தினகரனின் புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். மேடையில் அவருக்கு தமிழ்க் கடவுளான முருகனின்ன சின்னமான வேல் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் அவர் திராவிடத்தை விட்டு விலகி விட்டதைக் காட்டுகிறது.
கொடியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளார். கொடியில் இனப்பகை ஈவெராவின் படமோ, திராவிட நாடு பற்றி பேசிப் பின்னர் அதைக் கைவிட்ட அண்ணாவின் படமோ இருப்பதை விட ஜெயலலிதாவின் படம் இருப்பது ஒன்றும் பெரிய குறை அல்ல.
நான் ஏற்கனவே சொன்னது போல தினகரன்தான் அடுத்த அதிமுகவின் தலைவர் என்பதை பாஜக தனது சொந்த செலவில் விளம்பரம் செய்தது. அதுவே அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் விரும்பும் தலைவராக தினகரனை மாற்றியுள்ளது.
இந்த நிலையில் அவர் அடுத்த முதல்வராகவும் தமிழர்களின் சிறந்த ஆளுமையாகவும் ஆக அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. எனவேதான், தமிழ்த் தேசியம் பேசக் கூடிய என்னைப் போன்றோர் தினகரன் உண்மையிலேயே தமிழர்களுக்கான ஒரு தலைவராக வரவேண்டும் என்று விரும்புகிறோம். அதேவேளையில் அதிமுகவின் அடுத்த தலைவராக மாறும் அவர் திராவிடத்தை உதறித் தள்ள அவருக்குள்ள சிக்கல்களையும், அதை அவர் எப்படி
சமாளிப்பார் அல்லது ஊடக, பொதுப் புத்திகளைக் கடந்து அவர் அதைச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு இருந்தது.
ஆனால் இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் குக்கர் சின்னத்தில் பெற்ற மாபெரும் வெற்றி அவரை திராவிடத்தை தூக்கி எறியும் துணிச்சல் மிக்க மனிதராக மாற்றியுள்ளது என்று கருதுகிறேன். அதேபோல மத்திய ஆளும் பாஜகவிற்கு எழுதித் தராத அடிமைகளாக உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ்களை மக்கள் தூக்கி எறிந்தார்கள். இந்த நிலையில் தினகரன் மத்திய அரசுக்கு, தேசிய கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதுவே தமிழ்த் தேசிய அரசியலாகும்.
எனவேதான் என்னைப் போன்ற உண்மையான தமிழத் தேசியவாதிகள் தினகரனை கூர்மையாக கவனித்து அவரது அரசியல் நகர்வுகளை கணித்து வருகிறோம். எங்களது நோக்கம் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து பாதுகாப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே.
அதிமுக கட்சியிலிருந்து தினகரன் ஆதரவாளராக மாறியுள்ளவர்கள் தினகரன் திராவிடத்தை தூக்கி எறிந்து விட்டார் என்ற கருத்தை கிண்டல் செய்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தினகரன் திராவிடப் பாதையில் பயணித்தால் தமிழர்கள் அவரையும் தூக்கி எறிவார்கள் என்பதை காலம் சொல்லும். இல்லாவிட்டால் அவர் தமிழர் தலைவர் என்று கொண்டாடப்படுவார்.
No comments:
Post a Comment