச் சொந்தமான நிலமாகும். அவரிடம் ஒருவர் அந்த நிலத்தை தானமாகவோ அல்லது விலை கொடுத்தோ வாங்கியிருந்தால் அந்த நிலத்தின் உரிமையாளராக அவர் பதிவு செய்யப்படுவார். இது பதிவுத் துறையில் செய்யப்படும் பதிவு ஆகும்.

பின்னர் அவர் நிர்வாகத் துறையான கிராம நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் மனுச் செய்து அந்த நிலத்திற்கான உரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவுத் துறையில் தனது உரிமையைப் பதிவு செய்த ஒருவர் ஏதாவது காரணத்தால் நிர்வாகத் துறையில் தனது உரிமைச் சான்றிதழைப் பெறாமல் இருந்து விடலாம். அப்போது அந்த நிலத்தின் உரிமைச் சான்றானது பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருக்கும். நிலம் விலைக்கு வாங்குவோர் குறைந்தது 30 ஆண்டுகாலம் வில்லங்கச் சான்று எடுத்துப் பார்த்துக் கொள்வது நலம்.

அதேபோல 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நில உரிமைப் பிரச்சனைகளில் உள்ள சிக்கல்களைப் போக்க நிலத்தை அனுபவிப்போருக்கு உரிமைச் சான்று (பட்டா) வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி பலரும் சட்டப்படி தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களுக்கு பட்டா வாங்கியுள்ளனர். பதிவுத் துறையில் பதிவு செய்த உரிமையாளர் அல்லது அவரது வாரிகள் கேள்வி எழுப்பாத வரை அவ்வாறு உரிமை பெற்ற ஒருவர் அந்த நிலத்தை தன் விருப்பப்படி அனுபவித்துக் கொள்ளலாம். வில்லங்கச் சான்றிதழ் எடுக்கும்போது அந்த நிலம் யார் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒத்தி, ஈடு எழுதி வாங்கினாலும் அதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நபருக்கும் பட்டா வைத்திருப்பவருக்கும் என்ன தொடர்பு? அந்த நிலம் அவரது கைக்கு எப்படி வந்தது என்பதை தெரிந்து கொண்டால் அந்த நிலத்தை வாங்குவதில் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

அவ்வாறு இல்லாது பட்டா வேறொருவர் வைத்திருக்க பதிவு செய்த உரிமையாளரின் வாரிசுகள் வந்து உரிமை கோரினால் பட்டா வைத்திருப்பவர் உரிமையை விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. 1987-ம் ஆண்டிலிருந்து பத்திரப் பதிவு கணிணி மயமாக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய பதிவுகளை ஊழியர்கள் பதிவேடுகளைத் தேடி சான்று வழங்கி வந்தார்கள். தற்போது 1967-ம் ஆண்டு முதலான பதிவுகள் கணிணியில் ஏற்றப்படுவதாக சொல்கிறார்கள். இவ்வாறு ஏற்றினால் நிலச்சிக்கல்கள் பெருகும் என்று பதிவு துறையில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். பல சொத்துக்களை காட்டி எழுதப்படும் உயில் சாசனங்கள் விலங்கச் சான்றில் இடம் பெறாமல் போகலாம்.

புறம்போக்கு நிலம்

இது இப்படி இருக்க புறம்போக்கு நிலம் என்றால் என்னவென்று பார்ப்போம். சாலைகளின் இருபுறமும் உள்ளதுதான் புறம்போக்கு நிலம். போக்குவரத்திற்கு புறமாக உள்ள நிலம். இது அல்லாமல் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், அணைகள், மலைகள், குன்றுகள் அருகேயும் புறம்போக்கு நிலங்கள் இருக்கும். இந்த நிலங்களுக்கு புல எண்கள் இருக்கும். இதில் ஆறு, ஏரி, கால்வாய், அணைகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் மலைகள், குன்றுகள் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் வருவாய் துறை, வனத்துறையின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

வருவாய் துறை, பொதுப்பணித்துறை நிலங்களை ஒருவர் அனுபவித்து வந்தால் அதற்கு தண்டத் தொகை வசூலிக்கப்படும். அந்தத் தொகையை செலுத்துவதற்கு வழங்கப்படும் ரசீதை 2சி பட்டா (தூசி பட்டா), பி மெமோ (பீமா) இது போன்ற ரசீதுகளை வைத்திருப்போர் புறம்போக்கு நிலத்தின் மீது உரிமை கோரி நீதிமன்றம் செல்லலாம். ஆனால் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அல்லது அரசுத் திட்டங்களுக்குத் தேவைப்படுவதாக இருந்தால் இந்த நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். பழங்குடியினர், மலைச் சாதியினர் போன்றோர் புறம்போக்கு நிலத்தில் வசித்தாலும் அவர்களுக்கு அந்த நிலத்திற்கு உரிமை வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளில் எனது நிலப் பிரச்சனைகளின் மூலமாக கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதியுள்ளேன். சட்ட வல்லுனர்கள் இன்னும் மேலான தகவல்களைத் தரலாம். (ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களே நில உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...