Friday, April 11, 2014

வேட்பு மனுத்தாக்கல் - ஒரு களப்பணி

            இதனை மக்களவைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக வேட்பு மனுத் தாக்கல் செய்த வேட்பாளர் உடன் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதுகிறேன்.

            வேட்பு மனு கொடுக்க ஆரம்பித்து ஒரு வாரத்தில் மனுவைப் பெற ஆரம்பிக்கிறார்கள். இதில் வழக்கமாக அரசியல் செய்து வரும் அரசியல்கட்சிகளுக்கு இதில் உள்ள நுணுக்கங்கள் தெரியும். எனவே அவர்களுக்கு அதிகமாக சிக்கல்கள் இருப்பதில்லை.

            ஆனால் புதிதாக மனுத் தாக்கல் செய்பவர்கள் இது பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வது நல்லது.

            ஒரு வேட்பாளர் தான் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சான்றிதழை மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும். அவர் தீவிரமான குற்றச் சாட்டுக்கள், வழக்குகள் இருந்தால் அந்த சான்றிதழைத் தர மறுக்கலாம். இதனை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம்.

            மனுக் கொடுக்க ஆரம்பிக்கும் தினத்தில் வேட்பாளர் புதிய வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். முந்தைய நாள் செய்தால் கூட அந்தக் கணக்கு ஏற்கப்படாது. இது இந்த ஆண்டு விதிக்கப்பட்ட புதிய விதிமுறையாகும். இந்தக் கணக்கு தேர்தல் செலவுகளை கணக்கில் வைப்பதற்காகக் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கின் எண்ணை கொடுக்காவிட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.

            வேட்பாளர் தனக்கு வாக்கு உள்ள தொகுதியிலிருந்து வேறு தொகுதியில் போட்டியிட்டால், அவர் அந்த மாவட்ட வருவாய் அதிகாரியிடம் (ஆர்டிஓ) அவருக்கு அந்தத் தொகுதியில் வாக்கு உள்ளது என்பதற்கான சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும். இந்தச் சான்றிதழை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

            மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான அடிப்படை வயதுத் தகுதி 25. இந்த வயதுக்கு அதிகமாக இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழின்படி ஒருநாள் குறைவாக இருந்தால் கூட அவரது மனு தள்ளுபடி செய்யப்படும்.

            வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதைப் போலவே இருக்க வேண்டும். வேட்பாளர் தனது பெயரை மாற்றியிருந்து அது வாக்காளர் பட்டியலில் மாற்றப்படாமலிருந்தால் அது வெளியிடப்பட்ட அரசிதழ் நகலை அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும்.  

            படிவம் 26 மற்றும் 2 படிவங்கள் கொடுப்பார்கள். இதில் படிவம் 26-ஐ அதில் உள்ள முறைப்படி முதல் பக்கத்தை பத்திரத்திலும் மற்ற பக்கங்களை கான்க்ரீட் பேப்பரிலும் டைப் செய்து நோட்டரி செய்து கொடுக்க வேண்டும். மற்ற பக்கங்களை கையால் எழுதிக் கொடுத்தால் போதுமானது.

            மனுவில் எந்த இடத்தையும் வெற்றிடமாக விட்டு வைத்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட தகவல் இருந்தால் கொடுக்க வேண்டும். அல்லது இல்லை என்று எழுதி இருக்க வேண்டும்.

            முக்கியமான விவரங்கள் வழக்கு, சொத்துக்கள் தொடர்பானவையாகும். இதில் சிவில் வழக்குகளாக இருந்தால் பிரச்சனையில்லை. குற்றவியல் வழக்குகளாக இருந்து தண்டனை பெற்றிருந்தால் அது பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். அது மனுவை தள்ளுபடி செய்யவும் காரணமாக அமையலாம்.

            சொத்துக்களைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசம் இல்லாவிட்டால் பிரச்சனையில்லை. வேட்பாளர் மற்றும் அவரைச் சார்ந்துள்ளவர்களின் (தாய், தந்தை, மனைவி, மகன்) சொத்து விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். கல்வி பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டும். சொத்து உள்ள இடம்(கிராமம், நகர்ப் பகுதி), சொத்தின் சர்வே எண், சந்தை மதிப்பு போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை சொத்துக்களின் சான்றுகளை கையில் வைத்திருப்பது நல்லது.

            அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக இருந்தால் அவருக்காக யாரும் முன்மொழியத் தேவையில்லை. சுயேட்சை வேட்பாளராக இருந்தால் அவருக்காக அவர் போட்டியிடும்  தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்களின் முன்மொழிதல் அவசியம்.

            இதில் வெறுமனே வாக்காளர் அடையாள அட்டையின் நகலைப் பெற்று அவர்களின் முன்மொழிவைப் பெறக் கூடாது. அவரது அடையாள அட்டையில் உள்ள எண்ணை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் (http://www.elections.tn.gov.in/EPICSEARCH/) தேடினால் அந்த வாக்காளரின் பாகம் எண், வரிசை எண், பெயர் விவரங்கள் வரும். அந்தப் பக்கத்தை பிரிண்ட் எடுத்து மனுவுடன் இணைப்பது நலம். அதை குறிப்பிட்டு முன்மொழிவைப் பெற வேண்டும். அந்த வாக்காளரின் பெயருக்கு நேராக அவர் கையொப்பமிட்டு தேதியிட வேண்டும். இந்தப் பக்கத்தின் மூலம் ஒரு வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ளலாம்.

            ஏதாவது காரணத்திற்காக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வாக்காளரின் எண்ணைக் குறிப்பிட்டு அவரது முன்மொழிவைப் பெற்றிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும். புதிய வாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு வாக்காளரால் மட்டுமே முன்மொழிய முடியும். முன்மொழிபவர்கள் பெயர் மாறி கையொப்பம் இட்டிருந்தாலும், அல்லது ஒரு கையொப்பம் விடுபட்டிருந்தாலும் கூட அந்த மனுத் தள்ளுபடி செய்யப்படும்.

            முடிந்தவரை மனுப் பெறுவதற்கான கடைசி தேதிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே மனுத் தாக்கல் செய்வது நல்லது. நிரப்பிய மனுவை அதிகாரிகளிடம் காட்டி அதை சரிபார்த்துக் கொண்டு மறுநாள் தாக்கல் செய்வதும் சிறந்தது. முடிந்தவரை காலை நேரத்தில் மனுத்தாக்கல் செய்வது நலம். ஆனால் அவசரஅவசரமாக இறுதி நாளில் அல்லது அன்றைய நாளில் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யக் கூடாது. அது தவறுகள் நடக்க வாய்ப்பளிக்கும். காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மனுக்களைப் பெறுகிறார்கள்.

            மனுவை தாக்கல் செய்யும்போது முன்மொழிபவர்கள் 4 பேர் உடன் செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் மனு வாங்கப்படும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மனுவை வேட்பாளர் மட்டுமே கொடுக்க வேண்டும். அவர் முழுவதுமாக நிரப்பப்பட்ட மனுக்களை மட்டுமே கையில் வைத்திருப்பது நலம். தேவையில்லாத காகிதங்களை கையில் வைத்திருப்பது குழப்பங்களை ஏற்படுத்தும். நிரப்பப்பட்ட மனுவில் தேவையான இடங்கள் அனைத்திலும் வேட்பாளர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மனுத் தள்ளுபடி செய்யப்படும்.

            மனுவை பெறும்போது அதிகாரிகள் அதனைச் சோதனை செய்ய மாட்டார்கள். அப்படியே வாங்கிக் கொள்வார்கள். இது மனுவைத் தள்ளுபடி செய்வதற்கான ஒரு தந்திரமாகவே படுகிறது. பின்னர் டெபாசிட் தொகையை (ரூ.25,000) ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதையும் கொடுப்பார்கள்.

            இதனை தேர்தல் அதிகாரியாக இருந்து மாவட்ட ஆட்சியரே செய்வார். அவரின் முன்பாக முன்மொழிபவர்கள் 4 பேரும் நிறுத்தப்படுவார்கள். அப்போது வேட்பாளர் தான் இந்திய இறையாண்மை மற்றும் அரசியல் சட்ட திட்டங்களுக்கு இணங்க வேட்பாளராக போட்டியிடுவதாக உறுதிமொழியேற்று கையொப்பமிட வேண்டும்.

            அதன்பின் மாவட்ட ஆட்சியர் ஒரு பார்சலை கொடுப்பார். அதில் டெபாசிட் செலுத்தியதற்கான ரசீது மற்றும் தேர்தல் செலவுகளைக் குறித்துக் கொள்வதற்கான கணக்குப் புத்தகம். மாதிரி செலவுகளுக்கான தொகைகள் போன்றவற்றின் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு கொடிக்கான செலவு, போஸ்டர், மேடை போடுதல், வாகன வாடகை, சேர் வாடகை போன்ற விவரங்கள் இருக்கும். பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் இந்த செலவு பட்டியலை தினமும் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்கு ஒப்புதல் அல்லது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் வரை செலவழிக்க தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

            முக்கியமாக, வேட்பு மனுவில் கொடுக்க வேண்டிய ஏதாவது இருந்தால் அதைச் சமர்ப்பிக்கக் கூறும் சோதனைப் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படித்து அதில் கேட்டிருக்கும் விஷயத்தை வேட்பு மனு பரிசீலனைக்கு முன்பாக கொடுப்பது நல்லது. இதில் மனுவில் செய்யப்பட்ட தவறுகள் பற்றி சொல்லப்படாது.

            எனவே நீங்கள் அவர்கள் கேட்ட விவரத்தை கொடுத்தாலும் உங்கள் மனுவில் பிழைகள் இருந்தால் அது தள்ளுபடி செய்யப்படும். ஆட்சியர் கொடுக்கும் பார்சலில் பாராளுமன்ற உறுப்பினர் தேர்வு சம்பந்தமான சட்ட விதிமுறைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். வேட்பளார் அதனை படித்து கொள்வது நல்லது.

            வேட்பு மனு பெற்ற பின்னர் ஓரிரு நாளில் வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். அப்போது மாவட்ட ஆட்சியர் அனைத்து வேட்பாளர்களின் முன்பாக வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களின் மனுக்களில் உள்ள குறைகளைச் சொல்லி அவற்றை தள்ளுபடி செய்வார் அல்லது ஏற்றுக் கொள்வார். மனுத் தள்ளுபடி செய்யப்பட்டால் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிட்ட பிறகு அவர்களது டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும்.

            அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒன்று அல்லது இரண்டு மாற்று வேட்பாளர்களுக்கும் மனுத்தாக்கல் செய்வார்கள். அதாவது ஏதாவது காரணத்திற்காக வேட்பாளரின் மனுத் தாக்கல் செய்யப்பட்டால் மற்றவரின் மனு ஏற்கப்பட்டு அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். கட்சியின் வேட்பாளர் மனுத் தள்ளுபடி செய்யப்படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

            வேட்பாளர் மனுப் பரிசீலனை தினத்தில் கட்சி வேட்பாளர்களுக்காக மனுவை நிரப்பியவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பர். மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அது அவர் தலையில் விழும். மனு ஏற்கப்பட்டால்தான் அவர் நிம்மதிப் பெருமூச்சு விடுவார். மனுத்தாக்கல் என்பது ஏறக்குறைய களப்பணி ஆற்றுவதைப் போலாகும். எனவே ஒவ்வொரு வேட்பாளரும் இதில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம்.

            முதல் வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டால் மாற்று வேட்பாளர்களின் மனுவை ஏற்க வேண்டிய அவசியமில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஓரிரு நாட்கள் காலக் கெடு கொடுக்கப்படும். அதற்குள் விருப்பமில்லாதவர்கள் தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
                                                *****

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...