Tuesday, March 27, 2012

மும்பை தமிழர்களின் முயற்சியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் விடுதலை

மும்பையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர்.

இது பற்றிய விவரம் வருமாறு –

கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை தாலுகா, குளச்சல் அருகேயுள்ள தூத்தூர், இரவிபுத்தன் துறை கிராமத்தை சேர்ந்தவர் சாபு. இவரது மீன் பிடி படகு பரலோக மாதா கடந்த 8ம் தேதி டீசல் நிரப்ப மற்றும் பழுது பார்ப்பதற்காக மும்பை துறைமுகத்திற்கு வந்தது.

இந்த படகில் மீனவர்கள் டைட்டஸ் (35), விஜின் (20), கார்லோஸ் (62), மனோஜ் (19), சூசையார் (20), ரித்தீஸ் (19), நஸாரியா (45), கிறிஸ்டோபர் (60), பீட்டர் (42) ஆகிய 9 பேர் இருந்தனர். துறைமுகத்தில் ஸ்டார்ட்டரை பழுது நீக்கிக் கொண்டு, டீசல் நிரப்பிய பின்னர் இவர்கள் கிளம்பும்போது போலீசார் இவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது பரலோக மாதா படகு மும்பை துறைமுகத்தில் நுழைந்ததும் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் படகில் இருந்தவர்களுக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் முறையாக பதில் அளிக்க முடியவில்லை. படகின் பதிவு ஆவணங்களும் உடனடியாக அதிகாரிகளுக்கு காட்டப்படவில்லை. இதனால் அவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் மும்பையில் பாவுக்கா தக்கா அருகே படகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.




இந்த நிலையில் இந்த தகவல் கன்னியாகுமரி மீனவர்கள் சார்பாக சென்னையில் உள்ள கடல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் இந்த தகவலை மும்பையில் பாரதிய ஜனதா கட்சியின் மும்பை மாநகர செயலாளர் ராஜா எம். உடையார், மராட்டிய மாநில இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் ஆகியோருக்கு தெரிவித்தார்.

அதன் பின்னர் ராஜா உடையார், பெருமாள் அ. தேவன் ஆகியோர் இதுபற்றி எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.ஏ. டோகேவிடம் பேசினர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி ராஜா உடையார், பெருமாள் அ. தேவன் ஆகியோர் எல்லோ கேட் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் போயிடேயை சந்தித்து பேசினர். அப்போது அவர் தாங்கள் மீன்வளத்துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அது வந்ததும் நிச்சயமாக இன்று அல்லது 14ம் தேதி காலை மீனவர்களை விடுவித்து விடுவதாகவும் கூறினார்.

அதன் பின் அவர்கள் படகில் இருந்த மீனவர்களை சந்தித்து பேசி ஆறுதல் கூறினர். மீனவர்களை விடுவிப்பது தாமதமானால் எல்லோ கேட் காவல் நிலையம் முன்பாக ராஜா எம். உடையாரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் 15ம் தேதி மீண்டும் முழு விசாரணை செய்து அவர்கள் புலிகள் இல்லை மற்றும் படகில் சட்டவிரோத பொருட்களோ அல்லது ஆயுதமோ இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும், எனவே மீனவர்களை எப்போது விடுவிப்போம் என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று விசாரணை அதிகாரி சொன்னார்.

இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் அவர்கள் படகின் ஸ்டார்ட்டரை பழுது நீக்கியதும் அதற்கான ரசீது அவர்களிடம் இருந்ததும் தெரியவந்தது. படகின் டிரைவர் டைட்டஸ், அவரது தந்தை கார்லோஸ், மீனவர் விஜின் ஆகியோரிடம் மீண்டும் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அந்த ஸ்டார்ட்டரை பழுது பார்த்த எலக்ட்ரிக்கல் மெக்கானிக் எல்லோகேட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டு அவர் பழுது பார்த்தது உறுதி செய்யப்பட்டது. கொச்சி துறைமுகத்தில் படகு பதிவு செய்திருப்பதற்கான ஆவணமும் கிடைத்தது.

போலீசார் மோப்ப நாய் கொண்டு படகில் மீண்டும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் படகில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் சிக்கவில்லை. அதேவேளையில் படகில் இருந்த 4 பேருக்கு அடையாள அட்டை இல்லை என்பதும், படகில் இல்லாத ஆட்களுக்கு அடையாள அட்டை இருந்ததும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களை தொடர்புகொண்டு அவர்களது அடையாள அட்டையின் பிரதி உடனடியாக ஈமெயிலில் வரவழைக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என்று தெரியவந்தது. இந்த மறுவிசாரணை நடைபெற்ற இரண்டு நாட்களும் பெருமாள் அ. தேவன் உடனிருந்து மீனவர்களின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்தும், ஆவணங்களை தமிழகத்திலிருந்து வரவழைத்தும் போலீசார் மற்றும் மீனவர்களுக்கு உதவி செய்தார்.



இந்தநிலையில் அவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மைதானா மற்றும் அவர்கள் மீது ஏதாவது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிய எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் நாராயன் ஆர். கட்கே, பாலாசாஹேப் டி. டோரே ஆகியோர் கடந்த 17ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் தமிழகம் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தமிழகம் சென்று மீனவர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர்.

இதற்கிடையில் மஹாஷ்டிரா அரசின் மீன்வளத்துறை, வெளிமாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் மும்பை பாவுக்கா தக்காவில் மீன் விற்பது குற்றம் என்று மீனவர்கள் மீது 1981ம் ஆண்டு மஹாராஷ்டிரா மீன்வள பாதுகாப்புச் சட்டம் பிரிவு 16/2-ன் கீழ் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 22ம் தேதி மும்பை ஓல்ட் கஸ்டம் ஹவுஸில் மும்பை கலெக்டர் மற்றும் மாஜிஸ்திரேட் ஓக், துணை கலெக்டர் அனில் சாவந்த், தாசில்தார் லோண்டே, மீன் வளத்துறை அதிகாரி சவுக்குளே, ராஜா எம். உடையார், பெருமாள் அ. தேவன் முன்னிலையில் படகு உரிமையாளர் சாபுவின் தந்தையும் கன்னியாகுமரி மீனவருமான கார்லோஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மும்பை பாவுக்கா தக்காவில் மீன் விற்றதை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை செலுத்தியதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 24ம் தேதி மீனவர்களை விடுவிக்கும்படி உத்தரவு கொடுத்தனர். ராஜா எம். உடையார், பெருமாள் அ. தேவன் இருவரும் 26ம் தேதி போலீஸ் டிசிபி தானாஜி காட்கேயை சந்தித்து, விசாரணை அனைத்தும் முடிந்து விட்டதால் உடனே மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீனவர்களையும் படகையும் உடனே விடுவிக்க உத்தரவிட்டார்.





இதையடுத்து எல்லோ கேட் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டுரங்க அனந்த் டோகே மீனவர்களின் ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது விசாரணையை சரியான முறையிலும் மீனவர்களை மனிதாபிமானத்துடனும் நடத்தியதை பாராட்டும் வகையில் டேகோவிற்கு ராஜா உடையார் சால்வை அணிவித்தார். பெருமாள் அ. தேவன் இன்ஸ்பெக்டர் பரத் பொயிட்டேவுக்கு சால்வை அணிவித்தார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். அப்போது எம்.ஏ. உதயம் சுவாமி, செந்தில் குமார், எஸ்.கே. சுந்தர், துறை தங்கமணி, பொன்னம்பலம், ஆர். அறிவழகன், சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

2 comments:

சத்ரியன் said...

பாராட்டுக்கள் தேவன்.

ABI&ASHA said...

Mr dhevan,
thanks

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...