Wednesday, December 25, 2013

தி இந்துவின் தந்திரங்கள்


இந்து பத்திரிகை தமிழர் விரோதமான பத்திரிகை என்று இன்று தமிழர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஆனால் வெள்ளையர் காலத்திலேயே இந்த பத்திரிகை ஒரு சில தந்திரச் செயல்களைச் செய்துள்ளது. அதை ஒரு பிரபல வழக்கறிஞர் வெளிப்படையாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் தமிழர் மட்டும் வழக்கம்போது அதை கண்டுகொள்ளவில்லை.

அது என்னவென்று பார்ப்போமா….

ஜித்து கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இவரை ஜேகே என்றும் சுருக்கமாக அழைப்பர். இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் பெயர் பெற்ற ஆன்மீகவாதிகளில் இவரும் ஒருவர். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்போர் இவரது பேச்சு, எழுத்துக்களை கேட்காமல், படிக்காமல் இருக்க முடியாது.

கிருஷ்ணமூர்த்தி சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை நாராயணய்யாவால் (சித்தூர் பகுதியைச் சேர்ந்த பிராமணர்) அவரை பராமரிக்க முடியாமல் இருந்தது. அவருக்கு அவரது தந்தையால் சாப்பாடு கூட போட முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தியோசஃபிக்கல் சொசைட்டியைச் சேர்ந்த அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு விசேஷ சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டனர். அவர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் நித்யா ஆகிய இருவரையும் தத்து எடுத்து லண்டன் அழைத்துச் சென்று அவர்களுக்கு விசேஷ பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தனர். அவருக்கு லீட்பீட்டர் என்பர் இந்தப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் லீட்பீட்டர் சிறுவர்களான கிருஷ்ணமூர்த்தி, நித்யா ஆகியோருக்கு தவறான வழியில் பயிற்சி அளிப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்போது நாராயணய்யா தனது மகன்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சென்னை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அன்னிபெஸன்ட்க்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். 1910-களில் தொடரப்பட்ட இந்த வழக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் அதன் பின் அப்போதைய உச்ச நீதிமன்றமான லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கும் மாற்றப்பட்டது.

அன்னிபெஸன்ட் அம்மையார் தனது சாதுர்யமான வாதங்களால் வழக்கில் வெற்றி பெற்றார். இந்த வழக்கில் அன்னிக்கு எதிராக வாதாடியவர் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராமசாமி ஐயர். அன்னி சட்டம் படிக்காதவர் ஆவார். ஆனால் அவர் வழக்கில் வாதாடிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு எதிராக வாதாடிய ராமசாமி ஐயரே வழக்கு முடிந்த பின்னர் அன்னியின் அமைப்பில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பேராசிரியர் நெதர்காட் என்பவர் அன்னியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் அவர் இந்த வழக்கு பற்றி கூறியுள்ள தகவல்,

“நாராயணய்யா, தி இந்து டெய்லி, ராமசாமி ஐயர் ஆகியோரிடையே ஒரு கூட்டணி இருக்கும் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் கூட்டணி ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. வழக்கு விசாரணை முழுவதுமே அவர்கள் தாங்களை  அப்பாவிகள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் 1956-ம் ஆண்டு நான் அவரிடம் பேசியபோது அந்த வழக்குக்காக தன்னை வாதாட அமர்த்தியது தி இந்து பத்திரிகைதான் என்று கூறினார். இந்த பத்திரிகைக்காக இவர் ஏற்கனவே சில சின்னஞ்சிறிய வழக்குகளையும் நடத்தியுள்ளார். பரம ஏழையான நாராயணய்யாவால் எவ்வாறு இந்த நீண்ட வழக்குக்கு பணம் கொடுத்திருக்க முடியும் என்பது யாருக்குமே எழக்கூடிய சந்தேகம்தான். ….. காட்டுக்குள் ஒளிந்திருக்கும் இந்தியர் யாராவது அவருக்கு உதவியிருப்பாரா, என்ன?” (அன்னி, பேராசிரியர் நெதர்காட், பக்கம் 187 மற்றும் 190)

இந்த விஷயத்தை மதர் பெஸன்ட் அண்ட் மகாத்மா காந்தி புத்தகத்தை எழுதிய ஐ.எம். முத்தண்ணா தனது புத்தகத்தில் 98-வது பக்கத்தில் குறிப்பிடுகிறார். இந்துவின் தந்திரங்கள் அப்போதே ஆரம்பித்துவிட்டன. இந்துவின் இந்தச் செயல் ஏன் என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.



No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...