Monday, April 13, 2020

பெ.மணியரசன் அவர்களின் சாதி சார்ந்த தமிழ்த் தேசியத்திற்கு எதிர்ப்பும், அதற்கு நமது பதில்களும்


தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின் சாதி சார்ந்த தமிழ்த் தேசியத்திற்கு எதிர்ப்பும், அதற்கு நமது பதில்களும்

//"சாதி வழியாகத் தமிழரை அடையாளம் காண வேண்டும் என்பவர்கள் அவ்வாறு அடையாளங்கண்டு, அனைத்து சாதித் தமிழர்களையும் ஒருங்கிணைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? இதுவரை அவர்கள் அத்திசையில் செய்த வேலைத்திட்டம் என்ன?//

ஒருவர் தமிழரா என்பதை அடையாளம் காணத்தான் சாதி அடையாளம் அவசியமாகிறது. தமிழர்களை ஒருங்கிணைக்க சாதி அடையாளத்தை மறுக்கவோ, மறைக்கவோ தேவையில்லை. தமிழர் உணர்வு பெருகும்போது சாதி இணக்கத்தின் தேவைக்கான புரிதல் ஏற்படும். அதுவே இணக்கத்திற்கான முதல் படியாக அமையும். அதற்கெல்லாம் மேலாக தமிழுணர்வால் எழுச்சி பெறும் புதிய தலைவர்கள் மற்றவர்களோடு இணக்கமாக செல்லவே முற்படுகிறார்கள். அதற்கான செயல்கள் சிறிய அளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

//சாதியின் பெயரால் ஒரு தமிழ்ச்சாதி இன்னொரு தமிழ்ச்சாதியை ஆதிக்கம் செய்யும்போதும், தாக்கும்போதும் அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண இவர்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன? இவர்களின் தலையீடு என்ன?//

அப்படியெல்லாம் இப்போது நடப்பதில்லை. சிறுசிறு மோதல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காலப் போக்கில் அவற்றையெல்லாம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக சாதியே கூடாது என்பது தமிழினத்தின் அடிப்படை சமுதாய கட்டமைப்பை மறுப்பதாகும்.

//ஒடுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை மீட்க - தமிழர் சமத்துவத்தை உருவாக்க - தமிழ்த்தேச விடுதலையை முன்னெடுக்க - இவர்கள் இதுவரை செய்துள்ள பணிகள் என்ன?//

முளைத்து வரும்போதோ சாதனை செய்து வரவேண்டுமா? எல்லாத் தமிழர்களையும் சமமாகப் பார்க்கும்போது அவரவர் உரிமைகள் அவரவருக்குக் கொடுக்கப்படும். அதையெல்லாம் நிரூபிக்க அரசியல் பலம் வேண்டும். இந்தக் கேள்வி ஏற்கனவே நிறுவப்பட்ட சாதி மறுப்பு தமிழ்த் தேசியவாதிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

//தமிழர் ஒற்றுமைக்கும், தமிழர் உரிமைக்குமான இவ்வேலைகளில் எல்லாம் அவர்கள் ஈடுபட்டால் "சாதிவாதம்" பேசமாட்டார்கள்.//

தமிழர் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் சாதி வேறுபாடு தடையாக இருக்கப் போவதில்லை. ஒரே மாதிரியாக இல்லாத விரல்கள் ஒன்றிணைந்து கச்சிதமாக செயல்படுவதைப் போல தமிழ்ச் சமுதாயங்களும் இணைந்து செயல்படும்.

//பொழுதுபோக்குத் தமிழ்த்தேசிய வாதிகளின் புதுப்புது கண்டுபிடிப்புகளில் நாம் அக்கறை செலுத்த வேண்டியதில்லை.//

சாதி மறுப்பு தமிழ்த் தேசியவாதிகள்தான் பொழுதுபோக்கு தமிழ்த் தேசியவாதிகள். அவர்கள் திராவிடத்தின் நீட்சியாக உள்ளனரே தவிர தமிழ்த் தேசியவாதிகளாக இல்லை.

//இன்று சாதி நிலைத் திருப்பதற்குக் காரணம், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வும் - அதனடிப்படையில் சில பலன்களும் இருப்பதால்தான். எனவே, சாதியை ஏற்றுக் கொண்டால் தமிழர்களுக்குள்ளேயே உயர்வு தாழ்வு பார்க்கிறார்கள் என்று பொருள். சாதி அடிப்படையிலேயே பலன் பெற விரும்புகிறார்கள் என்று பொருள்!//

சாதி உயர்வு தாழ்வுக்கும் சாதிகளுக்கும் தொடர்பில்லை. சாதிய உயர்வு-தாழ்வு என்பது கற்பிதமானது. மனுதர்ம வர்ணாசிரம தர்மத்தின்படியானது. அது பொய்யானது. ஆனால், சாதி என்பது உண்மையானது. எனவே இந்த வேறுபாட்டைப் புரிந்தாலே உயர்வு தாழ்வு எண்ணம் மறைந்து விடும்.

//யார் தமிழர் என்பதற்கு அவர்களின் தாய்மொழி முதல் அடையாளம். அடுத்து தமிழைப் பொது மொழியாக - ஆட்சி மொழியாக - கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டு நீண்ட காலமாக மரபுவழித் தாயகமாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பிறமொழி பேசுவோரும் தமிழ் மக்களே!//

இதை ஏற்க முடியாது. இந்தக் கருத்தின்படி கருணாநிதியும் ஸ்டாலினும் தமிழர் ஆகிவிடுவார். அவர்களை தமிழர் ஆக்கிவிட்டு தமிழ்த் தேசியம் பேச வேண்டிய அவசியமே இல்லை. தமிழகத்தில் தமிழ் பேசி வாழ்வோர் தமிழ்நாட்டுக் குடிகளாக மட்டுமே கருதப்படுவர். அவர்களை தமிழராக கருத முடியாது.

//தமிழ்த் தேசவிடுதலை இலக்கோ, அதற்கான செயல்பாட்டு ஒப்படைப்போ (அர்ப்பணிப்போ) இல்லாதவர்கள் ஒய்யாரமாக ஓய்வுநேரத்தில் பேசும் சாதி வழித் தமிழ்த்தேசியம் உண்மையான தமிழ்த் தேசியம் அன்று!"//

தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்திய ஒன்றியத்திலிருந்து விடுதலை பெறுவது என்றால் அது பிரிவினைவாதம், சட்ட விரோதமானது. அதைப் பேசக் கூடாது, பேச முடியாது. ஆனால், இந்திய ஒன்றியத்திற்குள்ளாக மாநில உரிமைகளை பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு அது சாத்தியமில்லாதபோது இந்திய ஒன்றியத்தின் தவறுகளை சர்வதேச மன்றத்தில் வைத்து சுயநிர்ணய உரிமை கோரலாம். அதற்கும் சாதி சார்ந்த தமிழ்த் தேசியமே அடிப்படையானது. சாதியை மறைக்க, ஒழிக்கச் சொல்லும் எந்தவிதமான கருத்தியலும் தமிழர்களுக்கு எதிரானதே.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...