ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஒன்று ஈழமும் ஒன்று
என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று
தொடங்கும் கி.பி. 993-ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம்.
கொடுமை மிக்க சிங்களர் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பற்றியதன் மூலம்,
இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது.
தஞ்சையில் இவன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல
கிராமங்களை இவனுடைய 29-ம் ஆண்டில் (கி.பி. 1014) தானமாக
அளித்தான். ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக்
குறிப்பிடுன்றன.
"குரங்குகளின் துணையுடன் ராமபிரான் ஒரு
கடற்பாலத்தைக் கட்டி, பிறகு, கூர்மையான
அம்புகளால் மிகவும் சிரமப்பட்டு இலங்கை மன்னனை வதைத்தான்." ஆனால் இந்தச் சோழ மன்னன் ராமனினும் மேம்பட்டவன். இவனுடைய வலிமைமிக்க படை,
கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கை மன்னனை அழித்தன என்று
கூறுகிறது.
இப்படையெடுப்பின்போது ஈழ மண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன்,
கி.பி. 981-ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம்
மகிந்தன் என்பவனே, முதலாம் ராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை
சென்றபோது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் ராஜராஜனின் படையெடுப்பு பற்றி
மகாவமிசம் குறிப்பிடவில்லை.
மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்கு (கி.பி. 991)
பிறகு ஓர் ராணுவ புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம்
விளைந்தது. கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த
குறைபாட்டுக்குக் காரணமாகலாம். ராணுவ புரட்சியின் விளைவாக மகிந்தன் ஈழ மண்டலத்தின்
தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டான்.
இதனால் ஈழமண்டலத்தின் வடபகுதியை ராஜராஜன் எளிதில் கைப்பற்றி
மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.
-கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய "சோழர்கள்" நூலிலிருந்து
No comments:
Post a Comment