Friday, October 14, 2016

பாஜகவும் இந்து அமைப்புகளும் தேவரை தலைவராக ஏற்கத் தயாரா?


பாஜகவும் இந்து அமைப்புகளும் தேவரின் கொள்கைகளை பின்பற்றத் தயாரா?





பெரியார் சிலைகளை நீக்கிவிட்டு அங்கு பசும்பொன் தேவர் சிலைகளை வைக்கவேண்டும் என்று அர்ஜூன் சம்பத் பேசியதாகவும், அதுபற்றி எனது கருத்தை தெரிவிக்குமாறு ஒரு நண்பர் எழுதியிருந்தார். அவருக்கான பதிலே இந்த மடல்...

எதை தின்றால் பித்தம் குறையும் என்று அலைகிறார்கள் பாஜகவினரும் இந்து அமைப்புகளும். அதில் அர்ஜூன் சம்பத்தும் ஒரு ஆளாக இருப்பதில் வியப்பில்லை.
                                                                                       
இவரது பேச்சு, இன்றையத் தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவருக்கான தேவை அதிகரித்து வருவதையும், பெரியார் என்ற ராமசாமி நாயக்கர் தேவையற்ற நிலையை அடைந்து விட்டதையுமே காட்டுகிறது. ராமசாமி நாயக்கர் உயிர் வாழ்ந்த காலங்களிலேயே அவரது நாத்திக பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கியவர் தேவர். இந்த நாத்திகப் பிரச்சாரம் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பதை வலியுறுத்தியவர் தேவர். அது தமிழருக்கு அழிவாக முடிந்ததே கண்கூடு. "ரோஜா மலர் எப்படி இருக்கும் என்பது தெரியும். ஆனால் அதன் மணம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா? அது போன்றவரே கடவுள்" என்று கூறி நாயக்கரை திணறடித்தவர் தேவர். நாயக்காரால் தன் வாழ் நாள் முழுவதும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ள மறைபொருட்களை தேடிக் காண்பதே அறிவு. அவ்வாறு செய்யாமல் அவையெல்லாம் மூடத்தனம் என்று ஒதுக்கித் தள்ளுவது பகுத்தறிவு ஆகாது என்று கண்டித்தவர் தேவர். இன்று பெரியார் முன்னெடுத்த அத்தனை கருத்துக்களுமே தமிழருக்கு விரோதமானவை என்பதை எல்லாரும் உணர்ந்து வருகிறார்கள். தமிழ் அறிஞர்கள் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

தேவர் இந்து மதப் பற்றாளராக இருந்தாரே ஒழிய ஒரு காலத்திலும் இந்து வெறியர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. அதற்கு காரணம் அவர் ஒரு தமிழர் என்பதே. தமிழர்கள் எந்தக் காலத்திலும் மதச் சார்புள்ளவர்களாக இருந்ததில்லை. மதங்களுக்கு எதிரானவர்களாகவும் இருந்ததில்லை. அவர்கள் அறநெறியாளர்கள். அவர்களுக்கு நீதிதான் முக்கியம். மதம் முக்கியமல்ல. அறமா? மதமா? என்ற கேள்வி எழும்போது தமிழர்கள் மதத்தை தூக்கி எறிவார்கள். மதப் பாகுபாடு காட்டமாட்டார்கள். அதில் முக்குலத்தோர் முதலிடத்தில் இருப்பார்கள்.

அர்ஜூன் சம்பத் போன்றோருக்கு (பாஜக) ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூல ஆதாரம் எதுவென்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் மூலாதாரம் தமிழருக்கு விரோதமானது என்பது என் போன்ற, தேவரின் வார்த்தைகளை, கருத்துக்களை உள்வாங்கியவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தமிழர் விரோதி என்ற பெயரைச் சம்பாதிக்க காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளை எடுத்துக் கொண்டபோது பாஜக வெறும் 3 ஆண்டுகளில் அந்தப் பெயரை சம்பாதித்தது.

ஆனால் பாஜக தமிழகத்தின் அரசியல் மூலாதாரம் முக்குலத்தோர்தான் என்பதை மிகவும் தாமதமாக கண்டுபிடித்துள்ளது. அதனால்தான் தேவர் ஒரு இந்து மதவாவதி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனது. ஆனால் தேவர், சனாதனிகளுக்கு எதிரானவர் என்பதை வரலாறு சொல்கிறது.

இந்து அமைப்புகளில் பிராமணர் மட்டுமே கோலோச்ச முடியும், மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும். (இங்கு பிராமணர் என்பது அந்த ஆதிக்க மனோநிலையில் உள்ள பிராமணரை மட்டுமே குறிக்கப்படுகிறது.) ஆனால் முக்குலத்தோர் எந்த காலத்திலும் யாருக்கும் அடிமையாக இருந்து பழக்கப்படாதவர்கள். அவர்கள் அன்புக்குக் கட்டுப்படுவார்கள். ஆனால் எதிரிகளையும் துரோகிகளையும் அரக்க குணத்தோடு எதிர்ப்பார்கள். தற்போது அவர்களிடையே, தங்களை "இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதா அல்லது தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதா" என்ற ஒரு மயக்க நிலை உள்ளது. அது மாறும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழர்களின் எதிர்கால அரசியல் முக்குலத்தோரின் கையில் உள்ளது.

முக்குலத்தோர் இந்து என்ற அடையாளத்தில் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மத விவகாரங்களில்  கண்மூடித்தனமாக செயல்பட மாட்டார்கள். அவர்கள், முன்னோர் வழிபாட்டை பின்பற்றக் கூடியவர்கள். குலங்களுக்கு, குல தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

தேவரைப் பற்றி பேசுவதற்கு முன் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவரது கொள்கை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். தேவர் "அர்ச்சகர்" யார்? "அந்தனர்" யார் என்று பிரித்துக் காட்டியவர்? வயிறு வளர்க்க அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் எல்லாரும் அந்தனர் ஆகிவிட முடியாது என்று சொன்னவர். சுப்பிரமணிய சாமி உட்பட இந்து அமைப்புகளின் உச்சத்தில் அமர்ந்து கோலோச்ச விரும்பும் பிராமண ஆசாமிகள் அனைவரும், குறைந்தபட்சம் இந்து மத விவகாரங்களில் தேவரின் கொள்கைகளை ஏற்று அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார்களா? ஒரு தேவரை தங்கள் அமைப்புகளுக்கு தலைவராக்கி அவரின் கீழே செயல்படத் தயாராக இருப்பார்களா?

தேவர், இந்து மதத்தின் பெயரில் வயிறு வளர்க்கும் போலிச் சாமியார்கள், மடாலயங்களை கடுமையாகச் சாடியவர். அதையெல்லாம் இந்த இந்து மத ஆசாமிகள் ஏற்பார்களா? தேவர், வெள்ளையருக்கு எதிராக "தீவிரவாதத்தை" கொள்கையாகக் கொண்டாலும் உண்மையில் வள்ளலாரின் ஜீவகாருண்யத்தை பின்பற்றுபவராக வாழ்ந்தவர்.

* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர். நீங்கள் தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவரா? காஷ்மீர் தீவிரவாதிகள், வடகிழக்கு மாநில தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஏற்கத் தயாரா? அவர்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

* நேதாஜி மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். குறிப்பாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். உங்களால் தமிழை ஆட்சி மொழியாக்க முடியுமா?

* தேவர், தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டவர். உங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதா? ஒருபோதும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று உத்தரவாதம் தர முடியுமா? ஒவ்வொரு முக்கிய பிரச்சனைக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?

* நேதாஜி உருவாக்கிய "பார்வர்டு பிளாக்" ஒரு இடதுசாரிக் கட்சி. அது ஏழைகளுக்கான, உழைப்பாளர்களுக்கான, சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ள மக்களுக்கான கட்சி. கார்பரேட்களுக்காக வேலை செய்யும் உங்கள் கட்சி (பிரதமர்)  எங்கே? தேவர் எங்கே?

* தேவர், நேதாஜியை தேசப் பிதாவாக ஏற்றவர். நீங்களும் அப்படி ஏற்கத் தயாரா?

* தேவர், மதங்களை சமமாகப் பார்த்தவர். நீங்கள் அப்படிப் பார்க்கத் தயாரா?

* தேவர், தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில், விசாரணை முடியும் வரை ஜாமீனில் வெளியே வராதவர். தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட பின்னரே சிறையிலிருந்து வெளி வருவதை வழக்கமாக கொண்டவர். உங்களால் அப்படி இருக்க முடியுமா?

* தேவர், தன் சொத்துக்களை மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தவர். உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், அரசியலில் ஈடுபட்டாலும் முழுச் சன்யாசியாக தவ வாழ்க்கை வாழ்ந்தவர். உங்களால் அப்படி வாழ முடியுமா?

* தேவர், தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோதும் அதை ஏற்க மறுத்தவர்.  உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டபோது "பெற்ற தாய்க்கு உழைத்ததற்கு கூலி வாங்குவீர்களா" என்று சொல்லி தன் தொண்டர்களை கண்டித்தவர்.  உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற கீழை நாடுகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுவே ஆசிய -ஆப்பிரிக்க நாடுகளுக்கு, இனங்களுக்கு நல்லது என்றார். அவர் எங்கே? ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வால்பிடிக்கும் நீங்கள் எங்கே?

* ஒரு அரசு அந்நிய நாட்டிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ராணுவத்தையும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையையும் பயன்படுத்த வேண்டும், சொந்த மக்களை ஒடுக்க இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அதை நீங்கள் ஏற்பீர்களா?

* தேவர், இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லப்படுவதையே ஏற்றுக் கொள்ளவில்லை. பார்வர்டு பிளாக் கட்சி இன்னமும் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவதில்லை. இதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்களா? இரண்டாவது சுதந்திரத்தை அடைய, அளிக்க நீங்கள் தயாரா?

* உண்மையிலேயே உங்களுக்கு தேவர் மீது பற்று இருந்தால் வேறு எதையும் செய்ய வேண்டாம், தேவர் குருபூஜைக்கு விதிக்கப்படும் தடைகளை அகற்றிக்காட்ட முடியுமா, சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வீர்களா? (இந்த மடலை உங்களுக்காக எழுதவில்லை. உங்களையும் சுப்பிரமணிய சாமியையும் தலைவர்கள் என்று நம்பிக் கொண்டு திரியும் சில தேவர்மார்களுக்காக எழுதுகிறேன்)

இஸ்லாம் என்ற பெயரில் மூளைச் சலவைக்கு ஆளாகி ஒரு குற்றம் செய்யும் ஒருவரும், இந்து என்ற மூளைச் சலவைக்கு ஆளாகி வார்த்தைகளில் குற்றம் செய்து வரும் உங்களைப் போன்றவர்களும் ஒன்றே. காந்தியை ஒரு இஸ்லாமியர் கொன்று விட்டார் என்ற வதந்தியால் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டு விடக் கூடாது என்று பிரச்சாரம் செய்த அதே தேவர், இந்துப் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர்களை தண்டிக்கத் துணிந்தவர். எங்களுக்கு எல்லா மதங்களும் சமமே. மதம் என்பது அடையாளமே. இனம் என்பதே தலை. இந்துக்களாக இருப்போம். இந்துக்களுக்கு மரியாதை தருவோம். இஸ்லாமியராக இருப்பவரையும் அரவணைப்போம். அவர்களுக்கு மரியாதை தருவோம். உங்கள் மூளைச் சலவைகள் எங்களிடம் எடுபடாது.

தேவர் அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி, சித்தர், மகான். அவரது பெயரை (நான் உட்பட) எந்தவொரு தனிநபரோ, அமைப்போ, அரசியல் கட்சியோ தன் சுய லாபங்களுக்காக பயன்படுத்தினால், அந்த நபர், அந்த அமைப்பு அழிந்து போய்விடும் என்பது கண்கூடு. அர்ஜூன் சம்பத் எந்த மூலைக்கோ?
-----------------------------
இணைப்பில்...
ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் தேவர் ஆதரித்தாரா?


http://perumalthevan.blogspot.in/2016/10/blog-post_5.html

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...