ஜனநாயகம் என்பது பூர்ணமாக எந்த நாட்டிலும் நடைெபறுவதில்லை.
அதுவும் விசேஷமாக நம் நாட்டில் நடைபெறவில்லை என்றாலும் கூட, ஜனநாயகம் இந்த நாடடில் உயிரோடு இருக்க வேண்டுமென்றால், ஜனநாயகம்
இந்த நாட்டில் தழைத்து,
வளர்ந்து மற்ற நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்றால், மக்களின் அபிப்ராயம் எப்பொழுதும் பிரதிபலிக்கும்படியாகச் செய்ய வேண்டும்.
தங்கள் பிரதிநதிகளை தேர்ந்தெடுத்து, சட்டசபைக்கு அனுப்பும்
மக்கள்,
அவர்களுடைய பிரதிநிதி கொடுத்த வாக்குறுதிப் பிரகாரம்
நடக்கத் தவறினால்,
அவனை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் இல்லை.
ஆகவேதான் தேர்தலில் நிற்கும்பொழுது மக்களுக்குச் சாதகமாகப்
பேசி ஓட்டு வாங்கிக் கொண்டு வருபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவுடன் மக்களுக்குக் கொடுத்த
வாக்குறுதியை மறந்து விடுகிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே கிடையாது.
அத்தோடு எந்தப் பிற்பட்ட ஜனநாயக சக்திக்கு விரோதமாகப் போராடி, மக்களின் அபிமானத்தைப் பெற்று ஓட்டு வாங்கி வந்தார்களோ, அப்படிப்பட்ட பிற்பட்ட ஜனநாயக சக்தியோடு சேர்ந்து வேலை செய்யவும் துணிந்து
விடுகிறார்கள். அதனாலேயே ஜனநாயகம் பேச்சில் ஒன்றாகவும், நடைமுறையில்
வேறு விதமாகவும் இன்றைய தினம் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
எந்தெந்தக் காரியங்களை எல்லாம் மக்களுக்குச் செய்வதாகச்
சொல்லி,
வாக்குறுதி அளித்து ஓட்டு வாங்கிக் கொண்டு அதிகாரத்திற்கு
வந்தார்களோ,
அந்தக் காரியங்களைச் செய்வது கிடையாது. அந்தக் காரியங்களை
செய்யவில்லை என்று சொல்பவர்களிடம் ஆத்திரத்தைக் கக்குவது, கோபத்தைக்
காட்டுவது,
வீண் புரளி பண்ணுவதாக அபாண்டத்தைச் சுமத்தி ஜனநாயகத்தை
அடியோடு கொலை செய்ய முயற்சிப்பது ஆக இவைகளையெல்லாம் அவர்கள் கையாளுவதன் நோக்கம், பதவியை நீடித்ததுப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில்தான், பதவி ஆசை பிடிக்கும் பொழுதுதான் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரான காரியங்களைச்
செய்யத் தலைப்படுகிறார்கள். மக்கள் தங்கள் தவறை உணர்ந்து சரியான பிரதிநிதியை
மறுபடியும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவர்கள்
மறுபடியும் எப்பொழுது தேர்தல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க
வேண்டியதுதான்.
ஆகவே மறுபடியும் தேர்தல் வந்தால் தாங்கள் நிச்சயமாகத்
தேர்ந்தெடுக்கப்பட மாட்டோம் என்ற எண்ணம் தலையெடுத்தவுடன்தான், தேர்தலையே ஒத்திபோட்டு விடலாம் என்ற, ஜனநாயகத்திற்கு முற்றிலும்
விரோதமான எண்ணத்தை,
அதிகாரத்தில் இருப்பவர்கள் எண்ணும்படியாக நேரிடுகிறது.
இதனால் அவர்கள் செய்யப்போகும் தவறு என்ன என்பதைக் கூட அவர்கள் சிந்திக்க மறுத்து
விடுகிறார்கள். ஆனால் தாங்கள் திரும்பவும் பதவிக்கு வர முடியாது, அதனால்தான் தேர்தலை ஒத்திபோடுகிறோம் என்று சொல்லாது, ஆந்திர
மாகாணப் பிரிவினை (போன்ற) காரணமாகத் தேர்தலை நடத்த முடியாததால் ஒத்தி
போட்டுவிடலாம் என்று மறைமுகமாக,
மக்களை ஏமாற்றும் வகையில் காரணங்களை உண்டுபண்ணிக் கொண்டு, முன்னணி,
பின்னணி அலங்காரத்தோடு சபைக்கு வருகிறார்கள்.
- 1953 மார்ச் 30-ம் தேதி சட்டசபையில் ஜில்லா போர்டு தேர்தலைத் தள்ளி வைப்பதற்கான தீர்மானத்தின்
மீதாக தேவர் பேசியது
சட்டப் பேரவையில் பசும்பொன் தேவர் நூலிலிருந்து
No comments:
Post a Comment