Sunday, June 7, 2020

கல்வெட்டு: பெண்களை விசாரிக்கக் கூடாது: ராஜராஜசோழன் உத்தரவு


வெண்குடி வெள்ளார் காஞ்சிபுரத்தை கடந்துவிட்டாராம் இன்னும் அரைநாள் பொழுதில் நம்முடைய ஊரை வந்து சேர்ந்துவிடுவாராம் என்ற தகவல் கிடைத்ததும் "காவேரிப்பாக்கம்" ஊரே பரபரத்தது. காவேரிப்பாக்க ஊர் மகாசபையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் ஊர் மத்தியில் இருந்த காமகோட்டத்தில் (பார்வதி கோயில்) ஒன்றுகூடினார்கள். ஊர் இரண்டு பட்ட எண்ணங்களை கொண்டிருந்தது. "புருஷன் செய்த தவறுக்கு மனைவியை கைது செய்வது தவறு" எனவும் " தவறில்லை " எனவும்..
தஞ்சையிலிருந்து இராஜ ராஜ சோழன் அனுப்பிய ஆணையை கொண்டு வரும் அவரின் அதிகாரியான வெண்குடி நாட்டு வெள்ளார் காவேரிப்பாக்கத்தை அடைந்ததும் பணிவுடன் அவரை வரவேற்று காமக்கோட்டத்திற்கு அழைத்து வந்தார்கள் ஊர் மக்கள். சுற்றும் முற்றும் பார்த்த அவர் சட்டென தன் இடுப்பில் சொருகி இருந்த ஓலையை வெளியே எடுத்தார். ஊரே பரபரத்தது..அதிகாரி படிக்கத் துவங்கினார்.
"ராஜகேசரிவர்மற்கு ஆண்டு இருபத்தஞ்சாவது (1010) காவிதிப்பாக்கமாகிய அவனிநாராயண சதுர்வேதிமங்கலத்து ஊர் வாரிய, கழனி வாரிய, ஏரி வாரிய, உதாசின வாரிய, பட்டர்கள், வைஷ்ணவ பெருமக்களாகிய உங்களுக்கு "எப்பேர்ப்பட்ட கரணங்களும் (Arrest Warrant) சங்கிராந்தியும் (Important Holy Day) உவாவும் (பௌர்ணமி) பிரதிபதமும் (பிரதமை) (First day after full moon day) இந்நாளால் காணப்பெறாததாகவும். மற்றும் எப்பேர்ப்பட்டதும் காட்டுமிடத்து காட்டப்பட்ட புருஷரைக் கொண்டு போதுவாராகவும் புருஷரைக் காணாவிடிலும் ஸ்திரீகளைக் கொண்டு போகப் பெறாதாராகவும் கொண்டு போந்தார் சபையோருக்கும், பெருமானடிகளுக்கும், அரசனுக்கும் பிழைத்தாராகவும் ................." என்று படித்துக்கொண்டிருக்கும் போதே கூட்டம் சலசலத்தது..
அந்த கூட்டத்தில் சரியாக காது கேட்காத பெரியவருக்கு அந்த செய்தி புரியவில்லை, என்னவென்று அருகில் இருந்த சிறுவனிடம் விசாரித்தார். அதாவது பெரியவரே "அரசாங்கத்திடமிருந்தோ, ஊர் சபையிடமிருந்தோ யாரவது குற்றம் பண்ணவங்கள பிடிக்க சொல்லி கரணம் (Arrest Warrant) வந்தா சங்கிராந்தி, பௌர்ணமி, பிரதமை நாட்கள்ல ஆண், பெண் யாரையும் கைது பண்ணக்கூடாதாம். மத்த நாட்கள்ல மட்டும் தான் கைது பண்ணணுமாம். அதுவும் குற்றம் பண்ண ஆம்பளங்க தேடி கிடைக்கலனா, அதுக்கு பதிலா அந்த வீட்டு பெண்கள ஊர் சபைக்கு கூட்டி போய் விசாரிக்கக்கூடாதாம். அப்படி மீறி பிடிச்சிட்டு போறவங்க அரசனுக்கும் ஊர் சபைக்கும் துரோகம் பண்ணதா ஆகுமாம். அவங்களுக்கு தண்டனையும் குடுப்பாங்கலாம். இந்த உத்தரவ இந்த ஊர் சபையும் இதுக்கு பெறவு வரப்போற எல்லா சபையும், இந்த ஊர் அரசு அதிகாரிகளும் நடைமுறை படுத்தி இந்த உத்தரவ கல்லுல வெட்ட சொல்லி ராஜ ராஜன் தஞ்சாவூர்ல இருந்து உத்தரவு அனுப்பி இருக்காரு" என்று முடித்தான் அந்த சிறுவன்.
அதை கேட்டவுடன் அந்த பெரியவரின் கண்கள் குளமானது, கடந்த வாரம் தன் மகன் செய்த குற்றத்திற்காக அவன் தேடி கிடைக்கவில்லை என்று தன் மருமகளை அழைத்துச் சென்று ஊர் சபையில் நிறுத்தி விசாரித்ததால் அவள் சரியாக உணவு கூட உண்ணாமல் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்து ஒருகட்டத்தில் அவமானம் தாங்காமல் இனி இந்த ஊரில் எப்படி வாழ்வதென தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அவர் கண்முன்னே நிழலாடியது.
பெண்கள் அழுதால் வீடு விளங்குமா? அல்லது நாடு தான் விளங்குமா? கண்ணுக்கு தெரிந்து வீட்டில் உள்ள பெண் தெய்வங்களை அழவைத்து விட்டு, பெண்கடவுள்களுக்கு உகந்த "சங்கிராந்தி, பௌர்ணமி, பிரதமை" ஆகிய தினங்களில் அவற்றை வணங்கினால் மட்டும் பலன் கிட்டுமா?
ஆண்கள் தவறு செய்து தப்பித்து விட்டால் அதற்கு வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தல்லவா இப்படி ஒரு ஆணையை ராஜ ராஜன் பிறப்பித்திருக்கிறார்! இந்த கல்வெட்டு பொறிக்கப்படும்..இனி வரப்போகும் அரசும்..ஊர் சபையும் இந்த உத்தரவை பின்பற்றும்.. என் மருமகளுக்கு நேர்ந்த அவலம் இனி இந்த மண்ணில் பிறந்த, பிறக்கப் போகும் எந்த பெண்ணுக்கும் நேராது என யோசிக்க யோசிக்க அந்த பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இடுப்பில் இருந்த துண்டை கழற்றி கண்ணை துடைத்தவாறு கூட்டத்தை விட்டு நகர்ந்தார். தூரத்தில் காவேரிப்பாக்கம் வரதர் கோயில் தூணில் மன்னனின் அரசாணையை கல்லில் செதுக்கும் ஓசை அவர் காதிற்கு கேட்கத் துவங்கியது, தஞ்சையில் இருக்கும் இராஜராஜனை நோக்கி தெற்கே திரும்பி ஒரு கும்பிடு போட்டபடி நடையை துவங்கினார் அந்த பெரியவர்!!

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...