Thursday, March 8, 2012

அணு உலை வெடிக்கவே வெடிக்காது என்போருக்கு மட்டும் இது சமர்ப்பனம்

அணு உலை வெடிக்கவே வெடிக்காது என்போருக்கு மட்டும் இது சமர்ப்பனம்
#வெடித்தால் என்னாகும்னு பாருங்க.. (இன்றைய தினமணி கட்டுரை)




-----------------------------------------------------------------------
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால்
-----------------------------------------------------------------------

நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் வளர்கின்றன. தொலைபேசிக் கம்பங்கள் ஒரு தினுசான கோணத்தில் சாய்ந்து கிடக்கின்றன. புகுஷிமா நிர்வாகப்பகுதியின் கடலோரத்தில், தெற்கே சில மைல்களுக்கு அப்பால், மற்ற சமூகத்தினர் புது குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தோமியோகா இருப்பது புகுஷிமா டாய்-ச்சி அணுஉலைக் கூடத்திலிருந்து எட்டு மைல்களுக்கு உள்ளாக - தடை செய்யப்பட்டுள்ள 13 மைல்கள் ஆரம்கொண்ட மண்டலத்துக்குள்ளாக! இங்கு வசித்தவர்கள் வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

நொடோ மட்சுமுரா மட்டுமே தோமியோகாவில் எஞ்சி நிற்பவர். மின்சாரம் இல்லாமலும், குடிநீர் விநியோகம் இல்லாமலும், தனிமையை எதிர்கொண்டபடியும், உயரளவு கதிர்வீச்சின் நிரந்தர அச்சத்துடனும் அங்கேயே இருக்கிறார்-ஒரு நெருப்புக்கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக!

ஓராண்டு கழிந்த நிலையில், மட்சுமுரா (வயது 52) மனிதர்களைவிடவும் பிராணிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தோன்றுகிறது. சாலை போடும் இயந்திரங்களை இயக்குபவரான மட்சுமுரா, ""நிலநடுக்கம் தாக்கியபோது நான் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆழிப்பேரலை வந்து கொண்டிருப்பதாக வானொலியில் சொல்லக் கேட்டோம்''. என்கிறார். ""அடுத்தநாள் அணுஉலைக் கூடம் வெடித்ததைக் கேட்டேன். என்ன நடந்தது என்பதை எனக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய "டமால்' சத்தம்''.

வீட்டில் தாய், தந்தை மற்றும் உள்ளூர் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மேலும் பல வெடியோசைகளைக் கேட்டனர். இறுதியாக, தெற்குநோக்கிச் செல்வதென தீர்மானித்தனர். ""ஐவாகி ஊருக்குப் போய் என் அத்தை வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் எங்களில் ஒருவரைக்கூட வீட்டுக்குள் விடவில்லை. ஏனென்றால், நாங்கள் கதிர்வீச்சால் கெட்டுப்போய்க் கிடப்பதாக அவள் சொன்னாள். ஆகவே, அருகில் இருந்த அடைக்கலமையத்துக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும்கூட எங்களை அவர்கள் தங்கவிடவில்லை. ஆகவே, வீடு திரும்பினோம் என்கிறார்.

ஏப்ரல் மாதம் மட்சுமுராவின் தாய்க்கு உடல்நலம் குன்றியது. ஆகவே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த 18 மைல் தூரத்துக்கு அப்பால் சென்று உறவினர்களுடன் தங்கினர். ""எங்களால் கால்நடைகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. ஆகவே, நான் இங்கேயே தங்கிவிட்டேன்'' என்கிறார்.

தொடக்கத்தில், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட 60 நாய்கள், 100 பூனைகளை இவர் பார்த்துக் கொண்டார். தவிர, நூற்றுக்கணக்கான வாத்துகளும், இன்னமும் பூட்டப்பட்டுக் கிடக்கும் தொழுவத்தில் கால்நடைகளும் இருந்தன. வீட்டுப் பிராணிகள் பலவும் கூட்டுச் சேர்ந்து கிளம்பிச் சென்றபோது - இவரிடம் 7 நாய்களும், 14 குட்டிகளையும் விட்டுவிட்டுச் சென்றன. மட்சுமுராவின் நோவா பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 ஆடுகளும், அதில் பாதி அளவுக்கு பன்றிகளும், ஒரு பண்ணையின் முப்பது பறவைகளில் பிழைத்திருக்கும் ஒரேயொரு பறவையாகிய நெருப்புக்கோழியும் இருக்கின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ரோந்து வந்த போலீஸார் நெருப்புக்கோழியின் முதலாளியை அழைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்ய மட்சுமுராவுக்கு ஒரு முற்பகல் முழுதும் தேவைப்பட்டது. திரும்பிவந்தபோது நெருப்புக்கோழியைக் காணவில்லை. ஐந்து மைல்களுக்கு அப்பால் இரை தேடிக்கொண்டிருந்த வான்கோழியைத் தேடிப்பிடித்து கொண்டு வந்தார்.

ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார். இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.

""நான் வெளியேற வேண்டும் என்று போலீஸார் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் இந்த பிராணிகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்றாகிவிடும்'' என்கிறார் மட்சுமுரா.

அக்டோபர் மாதம் இவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், இவர் உடலில் கதிர்வீச்சு அளவு 134 முதல் 137 வரை இருந்தது. ""இதற்குக் காரணம் நான் இந்த மண்ணிலேயே விளையும் காய்கறிகளைத்தான் சாப்பிடுகின்றேன்'' என்கிறார் மட்சுமுரா.

மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.

(மார்ச் 6, 2012-ல் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்ட, டெய்லி டெலிகிராப் செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.)

நன்றி -

தினமணி - முகநூலில் வெளியிட்ட ஈரோடு கதிர்

2 comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன செய்யலாம். தகவலுக்கு மிகவும் நன்றி. எதிர்காலத் தமிழ்நாடைஇறைவந்தான் காப்பாற்ற வேண்டும்.

RAVI said...

அணுமின்சாரம்தான் வேணும்னு சொல்றவிங்கள அணுவுலைக்குள்ள வுட்டு பூட்டுங்கப்பா...

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...