Thursday, August 23, 2012

ஞானிகளை கணிக்க முடியாது



புத்தரின் ஓரிரு நிகழ்வுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

புத்தர் பனிரெண்டு வருடங்களுக்குப் பின்னால் வீடு திரும்பினார்.  அவர் பரம ஞானியாகி விட்டார். அவருக்கு லட்சக் கணக்கில் சிஷ்யர்கள் இருந்தார்கள். அவரை வரவேற்க ஊர் மக்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால் அவரது மனைவி வரவில்லை. அவள் கோபமாக இருந்தாள். யசோதரா அவரை வரவேற்க வரவில்லை.

புத்தர் நாலாபுறமும் பார்த்தார் யசோதரா அங்கே இல்லை. வேறு யாராவது ஒரு சன்னியாசியாக இருந்தால் அவர் என்ன செய்வார் என்று கணித்துச் சொல்ல முடியும். ஏனெனில் சன்னியாசிகளுக்கு மனைவிகள் ஒரு பொருட்டேயில்லை.

ஆனால் புத்தர் மற்ற பிக்குகளிடம், “பார்த்தீர்களா யசோதராவை காணவில்லை”என்று சொன்னார்.

அப்போது ஆனந்த், “இப்படி பேசாதீர்கள், மக்கள் என்ன சொல்வார்கள்?” என்று சொன்னார். “நீங்கள் யசோதராவை பற்றி பேசினால் ஜனங்கள் என்ன சொல்வார்கள்?.”

“ஜனங்கள் என்ன சொல்வார்கள் என்று நான் ஒருபோதும் யோசித்தது இல்லை. நான் அப்படி வாழ்ந்ததில்லை.” என்று புத்தர் சொன்னார்.

“ஆனந்த், அவள் வரமாட்டாள் என்று எனக்கு நிச்சயமாக தெரியும். அவள் மிகவும் மதிப்பு மிக்கவள் பார்க்கக் கூடியவள். பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஓடிவிட்டேன். போகும்போது நான் சொல்லிவிட்டுக் கூட போகவில்லை. அவள் கோபமாக இருப்பது இயற்கைதான். நான்தான் அவளைப் போய் பார்க்க வேண்டும்.”

ஆனந்த், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஜனங்கள் என்ன சொல்வார்கள்? ஞானி புத்தர்,  தன் மனைவியை சந்திக்க வீட்டுக்கு போனார் என்று சொல்வார்களா? இப்போது யார் மனைவி? யார் மகன்? யார் தந்தை?” என்று கேட்டார்.

சன்னியாசிகளுக்கென்று பாஷை இருக்கிறதல்லவா? எனவேதான் அவர்களை கணித்துச் சொல்ல முடியும். என்ன அர்த்தம்? எப்படி மனைவி?

புத்தர், “நான் நீ சொல்கிறபடி கேட்க மாட்டேன்” என்று சொன்னார்.

“எனக்கு மனைவி என்று யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவளுக்கு இன்னமும் கணவன் இருக்கிறான்.”

 “எனக்கு மனைவி என்று யாரும் இல்லை என்பது சரிதான். ஆனால் அவளுக்கு கணவன் இன்னமும் இருக்கிறான். அவள் இன்னமும் தனது கணவனிடம் கோபத்தில் இருக்கிறாள்.”
“ஜனங்கள், பலநூறு வருடங்களுக்கும் (இதை) மறக்க மாட்டார்கள்”, என்று ஆனந்த் சொன்னார். “புத்தர் சிறு தவறு செய்துவிட்டார்” என்று சொல்வார்கள்.

“அப்படி சொன்னால் பரவாயில்லை”, என்று புத்தர் சொன்னார்.

“நஷ்டமில்லை.”

“என்ன சொல்வார்கள்? புத்தர் ஒரு சாதாரண மனிதர் என்று சொல்வார்கள். நான் என்னை கடவுள் என்றும் சொல்லிக் கொள்ளவில்லையே? நான் வீட்டுக்குப் போறேன்”.

இது கணித்துச் சொல்ல முடியாததாக இருந்தது. சாதாரண சன்னியாசி இப்படி செய்ய மாட்டார். அவர்களை கணித்துவிட முடியும்.

ஸ்வாமி ராம் தீர்த்தை அவரது மனைவி சந்திக்க சென்றார். ராம் தீர்த் கதவை அடைத்துக் கொண்டார். அவருடன் ஒரு நண்பர் தங்கியிருந்தார்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

“பல வருஷங்களுக்கு பிறகு உங்களை சந்திக்க உங்கள் மனைவி வருகிறார். நீங்கள் கதவை அடைத்து விட்டீர்கள்.”

“எல்லாவற்றிலும் பிரம்மன் இருக்கிறார் என்று சொன்னீர்களே? இன்று உங்கள் மனைவியிடம் பிரம்மன் இல்லாமல் போய்விட்டாரா? கதவைத் திறங்கள் நானும் போகிறேன். நீங்கள் இவ்வளவு காலமாக நூற்றுக்கணக்கான பெண்களை சந்திப்பதை பார்த்திருக்கிறேன். அப்போது நீங்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டியதில்லை. இன்று இந்தப் பெண்ணைச் சந்திக்க ஏன் தயங்குகிறீர்கள்? மனதில் என்ன பயம் வந்துவிட்டது?”

நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், ராம் தீர்த்துக்கு அது பிரச்சனையாகிவிட்டது. ராம் தீர்த் அன்றைக்கே பச்சை நிற ஆடையை துறந்து விட்டார். அவர் இறக்கும்போது பச்சை நிற ஆடைய அணிந்திருக்கவில்லை. அவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக பைஜாமா குர்தா அணிய ஆரம்பித்திருந்தார். அது அந்த சம்பவத்தால் ஏற்பட்டதே.

அதன் பின் புத்தர் தன் வீட்டிற்கு போனார். வீட்டிற்கு போனதும் அவர் கதவை திறந்து வீட்டினுள்ளே சென்றார்.

ஆனந்த், புத்தரின் சிற்றப்பா மகனாவார். புத்தரைவிட வயதில் மூத்தவராவார். வயதிலும் பெரியவர். உறவிலும் பெரியவர். அவர் தீட்சை பெறும்போது, புத்தரிடம் தீட்சை பெறுவதற்கு முன்பாக, ஒரு நிபந்தனை விதித்தார்.

நிபந்தனை என்னவென்றால், “தீட்சை பெற்ற பின்னர் நான் சிறியவன் ஆகிவிடுவேன். அதன் பின் உங்கள் உத்தரவுகளை நான் ஏற்க வேண்டும். தீட்சை பெறும்வரை நான் உங்கள் அண்ணன். அதனால் ஒரு நிபந்தனை விதிக்கிறேன். அதை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.”

“அந்த நிபந்தனை, நான் எப்போதுமே உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னை விலகிப் போகச் சொல்லக் கூடாது. யாருக்கும் விளக்கிச் சொல்ல என்னை அனுப்பக் கூடாது. நீங்கள் வேறு யாரை வேண்டுமானாலும் எங்கேயும் அனுப்பலாம். எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால் நான் உங்களுடன்தான் இருப்பேன். தீட்சை பெறுவதற்கு முன்பாக அண்ணன் என்ற முறையில் நான் இந்த நிபந்தனையை விதிக்கிறேன்” என்று ஆனந்த் சொன்னார்.

அதன்பின் தீட்சை பெற்றார். அவர் புத்தருடன் இருந்து வந்தார்.

அதனால் அவர் புத்தருடன் வீட்டிற்குள் நுழைந்தார். “ஆனந்த், இன்றைக்கு நான் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று புத்தர் சொன்னார்.

“இன்றைக்கு அந்த நிபந்தனையை விட்டுவிடு. ஏனென்றால் யசோதரா மிகவும் கோபமாக இருப்பாள். இத்தனை காலம் கழித்து வந்திருக்கிறேன். கூடவே ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன். ஒருவேளை அவள் கத்த, அழ, என்னை அடிக்க வேண்டியிருந்தால் அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போகலாம். இன்றைக்கு அந்த நிபந்தனை செல்லாது.”

இந்த மனிதர் இருக்கிறாரே. ஆனந்திற்கு புல்லரித்துப் போனது. “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் உங்கள் மனைவியை தனியாகச் சந்திக்க விரும்புகிறீர்களா? ”

நிச்சயமாக. அதான் நான் சொல்கிறேன் இல்லையா?

ஜீசஸ் பற்றிய ஒரு குறிப்பை கேட்டீர்களானால், நீங்கள் பெரிதும் அதிர்ந்து விடுவீர்கள். இது போன்ற நபர்களைப் பற்றி நாம் உறுதியாக எதையும் சொல்ல முடியாது, நாளைக் காலையில் என்ன செய்வார்கள் என்று. நாளைக் காலையில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

அதனால்தான் உயிரோடு இருக்கும்போது இவர்கள் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். இறந்து விட்டால் நல்லவர்களாகி விடுகின்றனர். காரணம், இறந்த பின்னால் அவர்கள் கணித்துக் கூறக் கூடியவர்களாகி விடுகின்றனர். அவர்களால் எந்த தொல்லையும் இல்லை. இப்போது நாம் அவர்களை நமது சட்டத்தில் பொருத்திப் பார்க்கலாம். நமக்கேற்ற ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். இறந்து விட்ட சன்னியாசி எப்போதுமே விரும்பத் தக்கவராக இருக்கிறார்.

உயிருள்ள சன்னியாசி விரும்பத் தக்கவராக இருப்பதில்லை. பல இடங்களில் மாட்டிக் கொள்கிறார். பிரச்சனைகளை உருவாக்குகிறார். கடினத்தை ஏற்படுத்துகிறார்.

நான் ஜீசஸ் பத்தி சொன்னேன் இல்லையா? ஜீசஸின் காலத்தில் ஒரு விபச்சாரி இருந்தாள், மெகதலின். ஜீசஸ் அந்த வழியாக போய்க்கொண்டிருந்தார். மதிய நேரமாக இருந்தது. அவர் மிகவும் களைப்பாக இருந்தார். அவர் அங்கே இருந்த பூங்காவிற்கு சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்தார். அது மெகதலின் என்ற விபச்சாரியின் பூங்கா என்பது அவருக்குத் தெரியாது. மதிய நேரம்.

மெகதலின் தன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். யாரந்த அற்புத நபர் தனது மரத்தின் கீழே படுத்திருக்கிறார்? அவள் பல அழகானவர்களை பார்த்திருந்தாள். ஆனால் ஜீசஸின் அந்த அழகு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. 

அவள் போனாள். போய்,“இளைஞரே வெளியே ஏன் படுத்திருக்கிறீர்கள்? உள்ளே வாருங்கள். ஓய்வெடுங்கள். வீட்டிற்குள் வாருங்கள்” என்றாள். அவளுடைய வீட்டு வாசலுக்குப் போனாலே மாபெரும் சக்கரவர்த்திகளும் திரும்பி வரவேண்டிய நிலை இருந்தது. அவள் இது வரை யாரையும் கூப்பிட்டதே இல்லை. இதுதான் முதல் முறை. அவள் ஒருபோதும் நினைக்கவும் இல்லை. தன்னுடைய அழைப்பை யாரும் மறுப்பார்கள் என்று.

“ஓய்வெடுத்துவிட்டேன், இப்போது கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்” என்று ஜீசஸ் சொன்னார். “ஆனால் திரும்ப வந்தால் நேராக வீட்டிற்குள்ளேயே வந்துவிடுவேன்.”

அவளது வேண்டுகோளை யாரும் தட்டிக் கழித்ததை அவள் கேட்டதேயில்லை. அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் மிகவும் அழகானவளாக இருந்தாள். அவள், “என்னைப் பாருங்கள். உள்ளே வாருங்கள். இரண்டு நிமிடம் ஓய்வெடுங்கள். எனக்காக இந்த அன்பைக் கூட காட்ட மாட்டீர்களா?” என்று கேட்டாள்.

ஜீசஸ், “அன்பா?” என்று கேட்டார். “அன்பைப் பொறுத்தவரை என்னைத் தவிர யாரும் உன் மீது அன்பு செலுத்த முடியாது” என்று ஜீசஸ் அந்த விலைமாதுவிடம் சொல்கிறார்.

“அன்பைப் பொறுத்தவரை என்னைத் தவிர யாரும் உன் மீது அன்பு செலுத்த முடியாது” என்று ஜீசஸ் அந்த விலைமாதுவிடம் சொல்கிறார்.

“என்னைத் தவிர வேறு யாரும் உன் மீது அன்பு செலுத்த முடியாது.”

“உன் வீட்டிற்கு வருபவர்களில். உன் கதவை தட்டுபவர்களில் யார் உன் மீது அன்பு செலுத்தினார்களா?”

“என்னால் உன் மீது அன்பு செலுத்த முடியும்.”

ஒரு விபச்சாரியிடம் அவர் அப்படிச் சொன்னார் என்பதை கேட்டதும் அவரது சிஷ்யர்கள் கோபமடைந்தனர்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒரு விபச்சாரி மீது அன்பு செலுத்துவீர்கள்?” என்று கேட்டனர்.
“ஆமாம். நான் சரியாகத்தான் சொன்னேன்” என்று ஜீசஸ் சொன்னார். “என்னால்தான் அன்பு செலுத்த முடியும்” என்று சொன்னார்.

இந்த நபர் நமது சட்டத்திற்குள், கணக்கிற்குள் வரமாட்டார். எந்த அளவு வாழ்க்கை உயிர்ப்புள்ளதாக இருக்கிறதோ அந்த அளவு சிந்தனை கணித்துக் கூறமுடியாததாக வெளியே செல்லும்.

-       ஓஷோவின் நானக் துக்யா சப் சன்சார் என்ற சொற்பொழிவிலிருந்து....
   

  

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...