நாம் தமிழர் கட்சி “நாடார் கட்சி” என்று குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது. அது தவறானது. இந்த
வாதத்திற்குள் போகும் முன்பாக வரலாற்றில் சிறிது பின்னோக்கிச் சென்று
பார்ப்போம்.
1860-ம் ஆண்டு வாக்கில் நாடார்
சமுதாயத்தவர் “இனி வியாபாரத்தில்
ஈடுபடுவது” என்று முடிவு செய்து
அதற்கான ஏற்பபாடுகளைச் செய்யத் தொடங்கின்றனர். பொதுவாக செல்வத்தை நோக்கி நகரும்
ஒரு சமுதாயத்தவர், கூட்டத்தவர்
ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக அல்லது இணக்கமாக செல்லலாம் அல்லது செல்ல விரும்பலாம்.
அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களின் தொழில் பாதிக்கப்படும்.
எனவே எப்போதுமே தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் அது போன்ற
ஒரு போக்கையே கடைப்பிடிப்பர். அதில் தவறில்லை.
1900 வாக்கில் நாடார்கள்
கட்டமைக்கப்பபட்ட வியாபார சமுதாயம் ஆகிவிட்டார்கள். 1921-ல் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியைத் துவங்குகிறார்கள்
என்றால் அவர்களின் தொழில் வளர்ச்சியை பாராட்டவே வேண்டும். அந்தச் சூழலில் நாடார்
சமுதாயத்தவர் பெரும்பாலானோர் ஆளும்கட்சியான “நீதிக் கட்சியில்” இருந்தனர். எனவேதான்
நாடார் சமுதாயத்தவரை காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காமராஜரை காங்கிரஸ் கட்சிக்குள் வளர்த்துவிட வேண்டும்
என்று எண்ணி அவருக்கு உதவிகள் செய்தார்.
பின்னாளில் காமராஜர்
முதலமைச்சர் ஆகிவிட்டார். அப்போது நாடார் சமுதாயத்தவர் காமராஜருக்கு ஆதரவு
தெரிவித்தனர். காமராஜர் தன்னுடைய சாதியினருக்கு உதவினார் என்று ஒரு குற்றச் சாட்டு
வைக்கப்படுவது உண்டு. ஆனால் காமராஜர் முதலமைச்சா் ஆகாதிருந்தாலும் கூட நாடார்
சமுதாயத்தவர் முன்னேறி இருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்களின்
தொழில் முனைவு அப்படி இருந்தது.
காமராஜருக்கு முன்பாக
நாடார் மஹாஜன சங்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி
செளந்திரபாண்டியன் நாடார் ஆவார். இவர் நீதிக்கட்சியில் ஒரு முக்கிய பிரமுகராகவும்
சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அதேபோல தினத்தந்தி பத்திரிகையை நிறுவிய சி.பா. ஆதித்தனார் 1942 ஆண்டு வாக்கில் நாம் தமிழர் கட்சியை நிறுவி செயல்பட்டு
வந்துள்ளார்.
இன்று தமிழினத்தில்
நாடார் சமுதாயத்தவர் பொருளாதார பலம் கொண்ட சமுதாயத்தவராக உள்ளனர். எனவே அரசியல்
கட்சி நடத்துவோர் நன்கொடைக்காக அவர்களை அணுகியே ஆகவேண்டும். அவ்வாறு நன்கொடை
கொடுக்கும் நாடார் சமுதாயத்தவர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களிடம் இணக்கமாகச் செல்ல, அல்லது அவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த
விரும்பலாம். அதில் தவறில்லை.
இதற்கெல்லாம் மேலாக
நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரே அரசியல்வாதியாக, ஆட்சியாளராக வந்தால் அதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள்.
ஒரு அரசியல்வாதி, ஆட்சியாளன் தங்களது சமுதாயத்தைச்
சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று எல்லாச் சமுதாயத்தவரும் விருப்பப்படுவது
இயல்பானதே. அதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு உருவாகும் ஒரு அரசியல்வாதி, ஆட்சியாளர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை
வைத்தே மக்கள் அவரை ஆதரிப்பார்கள் அல்லது புறம்தள்ளுவார்கள். இந்த
அடிப்படையில்தான் நடிகர் சரத்குமாருக்கு நாடார் சமுதாயத்தவர் ஆதரவு
தெரிவித்தார்கள். ஆனால் சரத் குமார் அரசியலில் எடுபடவில்லை.
ஈழப்போரின்போது எழுந்த
தமிழர் உணர்வைப் பயன்படுத்தி திரை இயக்குனர் சீமான் அரசியல்வாதியாக உருவெடுத்தார்.
அவர் நாம் தமிழர் கட்சியை துவங்கினார். சரத்குமாருடன் ஒப்பிடும்போது சீமானுக்கு அதிக செல்வாக்கு
உள்ளது. எனவே இயல்பாகவே நாடார் சமுதாயத்தவர் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பதில்
தவறில்லை. ஆனால் என்னைப் போன்ற
தமிழ்த் தேசியவாதிகள் சீமான் மீது குற்றச்சாட்டுக்களை வைக்கிறோம். அதற்கு காரணம்
அவர் நாடார் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அல்ல. தமிழத் தேசிய அரசியலை
முன்னெடுக்கும் அவரது செயல்பாடுகளை வைத்தே நாங்கள் அவரை விமர்சனம் செய்கிறோம்.
தற்போது தமிழ்த் தேசியக்
கருத்தியல் தமிழர் மத்தியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் எழுச்சி பெற்றுள்ளது.
அதைச் சரியாகப் பயன்படுத்தி தமிழர் ஆட்சி அதிகாரத்தை பெறுவதை சீமான் மடைமாற்றம்
செய்து வருகிறார் என்று நாங்கள் சொல்கிறோம். காட்டாற்று வெள்ளமாக பொங்கிப்
பெருக வேண்டிய தமிழ்த் தேசிய அரசியலை குட்டையில் தேக்கி சாக்கடையாக மாற்றி
நாற்றமடிக்கச் செய்து விடுவாரோ என்றுதான் நாங்கள் அவரை விமர்சனம் செய்கிறோம்.
தன்னுடைய கட்சிக்குள் ஜனநாயகத் தன்மையைப் பின்பற்ற முடியாத அவர் ஆண்-பெண்
வேட்பாளர்களை சம எண்ணிக்கையில் நிறுத்தி தனது அமைப்பை ஜனநாயக அமைப்பாக காட்ட
முயல்வதைக் குறை சொல்கிறோம்.
தமிழினத்திற்கு எதிரான “திராவிடம்” என்ற கருத்தியலை வீழ்த்த தமிழ்த் தேசிய அரசியலை
முன்னெடுக்கும் அவர் திராவிடத்தின் நீட்சியாக இருந்து, திராவிக் கட்சிகளைப் போலவே செயல்படுகிறாரோ
என்று அச்சப்படுகிறோம். திராவிட மேடைகளில் பேசி வளர்ந்த அவர் இன்னமும் மனதின்
அடியாழத்தில் தமிழின அழிப்புக் கொள்கையான “சாதி ஒழிப்பைச்” சுமந்து நிற்கிறார். எனவேதான் அவர் அவ்வப்போது
தமிழினத்தின் இனக்குழுக்களான சாதிகளை இழித்தும் பழித்தும் பேசி வருகிறார். இவர்
இவ்வாறான கருத்தியலைக் கொண்டிருக்கும் வரை இவரால் தமிழினத்தின் ஆதரவையும் பெற
முடியாது, வளரவும் முடியாது.
மேலும் இவர் தனது ஜனநாயக எதிர்ப்புத் தன்மையால் மற்ற தமிழ்த் தேசிய அமைப்புகளை
புறம்தள்ளியும் அலட்சியப்படுத்தியும் வருகிறார். இவரது இந்தப் போக்கு இவர் ஒரு
போலி அரசியல்வாதி, திராவிட அரசியலின்
நீட்சித் தலைவர் என்ற கருத்தை எங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மற்றபடி திராவிடத்தின்
சாதி ஒழிப்புக் கருத்தியல், தமிழ் இனக்குழுக்களுக்கு
இடையே காரணமே இல்லாமல் மற்ற இனக்குழுக்களை எதிர்க்கும், பகையாகப் பார்க்கும் போக்கை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே
எந்தவொரு நாட்டிலும் செல்வம் சேகரிக்கும் குழுக்கள் மற்றவர்களைச் சுரண்டுவதாக பொதுமக்களிடம்
ஒரு கருத்தியல் நிலவும். உண்மையில் ஒரு குழு அவ்வாறு செயல்பாட்டால் அவர்களை சட்ட
விதிமுறைகளின் மூலமாக மட்டுமே சரியான பாதைக்கு அழைத்து வரவேண்டும். அதை
விட்டுவிட்டு அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது யாருக்கும் நன்மை பயக்காது. இந்த விஷயத்தில் தமிழ் இனக்குழுக்கள் தெளிவு
பெற வேண்டும். அவ்வாறான ஒரு தெளிவு ஏற்படுகையில் ஒவ்வொரு இனக்குழுவின்
தனித்தன்மையையும் ஒட்டுமொத்த இன எழுச்சிக்காக, வளர்ச்சிக்காக, விடுதலைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். நாடார் சமுதாயத்தில் மட்டுமல்ல
எந்தவொரு தமிழ்க் குடியிலிருந்தும் ஒரு சிறந்த மக்கள் ஆதரவு பெற்ற தலைவன்
உருவாகினால் அவனை நாம் மனமார வாழ்த்தி வரவேற்போம். எல்லா இனக்குழுக்களும் சேர்ந்துதான் ஒரு இனம்
உருவாகிறது. எந்தவொரு இனக்குழுவையும் ஒதுக்குவது, புறக்கணிப்பது என்பது
இனத்திற்கு நன்மை பயக்காது.
(கட்டுரையில் வரும் தலைவர்கள்
பற்றிய விக்கிப் பீடியா பக்கங்களின் இணைப்புகைள கீழே கொடுத்துள்ளேன்.)
No comments:
Post a Comment