Tuesday, January 31, 2012
சிறை வைக்கப்பட்டாரா தா. பாண்டியன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது!
தா.பாண்டியனுக்கு அப்படி என்னதான் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்...
“இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசை அதில் தலையிட வலியுறுத்தி டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்தது. பெயரளவில் அது அனைத்துக் கட்சிக் குழு என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் அதில் இருந்தவர்கள் தி.மு.க.வுக்கு அனுசரணையானவர்கள்தான். ஆனால், அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் பிரதமர் அலு வலகத்திற்குள் நுழைந்தார், தா.பாண்டியன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் தீவிரமாக இருந்த தா.பாண் டியனின் திடீர் என்ட்ரியால், குழுவின் தலைவரான டி.ஆர்.பாலுவுக்குக் கடும் அதிர்ச்சி!
பின்னர் குழுவினர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தனர். தா.பாண்டியனும் தன் பங்குக்கு, ‘இலங்கையில் அரசியல் தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும். அங்கே சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும், இலங்கைக்கு இந்தியா எந்த ஆயுதத் தள வாடங்களையும் அனுப்பக் கூடாது’ என பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார். இவரது கோரிக்கைகளுக்கு பிரதமர் வாய்திறக்காத நிலையில், பக்கத்தில் இருந்த பிரணாப் முகர்ஜியோ, ‘ராணுவத் தளவாடங்கள் வழங்குவது இரு நாட்டு உறவுகள் சம்பந்தப்பட்டது. அதை நிறுத்த முடியாது’ என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
லட்சக்கணக்கான தமிழர்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில், மனசாட்சியே இல்லாமல் மத்திய அமைச்சர் ஒருவர் பேசியதையும், பிரதமர் வாயே திறக்காமல் மௌனமாக இருந்ததையும் அப்போதே தமிழகக் குழுவினர் அம்பலப்படுத்தி யிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் வெளியே வந்து, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க உறுதி தந்திருப்பதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்கள்.
தா.பாண்டியன் உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை நடத்திய விதம்தான் ரொம்பக் கொடுமை. ‘உள்ளே நடந்த விஷயங்களை நீங்கள் வெளியே சொல்லக் கூடாது. நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அது தமிழர்களுக்கு இன்னும் கெடுதலாகிவிடும்’ என டி.ஆர்.பாலு திரும்பத் திரும்பச் சொல்லி தா.பாண்டியனை பிரதமர் அ லுவலகத்தின் உள்ளேயே உட்கார வைத்துவிட்டார். ‘மவுனச் சாமியாராக’ இருந்த பிரதமரோ இன்னும் ஒருபடி மேலே போய் தா.பா.விடம், ‘உங்களுக்குப் புலிகளை நன்றாகத் தெரியுமே? நீங்கள் எப்படி இவர்களோடு வந்தீர்கள்?’ என்கிற ரீதியில் பேசி நேரத்தைக் கடத்தி, மீடியாக்கள் கிளம்பிப் போன பிறகே தா.பா.வை வெளியே விட்டிருக்கிறார். நாகரிகம் கருதி தா.பா.வும் இவற்றை முழுமையாக வெளியே சொல்லவில்லை’’ என்றார்கள் அவர்கள்.
இதுபற்றி தா.பாண்டியனிடமே கேட்டோம். “வெளியூரில் இருந்த நான் தமிழகக் குழுவினர் பிரதமரைச் சந்திப்பதைக் கேள்விப்பட்டு நானாகப் போய் அதில் பங்கேற்றது உண்மைதான். முன்னாள் எம்.பி. என்ற வகையில் பிரதமர் அலு வலக அதிகாரிகள் என்னைத் தடுக்கவில்லை. பிரதமர் மௌனமாக இருந்தது, பிரணாப் முகர்ஜி பேசியது, டி.ஆர்.பாலு நடந்துகொண்டவிதம் பற்றியெல்லாம் பொதுக்கூட்டங்களில் ஏற்கெனவே நான் பேசியிருக்கிறேன். அடுத்தபடியாக இந்த விவகாரம் சம்பந்தமாக ஒரு புத்தகமே எழுத இருக்கிறேன்’’ என்றார்.
ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ், தி.மு.க.வின் துரோகத்தை அந்தப் புத்தகம் வலுவாகவே அம்பலப்படுத்தும் என் கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
நன்றி- குமுதம் ரிப்போட்டர்
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment