ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த
சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சை கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான
வள்ளலாரின் பக்தர்கள் வடலூர் வருவர்.
வழக்கம்போல வடலூரில் தேவர் பேசத் தொடங்கும் முன்பாக, முன்னாள்
முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.
"வடலூர் ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் ராமலிங்க அடிகளால்
பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடி இருக்கிறது.
அதனை மடத்துக்கு தந்தால்,
அச்சில் ஏற்றி,
நூல் வடிவாக எல்லாரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்"
என்றும், "அடிகளாரின் உறவினரிடம்
பலதடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய
வேண்டும்" என்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் கூறினார்.
"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம், நீங்கள்
கவலைப்பட வேண்டாம்" என்று ஓபிஆரிடம் சொல்லிவிட்டு தேவர் பேசத் தொடங்கினார்.
ராமலிங்க அடிகளாரின் அருட்பா பற்றி ஒரு மணிநேரம் பேசி
விட்டு, ராமலிங்க அடிகளாரின் உறவினர் பற்றி பேசினார். "ராமலிங்க அடிகளாரால்
பாடப்பட்டு, இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள்
இருப்பதாகவும்,
அந்தச் சுவடியை ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர்
வைத்துக் கொண்டு மடத்துக்கு தர மறுப்பதாகவும் ஓபிஆர் அவர்கள் என்னிடத்தில் சொன்னார்.
அடிகளாரின் உறவினருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாகச்
சொல்கிறேன். அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து மக்களுக்குப் பயன்படும்படி
செய்யுங்கள். அல்லது தாங்களே அந்தச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும்
செய்யாமல் தாங்கள் பிடிவாதமாக இருப்பதால்,
அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும் உலகத்துக்குத்
தெரியாமலேயே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
இதுவரை உலகத்திற்கு தெரியாமல் நீங்கள் ஒளித்து வைத்துள்ள
அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன் கேளுங்கள்" என்று மடமடவென அந்த
ஒன்பது பாடல்களையும் தன் வெங்கல நாதத்தில் பாடி முடித்தார். அவர் பாடி முடித்த
சற்று நேரத்தில் ராமலிங்க அடிகளாரின் உறவினர் அந்த ஏட்டுச் சுவடியோடு வந்து
தேவரின் பாதத்தில் விழுந்து வணங்கி,
"ஐயா, தாங்கள் தேவரல்ல. தாங்கள்தான் ராமலிங்க சுவாமிகள், என்னை
மன்னித்து விடுங்கள்" என்று கூறி "தாங்கள் பாடிய ஒன்பது பாடல்கள்தான்
இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று
சுவடியைத் தேவரிடம் தந்தார்.
தேவர் அந்தச் சுவடியைப் பெற்றுக் கொண்டு, "எல்லாம் ஈசன் செயல்" என்று சொல்லி முடிப்பதற்குள், ஓபி
ராமசாமி ரெட்டியார் எழுந்து வந்து தேவரை கட்டிப்பிடித்தபடி, அவரது
கைகளை எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டு "ராமலிங்க சுவாமிகளே
தாங்கள்தான்" என்று உரக்க சத்தமிட்டு கூறினார். கூடியிருந்த கூட்டம் கரவொலி
எழுப்பி பெருத்த ஆரவாரம் செய்தது.
- முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர் நூலிலிருந்து...
No comments:
Post a Comment