Monday, April 22, 2019

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் வரலாறு

மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது பாப்பாபட்டி என்ற கிராமம். கருமாத்தூர் என்ற ஊரில் இருந்தும் அங்கு செல்ல முடியும். அங்கிருந்தும் 15 கிமீ தொலைவு தூரம்தான். பாப்பாயி என்ற கிராமத்துப் பெண்ணை பாப்பான்பட்டி என்ற ஊரில் இருந்தவனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். கருமாத்தூரில் ஒச்சாண்டம்மன் ஆலயம் உள்ளது. ஒருமுறை ஆண்டாயி (பாப்பாயி ) என்பவளும் அவளுடைய கணவரின் தங்கையும் அங்கு வந்து பொங்கலிட்டனர். அந்த ஆலய வழக்கப்படி அந்த ஆலய பூசாரிகள் பொங்கல் படைக்க வருபவார்களிடம் இருந்து பொங்கலை வைக்கும் முன் சிறிது அரிசியையும், பொங்கல் வைத்தப் பின் சிறிது பொங்கலையும் பெற்றுக் கொள்வார்கள் . ஆனால் ஆண்டாயி தனது மதினியிடம் இருந்து அவர்கள் அந்த பொருட்களை எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை . தன்னுடைய புகுந்த வீட்டினரின் பொருளை அவர்களைக் கேட்காமல் எடுத்துக் கொண்டால் தன்னை தப்பாக நினைப்பார்கள் என்று கோபமுற்றாள் . ஆனாலும் அந்த பூசாரிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவள் மதினியிடம் இருந்தும் அரிசி மற்றும் பொங்கலை எடுத்துக் கொண்டார்கள். ஆகவே கோபமுற்ற ஆண்டாயி பொங்கும் பொங்கலை தன் தலையில் வைத்துக் கொண்டு பாப்பாபட்டியை நோக்கி நடக்கத் துவங்கினாள். அவள் பின்னால் அவளுடைய சகோதரன் போய் கொண்டு இருந்தான். வழி தவறிப் போய் அந்த கிராமத்தின் எல்லையை அவன் தாண்டிப் போய் விட அவள் அவனை மீண்டும் திரும்பிப் போக வேண்டாம் எனவும் அப்படிச் சென்றால் கருமாத்தூர் மக்கள் அவனை மரியாதை குறைவாக நடத்துவார்கள் எனவும் கூறி அவனை தடுத்து நிறுத்தி விட்டாள். அவர்கள் உசிலம்பட்டிக்குச் சென்றதும் தனது சகோதரனை சின்ன கருப்பு ஆலயத்தில் இருக்குமாறு கூறி விட்டு தான் அரண்மனை ஆற்றில் குளிக்கச் சென்றாள். அந்த அரண்மனை காவலாளி தனது குழந்தையை தாலாட்ட அவள் கரையில் வைத்து விட்டுப் போய் இருந்த புடவையை எடுத்து தூளியாக கட்டினான். ஆனால் அவளுக்கு தெய்வீக சக்தி இருந்ததினால் அந்த புடவை எரிந்து விட்டது. ஆகவே பயந்து போனவர்கள் அவளை அந்த அரண்மனையில் இருந்த ஒரு இடத்துக்கு சென்று தங்குமாறு கூறினார்கள். அங்கு பொங்கல் பானையுடன் சென்றவள் அதன் பின் திரும்பி வரவே இல்லை. அவளுடைய பத்து குழந்தைகளும் அவள் சென்று மறைந்த புதரில் அவளை தேடிய போது அங்கு பொங்கல் பானை மட்டுமே இருந்ததைக் கண்டனர். அவள் பெண் கடவுளாக மாறி மறைந்து விட்டாள் என அனைவரும் நினைத்தனர். அந்த இடத்தில் ஏற்கனவே அங்காள ஐயர் என்ற ஆலயம் இருந்தது. அதற்குள் அவளுக்கு ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அவளைத் தொடர்ந்து ஒச்சான்டம்மனும் அங்கு வந்ததாகக் கருதி அவளுக்கும் அங்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். அதுமுதல் ஆண்டாயியை ஆச்சிக் கிழவி என அழைத்தனர்.



அந்த ஊரில் இருந்த அவளுடைய குழந்தைகள் பெரியவர்களாகி சொத்துக்களை பாகம் பிரித்துக் கொண்டபோது அவர்களில் ஒருவனுக்கு பாலை நிலமே கிடைத்தது. அவன் சென்று ஆச்சிக் கிழவியிடம் அது பற்றிக் கூறி அழுதபோது உள்ளிருந்து வந்த குரல் 'நீ கவலைப் படாதே, உன்னை ஒரு கண்ணாகவும், மற்ற அனைவரையும் இன்னொரு கண்ணாகவும் நான் பாவிப்பேன்' என்றது. அது முதல் பாலை நிலமாக இருந்த நிலம் செழிப்பாக மாற அவன் நாளடைவில் மற்றவர்களை விடப் பெரிய பணக்காரனாக மாறினான்.

அந்த இடத்தில் உள்ள அங்காள ஐயர் ஆலயத்தில் தங்கண்ணி மற்றும் போங்கண்ணி போன்ற தேவதைகளும் உள்ளனர். வாயிலில் மாயாண்டி உள்ளார். ஆலயத்தின் இடது புறம் ஏழு தேவதைகள் உள்ளனர். வலதுபுறத்தின் சுவற்றில் ஆச்சிக் கிழவியின் படம் போடப்பட்டு மாலை சார்த்தப்பட்டு உள்ளது. அதன் எதிரில் உள்ள பகுதியில் அக்னி தாங்கு, மதனைத் தாங்கு, பெரிய தவசி, செந்தவசி, ஒச்சாண்டம்மாள், உலகநாதன் மற்றுள் வீருமல ராகு போன்றோர் உள்ளனர். அருகில் உள்ள திண்ணையில் அவளை வணங்குகின்றனர். அங்கும் ஆச்சிக் கிழவியின் படம் உள்ளது. அவள் பக்கத்தில் பேச்சியம்மன், சந்தனக் கருப்பு, கலாஞ்சிக் கருப்பு, கோட்டைக் கருப்பு, சின்னக் கருப்பு, பெரியக் கருப்பு, அக்னிவீரன் மற்றும் கொல்லிமலை ராக்கம்மாள் போன்ற தேவதைகளும் சிலைகளும் உள்ளன. தம் மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலைக் கிடைக்க ஆச்சி கிழவியை வந்து வணங்குகின்றனர்.
சிவராத்தரி விழா கோலாகாலமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆச்சிக் கிழவியின் அனைத்து பொருட்களும் ( நகை போன்றவை) உசிலம்பட்டியில் உள்ள சின்னக் கருப்பு ஆலயத்தில் வைத்து உள்ளனர். அங்கிருந்து வாத்திய முழக்கங்களோடு அதை எடுத்து வருவார்கள். அங்காள ஐயர் ஆலய சாமியாடிகள் ( சாமி வந்து ஆடிக்கொண்டு வருபவர்கள்) அதன் பின்னால் ஒரு கழியை எடுத்துக் கொண்டு வருவார்கள். இளந்தோப்பு என்ற இடத்தில் ஆச்சி கிழவியின் சந்ததியினர் அவளுடைய நகைகளை வாங்கிக் கொள்வார்கள். அவை சரியாக உள்ளனவா என கணக்குப் பார்ப்பார்கள். அதன் பின் அவற்றை ஆச்சிக் கிழவியின் ஆலயத்துக்கு கொண்டு வந்து பூஜை செய்வார்கள். அதன் பின் மீண்டும் அவை உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்படும். சின்ன மற்றும் பெரிய கருப்பர்களுக்கு ஆடுகள் பலியாகத் தரப்படும்.

இந்த ஆலயம் பற்றிய இன்னொரு கதையும் உள்ளது. கருப்பு ஆலயத்தின் முன்னால் இரண்டு யானையின் சிலைகள் உள்ளன. ஒன்று கருப்பாகவும் இன்னொன்று வெள்ளையாகவும் உள்ளது. ஒருமுறை ஒரு ஆங்கிலேயன் சாமியாடிக்கொண்டு வந்தவர்களிடம் அந்த யானைகள் கரும்பை தின்னுமா என கேலியாகக் கேட்க , சாமியாடிகள் தின்னும் என்றனர். ஆகவே கரும்புகளைக் கொண்டு வந்து அவற்றின் முன்னால் போட்டு விட்டு, பெரிய துணியால் யானையும் சேர்த்து கரும்பை மூடிவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின்னால் அதை திறந்து பார்த்தபோது கரும்புகளைக் காணவில்லை. சாமியாடியவர் அந்த வெள்ளிக்காரனிடம் அவனுடைய மகன் உடல் நலமின்றி உள்ளதாகவும் அவன் நீண்ட நாள் உயிருடன் இருக்க மாட்டான் எனவும் கூறினான். அடுத்து சில மணி நேரத்திலேயே அந்த ஆங்கிலேயனுக்கு அவன் மகன் உடல் நலமின்றி கிடந்தது மரணம் அடைந்து விட்டதாக தகவல் வந்தது.

ஆச்சியின் நகைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அனைத்துக் கடைகளுக்கும் விடுமுறை தரப்படுகின்றது.

தேவரின சிறப்பு செய்திகள்
கள்ளர் வாழ்வியல் வரலாறு - Kallar History
கள்ளர் வரலாறு மீட்பு குழு
கள்ளர் நாடு அறக்கட்டளை

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...