Sunday, August 12, 2012

நான் வரைந்த ஓவியம்




எனக்கு சிறுவயது முதலே ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. சுவரில் வரையப்பட்டிருக்கும் கரிக்கட்டை ஓவியங்களைப் பார்க்கும்போது கூட, இது அழகா இருக்கே, இதை இப்படி வரைந்திருக்கலாமே என்று தோன்றும்.

அதன் பின் நூலகம் செல்ல ஆரம்பித்தபோதும், காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும்போதும் ஓவியத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

முதலில் கண்கள், முகம் என வரைய ஆரம்பித்து பின்னர் முழு உருவப்படங்கள் வரைய ஆரம்பித்தேன். பின்னர் மிருகங்களை வரைய பழகினேன். முதலில் கோட்டுப் படங்களும் பின்னர் வண்ணம் தீட்டும் படங்களும் வரைந்து பழகினேன்.

பத்திரிகைகள் படிக்கும்போது பிற்காலத்தில் பத்திரிகை ஓவியனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முன்னணி பத்திரிகை ஓவியர்களான ம.செ., ஜெயராஜ், அரஸ், மாருதி போன்றோரின் படங்களை கத்தரித்து ஆல்பமாக சேர்த்து வைத்திருந்தேன்.

எழுத்தாளர்கள் வறுமையில் வாடினார்கள் என்பதை ஆரம்பத்திலேயே படித்துவிட்டதால் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவேயில்லை.

கல்லூரி படிப்பை முடித்த பின்னர் ஓராண்டு காலம் வால் பெயிண்டராக இருந்து பெப்சி, ராம்கோ சிமென்ட், பாரி போன்ற விளம்பரங்களை எழுதியுள்ளேன். பின்னர் மும்பை வந்து இயந்திர வாழ்க்கைக்குள் சிக்கிய பின்னர் ஓவியம் வரைய நேரம் கிடைக்கவில்லை.

மும்பை தமிழ்ச் சங்கத்தில் (2005 என்று நினைக்கிறேன்) ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் அவரைச் சந்தித்துப் பேசினேன். என் ஆர்வத்தை கேட்ட அவர் நேரம் கிடைக்கும்போது வரையுங்கள், விட்டுவிடாதீர்கள் என்று சொன்னார்.

ஏறக்குறைய படம் வரைவதை விட்டு 15 வருடங்களுக்கு மேலாக ஓடிவிட்ட நிலையில் கடந்த வாரம் ஒரு படம் வரையலாம் என்று முடிவெடுத்தேன்.

என் இளைய மகனின் புகைப்படத்தை பார்த்து அதை வரைய முயற்சித்தேன். அதற்கான ஸ்கெட்சை வரைய முக்கால் மணிநேரம் ஆனது. அதன் பின்னர் வண்ணம் தீட்ட ஒன்றரை மணிநேரம் ஆனது.

இந்த படத்திற்கு வண்ணம் தீட்ட என் மூத்த மகன் வைத்திருந்த வாட்டர் கலர், இரண்டு அல்லது மூன்று எண்ணுள்ள பிரஷை பயன்படுத்தினேன். அதனால் மெல்லிய கோடுகளை வரைய முடியவில்லை. இந்த படத்திற்கு பின்புறமும், மெருகேற்றலும் செய்யப்பட வேண்டியுள்ளது.

இன்றுதான் பாயிண்ட் 0, 2 எண்ணுள்ள பிரஷ்களை வாங்கி வந்தேன். இனிநேரம் கிடைக்கும்போது இந்த படத்தை பூர்த்தி செய்யலாம் என்றிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கேன்வாஸ் பெயிண்டிங் கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

3 comments:

ithayakani said...

அண்ணா நீங்கள் வரைந்த குழந்தை ஓவியம்
மிகவும் அருமையா இருக்கு உங்களால்
மருது சோதரர்கள் படங்களை வரையமுடியுமா

ithayakani said...

அண்ணா நீங்கள் வரைந்த குழந்தை ஓவியம்
மிகவும் அருமையா இருக்கு உங்களால்
மருது சோதரர்கள் படங்களை வரையமுடியுமா

பெருமாள் தேவன் செய்திகள் said...

தம்பி ஏற்கனவே நிறைய வரைந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தேவைப்பட்டால் அதையும் செய்யலாம்.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...