Thursday, August 18, 2011

அரசனும் ஆண்டியும்


ஒரு சிஷ்யன் ஒரு குருவிடம் சேர்ந்து நீண்ட காலம் ஆகியும் அந்த குரு எதையுமே அவனுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. இதனால் சலிப்படைந்த அந்த சிஷ்யன் தனக்கு ஆன்மீகம் பற்றி ஏதாவது கற்றுத் தருமாறு குருவிடம் கேட்டான்.

அவனது அவசரத்தை புரிந்துகொண்ட அந்த குரு அவனை பக்கத்து நகரத்தில் உள்ள தனது நண்பரிடம் செல்லுமாறு கூறினார். சிஷ்யனும் குருவின் பேச்சை நம்பி அந்த நண்பனிடம் சென்றான். ஆனால் அங்கு சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவர் அந்த நாட்டின் அரசர்.

அரன்மனையின் வாயிலுக்கு சென்றான் சிஷ்யன். காவலர்கள் அரசனிடம் குரு அனுப்பிய ஒரு சிஷ்யன் வந்திருப்பதை கூறினர். உடனே அரசன் அந்த சிஷ்யனை அரன்மனைக்குள் அழைத்து வரச் சொன்னான்.

ஆனால் சிஷ்யனின் மனதில் வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. தான் தவறான இடத்திற்கு வந்துவிட்டோமா? அல்லது தனது குரு வேண்டுமென்றேதான் இங்கே அனுப்பி வைத்தாரா? என்று யோசித்தவாறு சென்றான். அரண்மனைக்குள் சென்ற சிஷ்யனை அரசன் வரவேற்றான். நலம் விசாரித்தான். அதற்குள் அந்தபுரத்திற்கு செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.

அரசன் சிஷ்யனையும் உடன் அழைத்துச் சென்றான். அங்கே அழகிய நடன மாதுக்கள் கவர்ச்சியாக நடனமாடினர். அரசன் மதுவும் அருந்த ஆரம்பித்தான். சிஷ்யனால் இவற்றையெல்லாம் ஜீரணிக்க இயலவில்லை. இப்போதே ஓடிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் குருவல்லவா அனுப்பி வைத்துள்ளார் என்று நினைத்துக் கொண்டே ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டான்.

நடனம் முடிந்ததும், அரசன் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் காலையில் சந்திப்போம் என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான். காலையில் தர்பார், மதியம் ராஜபோக உணவு, மாலையில் அந்தப்புரம் என்று ஓரிரு நாட்கள் சென்றன. இருந்தாலும் சிஷ்யனால் அவற்றில் லயிக்க இயலவில்லை. ஆன்மீகத்தை அறியவந்தவனால் இவற்றை எப்படி சஹித்துக் கொள்ள முடியும்?

நான்காம் நாள் காலையில் அருகே ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் அரசனும், சிஷ்யனும் குளித்துக் கொண்டிருந்தனர். வேகமாக ஓடி வந்த ஒரு போர்வீரன் மன்னா அரண்மனையில் தீப்பற்றிக் கொண்டது என்று கூறினான். உடனே, சிஷ்யன் ஆற்றிலிருந்து கரைக்கு ஓடினான். அரசன் எந்தவித சலனமும் இல்லாமல் குளித்துக் கொண்டிருந்தான்.

ஏன் ஓடுகிறீர்கள் என்று அரசன் சிஷ்யனிடம் கேட்டான்? அதற்கு அந்த சிஷ்யன் எனது காவி வஸ்திரங்கள் அங்கேதான் இருக்கின்றன என்றான். பொன்னால் செய்யப்பட்ட எனது சிம்மாசனமும் இதர விலைமதிப்பில்லாத வைர வைடூரியங்களும் அங்கேதான் உள்ளன என்று அரசன் சொன்னான். மேலும் தீயை அனைக்கத்தான் போர்வீரர்கள் உள்ளனரே? நீர் எதுக்கு ஓடுகிறீர்?

இதுதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ற அரசன், பொருட்கள் வெளியே இருக்க வேண்டும் உள்ளே அல்ல என்று கூறினான். உடனே சிஷ்யன் அந்த அரசனின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.   

(ஓஷோவின் குட்டிக் கதைகளிலிருந்து)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...