Wednesday, February 7, 2018

தேவை தமிழர் மதம்

தமிழரின் தோல்விக்கு இதுதான் காரணம் -அருகோ புதிய கருத்து


மொழியும் மதமும்…!
ஒரு தேசிய இன விடுதலையை வென்றெடுக்க வலிமை ஊட்டுவது மொழியா ? மதமா ?
தமிழால் தமிழர் ஒன்றுபட்டோமா?
நாடற்றிருந்த யூதர்கள் நாடுபெற்றது மொழியாலா ? மதத்தாலா ?
‘தமிழா ஒன்றுபடு ! தமிழால் ஒன்றுபடு !’ என்ற முழக்கம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் அது நிறைவேறுகிறதா? என்று பார்த்தால், சங்க காலம் தொட்டே அது ஒரு கனவு முழக்கமாகத்தான் இருக்கிறதேயல்லாமல், தமிழர்களால் கடைபிடிக்கப்படுவதாக – கடைபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை; இன்றும் நிலைமை மாறவில்லை.
ஆம்; சிவநெறி, மால்நெறி இரண்டுமே தமிழர் சமயமாகக் கருதப்பட்டாலும் சக்தி வழிபாடு, முருக வழிபாடு, சூரிய வழிபாடு, பிள்ளையார் வழிபாடு என பல அகச்சமய வழிபாடுகளோடு, ஆசீவகம், சமணம், புத்தம் எனப் புறச்சமயக் கடைப்பிடிப்புக்களும் சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆக, ஒரே சமயமாக நாம் இருந்ததில்லை; இன்றும் இல்லை.
பின், யூதம், கிறித்துவம், இசுலாம் என உலகத்தில் எத்தனை மதங்களுண்டோ அத்தனையிலும் தமிழர்கள் ஆழங்கால்பட்டதையும் அறிகிறோம்; தமிழர்க்குத் தனியாக ஒரே மதம் என்றில்லாமையால் !
ஆசீவகம் என்பதே தமிழரின் இறை மறுப்புச் சமயம்தான். அதுவே வடக்கே சென்று சமணமாகவும் புத்தமாகவும் வினைக் கோட்பாட்டுச் சமயங்களாகத் திரும்பி வந்தன என்ற கருத்தும் இருக்கிறது.
தமிழால் ஒன்றுபட்டோமா?
தமிழால் ஒன்றுபட்டால் போதும்; சமயத்தால் ஒன்றுபட்டிருக்கத் தேவையில்லை என்று எப்படியோ தமிழினத்தின் அடிமனத்தில் பதிந்துவிட்டது.
ஆனால், சமயம் மாறிய தமிழன், “சமயமா? தமிழா?” என்று வருகிற போது , தமிழைக் கைவிட்டு, அச்சமயத்தின் மொழியையே உயர்வுடையதாகக் ஏற்கத் தயங்குவதில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஏன்? “சாதியா தமிழா?” என்று வந்தால்கூட, தமிழை விட்டுவிட்டுச் சாதியைச் சார்ந்திருப்பவனே தமிழன்.
ஒரு பார்ப்பனத் தமிழன், தமிழா? சமற்கிருதமா? என்று வருகிற போது சமற்கிருதத்தின் பக்கமே நிற்கிறான்.
வைதீக மதவெறி பிடித்த பார்ப்பனரல்லாத தமிழர்கள்கூட, வழிபாட்டில் தமிழா? சமற்கிருதமா? என்று வருகிற போது சமற்கிருதத்தின் பக்கமே நிற்கிறான்.
ஏன்? “சைவமும் தமிழும் எம்மிரு கண்கள்” என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்ச் சைவ மடாதிபதிகள்கூட ‘சமற்கிருதம் தேவமொழி, அதை மறுக்கக்கூடாது’ என்று அதற்கு தமிழைவிட உயர்ந்த இடத்தைக் கொடுப்பதையே பார்க்கிறோம். அவர்களின் ஆளுமையில் இருக்கும் எந்தக் கோவிலிலாவது தனித்தமிழ் வழிபாடு (தமிழில் அருச்சனை) உண்டா?
மாறாக, தமிழ்த் தேவாரம் பாடிய அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னிதிகளிலேயே வடமொழி அருச்சனைதான் விரும்பிச் செய்யப்படுகிறது.
இசுலாமியத் தமிழரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்கள் வழிபாடுகள், சடங்குகள் அனைத்தும் அரபு மொழியில்தான்.
மலேசிய, இந்தோனேசிய,சீன இசுலாமியர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்வதைக் கண்டபின்பும், தமிழ் இசுலாமியர்கள் அட்சரச் சுத்தமாக அரபு மொழியில் மட்டும் தான் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.
கிறித்துவத் தமிழர்களில் தேவநேயப் பாவாணர், தனிநாயக அடிகள் போன்ற தமிழ்ப்பற்றுடைய கிறித்துவர்களைத் தவிர்த்து, மற்றவர்கள் இலத்தீன், ஆங்கில நாட்டமுடையவர்களே, தமிழை இரண்டாம்பட்சமாகக் கருதுபவர்களே.
தமிழ்ச் சமணர்கள் இன்றும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே வாழ்ந்து வந்தாலும், இன்று அவர்கள் ‘செயின் – Jain’ எனப்படும் மார்வாடிகளைப் பின்பற்றுபவர்களாகவே ஆகிவிட்டனர்.
மொழியும் மதமும்
ஆக, ஒன்றுபட்ட ஒரு தமிழர் சமயம் உருவாகாததால் – உருவாக்கப்படாததால், “தமிழா ஒன்றுபடு-தமிழால் ஒன்றுபடு” என்ற முழக்கம் வெற்றிபெறவில்லை என்பதுதான் உண்மை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் தாய்நாட்டை இழந்து, தாய்மொழியையும் மறந்துவிட்ட யூதர்கள், 1948-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு தாய்நாட்டைப் பெற்றார்கள்; செத்துப்போன தங்கள் தாய்மொழியான ‘ஈபுரு’ மொழியை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தார்கள் என்றால், அதற்கு மொழியல்ல, மதமே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஈபுருக்கள் என ஏன் அழைக்கவில்லை?
எந்த நாட்டில் வாழ்ந்து, எந்த மொழியைப் பேசியபோதும் யூதர்கள், தங்கள் யூத மதத்தை மட்டும் கைவிட்டார்களில்லை. அதனால்தான் அவர்களை ‘ஈபுருக்கள்’ என்று அழைக்காமல் ‘யூதர்கள்’ என்றே உலகம் அழைக்கிறது.அந்த மதப் பற்றுத்தான் அவர்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகேனும் பாலத்தீனத்தில் ஒரு யூத நாட்டைப் படைக்கத் தூண்டியது.
சியோனிச இயக்கம்
உலகம் முழுவதும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒரு அமைப்பின் கீழ்க் கொண்டுவந்து, அவர்களுக்கு யூத தாயகத்தை எப்பாடு பட்டாவது அமைத்துத் தீரவேண்டும் என்ற தாகத்தை – வேகத்தை – வெறியை உண்டாக்கிய சியோனிச இயக்கம்கூட மத அடிப்படையில் பிறந்ததுதான்; மொழி அடிப்படையில் அல்ல.
ஆம்; ‘சீயோன்’ என்பது யூதர்களின் புனிதத்தலமான செரூசலத்தில் உள்ள ஒரு குன்றின் பெயரே ஆகும். நாம், தமிழ் பிறந்ததாகக் கருதப்படும் ‘பொதிகை’ மலையின் பெயரால் ஓர் இயக்கம் கட்டினால் எப்படியோ, அப்படித்தான் ‘தியோடர் அர்சல்’ எனும் அமெரிக்க யூதரால் இசுரேலைச் சமைத்த அந்த சியோனிச இயக்கம் கட்டப்பட்டது.
மொழிவெறியல்ல, மதவெறியே சாதிக்கும்
மதமும் மொழியும் இணைந்திருந்த காரணத்தால், இசுரேல் அமைந்ததும் வேறு வேறு நாடுகளிலிருந்து வேறு வேறு மொழிகளைப் பேசிய யூதர்கள், அங்குக் குடியேறியவுடன் தனித் தனி முகாம்களில் 6-மாதம் வரை தங்கவைக்கப்பட்டு, ஈபுரு மொழியைக் கற்றுக் கொடுத்த பின்பே அவர்கள் இசுரேலிய மக்களாக ஏற்கப்பட்டனர்.
அண்மையில் கிழக்குத் தைமூர், தெற்குச் சூடான் இரண்டும் விடுதலை பெற்றுத் தனிநாடுகள் ஆனதற்கும் மதம்தான் காரணமாகும்.
அயர்லாந்தியர் புகட்டும் பாடம்
‘மதம் அபினைப் போன்றது’ என்று மார்க்சு சும்மா சொல்லவில்லை. பிரித்தானியாவிடமிருந்து அயர்லாந்து பல்லாண்டுப் போராட்டத்திற்குப் பிறகுதான் விடுதலை பெற்றது.இருந்தும் வட அயர்லாந்து விடுதலை பெற்ற தென் அயர்லாந்துடன் சேராமல் பிரிட்டனுடனேயே இருந்துவிட்டது. காரணம் என்ன தெரியுமா? மதம் தான் !
இரண்டுமே கிறித்துவப் பகுதிகள் என்றாலும் தென் அயர்லாந்து கத்தோலிக்கப் பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்டது. வட அயர்லாந்தியரோ, புராட்டசுடண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால் ஒரே மொழியைப் பேசும் தென் அயர்லாந்தியருடன் சேராமல் ஆங்கிலம் பேசும் புராட்டசுடண்ட்டு பிரித்தானியரோடே தங்கி விட்டனர்.
இதிலிருந்து, மொழிப் பற்றைவிட மதப்பற்றே வலிமையானது என்பது புரிகிறதல்லவா?
இந்தித் திணிப்பின் இரகசியம்
இதன் காரணமாகத்தான் இந்திய அரசு தமிழ் போன்ற பிற மொழிகளைப் பேசுவோரை நாளடைவில் இந்தி பேசுவோராக ஆக்கிவிடமுடியும் என்ற குருட்டு நம்பிக்கையில் இந்தியைத் திணிப்பதில் மும்முரமாக இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிப்பதுடன், GST போன்ற வரித்திட்டங்கள் மூலம் மாநிலங்களுக்குச் சொந்த வருமானமே இல்லாமலாக்கி, நடுவணரசை எதிர்பார்த்தே வாழவேண்டிய நிலைக்கு ஆளாக்கி “இந்தி – இந்து – இந்துசுத்தான்” என்ற ஒற்றைப் படைக்குள் கொண்டுவந்த்துவிடலாம் என்ற வகையில் காய் நகர்த்தப்படுகிறது.
ஆகவே, தமிழர் ஒற்றுமையைத் தமிழ் மொழி ஒன்றினால் மட்டுமே கட்டியெழுப்ப முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, “தமிழர் மதம்” என்ற ஒன்றை உருவாக்கி, மொழியால் மட்டும் தமிழரல்ல, மதத்தாலும் நாம் தமிழர் என்ற தன்மையை ஏற்படுத்தாமல் நமக்கு உய்திகிட்டாது, இதுவரை கிட்டவுமில்லை.
இலங்கை படிப்பினை
அறவழிப் போரில் தந்தை செல்வாவும் ஆயுதவழிப் போரில் தேசியத்தலைவர் பிரபாகரனும் இலங்கை வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத்தானே விடுதலை வேள்வியை நடத்தினர் ! ஆனால், தமிழ்பேசும் இசுலாமியர்கள் தங்களை ‘மூர்கள்’ என்றும் தாங்கள் தனித் தேசிய இனம் என்றும் சொல்லிக்கொண்டு, சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணைபோய் தனிச்சால் ஓட்டியதாலன்றோ, உலகங்காணாத ஈகம் செய்தும் கூட அது வெற்றி பெறாமல் போனது?
தனிச்சால் சங்கடம் இன்மையால்
யூதர்களில் அப்படித் தனிச்சால் ஓட்டக்கூடியவர்கள் இல்லாமல் போனதாலேதான் அரபுலகமும் இசுலாமிய உலகமும் ஒருங்கே எதிர்த்தும்கூட ‘இசுரேல்’ எனும் தங்கள் தாய்நாட்டை ஆயிரம் ஆண்டுகள் கடந்தேனும் பெற முடிந்தது!
நமது இழப்புகள்
ஆனால், தமிழர்களாகிய நாமோ, முன்தோன்றி மூத்த குடியாக இருந்தும் இமயம் முதல் குமரி வரை பழந்தமிழகமாக – தமிழ் இந்தியாவாக இருந்தும் ஆரியர்களிடமும் திராவிடர்களிடமும் கோட்டை விட்டுவிட்டு,
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் …..”
என்று விரிந்து பரந்திருந்த பெருந்தமிழகத்தை இழந்து , இழிந்து, வடக்கிலும் மேற்கிலும் தமிழ் மண்ணை மாற்றாருக்குத் தாரைவார்த்துவிட்டு, குடிநீருக்கும் பாசன நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகிவிட்டோம்; பாழாகி விட்டோம்.
இனியும் எதற்கு எம்மதமும் சம்மதம்?
ஏன்? தமிழ்மொழியைப் போல தமிழர் மதத்தையும் தனித்து நிற்பதாகச் சமைக்க மறந்ததுதான். “எம்மதமும் சம்மதம்’ என்று கூறி நம் மதத்தை நிறுவிப் பின்பற்றத் தவறியதுதான்.
தமிழர்கள் என்போர் இனியேனும் இது பற்றிச் சிந்திக்க முன்வரவேண்டும். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததைப் போல ‘தமிழர் மதத்தையும்’ கட்டியெழுப்பி வளர்க்காமல் போனதுதான், நாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்குக் காரணம் என்பதை உணர வேண்டும்.
“காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருள்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே – …….” – குமரகுருபரர்.
(-எழுகதிர் ஆசிரியவுரை -கதிர்:35 வீச்சு:8)
{ஆசிரியர் குறிப்பு: ‘இணையற்ற ஈகம் புரிந்தும் நேர்ந்த தமிழீழத் தோல்வியும் தமிழ்நாட்டில் 85 விழுக்காடு தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரே வாழ்ந்தும் தமிழ்த் தேசியம் வெற்றி பெறாமல் போவதும் தமிழ்மொழி சார்ந்த மதம் ஒன்று இல்லாமையால்தான் என்று உணர்கிறேன்.அதையே இங்கு கட்டுரையாகப் படைத்துள்ளேன். இது பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன், எழுதுங்கள். – ‘அருகோ ’ }

http://www.tamizhvalai.com/archives/12959

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...