Sunday, April 27, 2014

நம் தேர்தல் முறையை எப்படி மாற்றவேண்டும்?


இப்போதிருக்கும் தேர்தல் முறையில் "நீ எம்பியை தேர்ந்தெடு. அவர்கள் அப்புறம் கூடி பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்" என இருக்கிறது. இதில் சிக்கல் என்னவெனில் எம்பி வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அதிகார மையங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. எம்பிக்கள் அப்புறம் அந்த அதிகார மையங்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் என்ன சுயமாக கூடி அப்துல்கலாம்தான் நல்ல பிரதிநிதி, அவரை தேர்ந்தெடுக்கலாம் என்றா முடிவெடுக்க போகிறார்கள்?

தேர்ந்தெடுத்த எம்பிக்கும் கொலு பொம்மைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாராளுமன்றத்தில் கட்சி அதிகார மையம் என்ன உத்தரவிடுகிறதோ அதற்கு ஏற்பதான் அவர்களும் வாக்களிக்க முடியும்.

இல்லையெனில் கட்சிதாவல் சட்டபடி பதவி போய்விடும்.
ஆக நம் பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை, தொகுதி நலனுக்கு ஏற்ப எம்பிக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை. மேலும் நாம் யார் பிரதமராக ஓட்டுபோடுவோம் என நமக்கே தெரிவது கிடையாது.

உதாரணமா காங்கிரஸ் வரகூடாது என அதிமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள் பலர். ஆனால் நாளை அதிமுக காங்கிரஸை ஆதரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆக இந்த தேர்தல் முறையில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பும் இல்லை, மண்ணனக் கட்டியும் இல்லை. மக்களுக்கு எந்த அளவு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை பொறுத்து எம்பிக்கள் தேர்ந்தெடுக்கபடுவது இல்லை.

அதிகாரமையங்களுக்கு எந்த அளவு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை பொறுத்தே தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். விளைவு ஊழல், அதிகார குவிப்பு, சர்வாதிகாரம்.

இதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை இந்தியாவுக்கு வருவது மிக அவசியம் ஆகிறது.

இம்முறையில் உங்கள் வாக்கு யாருக்கு போகிறது என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவு இருக்கும். தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கட்சியை திட்டிவிட்டு தேர்தல் முடிந்ததும் அவர்களோடு கூட்டணி வைத்துகொள்ளும் முறையும் அவசியமற்றது ஆகிறது.

ஜனாதிபதி ஆட்சி வந்தால் சர்வாதிகாரம் வராமல் தடுக்க அதிகாரபகிர்வு முறையை பின்பற்றலாம். நிதி ஒதுக்கும் அதிகாரம் அனைத்தும் பாராளுமன்றத்திடமே இருக்கும். பாராளுமன்றம் கூடி பட்ஜெட்டை நிறைவேற்றும். அதை வீட்டோ (மறுக்கும் அதிகாரம்) செய்வது ஜனாதிபதியின் உரிமை.

ஆனால் பாராளுமன்றம் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் ஜனாதிபதி காசை செலவு செய்ய முடியாது. பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியாது. சபாநாயகரை தேர்ந்தெடுப்பது எம்பிக்கள் உரிமை. அதில் குழப்பம், கூட்டணி இருந்தால் அது நாட்டை எவ்விதத்திலும் பாதிக்காது.

காரணம் எல்லா வாக்கும் மனச்சாட்சிபடி போடபடுவது என்பதால் யார் தாக்கல் செய்யும் பட்ஜெட்டும் அதில் உள்ள மேட்டரை பொறுத்துதான் வெற்றி பெறும் அல்லது தோற்கடிக்கப்படும்.

எம்பி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை கட்சிகளிடம் இருந்து பறித்து கட்சி உறுப்பினர்களிடம் வழங்கவேண்டும்.
உதாரணமாக:

அனைவரும் வாக்காளருக்கு பதிவு செய்கையில் தாம் எக்கட்சி என்பதையும் பதிவு செய்யவேண்டும். கட்சிசார்பு இல்லை என்பவர்கள் அதை பதிவு செய்து கொள்லலாம்.

தேர்தலுக்கு முன்பாக தேர்தல் கமிஷனால் “பிரைமரி (முன்) தேர்தல்”  நடத்தபட வேண்டும். அதில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் போட்டியிட விரும்புகிறவர்கள் இப்போது போலவே விண்னப்ப மனு கொடுத்து போட்டியிடவேண்டும்.

ஒரு தொகுதியில் அக்கட்சி உறுப்பினராக பதிவு செய்த அனைவரும் வாக்களித்து கட்சி வேட்பாளரை தேர்வு செய்வார்கள். கட்சிசாரா மக்கள் இதில் வாக்களிக்க முடியாது.

அதன்பின் தேர்ந்தெடுக்கபட்ட வேட்பாளர்கள் பொதுதேர்தலில் மோதுவார்கள். அதில் ஒருவர் எம்பி ஆவார். மனச்சாட்சிபடி ஓட்டுபோடுவார். அடுத்த தேர்தலில் தாம் ஓட்டளித்த மசோதாக்களுக்கு பொறுப்பேற்று மக்களிடம் விளக்கம் அளித்து தேர்தலில் ஜெயிப்பது அவர் கடமை.

இம்முறையால் வேட்பாளர்கள் கட்சி அதிகார மையங்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒழிந்து மக்களுக்கு விசுவாசமாக இருப்பது சாத்தியம் ஆகும்.

அடிக்கடி அரசுகள் கவிழ்ந்து தேர்தல்கள் வராது.
பொம்மை பிரதமர்கள், பொம்மை முதல்வர்கள் வருவது தவிர்க்கப்படும். மன்மோகனை மக்கள் தேர்ந்தெடுத்து இருந்தால் அவர் ஏன் சோனியாவுக்கும், ராசாவுக்கும் பயப்பட போகிறார்?

அவர் பதவியை பறிக்கும் அதிகாரம் இருவரிடமும் இருந்ததால்தானே பயப்படுகிறார்? ராசாவை அவர் நினைத்தால் டிஸ்மிஸ் செய்திருக்க முடியும் எனில் அவர் அதை செய்துவிட்டிருக்க போகிறார்.
இது அமெரிக்க ஆட்சிமுறையை ஒத்தமுறை.

இந்தியா மாதிரி மிகபெரும் தேசத்துக்கு இங்கிலாந்து எனும் குட்டி நாட்டின் அரசியலமைப்பு பொருந்தி வராது என்பதை வரலாறு நிருபித்துவிட்டது. ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கி நாடு நகரவேன்டும்.

நன்றி - Neander Selvan


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...