Tuesday, April 16, 2019

செம்புலி வேள் 'முத்துசுவாமி' - பாண்டியர் வரலாறு

செம்புலி வேள் 'முத்துசுவாமி'
○~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~○
அன்பு வாசக நண்பர்களே! -உறவினர்களே!!, வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி பாண்டியர்களுடைய வரலாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் குறுகியதொன்றல்ல! ,அவர்கள் ஆண்டபகுதிகளை உள்ளடக்கிய தென்பொதிகைச் சாரலிலும்,தென்றல் தவழுகின்ற ஆலயங்களிலும், அன்னச்சத்திரங்களிலும், இளைப்பாறுதல் தருகின்ற கல்மண்டபங்களிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில் படித்தும் படிக்காமலும் -படியெடுத்தும் அச்சில் ஏற்றியும்- ஏற்றாமலும் இருக்கின்ற கல்வெட்டுகளும்- செப்பேடுகளும்- ஓலைசாசனங்களும் - பிறகுறிப்புகளும் ஏராளமான அளவிலே உள்ளன.வரலாற்றை மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தி நடுநிலை தவறாத ஆய்றிஞர்களைக் கொண்டு, தமிழகத் தொல்லியல் துறையானது அங்கே முறையான ஆய்வுகளை நடத்தி "உள்ளது உள்ளபடி" சொல்ல முற்பட்டால், இன்றைய வரலாற்று திரிபுகள் அத்தனையும் மொத்தமாக காணாமல் போய்விடும். ஏன் தமிழக வரலாற்றிற்கே ஒரு பெரும் வெளிச்சம் இதனால் கிடைக்கும் என்று கூறிக்கொண்டு எனது தென்காசிப் பாண்டிய வம்சத்தின் தேடலைத் தொடர்கின்றேன். நீங்கள் இப்போது வாசிக்க இருப்பது இதுவரை அச்சில் ஏறாத புதிய கல்வெட்டுகளாகும்.
பெரியசுவாமி ஐயன் கோயில்
•••••••••••••••••••••••••••••••••••••••••
சொக்கம்பட்டி ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம்தான் ஸ்ரீபெரியசுவாமி ஐயன் கோயில். இதனை சொக்கம்பட்டி மற்றும் சுற்றுப்புற மக்கள் "பெரியநாதன்" கோயில் என்றே அழைக்கின்றனர். இக்கோயிலின் அமைவிடம் மிகவும் ரம்மியமான எழில் கொஞ்சும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கோயிலின் படிக்கட்டுகளை தினந்தோறும் ஆற்றுநீரானது அலையடித்துக் கழுவிக்கொண்டிருக்க நாமும் இறங்கி கருப்பாநதியாகிய இந்த தெளிவான நீரோட்டத்தில் நடந்துதான் நாம் ஆலயத்திற்குள் நுழைய முடியும். நுழைவாயிலில் சாஸ்தா நம்மை வரவேற்கிறார். இரண்டு பெரிய குதிரை சிலைகளின் மீது பெரியசுவாமி ஐயன் அருகில் பூரணபுஷ்கலையுடன் கம்பீரமாக அருள்கொஞ்சும் முகத்துடன் காட்சியளிக்கிறார். அதைக்கடந்து உட் செல்கையில் நேர்த்தியான கற்கோயில் தென்படுகிறது. கட்டிட அமைப்புகள் பிற்காலப் பாண்டியர் காலத்தவை என்பதை பறைசாற்றுகின்றன. பெரிய கருவறை மற்றும் முன் மண்டபம் கொண்டு அதற்கு முன்பாக சிறு மண்டபத்துடன் அழகாகக் காட்சியளிக்கிறது ஆலயம். மூன்று லிங்கங்கள் கருவறையில் காட்சியளிக்கின்றன. நடுவில் உள்ளதுதான் கருஞ்சிவலிங்கம் என்று சொல்லப்படுகின்ற பெரியசுவாமி ஐயனாவார். இடமும் வலமும் முறையே பூரண புஷ்கலா தேவியர் லிங்க வடிவில் காட்சிதருகின்றனர்.






கல்வெட்டுகள் .
••••••••••••••••••••
இங்கே நான் அறிந்தவரை மூன்று கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒன்று செம்புலி சின்னணஞ்சாத் தேவர் காலத்தியது இக்கல்வெட்டு இக்கோயிலின் முன் மண்டபத்தின் உட்புறத்தில் அமைந்துள்ள மேற்கூரையில் பொறிக்கப்பட்டுள்ளது.
மற்றொன்று அதே மண்டபத்தில் கீழே படுக்க வைக்கப்பட்ட நிலையில் உடைந்து காணப்படுகின்றது. மற்றொன்று அதே மண்டபத்தில் கோயிலின் பிரதான வாசலின் வலது ஓரத்தில் நின்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
செம்புலி சின்னணஞ்சாத் தேவர் கல்வெட்டு.
1.திரு பணியுஞ் செய்து விண்னோர் முன்வர பொற்.சூயதாவினகும்பாபி செதானென் உ
2. {பிரி}யமுடன் கருஞ்சவனப் பெரியசுவாமி வெள் விடையோன் டனக்கு அந்தமெல்படிலசனத்தில்
3. . .ருப்பிலுவர் மாணிக்க வரையான் வெள் செம்புலிதுரைச் சின்னணஞ்சான் சோலமுத்து சுவாமி
4. . . . .ருத. . . .ன். . .மை . . ங்கி தெக்கல்லக நன்னாடன் வடகரைக்கு வேங்கன்
5. {சின்ன}ணஞ்சான் செம்புலி வேள் முத்து சுவாமி செய்தானே கும்பாபிசேகந்தானே உ
6. . .ன வனாங் கருஞ்சை வனப் பெரிய சுவாமி முக்கண்ணன் றிருப்பணியு முடித்தே எங்
7. . . னயஞ்செ ஆதித்தவாரம் நன்னாள் துலங்கு சதுர்த்தெசி அத்தமார்சித வேளையிலே
8. . . என்னு துளாயிரத்திருபத்தாராம் ஆண்டு வசந்தத்து சித்திரை நன்மாஷம் எட்டாந் தேதி....
- என முடிகிறது. இக்கல்வெட்டின் கீழே சாசனத்திற்கு முத்திரை போன்று பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு புடைப்புச் சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மற்றும் அதன் படங்களை கீழே பதிந்துள்ளேன். மூன்று கல்வெட்டுகளில் இரண்டை நானும், ஒன்றை மேலப்பனையூர் திரு.ஐயா. கரு.ராஜேந்திரன் அவர்களும் வாசித்தோம் அவற்றை நாங்கள் வாசிக்கும்போது எங்களுடன் கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள் திரு. Ra Ja @ தென்கரை மகாராஜ பாண்டியன் திரு. பராக்கிரம பாண்டியன். திரு. விவேக் பாண்டியன் அவர்கள் உடனிருந்தனர்.
கல்வெட்டு செய்தியும், விளக்கமும்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
மேற்கண்ட கல்வெட்டில்,வடகரை அரசராகிய சின்னணஞ்சாத் தேவரவர்கள்,...
"முத்து சுவாமி"
"செம்புலி வேள் முத்துசுவாமி"
"வேள் செம்புலி துரை"
"பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சோல முத்து சுவாமி "
"தெக் கல்லக நன்னாடன்"
"வடகரைக்கு வேங்கன்"
- எனும் சாசனத்தொடர்களால் குறிக்கப்பெற்றுள்ளார்.
முத்து சுவாமி எனும் தொடரை நோக்கும்போது நமக்கு பாண்டியனின் ஞாபகம் வராமலிருக்காது.அதற்கேற்ற வண்ணமாக குற்றாலத்தில் வடகரையாதிக்க பதியார்கள் முத்துப்பூணூல் -முத்தாரம் -முத்துக்கடகமணிந்த கோலங்களில் காட்சியளிப்பது போன்றே இங்கும் அவர்கள் வம்சத்து "செம்புலி வேள் முத்துசுவாமி சின்னணஞ்சாத்தேவர்" ஆலயத்தின் முன் மண்டபத்தின் இடதுபக்கத் தூணொன்றில் முத்துப்பூணூல் மற்றும்அதே இதர அணிகளுடன் கரம் கூப்பி வணங்கின காட்சியில் தோற்றமளிக்கிறார்.
அடுத்ததாக "அந்தமேல்படிலசனத்தில் பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சொல முத்துசுவாமி" எனும் சாசனத்தொடரானது அந்தமிலாத உயர்ந்த சிகரங்களையுடைய மாணிக்க மலையினையும் அதனுடைய சோலை வனங்களையும் உடைய முத்து சுவாமி" என்கிற பொருளைத்தருகிறது. இது பொதிகை மலையே என்பது திண்ணம்.
மேலும் "தெக்கல்லக நன்னாடன்" என்ற குறிப்பை சிலர் நோக்குங்கால் அவர்கட்கு புதுக்கோட்டை அருகிலுள்ள கல்லகநாடு ஞாபகத்திற்கு வந்து செல்லும். ஆனால் தென் பாண்டி நாடாகிய திருநெல்வேலிச் சீமையிலும் ஒரு பகுதி கல்லகநாடு என வழங்கிய விபரங்களை கல்வெட்டுகளில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, ..
சங்கரநயினார் கோயில் தாலுகா, வீரசிகாமணியிலுள்ள குடைவரைக் கோயிலின் தூண் ஒன்றில், ஜடாவர்மன் சுந்தரசோழ பாண்டியன்{1028-29 AD} காலத்திய கல்வெட்டு {No;40 -AR no;40-1908 -ASI.SII volume xxv }
4...........................இராசராசப்பா
5.ண்டி நாட்டு முடிகொண்ட சோழவளநாட்டு
6.கல்லக நாட்டு பிரஹ்மதேயம் வீரசி{காமணி}யா
7.ன வீரவிநோதச் சருப்பேதி ம {ங்கலம்} - என்று சங்கரன்கோவில் வீரசிகாமணிப்பகுதி கல்லகநாடு என்ற பெயருடன் விளங்கியதை தெளிவாகச் சுட்டுகிறது.
பெரியசுவாமிஐயன் கோயிலின் கல்வெட்டானது அக்கோயிலுக்கு சின்னணஞ்சாத் தேவரவர்கள் கும்பாபிஷேகம் செய்து திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது. அடுத்ததாக "கருஞ்சவனப்பெரியசாமி" எனும் சாசனத்தொடர் நம்மை ஈர்த்தது . கருஞ்சை -கருஞ்சி என்பது கருநிறச் சிறகுகளையுடைய வண்ணத்துப்பூச்சி இனவகைகளைக் குறிக்கும். அப்படியான வண்ணத்துப்பூச்சிகள் நிறம்பிய வனப்பகுதி என்பது இதற்குப் பொருளாகும். அப்பெயராலேய இக்கோயிலின் இறைவனும் வழங்கப்படுகிறார். சொக்கம்பட்டி அரசர்களின் பள்ளிப்படையாகவே இந்த ஆலயம் விளங்கியிருக்கக்கூடும் என்று கருதத்தோன்றுகிறது. ஏனெனில் பெரியசுவாமி தேவர் என்ற பெயரில் சொக்கம்பட்டி அரசர்கள் வாழ்ந்துள்ளனர். பெரியநாதன் -பெரியசுவாமி போன்றன மக்களால் மன்னர்கள் வழங்கப்படும் போக்கே ஆகும். எடுத்துக்காட்டாக அரண்மனை சுவாமிகள் என்றும், சாமிக்கூட்டத்தார் என்றும் ராஜவழியினர் தெற்கில் வழங்கப்படுகின்றனர். சிவகங்கை -ராமநாதபுரம் போன்ற ராஜ சந்ததியினர் இவ்வாறே இன்றுவரை பொதுமக்களால் அழைக்கப்படுகின்றனர் .
இக்கல்வெட்டின் காலம் அக்கல்வெட்டின் கூற்றுப்படி கொல்லம் ஆண்டு 926 ஆகும். அதன்படி அதன் ஆங்கில ஆண்டு 1751 .
இக்கல்வெட்டின் மூலம் பொதிகை மலைக்கு உரியவன்- முத்துக்குரியவன் -தென் கல்லகநாடுடையவன் என வழங்கிய பாண்டியர்சந்ததியினர் வடகரைக்கு வேங்கனாகிய சொக்கம்பட்டி அரசர்களே என்பது நிரூபணமாகியுள்ளது.
...........மீண்டும் பிறகு சந்திக்கிறேன்!
நன்றி!
1.பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கல்வெட்டாய்வாளர், உயர்திரு. கரு.ராஜேந்திரன் அவர்கள்.
2. கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள்
திரு. விவேக் பாண்டியன்
திரு. தென்கரை மகாராஜ பாண்டியன்
திரு. பராக்கிரம பாண்டியன்
புகைப்படங்கள் உதவி:
திரு. செங்கல்வராயன். {வெங்கடேஸ்வர ஐயங்கார் பேக்கரி -காளகஸ்தி}
அன்பன்;
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...