Tuesday, February 13, 2018

எங்கள் குல தெய்வம் ஸ்ரீ கண்ணாத்தாள்




எங்கள் குல தெய்வத்திற்கு எங்கள் பங்காளிகள் மட்டுமே பூசாரிகள் ஆக முடியும். பூசாரி இறக்குவதை தனி நிகழ்ச்சியாகவே நடத்துவார்கள். அதற்கு முன்னதாக சில நாட்கள் பூசாரியாக விரும்புபவர்கள் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அந்த நாளில் ஒவ்வொரு சாமிக்கும் என பூமாலைகளைப் போட்டு வைப்பார்கள். எந்த மாலை எந்தச் சாமிக்கு என்று நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும். எங்கள் குல தெய்வம் ஸ்ரீ கண்ணாத்தாள் உடன் துணை தெய்வங்கள் 21 உள்ளன. அவற்றுக்கும் பூசாரி இறக்குவார்கள்.
குறிப்பிட்ட அந்த நாளில் மேளதாளம் அடிக்க கங்கணம் கட்டியிருப்பவர்கள் அருள் இறங்கி ஆடுவார்கள். எந்தச் சாமி இறங்குகிறதோ அவர்கள் அந்தச் சாமியின் பெயரில் போடப்பட்டுள்ள மாலையைச் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால்தான் அவர் பூசாரியாக ஏற்றுக் கொள்ளப்படுவார்.
கடந்த காலங்களில் உண்மையிலேயே சாமி இறங்கியுள்ளதா என்று அறிய சாட்டையால் அடித்தல் தீ கங்குகளை மடியில் போடுதல் போன்ற கதைகளை பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் 16 பூசாரிகளை இறக்கியுள்ளனர். இன்னும் 5 பூசாரிகளை இறக்க வேண்டிய பாக்கி இருக்கிறது. அனேகமாக இந்த ஆண்டு அதைச் செய்ய இருக்கிறார்கள்.
நாங்கள் பிரமலைக் கள்ளர்களில் ஒரு சிறிய பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரமலைக் கள்ளர் நாடுகளில் திடியன் நாட்டைச் சேர்ந்த மெய்யத் தேவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மெய்யத்தேவன் தன் அண்ணன் பூண்டத் தேவனுடன் நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவிலுக்குச் சென்று திருடச் சென்றார்கள். அப்போது கண் தெரியாமல் போகவே பின்னர் கண்ணாத்தாளின் அருளால் கண் தெரிய ஆரம்பித்ததால் மெய்யத்தேவன் வாரிசுகள் கண்ணாத்தாளை குல தெய்வமாக வணங்கத் துவங்கினர்.
பூண்டத்தேவன் வாரிசுகள் தாங்கள் கீழை நாட்டில் குல தெய்வமாக வழிபட்ட அழகர் சாமியை குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். மெய்யத்தேவனின் வாரிசுகள் உசிலம்பட்டி அருகேயுள்ள வலங்காகுளம் என்ற ஊரில் வசித்து வந்ததால் எங்களை வலங்காங்குளத்தார் என்று அழைப்பார்கள். தற்போது எங்கள் குலத்தவர் சுமார் 300 குடும்பங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
(நேற்று (13-02-2018) எங்கள் குல தெய்வ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. எங்கள் குல தெய்வப் பூசாரிகளை படத்தில் காணலாம்.)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...