Tuesday, January 31, 2012

இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?

சு. செந்தில் குமரன்

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.


பெட்டி செய்தி : பணிக்கரின் ஆவேசம்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.

தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீரிமேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.

அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீரிமேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார். அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார்"



தம்பி, தயார் தயார்!

தமிழக எல்லைப்புறத்தில் நாம் இழந்த பகுதிகளை மீட்க 1956ம் ஆண்டு அனைத்துக் கட்சிப் போராட்டம் ஒன்று நடந்தது. அதைக் குறித்து 1956ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி (கருணாநிதி குறிப்பிட்டதுபோல் ஜனவரி 14ந்தேதி அல்ல) எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள்...

எல்லா கிளர்ச்சியும், குண்டு கிளம்பும் வரையில்தான். முழக்கமிட்டவன் ஐயோ என்று அலறிக் கீழே விழுந்து புரண்டு, பிணமாவது கண்டால், காக்கை குருவிக் கூட்டம் கல் கண்டதும் கடுகிப்போதல் போல இந்த வீராதி வீரர்கள் வீறிட்டழுதபடி ஓடோடிச் செல்வர் என்று சர்க்கார் எண்ணிற்று! துப்பாக்கி முழங்கிற்று! எழுவது பிணங்கள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தடியடி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில், எனினும் எதிர்ப்புணர்ச்சி மடியவில்லை. எக்காளம் குறையவில்லை. எமது உரிமையையாவது தாருங்கள் அல்லது உயிரையாவது பறித்துக் கொள்ளுங்கள் என்று கூறி மார்காட்டி நின்றனர் மக்கள்.

தம்பி, இந்தத் திங்கள், உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ள சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கிளம்பிய சூறாவளி, நேருவின் கண்ணையும் திறந்திருக்கும்.

மொழி வழி அரசு என்ற திட்டத்துக்காகவே, இத்துணை பயங்கர நிலை மூண்டது.

கதர் கட்டினாலே ஆபத்து என்று எண்ணிப் பீதி கொள்ளும் நிலை இன்னமும் அங்கெல்லாம் நீங்கவில்லை.

பண்டிதரின் பவனியே சிறிதளவு தடைபட்டுப் போய் நிற்கிறது.

புதிய போலீஸ் படையும், துருப்புகளும், ‘கலகம்’ நேரிட்ட நகர்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

பம்பாயில் உத்தரப்பிரதேச போலீஸ், ஒரிசாவுக்கு மத்தியப்பிரதேச போலீஸ்!

அருந்தமிழ்நாட்டில் மட்டும். தம்பி! அற்புதமான அமைதி நிலவுகிறது! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அக்கிரமத்தை உணர்ந்தோர் எத்துணை பேர் என்பதையும் அறிய முடியவில்லை. மாணவர்கள் மட்டுமே இதுபோது, நாட்டு மானங்காப்போம் என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.

இதற்கிடையில், பெரியார், இந்தப் பிரச்சினை சம்பந்தமாகத் திருச்சியில் பேசியதாகப் பத்திரிகைச் செய்தி கண்டேன்-கண்களை அகலத் திறந்து பார்த்தேன்-ஆச்சரியத்தால் மூர்ச்கையாகிவிடக் கூடிய நிலைமை - அவர் நம்மையும் அழைத்து ஒரு பொதுத்திட்டம் தீட்டப் போவதாகப் பேசினார் என்று பத்திரிகையில் இருந்தது. நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன்-நானாக அவரை நாடுவது என்றாலோ, ‘வழி மறித்தான்களும், இடம் அடைத்தான்’களும் புடைசூழ அல்லவா அவர் நிற்கிறார்?

இந்நிலையில், அஞ்சற்க, அனைவரும் ஒன்று கூடுவோம், என்று கூறுவதுபோல, நண்பர் ம.பொ.சி.யின் தந்தி எனக்குக் கிடைத்தது-கலந்து பேசலாம் என்பதாக.

சென்னையில் அவர் என்னிடம் சுவையான தகவல்களைக் கூறினார்-எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஏற்படும் விதமான தகவல்கள்.

‘பெரியாரும் நானும் கலந்து பேசினோம்’ என்றார் ம.பொ.சி. ‘பரவாயில்லையே, இப்போது நாம் ம.பொ.சி.யைப் பார்ப்பது, பாபமல்ல; இதற்கு எந்தப் பழியும் பிறவாதல்லவா-முதலில் பெரியாரும் ம.பொ.சி.யுமல்லவா சந்தித்தனர்-பிறகுதானே நாம், பரவாயில்லை-என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மகத்தான சந்திப்பின்போது பேசப்பட்டவைகள் பற்றி அவர் கூறக்கேட்டு இன்புற்றேன்.

தமிழகத்துக்கு உரிமையான பகுதிகளை மீட்பதற்கான கிளர்ச்சி அவசியம் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கைக்குப் பெரியார் ஒப்புதலளித்துப் பேசினார் என்று கூறினார்-களிப்புற்றேன்-அந்தக் களிப்புப் பன்மடங்கு வளரும் வகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பெரியார் பல இடங்களில் பேசினார்.

எனினும், 27ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரியார் கலந்து கொள்ளவில்லை; காரணம், முன்னாளே காட்டினார்.
அவர் காட்டிய காரணங்களின் தன்மை பற்றியோ, உண்மை குறித்தோ ஆராய்ச்சி நடத்துவது தேவையுமல்ல, என் வழக்கமுமல்ல-ஆனால், ஒன்றுமட்டும் கூறுவேன். அவர் காட்டிய காரணங்கள் அன்றைய கூட்டத்துக்கு அவர் வராததற்குப் போதுமானவை யாகாது.

மேலெழுந்தவாரியாக நான் கேள்விப்பட்டதும், ‘தினத்தந்தி’ ஆசிரியர் ஆதித்தன் என்னிடம் நேரில் சொன்னதும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது - நீ வருவதால்தான் பெரியார் வரவில்லை என்றார் - தம்மிடமே சொன்னதாகச் சொன்னார் - ஆனால், சொன்னவர் தினத்தந்தி!

நான் அவரிடம் சொன்னேன். ‘நான் இங்கு வருவதுதான் பெரியார் இங்கு வராததற்குக் காரணம் என்று எப்படிக் கூறமுடியும்? நாளைக்கு 28ல் வேறோர் இடத்தில் மற்றோர் பொதுப் பிரச்சினை குறித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்-பெரியாரும் பெருந்தன்மையுடன் அங்கு வரச் சம்மதம் தந்திருக்கிறாரே, அதுமட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?’ என்று கேட்டேன்.

காரணம் அதுமட்டுமல்ல, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை பற்றி மட்டுமே ம.பொ.சி.யின் கூட்டத்தில் கவனித்துக் கிளர்ச்சிக்கு வகை காண முன் வருகிறார்கள். பெரியாரோ, தம்முடைய ஒத்துழைப்பும் துணையும் தரப்பட வேண்டுமானால், வேறு சில பிரச்சினைகளையும் போராட்டத்துக்குக்கானதாக உடனடியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதுகிறார். அதன்படி இங்கே காரியம் நடைபெறாது என்று எண்ணியே வரவில்லை என்று, என்னையும் பெரியாரையும் ஒருசேரத் தோழமை கொள்ளும் நண்பர் கூறினார்.

இதுவும் பொருத்தமாகப் படவில்லையே! நாளைய தினம் நடைபெற இருக்கும் கூட்டத்திலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும்தான் கவனிக்கப்பட இருக்கிறது. அங்கு பெரியார், தம்முடைய மற்ற பிரச்சினைகளை வலியுறுத்துவதாகக் காணோமே என்றேன். எனக்கென்ன தெரியும் என்றார் நண்பர். எனக்குப் புரிந்தது-புன்னகையும் பிறந்தது.

தம்பி! 27ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்ட மாபாவிகளிலே பலர், 28ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு பெரியார், தட்டாமல் தயங்காமல் வந்திருந்து தமது சீரிய யோசனையை வழங்கினார்.

பெரியார் 27ல் வரவில்லை, 28ம் தேதிய கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். 27ம் தேதிய கூட்டம் தேவிகுளம், பீரிமேடு சம்பந்தமாக.

28ம் தேதிய கூட்டம் ஆங்கிலமே இந்திய யூனியனின் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக. இந்த ஒரு பிரச்சினைக்காக ‘இதுக’ளோடு, நான் கலந்து பேசுவதா என்று கேட்ட பெரியார், மொழிப் பிரச்சினை மட்டுந்தான் என்று 28ம் தேதிய கூட்டம் நடத்தப்பட்ட போதிலும் அதிலே ‘இதுகள்’ இருந்தபோதிலும், வந்தார்!

நான் திகைத்துப் போனேன்-உன் நிலை எப்படியோ?

ஒன்று மறந்தேனே கூற... 28ம் தேதிய கூட்டத்தில் இராஜகோபால ஆச்சாரியாரும், திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரும், கே.எஸ்.ராமசாமி சாஸ்திரிகளும், வெங்கட்ராம அய்யரும் வந்திருந்தனர். 27ல் இந்த ‘ஜமா’ இல்லை!

27ல் தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை என்ற பெயரில், தமிழரின் உரிமைப் பிரச்சினை, மொழிவழி அரசுப் பிரச்சினை, அதை வெட்டி வீழ்த்தக் கிளம்பும் தட்சிணப்பிரதேச யோசனையை வீழ்த்தும் பிரச்சினை, சென்னைக்குத் தமிழ்நாடு என்று உரிய பெயர் பெறும் பிரச்சினை இவைகளுக்கெல்லாம்.

தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி, திராவிட பார்லிமெண்டரி கட்சி, ஷெட்யூல் காஸ்ட் ஃபெடரேஷன், வடக்கெல்லைப் பாதுகாப்பு கமிட்டி, திருகொச்சி இணைப்பு கமிட்டி, எழுத்தாளர் சங்கம், புதுவை முன்னணி, ஜஸ்டிஸ் கட்சி ஆகிய இத்தனை அமைப்புகளின் தலைவர்கள் ஒப்பமளித்தனர்; உடனிருந்து பணியாற்ற ஒருமனப்பட்டனர். செயலாற்றக் குழு அமைக்கப்பட்டது. பி.டி.ராஜன் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ம.பொ.சி. அமைப்புச் செயலாளராகவும், நமது என்.வி.நடராஜன், ப.ஜீவானந்தம், அந்தோணிப் பிள்ளை, சுப்ரமணியம் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர்.

இதுபோன்றதோர் ‘கூட்டணி’ இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தாயக மீட்புக்கு, அவரவர் தத்தமது கடமையைச் செய்ய, காணிக்கை தர, தயாராகி விட்டனர்.

இதிலே இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியின் உருவமோ முறையோ, வேலைத் திட்டமோ கொள்கைகளோ, இந்தக் கூட்டினால், குலையும் நிலையில் ஏதும் இல்லை.

தேவிகுளம், பீரிமேடு என்ற குறிச் சொல்லால் இன்று உணர்த்தப்பட்டு வரும் மொழிவழி அரசுத் திட்ட வெற்றிக்கான வரையில் கூடிப் பணியாற்றுவது என்பதே நோக்கம்.

இல்லையேல் பி.டி.இராஜன் தலைவர், ம.பொ.சி.யும் ஜீவானந்தமும் செயலாளர்கள் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்க முடியுமா?

தம்பி! அன்று நான் அனைவரிடத்திலும் கண்ட உள்ளத் தூய்மை என்னை உவகைக் கடலில் ஆழ்த்திற்று! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ ஏசினோம். ஏசப்பட்டிருக்கிறோம் எனினும், அன்று நாட்டுக்கு வந்துற்ற பெருங்கேட்டினை நீக்கிட நாமனைவரும், ஓர் அணியில் நின்றாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசியது கேட்டு, உளம் பூரித்தேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என் உள்ளத்தில் எப்போதும் இருந்து வருபவர். நீண்ட நாட்களாகக் காணாதிருந்தேன். அவருக்குக்கூட அல்லவா என்னிடம் கோபம், கசப்பு- அவர் அன்று அங்கு அமர்ந்து, அரசோச்சும் மன்னருக்குப் பழந்தமிழ்ப் புலவர்கள் பேராண்மையுடன் அறிவுறுத்திய பான்மை போல், அவையினருக்கு, ‘செயல்! செயல்! உடனடியாகச் செயல்! உரிமை காத்திடும் செயல்’ என்று பேசினதை நான் என்றும் மறந்திட முடியாது!

இந்தக் கூட்டு முயற்சியைக் குறைகூறிப் பேசுவோரும் எழக்கூடும் நாட்டிலே எதற்குத்தான் வாய்ப்பு ஏற்படவில்லை?

இந்தக் கூட்டணி அமைந்ததால் தத்தமது கட்சி கலைக்கப்பட்டு, கொடி அகற்றப்பட்டுக் கொள்கை தகர்க்கப்பட்டுப் போகும் என்பதல்ல. ஏமாளியும் அங்ஙனம் எண்ணத் துணியமாட்டான், ஒவ்வோர் கட்சியும் இந்தப் பொதுப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தத்தமது சக்திக்கேற்ற வகையிலும் அளவிலும் பணியாற்றி, அந்தக் கூட்டுச் சக்தியின் பலனாக, நாட்டுக்கு வந்துற்ற கேட்டினை நீக்குவர் என்பதுதான் பொருள்.

தம்பி, ஏற்பட்டுள்ள உறவு, முன்னாளில் இருந்து வந்த கசப்புகளையும் மறந்திடச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

அப்படிச் செய்தவர்! இப்படிப் பேசியவர்! என்று இரு தரப்பிலும் பேசிடுவது. அவரவர்க்கு தத்தமது அமைப்பினிடம் உள்ள பாசத்தை முன்னிட்டுத்தானே! இனிக் கூட்டுமுயற்சி மூலம், பல்வேறு அமைப்புகளும், பகையின்றிப் பூசலற்று, ஏசலை விடுத்துக் கூடுமானபோதெல்லாம் ஒன்றுபட்டுச் செயலாற்றவும், கருத்து வேறுபாடு எழும் பிரச்சினைகளில் தனித்து நின்று, ஆனால் ஓர் அமைப்பை மற்றோர் அமைப்புத் தாழ்த்திக் கொள்ளாமலும், அவரவர் துறை நின்று பணியாற்றுதலே பண்புடைமை, அறிவுடைமை என்பது பற்றி, நானும் நண்பர் ம.பொ.சி.யும் பேசியபோது, ஏன் அத்தகைய அன்புச் சூழ்நிலையை அமைத்தல் கூடாது? நீண்டகாலப் பகையும் ஒன்றை ஒன்று அழித்திடத்தக்க முறையும் கொண்ட திராவிடர் கழகமும் கம்யூனிஸ்ட்டும், கடந்த பொதுத் தேர்தலிலே, காங்கிரசை முறியடிக்க ஒன்றுபட்டுப் பாடுபடவில்லையா? இன்று காமராஜர் நமது இனப் பாதுகாவலர் என்று காரணம் காட்டிப் பெரியார் அவருக்குப் பெருந்துணைவராக இல்லையா? அதேபோல, மற்றவர்கள் பண்பறிந்து நடந்துகொள்ளவா முடியாது - நிச்சயம் முடியும் என்றே எனக்கும் தோன்றிற்று. 27ம் தேதி ஆச்சாரியாரும் பெரியாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட ‘அன்பினைப்’ பார்த்தபோது இஃதன்றோ, தமிழம் காண வேண்டிய காட்சி என்று தோன்றிற்று.

‘உலகத்திலே உள்ள அவ்வளவு பேதங்களும் எங்கள் இருவருக்கிடையில் உண்டு; மறைத்துப் பயனில்லை; என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நானும் அவரும் ஒத்துப் போகிறோம்; ஒரே அபிப்பிராயம்தான்’ என்று பேசினார்.

பார்ப்பனச் சூழ்ச்சி என்று கூறிவிடலாம், அவர் மட்டுமே இப்படிப் பேசி இருந்தால், பெரியார் பேசியது என்ன தெரியுமா, தம்பி!

‘என் அன்புக்குரிய ஆச்சாரியார்.

நண்பர்;

தலைவரென்றே சொல்லலாம்.’

‘இந்த ஒரு விஷயத்தில் நானும் அவர் கருத்தைப் பூரணமாக ஆதரிக்கிறேன்’ என்றார்.

28ல் ஏற்பட்ட கூட்டு, ஆங்கிலமே பொதுமொழியாக இருத்தல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குப் பல கட்சியினர் கூறிக் கூறி, அதைப் பெறுவதற்கு வழி காண ஏற்பட்டது.

27ல் ஏற்பட்ட கூட்டு, நாம் பெற வேண்டிய எல்லைகளைப் பெறவும். சென்னைக்கு உரிய தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கவும், தட்சிணப்பிரதேசம் என்ற பேய்த் திட்டத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பட்டது.

28ன் உடனடி விளைவு, ஆங்கிலமே பொதுமொழியாதல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குத் தெரிவிப்பது.

அதில் நாங்கள் அனைவரும் இசைவு தந்திருக்கிறோம்.

27ம் தேதி செய்த முடிவு, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை சம்பந்தமாக மத்திய சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 20ல் நாடெங்கும் பொது வேலைநிறுத்தம் செய்வது என்பதாகும்.

தம்பி! சர்க்கார் எத்தகைய கடுமையான முறைகொண்டும் நம்மை ஒடுக்கத் தயாராக இருக்கிறது. இப்போதே அறிவகத்தைச் சுற்றி போலீஸ் வட்டமிட்ட வண்ணம் இருக்கிறது.

அந்தத் ‘தட்டும் குவளையும்’ துடியாய்த் துடிக்கின்றனவோ என்னவோ யார் கண்டார்கள் - சிறையில்! எது எப்படி நேரிடினும் பிப்ரவரி 20, வெற்றிகரமாக, அமைதியாக, பலாத்காரமற்ற வகையில் நடைபெற்றாக வேண்டும்.

தம்பி, தயார்! தயார்!

அண்ணன்
அண்ணாதுரை



நள்ளிரவில்... நடுரோட்டில்... பசியோடு...
தமிழக - கேரள எல்லை குறித்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் நாடக, சினிமா கலைஞரும், எழுத்தாளருமான ‘பாரதி’ மணி. அவர் அந்த சம்பவத்தை இங்கு நினைவு கூர்கிறார்:

"1954ல் நான் நாகர்கோயில் சேது லஷ்மிபா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தேன். எங்க ஊருக்கு மாசத்துகொருமுறை ம.பொ.சி., சின்ன அண்ணாமலை, ந.சஞ்சீவி, கே.விநாயகம் தமிழரசு கழகம் சார்பா பொதுக்கூட்டம் பேச வருவாங்க. நான் ரொம்ப ஆர்வமா அவர்கள் பேச்சையெல்லாம் போய்க் கேட்பேன். பள்ளித்தோழன் தாணுப்பிள்ளை என்பவன், ஸ்டூடண்ட் லீடர். போராட்டம், மறியல் எல்லாத்துக்கும் சட்டாம்பிள்ளை மாதிரி முன்னாடி நிப்பான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனைப் பாக்கப் போயிருந்தப்ப, ‘டேய்! இன்னிக்கு ஒரு மறியல் இருக்குடா, நீயும் வா’ன்னு என்னையும் கூட்டிட்டுப் போயிட்டான். முனிசிபல் கோர்ட் வாசல்ல நிறையப்பேர் நின்னுக்கிட்டு, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும் ‘பட்டம் தாணுப்பிள்ளை ஒழிக’ என்றும் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்தான் அப்போது ஆளுங்கட்சியான பி.எஸ்.பி. பார்ட்டி சார்பில் திருவிதாங்கூர், கொச்சிக்கு முதல்வர். தமிழர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். ‘கண்டால் அறியுன் நபர்’ அப்படிங்கிற எழுதப்படாத சட்டம் மூலம் தமிழர்களின்மீது போலீஸைக் கொண்டு அராஜகம் செய்து வந்தவர். எஃப்.ஐ.ஆர். இல்லாமலே யாரை வேண்டுமானாலும் ஒரு மாதம் உள்ளே வைக்கலாம் என்பது அப்போது வழக்கில் இருந்தது.

மொத்தம் அறுபது பேரோடு நானும் கலந்துகொண்டு கோஷம் போட ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு வேனில் வந்த போலீஸ், எங்களையெல்லாம் அதில் அள்ளிப் போட்டுக்கொண்டு கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய், ஒரு சிறிய அறையில் மொத்தமாக அடைத்துப் போட்டார்கள். மதியம் மூணு மணியிலேர்ந்து ராத்திரி மூணு மணி வரைக்கும் அந்த ரூமுக்குள்ளேயே தண்ணீர்கூட கொடுக்க மறுத்து, எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். ஏற்கெனவே அழுக்கடைந்திருந்த அந்த அறையில், மற்றவர்களின் வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ள, சுவாசிப்பதே மிக சிரமமாக இருந்தது. ஒருவழியாக இரவு மூன்று மணிக்குமேல் எங்களையெல்லாம் திறந்துவிட்டு, அதே வேனில் ஏற்றினார்கள். அந்த வேன் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. கடைசியில், நாகர்கோயிலிலிருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் நடுரோட்டில் எங்களை இறக்கிவிட்டு, அந்த வேன் போய்விட்டது. கும்மிருட்டில் மரத்தடியில் பசியோடு படுத்திருந்தோம். விடிந்ததும் தான் நாங்கள் அழகிய பாண்டியபுரத்தின் அருகில் இருக்கிறோம் என்றே தெரிந்தது. அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து, ஊர் வந்து சேர்ந்தோம்.

அப்படி அந்தச் சம்பவத்தில் கைதானவர்களில், நான் ஒருவன்தான் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவன். தெருவுக்குள் நுழைந்ததுமே ஒருவர் மாலையோடு ஓடி வந்தார். இன்னும் நான்கு பேர், என்னை தங்கள் தோளில் தூக்கிவைத்துக் கொண்டு வீடுவரைக்கும் கொண்டு போனார்கள்.’ ‘நேற்று வகுப்புத் தோழனைப் பார்க்கப்போன உன் மகன் இன்றைக்கு போராட்டத் தியாகியாக வீடு திரும்பி இருக்கிறான், வந்து பார்’ என்று என் அப்பா, அம்மாவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்."

- கல்யாண்குமார்

நன்றி - புதியதலைமுறை இணையம்
http://www.puthiyathalaimurai.com/this-week

சிறை வைக்கப்பட்டாரா தா. பாண்டியன்?



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது!
தா.பாண்டியனுக்கு அப்படி என்னதான் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்...

“இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசை அதில் தலையிட வலியுறுத்தி டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்தது. பெயரளவில் அது அனைத்துக் கட்சிக் குழு என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் அதில் இருந்தவர்கள் தி.மு.க.வுக்கு அனுசரணையானவர்கள்தான். ஆனால், அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் பிரதமர் அலு வலகத்திற்குள் நுழைந்தார், தா.பாண்டியன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் தீவிரமாக இருந்த தா.பாண் டியனின் திடீர் என்ட்ரியால், குழுவின் தலைவரான டி.ஆர்.பாலுவுக்குக் கடும் அதிர்ச்சி!

பின்னர் குழுவினர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தனர். தா.பாண்டியனும் தன் பங்குக்கு, ‘இலங்கையில் அரசியல் தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும். அங்கே சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும், இலங்கைக்கு இந்தியா எந்த ஆயுதத் தள வாடங்களையும் அனுப்பக் கூடாது’ என பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார். இவரது கோரிக்கைகளுக்கு பிரதமர் வாய்திறக்காத நிலையில், பக்கத்தில் இருந்த பிரணாப் முகர்ஜியோ, ‘ராணுவத் தளவாடங்கள் வழங்குவது இரு நாட்டு உறவுகள் சம்பந்தப்பட்டது. அதை நிறுத்த முடியாது’ என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

லட்சக்கணக்கான தமிழர்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில், மனசாட்சியே இல்லாமல் மத்திய அமைச்சர் ஒருவர் பேசியதையும், பிரதமர் வாயே திறக்காமல் மௌனமாக இருந்ததையும் அப்போதே தமிழகக் குழுவினர் அம்பலப்படுத்தி யிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் வெளியே வந்து, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க உறுதி தந்திருப்பதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்கள்.

தா.பாண்டியன் உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை நடத்திய விதம்தான் ரொம்பக் கொடுமை. ‘உள்ளே நடந்த விஷயங்களை நீங்கள் வெளியே சொல்லக் கூடாது. நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அது தமிழர்களுக்கு இன்னும் கெடுதலாகிவிடும்’ என டி.ஆர்.பாலு திரும்பத் திரும்பச் சொல்லி தா.பாண்டியனை பிரதமர் அ லுவலகத்தின் உள்ளேயே உட்கார வைத்துவிட்டார். ‘மவுனச் சாமியாராக’ இருந்த பிரதமரோ இன்னும் ஒருபடி மேலே போய் தா.பா.விடம், ‘உங்களுக்குப் புலிகளை நன்றாகத் தெரியுமே? நீங்கள் எப்படி இவர்களோடு வந்தீர்கள்?’ என்கிற ரீதியில் பேசி நேரத்தைக் கடத்தி, மீடியாக்கள் கிளம்பிப் போன பிறகே தா.பா.வை வெளியே விட்டிருக்கிறார். நாகரிகம் கருதி தா.பா.வும் இவற்றை முழுமையாக வெளியே சொல்லவில்லை’’ என்றார்கள் அவர்கள்.

இதுபற்றி தா.பாண்டியனிடமே கேட்டோம். “வெளியூரில் இருந்த நான் தமிழகக் குழுவினர் பிரதமரைச் சந்திப்பதைக் கேள்விப்பட்டு நானாகப் போய் அதில் பங்கேற்றது உண்மைதான். முன்னாள் எம்.பி. என்ற வகையில் பிரதமர் அலு வலக அதிகாரிகள் என்னைத் தடுக்கவில்லை. பிரதமர் மௌனமாக இருந்தது, பிரணாப் முகர்ஜி பேசியது, டி.ஆர்.பாலு நடந்துகொண்டவிதம் பற்றியெல்லாம் பொதுக்கூட்டங்களில் ஏற்கெனவே நான் பேசியிருக்கிறேன். அடுத்தபடியாக இந்த விவகாரம் சம்பந்தமாக ஒரு புத்தகமே எழுத இருக்கிறேன்’’ என்றார்.

ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ், தி.மு.க.வின் துரோகத்தை அந்தப் புத்தகம் வலுவாகவே அம்பலப்படுத்தும் என் கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

நன்றி- குமுதம் ரிப்போட்டர்

Monday, January 30, 2012

செயலை அடிப்படை கொள்கையாகவும் பேச்சை பிரச்சார யுக்தியாகவும் கொண்டவர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடையலாம்.

Sunday, January 29, 2012

அனுஷ்காவுடன்

29/01/2012 அன்று மும்பை, கோரேகாவ் ஒபேராய் டவரில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பில் மொழி மேற்பார்வையாளராக கலந்துகொண்ட பின் அனுஷ்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Thursday, January 26, 2012

முத்துக்குமார் நினைவஞ்சலியில்

2010 ஜனவரி மாதம் மும்பை தாராவி கணேசர் ஆலயத் திடலில் சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் சார்பில் முத்துக்குமாரின் நினைவஞ்சலி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசும்போது எடுத்த படம்.

Sunday, January 22, 2012

கேரளாவுக்கு பதிலடி கொடுக்க பாண்டியாறு புன்னம்புழா திட்டம்?

ஊட்டி: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் முரண்டு பிடிக்கும், கேரள அரசுக்கு "செக்' வைக்க, பாண்டியாறு புன்னம்புழா திட்டத்துக்கு, தமிழக அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


பாண்டியாறு புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் முழு வடிவம் பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மரப்பாலம் பகுதி வரை, இதற்கான பணிகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் ஓடும், 10க்கும் மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, பாண்டியாறு புன்னம்புழா நீரை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்த அணைகள் கட்ட திட்டமிடப்பட்டன. மரப்பாலம் பகுதியில், 42 மீ., உயரத்திலும், பாண்டியாறு பகுதியில், 62 மீ., உயரத்திலும், சோலாட்டி புழா பகுதியில், 65 மீ., உயரத்திலும், மூன்று அணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டப்படும் போது தேக்கி வைக்கப்படும் தண்ணீர், நீர்மின் திட்ட பணிகளுக்காக, மாயாருக்கு திருப்பி விடவும் திட்டமிடப்பட்டது. மின் உற்பத்தி பணிகளை, மசினகுடி அருகேயுள்ள சீகூர் மேற்கொள்ளவும், மின் உற்பத்திக்குப் பின் தண்ணீரை, கீழ் பவானி திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும், 14 டி.எம்.சி., தண்ணீரை, தமிழக, கேரள மாநிலங்கள் சரி சமமாக பங்கிடுவது என்றும், இதன் மூலம், 260 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும், அப்போது கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு, 1,600 கோடி ரூபாய் செலவாகும் எனவும், அப்போது மதிப்பிடப்பட்டது.


கேரள அரசின் எதிர்ப்பும், அச்சமும்: கேரள அரசு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு காரணம், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும் என்றும், அச்சம் தெரிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பந்தலூர், இளம்பிராலி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள், கேரள எல்லையில் இணைந்து சாலியார், கரியம்புழா, பேப்பூர்புழா என, மூன்று நதிகளாக பிரிந்து, அரபிக் கடலில் கலந்து வீணாகி வருகிறது. அரபிக் கடலில் வீணாகும் தண்ணீரைத் தேக்கி வைத்து, நீர்மின் திட்டத்திற்கும், நீர்ப்பாசன தேவைகளுக்கும் பயன்படுத்தவே, தமிழகம் தரப்பில் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கிடைக்கும் என்பதே முக்கிய காரணமாக இருந்தது.


கிடப்பில் போடப்பட்டது ஏன்? பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஆய்வாளர்களை கொண்டு முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வாளர்கள் அரசுக்கு சமர்ப்பித்த தகவல்களின் படி, "நீலகிரியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் 5000 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் முழ்கும். இதில், 2500 ஏக்கர் வனப்பகுதியாகவும் இருக்கும். ஆதிவாசிகளின் குடியிருப்புகளும் பாதிக்கப்படும். தவிர, முதுமலை காப்பகத்தில் 27 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் போது வனவிலங்குகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளது' என ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டதை தொடர்ந்து, பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் அப்போது கிடப்பில் போடப்பட்டது.


முல்லைப் பெரியாறு பிரச்னை: அரசியல் லாபத்துக்காக முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசியல் கட்சிகள் பெரிதாக்கி வரும் நிலையில், பாண்டியாறு- புன்னம் புழா திட்டம் உள்ளிட்ட பிற முக்கிய அணை திட்டங்களையும் மாநில அரசு நடைமுறை படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும், கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளை போல, அணை விஷயத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணைக்கும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எனினும், தற்போது எழுந்துள்ள அணைப் பிரச்னையால், மக்கள் மத்தியில் பாண்டியாறு அணை பற்றி பேசப்படுகிறது. அதேவேளையில், அரசின் சார்பில் இது குறித்து ஆய்வுகள் நடத்த எவ்வித தகவலும் எங்களுக்கு வரவில்லை' என்றனர்.

நன்றி - தினமலர்
http://www.dinamalar.com/News_detail.asp?Id=390938

Saturday, January 21, 2012

இந்திய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம்

2011ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி அந்தேரி டிஎன் நகரில், இந்திய ஜனநாயக கட்சி, பாரி மன்றம், பார்கவ முன்னேற்ற குல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Friday, January 20, 2012

பிரஸ் மீட்-க்குப் பிறகு

2011ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மும்பை பிரஸ் கிளபில் மே17 அமைப்பின் சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள மர்மங்கள் குறித்து பிரஸ் மீட் நடத்தப்பட்டது.

பத்திரிகையாளர்களுடன் உரையாடிய திருமுருகன் காந்தி, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன் ஆகியோருடன்.

(அப்போதைக்கு மேற்படி 3 பேரும் தெலுங்கர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள்தான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டார்கள். )

ஆறுமுக கோனாராக தீர்ப்பு நாடகத்தில்

2011 ஏப்ரல் 19ம் தேதி மும்பை, செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில், மும்பை ஆர்ட் லவர்ஸ் நாடக குழுவின் சார்பாக தீர்ப்பு நாடகத்தில் ஆறுமுக கோனாராக நடித்த காட்சி. இந்த நாடகம் தமிழகத்தில் மேஜர் சுந்தர் ராஜனால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நாடகம் ஆகும்.

மும்பையில் குடிசை மக்கள் வாழ்வுரிமை போராட்டம்

2011ம் ஆண்டு மே 2ம் தேதி மும்பை, வடாலா, எம்எம்ஆர்டிஏ டிரான்சிட் கேம்ப் மக்களின் குடியுரிமை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக டிவி9 35 வது கிளையின் தலைமையில் மஹாராஷ்டிரா சிட்டிசன் ஃபோரம் சயான் கோலிவாடா மற்றும் இதர பொது நல அமைப்புகளை இணைத்து மும்பை ஆஜாத் மைதானத்தில் போராட்டம் நடத்தினோம். நான் இந்த போராட்டத்திற்காக பெரு முயற்சி செய்தேன்.

Tuesday, January 17, 2012

தமிழா! நீ பேசுவது தமிழா? -----காசி ஆன‌ந்த‌ன்

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன்

Sunday, January 15, 2012

சீமான் முத்துராமலிங்கத் தேவரை புகழ்ந்து பேசுவதில் என்ன தவறு?


தலைப்பு தமிழ் தேசியவாதிகள் எதிர்நோக்கும் சாதீய சவால்கள்

அல்லது

தமிழ் தேசியவாதிகள் சாதி அரசியல் நடத்த வேண்டும்



இந்த கட்டுரைக்கு வைக்க வேண்டிய தலைப்பு இதுவே. ஆனால் ஒரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, தேவர் பற்றி நிலவும் தவறான கருத்துக்களை தெளிவு படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை இட்டுள்ளேன். அனைத்து சாதியினரும், சாதி பற்றிய ஒரு தெளிவான நிலையை அடைய வேண்டும், மோதல் போக்கை பின்பற்றுவதால் யாருக்கும் லாபம் இல்லை என்பதை வலியுறுத்தி இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்.



என் ஊர்

ஒரு சுய விளக்கத்துடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன். எனது ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமம். இது இந்த வட்டத்தில் சாதி மோதல்களுக்கு பெயர் பெற்ற ஊர். இந்த ஊரின் மக்கள் தொகையில் தோராயமாக 30% பறையர், 30 % முஸ்லீம்கள் மீதியுள்ள பிள்ளைமார், நாடார், செட்டியார், ஆசாரி, சேர்வை 40 %. இந்த 40%-ல் இடம் பெறுபவர்கள்தான் பிரான்மலைக் கள்ளர். அதாவது பறையர்கள் 3000 வீடு என்றால் கள்ளர்கள் 500 வீடு என்று ஒப்பிடலாம் (காரணத்தை பின்னால் காணலாம்).


கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்த அழகிய கிராமமான எங்கள் ஊருக்கு வடக்கே மஞ்சளாறு அணை உள்ளது. எனவே ஊரின் வடக்கு மேற்கு பகுதியில் கொடைக்கானல் மலைகளும், வடக்கு - கிழக்குப் பகுதியில் விவசாயம், மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. தென்னந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள், கரும்பு வயல்கள், நெல் வயல்களுக்கு பின்னணில் குறுக்கு மலை (வத்தலக்குண்டுவிலிருந்து செல்லும் மலை) அமைந்துள்ள அழகும் வட மேற்கில் அமைந்துள்ள பாலமலையும், அதிலிருந்து இறங்கும் வட்டாறு, இருட்டாறு, மூலையாறு, தலையாறு அருவியும் கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இந்த ஆறுகள் கீழே மஞ்சளாறு அணையில் இணைகின்றன. அணையிலிருந்து சில கிமீ தொலைவில் நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில்.


ஊரில் தெற்குபுறத்தில் முக்கியச் சாலையை ஒட்டி அமைந்துள்ளது பறையர் வசிக்கும் பகுதி. வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது கள்ளர் வசிக்கும் பகுதி. விவசாய நிலம், மேய்ச்சல் நிலம் வடக்குப் பகுதியில் இருப்பதால் பறையர்கள் தினமும் இந்த பகுதியைத்தான் கடந்து செல்லவேண்டும். அதேவேளையில் முக்கிய சாலை, ஊரின் எல்லையில் உள்ள திரையரங்கு ஆகியவை பறையர் பகுதியை ஒட்டி உள்ளது. எனவே இரு தரப்பினரும் தங்களது தேவைகளுக்காக மற்றவர்களின் பகுதிக்கு சென்றே ஆகவேண்டும். இதுதான் பிரச்சனையே. ஏதாவது ஒரு உப்புச் சப்பில்லாத காரணத்திற்காகக் கூட இரு தரப்பினரும் மோதிக் கொள்வார்கள். இதனால் பெரியகுளம் வட்டத்தில் சாதிச் சண்டைக்கு பெயர் பெற்ற ஊராக தேவதானப்பட்டி இருந்து வருகிறது. தற்போது அந்த அளவு மோதல்கள் இல்லை. தனிப்பட்ட நபர்களின் சாதிப் பிரச்சனை ஆக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்திற்கு இருதரப்பினரும் வந்துள்ளனர். இருந்தாலும் இருதரப்பினருக்கும் இடையே இனம் புரியாத பகை இருந்து வருகிறது.



நான் வளர்ந்த சூழல்

கள்ளர் சாதியில் பிறந்த நான் சீர்மரபினரான (குற்றப் பரம்பரை) கள்ளர்களுக்கு என்றே வெள்ளையர்களால் கட்டப்பட்ட கள்ளர் தொடக்கப்பள்ளியில் கல்வி கற்றேன். அதன் பின் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்து, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தேன். பள்ளி, கல்லூரியில் தேவர் இனத்தை சேர்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் படித்த எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது இயல்பாகவே பெருமதிப்பு ஏற்பட்டது. பின்னாளில் அவரது வாழ்க்கை வரலாறை படித்தபோது பெரும் ஆச்சரியமும் பரவசமும் அடைந்தேன். அவர் மீது குத்தப்பட்ட சாதி முத்திரை அவரை தேர்தலில் வெல்ல முடியாத காங்கிரஸ் கட்சி செய்த சதி என்பதை உணர்ந்துகொண்டேன்.


எனக்குள் சிறுவயதிலேயே தீண்டாமை எதிர்ப்பு, சாதி - மத எதிர்ப்பு என்ற கருத்துக்கள் என்னுள் ஊறிவிட்டன. இது போன்ற சாதி மோதல்கள் வேண்டாதவை என்று சக நண்பர்களுடன் வாதம் செய்திருக்கிறேன். எனக்கு எல்லா சாதிகளும், தலைவர்களும் ஒன்றே. யாரையும் குறைத்தோ உயர்த்தியோ கருதுவதில்லை. தற்போது பெரும்பாலும் தலித் பத்திரிகை, இணையங்களில் தேவரைப் பற்றி கடுமையாக விமரிசிக்கப்படுகிறது. அவர் ஒரு கொலைகாரன் என்றும் சாதி வெறியன் என்றும் அவர் தேவரினத்தை தவறான வழியில் அழைத்துச் சென்றவர் என்றும் வசை பாடப்படுகிறது. இது போன்ற செயல்கள் தேவர் சாதியினரிடையே வெறுப்புணர்வை வளர்க்குமே தவிர வேறு பலனைத் தராது.


இந்த நிலையில் அன்மையில் சீமான் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டில் அவர் தேவரை புகழ்ந்து பேசுவதாக கூறப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், அவர் தேவர் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கூட தேவரைப் பற்றி புகழ்ந்து பேசவில்லை என்று அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சீமான் தேவரை பாராட்டிப் பேசியதில் என்ன தவறு உள்ளது என்ற கேள்வியை நான் கேட்கிறேன்.

தேவர் தென்னாட்டில் காங்கிரஸ் கட்சி வளர பாடுபட்டு “காங்கிரஸை காத்தான்” என்று போற்றப்பட்டவர் ஆவார். மதுரை மில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பெறப் போராடியவர் ஆவார். உழுதவர்களே நிலத்தைப் பெற உதவியவர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர். இந்திய அடிமை விலங்கை உடைக்க ஆயுதப் போராட்டமே சிறந்தது என்று கருதி இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பி வைத்தவர். இந்தியா ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளை தவிர்த்து சீனா-ஜப்பான், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். இலங்கை தமிழர்கள் பிரச்சனையை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தீர்த்து வைக்காவிட்டால் பெருந்துயரில் முடியும் என்று சொன்னார். அவர் சொன்ன அத்தனை அரசியல் கருத்துக்களும் இன்றும் பொருந்துவதாக உள்ள. ஆருடங்கள் இன்றும் பலித்து வருகின்றன.

அத்தகைய மாபெரும் தலைவரை சீமான் போற்றுவதில் தவறில்லை. அதோடு சீமானோ மற்ற தமிழ்தேசிய தலைவர்களோ தங்களது இலக்கை அடைய சாதி அரசியலை கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.


தமிழ்தேசியமும் சாதி அணுகலும்


தற்போது ஈழ - தமிழக அரசியல் நிலையை கண்டு வெதும்பியுள்ள அனைவரும் விரும்பக்கூடிய ஒரு தலைவராக எழும்பி இருப்பவர்தான் சீமான். தமிழ்தேசியம் பேசுபவர்களில் அதிக கூட்டம் கூடுவது இவருக்கு மட்டுமே. இவருக்கு கூடும் கூட்டம் பல ஆண்டுகளாக அரசியல் நடத்தி வருபவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சாதி வேறுபாட்டை கடந்து ஒன்றுபடுங்கள் என்று அவர் அழைக்கும் விதம் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் விரும்பத் தக்கதாகவே உள்ளது. ஏனெனில் சாதி, தமிழின வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என்று கற்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதிக் கட்சி வளர்ப்போரும் பாரம்பரிய முறையில் இந்திய - திராவிட கட்சி நடத்துவோரும் அவர் மீது காட்டமாகவே உள்ளனர். அவரைப் பற்றி பல பொய் பரப்புரைகள் செய்யப்படுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது.


பொதுவாகவே தமிழர்களுக்கு ஒருவர் பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால், முதலில் அவர் என்ன சாதி என்று கண்டு பிடிக்காவிட்டால் தூக்கம் வராது. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் உண்மை, கிராமங்கள் வரை பரவி விடுகிறது. உதாரணமாக தேவர் பகுதிகளில் நடிகர்கள் கார்த்திக், எஸ்ஜே சூர்யா, தலித் பகுதிகளில் பிரசாந்த், விக்ரம், கோவை பகுதியில் சத்யராஜ் போன்றோருக்கு ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் இவர்களால் இன்னமும் சீமான் என்ன சாதி என்ற முடிவுக்கு வர முடியவில்லை. அவரும் தான் இன்ன சாதி என்று இன்னமும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தலித் இளைஞர்களிடையே இவர் தேவர் என்று பரப்புரை செய்யப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல அவர் சில திரைப்படங்களில் தேவரைப் பாராட்டுவது போல நடித்துள்ளார். சிலர் அவர் நாடார் என்று கூறுகின்றனர். (இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.) இது நமக்குத் தேவையில்லாத விஷயமாகவும் ஆனால் அவர்களுக்கு முக்கியமான விஷயமாகவும் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், அவர் தேவராக இருப்பது உண்மை என்றால் தலித்களால் அவர் பின்னால் திரள முடியாது. அவர் தேவராக இல்லாமல் வேறு சாதியை சேர்ந்தவராக இருந்தால் அந்த சாதியை விரும்பாதவர்களால் அவர் பின்னால் திரள முடியாது. அப்படி இருக்கும்போது தமிழ் தேசியம் எவ்வாறு சாத்தியமாகும்? தமிழ் தேசியம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது. இதனை எந்தவொரு சாதியின் ஆதரவு இல்லாமலோ அல்லது ஒருசில சாதிகளின் ஆதரவை மட்டுமே வைத்துக் கொண்டோ அமைக்க முடியாது என்பதே உண்மை.


அப்படியானால் தமிழ் தேசியம் பேசும் சீமானோ அல்லது வேறு எந்த தலைவருமோ அனைத்துச் சாதியினரையும் தன்பக்கம் இழுக்க வேண்டும். அதற்காக அவர் எல்லா சாதி தலைவர்களையும் உயர்த்திப் பேசுவதில் தவறில்லை, அந்த சாதிகள் தொடர்பான விழாக்களில் கலந்துகொள்வதும் தவறில்லை. ஏனெனில், அம்பேத்கரை குறைக் கூறிக் கொண்டு எப்படி ஒரு தலித்தை தன் பக்கம் இழுக்க முடியாதோ அதேபோல தேவரை குறை கூறிக் கொண்டு முக்குலத்தோரை அவர் தன் பக்கம் இழுக்க முடியாது. ஒரு சில தலைவர்களை மட்டும் பாராட்டிப் பேசி விட்டு மற்ற சாதியினரை திருப்திபடுத்த முடியாது. அதேவேளையில் தமிழ் தேசியத்திற்கு சாதி வேறுபாடுகளை மறப்பவர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தால் போதாது. சாதியில் நம்பிக்கை வைத்திருப்போரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


சாதி என்ற சமூக கட்டமைப்பு


தமிழகத்தில் இன்று வரை சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயம் என்பது உதட்டளவில் உள்ளது. எல்லாருக்குமே உள்ளுக்குள் தான் இன்ன சாதி என்ற உணர்வு ஆழமாக பதிந்துள்ளது. இது உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரிடமும் நிறைவாக சாதிப் பற்று உள்ளது. தொழில் அடிப்படையில் தோன்றிய சாதி, மனு தர்மத்தால் பிரித்தாளப்பட்டு, ஆங்கிலேய பொருளாதார கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டு இன்று எப்போதும் வெடிக்கும் எரிமலையாக உள்ளது. சாதியின் தோற்றம் பற்றி அறிய விரும்புவோர் விக்கிபீடியாவில் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF) படித்து தெரிந்துகொள்ளலாம்.


சாதி பல்வேறு விரும்பாத விளைவுகளை கொண்டிருந்தாலும் அது சமுதாயத்தின் வலுவான அடிப்படை கட்டமைப்பாக உள்ளது என்பதே உண்மை. ஒருவர் தனது வாழ்வின் முக்கிய கட்டங்களான திருமணம், குழந்தை பிறப்பு, சாவு என பல நிகழ்வுகளுக்கும் சாதியையே சார்ந்துள்ளார். சாதி நல்லதோர் சமுதாய அமைப்பாகவும் உள்ளது. இதனால் பெரும்பாலானோரால் சாதியை ஒதுக்கி வைக்க முடிவதில்லை. எனவே அதனை ஒழிப்போம் என்று சொல்வதைவிட அதில் உள்ள குறைபாடுகளை, கருத்து வேறுபாடுகளை களைவோம் என்று சொன்னால் அல்லது களைந்தாலே போதும். அதனை ஒழிப்போம் என்று சொன்னாலும் அதனை ஒவ்வொரு சாதியினருமே தங்களுக்கு எதிரானதாக எடுத்துக் கொள்வர். எனவே தற்போதைய நிலையில் சாதி பாகுபாடை மறந்து வாருங்கள் என்று மட்டுமே சீமானால் கூற முடியும்.


சாதி வேறு பாட்டை மறந்து வாருங்கள் என்று குரல் கொடுத்தாலும் இவர் சாதி அமைப்புகளுடன் இணைந்தே செயல்படுகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக தலித் அமைப்புகள் இவர் தங்களை கூட்டம் கூட்ட மட்டும் பயன்படுத்திக் கொள்வதாகவும் தங்களது (பரமக்குடி) பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றன. அதாவது முதலில் எங்கள் பிரச்சனைகளை தீருங்கள், அதன் பின்னர் ஈழ விடுதலை பற்றி பேசுவோம் என்ற கருத்து அவர்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அப்படியானால் இவர் எந்த நிலையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்? சாதியை ஒழிப்போம் வாருங்கள் என்று குரல் கொடுக்க வேண்டுமா? அல்லது எல்லாச் சாதிகளும் வாருங்கள் என்று அழைக்க வேண்டுமா? சாதியை ஒழிப்போம் என்றால் யாரும் அவர் பின்னால் போக மாட்டார்கள்.


தமிழ் தேசியவாதிகள் செய்ய வேண்டியவை


தீண்டாமை பற்றி பேசுவோர் ஒரு பிரச்சனை ஏற்படும்போது மட்டுமே அது பற்றி கூக்குரலிடுகின்றனர். அதன் பின் அதை சௌகரியமாக மறந்து விடுகின்றனர். ஒரு நிகழ்வுக்கு முன் பின் நிகழ்வுகள் காரணமாக அமைகின்றன. அவற்றை களைந்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும். உதாரணமாக குரு பூஜைகளுக்கு செல்லும் இரு தரப்பினருமே மாற்றுச் சாதிகளுக்கு வெறுப்பேற்றும் வகையில் நடந்துகொள்கின்றனர். அதனை தடுக்க எந்தவொரு அமைப்புமே ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.


உதாரணமாக இருதரப்பிலும் உள்ள படித்தவர்களை கொண்ட நல்லிணக்க குழுக்களை அமைத்து குரு பூஜைகளுக்கு செல்லும் வழிகளை கண்காணிக்கலாம். அப்போது சில்லறைகள் செய்யும் சேஷ்டைகளை சுட்டிக் காட்டி தடுக்கலாம். தீண்டாமை உள்ள ஊர்களின் பட்டியலை தயார் செய்து அங்குள்ள பெரியவர்களை அழைத்துப் பேசலாம். அதைவிடுத்து ஆதிக்க சாதி, சாதி வெறியர் என்று சொல்லிக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயன்றால் அதனை என்றைக்கும் ஒழிக்க முடியாது. ஆதிக்க சாதியினருடன் இணைந்து, அவர்களின் ஆதரவோடு செயல்பட்டால்த்தான் இந்த பிரச்சனையை ஒழிக்க முடியும். அதற்காக ஆதிக்க சாதியினருக்கு அடிபணிந்து செல்லவோ, அடங்கி இருக்கவோ தேவையில்லை. பிரச்சனைகளை நியாயமாக பேசினால் யாரும் ஏற்றுக் கொள்வார்கள். இதையெல்லாம் செய்யும்போதுதான் அனைத்து சாதியினரின் ஆதரவையும் பெற முடியும்.


இது பிராமணர் எதிர்ப்புக்கும் பொருந்தும். தற்போதைய நிலையில் பிராமணர் - இந்து எதிர்ப்பும் பொருத்தமில்லாதது. ஒரு சிலர் பிராமணர்கள் தமிழருக்கு எதிராக நடந்து கொண்டாலும் பெரும்பாலான பிராமணர்கள் - இந்துக்கள் அவ்வாறு இருப்பதில்லை. தலித்களின் தலைவியாக கருதப்படும் மாயாவதி உத்தர பிரதேசத்தில் பிராமணருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த தமிழ் சமுதாயம் உருவாகும்.


சாதி அரசியல் செய்ய வேண்டும்


இதற்காக தமிழ்தேசியவாதிகள் எதிரிகளை வீழ்த்தும் அரசியல் ஆயுதமாக சாதி அரசியலை கையிலெடுக்க வேண்டும். ஒரு அரசியல்வாதி தன் எதிரியை வீழ்த்த அத்தனை தந்திரங்களையும் கையாள வேண்டும். அதுவே அவர் தன் மக்களுக்குச் செய்யும் தொண்டு. அந்த வகையில் திராவிடக் கட்சிகள் இன்று வரை தங்களது சுயநலத்திற்காக சாதி அரசியலை உருவாக்கி அதனை அழிக்க முடியாத அளவிற்கு வளர்த்து விட்டுள்ளன. இவர்கள் சாதி ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டு அதனை வளர்த்து அதில் குளிர் காய்ந்து வருகின்றனர். அறிஞர்களும் பெயரளவு மேடையில் பேசுகின்றனர். பின்னர் வீட்டில் மறந்து விடுகின்றனர் அல்லது கண்டுகொள்வதில்லை. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு அந்த கருத்தை வீட்டிலும் பேசினால் தங்களது சாதியினர் தங்களை ஒதுக்கி விடுவர் என்ற அச்சமே.


இவர்கள் சாதி அரசியலை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தினார்கள் என்றால், தமிழினத்தின் எதிர்கால நலன் கருதி தமிழ்தேசியவாதிகள் தங்களது நல்ல நோக்கத்திற்காக, இந்திய - திராவிட ஆதிக்க சக்திகளை வீழ்த்த, சாதி அரசியலை கையிலெடுக்க வேண்டும். தங்கள் இலக்கை அடைந்த பின் சாதிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மனதளவில் அனைவரும் சமம் என்ற நிலைக்கு வரவேண்டும். அதன் பின்புதான் சாதி சமுதாய வேறுபாடற்ற நிலையை ஏற்படுத்த முடியும். மனநிலை தொடர்பான இந்த பிரச்சனையை வெறும் சட்டத்தை வைத்துக் கொண்டு மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. சாதி உணர்வு மறைந்த பின்னரும் குழு உணர்வுகள் ஏற்படலாம். ஆனால் அந்த குழுக்களால் சாதியால் ஏற்படுவது போல பெரிய அளவில் வன்மம், விரோதம் ஏற்படாது.


சாதிப் பிரச்சனை கடந்த நானூறு ஆண்டுகளில் தமிழ் சமுதாயத்தில் ஆழமாக பதிந்து, முற்றி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பிரச்சனையை யாரும் தனிமனிதராகவோ, அல்லது ஒரு தனி அமைப்பாகவோ நின்று ஒருநாள் இரவில் தீர்த்துவிட முடியாது. இதற்கு ஒரு நீண்ட காலத் திட்டத்தை உருவாக்கி அனைவரின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக முதலில் அனைவரும் சமம் என்ற கருத்தை உருவாக்க வேண்டும். தீண்டாமை உள்ள ஊர்களை கண்டறிந்து அங்குள்ள இரு தரப்பினரையும் அழைத்துப்பேச வேண்டும். அதையும் ஒரே பேச்சு வார்த்தையில் முடித்து விடமுடியாது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பிரச்சனையை தீர்க்க ஆதிக்க சாதிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகிய இரு தரப்புமே இணைந்தே செயல்பட வேண்டும். பேச்சு வார்த்தைகளின் மூலம் இந்த பிரச்சனையை போக்கலாம் என்பதற்கு உதாரணம்தான் அண்மையில் முடிக்கப்பட்ட உத்தரப்புரம் பிரச்சனை.


தலைவர்களை பழிப்பதால் பயனில்லை

இதற்கு மாறாக ஒரு மாற்றுச் சாதியை, அதன் தலைவரை திட்டுவது அல்லது இகழ்வதால் அந்த சாதி குறைந்துவிடவோ, அதன் தலைவர் குறைந்து விடவோ போவதில்லை. இவ்வாறு பேசுவதன் மூலம் எந்த சாதியும், தலைவரும் உயர்ந்து விடவும் முடியாது. இந்த நிலையில் ஏதாவது ஒரு சாதியை, அதன் தலைவரை புகழ்ந்து பேசாமல் விட்டுவிட்டாலும் அந்த சாதியை, அதன் தலைவரை புறக்கணிப்பதாகவே அந்த சாதியினரால் கருதப்படும். எனவே சீமான் போன்றோர் அனைத்து சாதிகளையும் தங்களுடன் அரவணைத்துச் செல்லவேண்டும். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் திராவிட அரசியல்வாதிகள் எவ்வாறு சாதி அரசியல் செய்கிறார்களோ அதுபோல இவர்களும் சாதி அரசியல் செய்ய வேண்டும். அவர்கள் சுயநலத்திற்காக சாதி அரசியல் செய்தால் இவர் தமிழினத்தின் பொது நலனிற்காக சாதி அரசியல் செய்ய வேண்டும். இன்று வலிமையான அரசியல் சக்தியாக உள்ள தேவர் சாதியினரை அவர் ஒதுக்க முடியாது, ஒதுக்கவும் கூடாது.


ஹிட்லருடன் சண்டையிடும்போது அவனை வெல்ல சர்ச்சிலுக்கு அவன் செய்யும் அனைத்து தந்திரங்களையும் செய்ய வேண்டியதாயிற்று. ஹிட்லர் அவற்றை தன்னுடைய தீய நோக்களுக்காக செய்தான். ஆனால் சர்ச்சில் அவற்றை நல்ல நோக்கங்களுக்காக செய்தார். இதைப் போலவே சீமானும் சாதி அரசியலை பக்குவமாக பொதுநலன் கருதி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் சாதி வெறி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை கடந்து தமிழ் தேசியத்தை நோக்கிச் செல்ல முடியும். இல்லையென்றால் அவர்கள் சீமான் மீது இல்லாத குற்றங்களை சுமத்தி வீழ்த்த வலை பின்னுவர்.


அனைத்து சாதியினரிடமும் தங்களது கடந்த காலம், கடந்த காலத் தலைவர்கள், நிகழ்காலம், எதிர்காலத்தில் போய்ச் சேரவேண்டிய இலக்கு போன்ற விஷயங்களில் தெளிவான நிலை ஏற்பட வேண்டும். தலைவர்களை பொதுவான தலைவர்களாக கருத வேண்டும். அதுவே தமிழ் தேசியத்திற்கு சிறந்த சூழலாக அமையும்.


எனது கேள்வி என்னவென்றால்

1. தந்தை பெரியாரை, கர்ம வீரர் காமராஜரை, தாத்தா ரெட்டைமலை சீனிவாசனை புகழ்ந்து பேசும்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை புகழ்ந்து பேசுவதில் என்ன தவறு?

2. காங்கிரஸ் கட்சியிலிருந்த தேவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி சுபாஷ் சந்திர போஸின் கட்சியில் இணைந்ததால் காங்கிரஸ் மறைமுகமாக அவரை குறிவைத்தது. அதன் காரணமாகவே சாதிக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர் மீது பொய் வழக்கும் போடப்பட்டது. அதனால்தான் தலித்களுக்கும் தேவர்களுக்கும் (பள்ளர்கள் - மறவர்கள்) இடையே மோதல் போக்கு உருவானது.

3. தேவர் செய்த குற்றம் என்ன? எதற்காக அவரை ஒதுக்க வேண்டும்?

4. இம்மானுவேல் சேகரனின் கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டாலும் அவர் குற்றமற்றவர் என்றே நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.

5. அவர் காமராஜரை கடுமையாக விமரிசித்ததற்கும் காரணம் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பதற்காகவே. அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக அல்ல.

6. உண்மையில் அவர் ஒரு குற்றவாளியாக, கொலைகாரராக இருந்தால் ஏன் திராவிடக் கட்சிகள் அவரை பாராட்ட வேண்டும்?

7. அவர்கள் வாக்கு வங்கிக்காகத்தான் அவரை பாராட்டிப் பேசுகின்றனர் என்றால் மாற்று சாதி வாக்கு வங்கிகளைச் சேர்ந்த சாதித் தலைவர்களை ஏன் பாராட்டிப் பேசுவதில்லை?

8. ஒரு பெரும்பான்மையான சாதியின் தலைவரை ஏன் ஒரு அரசியல் தலைவர் ஒதுக்க வேண்டும்?

9. அவரை குறைத்துப் பேசும் மாற்று சாதியினர் எவ்வாறு தேவர் இனம் தங்கள் பின்னால் வரவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?


இந்த கேள்விகளுக்கு ஆரோக்கியமான, கண்ணியமான விவாதங்களை, கருத்துக்களை வரவேற்கிறேன்.


கீழே மதுரையில் தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வைகோ பேசிய காணொளிகளின் சுட்டிகளை இணைத்துள்ளேன். நேரமிருந்தால் அவற்றையும் பாருங்கள்.



1. http://www.youtube.com/watch?v=Si---T7v6ww&feature=related


2. http://www.youtube.com/watch?v=fG6vuKEKdw4


3. http://www.youtube.com/watch?v=n-ai_ghWv5M


4. http://www.youtube.com/watch?v=aCEWsEbXmDw&feature=related


5. http://www.youtube.com/watch?v=lA8Y9TUVHqE&feature=related


6. http://www.youtube.com/watch?v=sYj8bQL0vG4&feature=related


7. http://www.youtube.com/watch?v=PoJZ7te_-XY&feature=related

நன்றி - அதீதம்
http://www.atheetham.com/story/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81


Saturday, January 14, 2012

வெல்லட்டும் வீர விளையாட்டு...: உரத்த சிந்தனை- எல்.முருகராஜ்

இயற்கை இன்னல்கள் யாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும், உலகிற்கு பறைசாற்றும் திருநாளே பொங்கல் தினம். பொங்கல் நாளையொட்டி, தென் மாவட்டங்களில் நடத்தப்படுவதே ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு, நம் மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட விஷயம்; ஊரோடு ஒன்றிவிட்ட கலாசாரம். காலம் காலமாக நண்பர்கள், உறவினர்கள் பார்த்து மகிழ நடத்தப்பட்டு வந்த இந்த வீர விளையாட்டு, வெளிநாட்டுக்காரர்களை சந்தோஷப்படுத்த, கண்காட்சி போல நடத்தப்பட்டதை அடுத்து, இப்போது பல சங்கடங்களை அனுபவித்து வருகிறது. காளையின் கொம்புகளைக் கண்டு அஞ்சுபவனை, மறுபிறப்பிலும் மகளிர் விரும்பமாட்டார்கள் என்ற அர்த்தத்துடன், "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் துல்லிச்சுட்டு வேண்டும்' என்று, கலித்தொகை காலந்தொட்டு, பெருமையுடன் பேசப்பட்ட, பாடப்பட்ட ஜல்லிக்கட்டை, சில ஆண்டுகள் நடத்தவே முடியாமல் போனது.


கலித்தொகையில் ஆரம்பித்து, "எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்' என, "முல்லைக்கலி'யில் காவியமாகி, ராஜம் அய்யரின், "கமலாம்பாள்' சரித்திர நாவலாகி, கு.ப.ராஜகோபாலனின், "வீரம்மாளின் காளை'யில் அற்புத படைப்பாகி, சி.சு.செல்லப்பாவின், "வாடிவாசலில்' 1959ம் ஆண்டிலேயே அற்புதமாக பதிவான வீரமிது. அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல், புதுக்கோட்டை, கொடிக்குளம், வேந்தன்பட்டி, அவனியாபுரம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், ஏதோ ஒன்றை பறிகொடுத்த சோகத்தில், ஜல்லிகட்டு வீரர்கள் உள்ளனர். கடுமையான முயற்சிக்குப் பிறகு, அரசு வழிகாட்டுதலின்படி, கடந்த வருடம் வரை ஜல்லிக்கட்டு நடந்தது. காட்டாற்று வெள்ளம் போல, ஒரு வரைமுறை இல்லாமல் நடந்த ஜல்லிக்கட்டிற்கும், இந்த வழிகாட்டுதல் தேவைப்பட்டது. "நாலு பேருக்கு மேல் சூழ்ந்து மாடு பிடிக்கக் கூடாது; மாடுகளின் கொம்புகளிலோ, உடம்பிலோ எண்ணெய் தேய்க்கக் கூடாது; ஊக்க மருந்து கொடுக்கக் கூடாது; விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தந்து, வாரியத்தின் பிரதிநிதிகளை பார்வையாளர் பகுதியில் உட்கார வைக்க வேண்டும். "கால்நடை மருத்துவர் சான்றிதழ் தந்த மாடுகளே களத்தில் இறக்கப்பட வேண்டும்; பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாக, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாடுகள் மற்றும் வீரர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்' என்பது போன்ற, ஏற்கக்கூடிய விஷயங்களைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நன்றாகத் தான் போய்க்கொண்டு இருந்தது.


இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டிற்கு, வீரர்களும், மாடுகளும் தயாரான நிலையில், மத்திய அரசின் வனத் துறை, திடீரென ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்துள்ளது. சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் பட்டியலில், காளைகளையும் சேர்த்துள்ளார் மத்திய அமைச்சர். அமைச்சரின் இந்த உத்தரவுப்படி, காளைகளைப் பிடிப்பதோ, அடைத்து வைப்பதோ, வேடிக்கை காட்ட பயன்படுத்துவதோ கூடாது. மீறினால், கோடிக்கணக்கில் அபராதம் என்றும், உத்தரவு கடுமையாக சொல்கிறது. கேரளாவில், அடிக்கடி யானைகளை வைத்து நடக்கும் விழாக்களில் ஏற்படும் விபத்துகளை விட, தமிழகத்தில் காளைகளை வைத்து நடத்தும் விழாக்களில் குறைவு தான். ஆனால், யானைகளை விட்டுவிட்டு, மாடுகளை தடை செய்துள்ளது, குறிப்பாக ஜல்லிக்கட்டை குறிவைத்தே போடப்பட்ட உத்தரவு போல உள்ளது என்பது தான், தமிழ்நாடு வீர விளையாட்டு பேரவையினரின் ஆதங்கம். முனியாண்டி, முத்தாலம்மன், காளியம்மன் என்று, அந்தந்த கிராம தெய்வங்களை வணங்கி, மண்ணின் நன்மைக்காகவும், மக்களின் மேன்மைக்காகவும், ஒரு வழிபாடு போல நடத்தப்படுவதே இந்த ஜல்லிக்கட்டு.


இது, வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல, தமிழர்களின் ரத்தத்தோடு கலந்து விட்ட வீரம், உற்சாகம், பண்பாடு என, இறந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் நினைவாக, அதன் உருவத்தை சிலை வடிவத்தில் வைத்து வழிபடும் பொந்துகம்பட்டி கிராமத்தினர், ஆவேசத்துடன் குறிப்பிடுகின்றனர். இதில், 20 அடி நீள கயிற்றில் கட்டப்படும் காளையின் கொம்பில், முடிச்சுப் போட்டு தொங்கவிடப்படும் பணத்தை, நேருக்கு நேர் சென்று, நின்று, வென்று எடுக்கும் மஞ்சுவிரட்டு எனும் விளையாட்டும், சேர்ந்து அடிபட்டு போனது. அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த சல்லிக்காசை, மாட்டின் கொம்பில் கட்டிவிடுவர். அந்த காசை எடுப்பதற்காக நடத்தப்பட்ட விளையாட்டு என்பதால், சல்லிக்காசுக்கான விளையாட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மருவி, ஜல்லிக்கட்டு விளையாட்டாகி விட்டதாக, ஆய்வாளர்களால் கருதப்படும் இந்த விளையாட்டு, இப்போது அதே பாணியில், சல்லிக்காசிற்கும் பெறாத விளையாட்டாகிவிடுமோ என்பது தான் பலருக்கும் அச்சம் தருவதாக உள்ளது. உச்சத்தில் யானைகள் மீது பாசம் கொண்டவர்கள் இருக்கும் போது, காளைகள் மீது பாசம் கொண்டவர்கள் இல்லாமல் போனது துரதிருஷ்டமே. எப்போதும் எதுவும் பேசாத நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அதிரடி உத்தரவு போட்ட அமைச்சர், தமிழக அரசை கலந்து பேசியிருக்கலாம் அல்லது குறைந்தபட்சமாக மக்களவையிலாவது தெரிவித்திருக்கலாம். அப்படியில்லாமல், எடுத்த எடுப்பிலேயே, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலில், நன்றாக நடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்யச் சொன்னது, எந்த விதத்திலும் நியாயமாகப் படவில்லை.


ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற அலங்காநல்லூர் கிராமத்து பெரியவர் ஒருவரிடம் பேசுகையில், கண்ணிலும் ஒளி பிறக்க, வார்த்தையில் பொறி பறக்க, தான் ஒரு காளையை மடக்கிய கதையை, படு சுவாரசியமாக, உடல் அங்க அசைவுடன் கூறினார். அப்படி கூறியவர், தான் மாடு பிடித்ததற்கு சாட்சி என்று, தனது சட்டையைத் தூக்கி, இடுப்பில் உள்ள தழும்பை பெருமையுடன் சுட்டிக் காட்டினார். ""இது புதுக்கோட்டை காளையைப் பிடிக்கும் போது, கொம்பு பட்ட வடு. காயம்பட்ட போதும் நான் விடலையே, மாட்டை அணைஞ்சுட்டு தானே களத்தைவிட்டு வெளியேறினேன்'' என்கிறார், தன் நரைத்த மீசையை முறுக்கியபடி. இது போல, இங்குள்ள ஒவ்வொரு பெரியவர்களிடமும் ஒரு ஜல்லிக்கட்டு கதை இருக்கிறது. ஒரு வீரத்தழும்பு இருக்கிறது. சிலரிடம் காளையே இருக்கிறது. காளையை தங்களது உயிராக வளர்க்கின்றனர். பச்சரிசி சாப்பாடு, தினசரி ஆற்றுக் குளியல், ஓட்டம், சீற்றம், பாய்ச்சல் என, வருடத்தின் ஒரு நாள் திருவிழாவிற்காக காளையை, கொஞ்சம் கொஞ்சமாய் தயார் செய்கின்றனர். வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற நிலையில், அந்த காளை, தன் உரிமையாளருக்கும், தன்னை வளர்த்த வீட்டிற்கும், அதையும் தாண்டி, தனது ஊருக்கே பெருமை தேடித்தரும் செல்வமாகவும், செல்லமாகவும் மாறுகிறது.


ஒவ்வொரு ஊரிலும் இந்த ஜல்லிக்கட்டு, ஒருவித சிறப்புடன் நடைபெறுகிறது. அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் வாடிவாசல் என்றழைக்கப்படும் ஒரு சிறிய வாசல் வழியாக மாடுகள், ஒன்றன் பின், ஒன்றாக அவிழ்த்து விடப்படும். பல காளைகள் பாயும், சில காளைகள் பறக்கும். சில காளைகள் வீரர்களை பறக்கவிடும். சில காளைகள் நின்று விளையாடும். இப்படி, ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். காளைகள் அடுத்து என்ன செய்யுமோ, எப்படி பாயுமோ என்ற நிலையில் நடக்கும் அந்த ஒவ்வொரு நிமிடங்களும், வீரர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும், "திரில்லான' நிமிடங்களே. காரைக்குடி பக்கம் உள்ள சிராவயல் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டின் போது, ஒரே நேரத்தில் அனைத்து காளைகளையும் அவிழ்த்து விடுவர். மைதானத்தினுள் அவரவர் சக்திக்கேற்ப காணப்படும் காளைகளுடன், தங்களது வீரத்தை வெளிப்படுத்துவர்.


எப்படிப் பார்த்தாலும், வீரம் கொப்பளிக்க, விவேகம் பீறிட, ஊற்றெடுக்கும் உற்சாகத்துடன், மண்டியிடாத வீரத்துடன், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பெரும் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளும் தமிழர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், கலாசாரத்திற்கும் விதிக்கப்பட்ட தடையாகத் தான் இதை கருத முடிந்ததே தவிர, ஜல்லிக்கட்டிற்கு விதித்த தடையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக, இப்போது வழக்கு விசாரணை முடிந்து, வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, ஜல்லிக்கட்டை சந்தோஷமாக நடத்தலாம் என்று, கோர்ட் சொல்லிவிட்டது. கிட்டத்தட்ட வாடிவாசலில் வென்ற மகிழ்ச்சியுடன், ஜல்லிக்கட்டு களங்கள் தயாராகி வருகின்றன. விதிகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு எனும், நமது வீர விளையாட்டை, நல்லபடியாக நடத்திக் காட்டுவதில் தான், இந்த வீர விளையாட்டை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும். Email: murugaraj2006@gmail.com

நன்றி
http://www.dinamalar.com/News_detail.asp?Id=385915

Tuesday, January 10, 2012

சொல்லுக்கு முன் செயலாக தொண்டாற்றும் தமிழர் நலம் பேரியக்கம் உதவி .!



தமிழீழப் பெண்ணின் கால்களில் அறுவைச் சிகிச்சை செய்ய தமிழர் நலம் பேரியக்கம் உதவிசெய்துள்ளது.

கடந்த மார்கழி மாதம் 4 ம் தேதி மாவீரர் நினைவெழுச்சி நாளில் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தலைமையில் சென்னையில் தமிழர் நலம் பேரியக்கம் தொடங்கப்பபட்டது.அரசியல் நோக்கம் இல்லாமல்,தமிழர்களுக்கு சேவை செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டது தமிழர் நலம் பேரியக்கம்.

இந்த நிகழ்வில் பேசிய மு.களஞ்சியம் எங்கள் தமிழர் நலம் பேரியக்கம் மேடை ஏரி சும்மா அரசியல் பேசிக்கொண்டிருக்காமல் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ‘ சொல்லுக்கு முன் செயல் “

என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர் நலம் பேரியக்கத்தின் முதல் பதிவாக இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் தோழி சசிகலாவுக்கு இடது காலில் அறுவைச் சிகிச்சை செய்ய நிதியுதவி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் அந்த ஈழப்பெண்ணை சந்தித்தார். அவருக்கு தேவையான உதவியை தனது இயக்கம் செய்யும் என்று வாக்குறுதி அளித்து வந்தார்.

அதன் அடிப்படையில் தோழி சசிகலாவை சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து அவரது கால்களில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில் நேற்று(07.01.2012)மருத்துவமனையிலிருந்து இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தானே நேரில் சென்று அந்த பெண்ணை அழைத்து கொண்டு பத்திரமாக அவர் தங்கியுள்ள வீட்டுக்கு கொண்டுபோய்சேர்த்தார்.

அவருடன் தமிழர் நலம் பேரியக்கத்தை சேர்ந்த மும்பை ராஜேந்திரன்,கவிஞர் இகன் ஆகியோர் இருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - ஈழம்வெப்சைட்

http://www.eelamwebsite.com/?p=20230

Wednesday, January 4, 2012

திருப்பூரில் நல்லதொரு ஆரம்பம்



தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத முன்வந்துள்ளது. முக்கியக் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து நிறுத்துவதோடு, முதல்வர் வேட்பாளராக வைகோவை முன்னிறுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜனவரி 7-ம் தேதி திருப்பூரில் நடைபெற இருக்கும் கூட்டத்தில், இதனை வெளிப்படையாக அறிவிக்க இருப்பதால் ம.தி.மு.க-வினர் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்கள்.

திருப்பூர் நகர ம.தி.மு.க-வினர்ஊரைக் கலக்கும் வகையில் வைகோவை வாழ்த்தியும், வரவேற்றும் நூற்றுக்கணக்கான பேனர்களையும், கொடிகளையும் தயார் செய்த நேரத்தில்தான், முக்கிய நிர்வாகிகளுக்கு வைகோவிடமிருந்து போன். உற்சாகமாக செய்துவந்த ஆயத்த வேலைகளை எல்லாம் அப்படியே சுருட்டி வைத்துவிட்டு, எல்லோரும் அமைதியாகி விட்டார்கள்.

'ஏன் அமைதியாகி விட்டீர்கள்? வைகோ என்னதான் சொன்னார்?'' என்று திருப்பூர் நகர ம.தி.மு.க. பொருளாளரான 'புலி’ மணியிடம் கேட்டோம். ''நல்ல மனப்பான்மையோடு தமிழகத்தின் முக்கியக் கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து எங்கள் தலை வரைப் பிரதானப்படுத்துவது, எங்களை சிலிர்க்க வைக்கிறது. எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் பேனர், ஃப்ளக்ஸ், கொடி என்று ஆரவாரமாகத் தயார் ஆனோம்.

ஆனால் இதை எப்படியோ தெரிந்துகொண்ட தலைவர் போன் போட்டுப் பேசினார். 'நல்லாப் புரிஞ்சுக்கோங்க. நடக்கப்போறது நம்ம கழகத்தோட விழா இல்லை. தமிழ்நாட்டின் வருங்காலம் வளமாக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நல்ல பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிற்கப்போகும் உன்னதமான மேடை அது. என் மீது பற்று வைத்து, என்னை முன்னிலைப்படுத்த நினைப்பது அவர்களின் பெருந்தன்மை மற்றும் பெரும் நம்பிக்கை. அந்த அங்கீகாரத்தை நாம் அமைதியாக அணுக செய்யவேண்டுமே தவிர, ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடக் கூடாது. கட் அவுட், போஸ்டர் என்று அரசியல்வாதிகள் அலைவதை மக்கள் விரும்புவது இல்லை. போஸ்டர் அடித்தாலும், அடிக்கவில்லை என்றாலும் தனக்காக உண்மையாகச் செயல்படுவது யார் என்பது மக்களுக்குத் தெரியும்.



அதனால் நாமும் வழக்கமான அரசியல்வாதிகளைப் போன்று செயல்பட வேண்டாம். புதுமையா சிந்திப்போம், மக்கள் மனம் கோணாதபடி நடப்போம். முல்லைப் பெரியாறு விவகாரத்துக்காக கேரளா செல்லும் வழிகளை முற்றுகையிட்டோமே, அப்போது நம்ம கழகத்தோட கொடியோ, போஸ்டரோ ஒன்றுகூட கிடையாது. ஆனாலும் கண்கொள்ளா ஜனக்கூட்டம் திரண்டு நின்னுச்சே! அதுதான் எழுச்சி. கொடி, போஸ்டர் இல்லாம உணர்வுப்பூர்வமா மக்களை திரட்டுகிற சக்தி ம.தி.மு.க-வுக்கு மட்டும்தான் இருக்குது. அடக்கமா நடந்தாலும் அழுத்தமா சாதிக்கப் பிறந்தவங்கய்யா நாம’ என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். தலைவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையையும், யதார்த்தத்தையும் புரிஞ்சுகிட்டோம்... அமைதியாயிட்டோம்''
என்று விளக்கம் கொடுத்தார்.

நன்றி - முத்துகிருஷ்ணன் தனுஷ்கோடி, பண்புடன் குழுமம்

Sunday, January 1, 2012

போராட்டங்களால் உருவாகும் புதிய அடையாளம்!

மாலதி மைத்ரிFirst Published : 02 Jan 2012 01:59:34 AM IST

அராபிய வசந்தம் தொடங்கிய ஓராண்டுக்குள் பல கண்டங்களின் பூகோள அரசியலை மக்கள் போராட்டங்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி டுனீசியாவின் அதிபர் பென் அலியை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இப்போராட்டம் டுனீசியாவைக் கடந்து எகிப்து, லிபியா, ஏமன், சிரியா, பக்ரைன், அல்ஜீரியா, மொராக்கோ, லெபனான், குவைத், சூடான் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரை தொடர்ந்து சென்றது.

இப்போராட்டங்கள் அராபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் தடையாக இருக்கும் அரசுகளைத் தூக்கி எறிய மேற்குலகம் மற்றும் அமெரிக்க அரசுகள் செய்யும் சதியென அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. என்றாலும் அராபிய வசந்தத்தின் நீட்சியாகவே அமெரிக்காவில் செப்டம்பர் 17-ல் தொடங்கிய வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் போராட்டமும் பார்க்கப்படுகிறது.

மக்கள் லட்சக்கணக்கில் நேரடியாக அரசியல் மாற்றத்தையோ மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளையோ கேட்டு வீதிக்கு வருவதைக் காட்சி ஊடகங்களிலும் தினச்செய்தித்தாள்களிலும் திரைப்படங்கள் மற்றும் மகாதொடர்களின் விளம்பர இடைவேளைகளுக்கிடையே கண்ணுற்ற தமிழ்ப் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் உளவியல் ரீதியாக சில மாற்றங்கள் உருவாகியுள்ளன.
அராபிய தேசங்களில் பெண்களுக்குச் சுதந்திரமே இல்லை, பெண்கள் பர்தா போட்டுக்கொண்டு வெளிஉலகமே தெரியாமல் வாழ்கிறார்கள், பெண்களுக்குப் பேச்சுரிமை கிடையாது, படிக்க முடியாது, வேலை பார்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், லட்சக்கணக்கில் முஸ்லிம் பெண்கள் தெருவில் வந்து நீதி கேட்டுப் போராடியது எங்களைச் சிந்திக்கத் தூண்டியது என்கின்றனர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி ஆகஸ்டு 26-ம் தேதி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கிய அங்கயர்கண்ணி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதாவின் போராட்டத்துக்கு ஆதரவு தரவந்த கல்லூரி மாணவர்களிடம் இந்த எழுச்சியைக் காண முடிந்தது.

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களையும் தமிழகத்தில் 600 மீனவர்களையும் நம் காலத்திலேயே சிங்கள இனவெறிக்குப் பலிகொடுத்தபோது என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது தமிழ் இளைஞர்களின் முக்கிய கேள்வியாயிற்று. நம் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் இவற்றுக்காக என்ன செய்தார்கள் என்னும் கேள்வியும் எழுந்தது.

சேது கால்வாய்த் திட்டம் வந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தொடர்ந்து போராடியபோது 2005-ல் திமுக அரசு திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று உறுதி காட்டியது. பாட்டாளி மக்களுக்கான கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எந்த விளக்கமும் அற்று சேதுகால்வாய்த் திட்டம் வந்தால் தமிழகம் சொர்க்கமாகிவிடுமென பொய்களைப் பரப்பிக் கொண்டிருந்தன. ராமர் பாலம் பிரச்னையால் சேதுகால்வாய்த் திட்டம் எளிதாக முடக்கப்பட்டது, வங்கக்கடலில் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் அளந்து கொட்டிவிட்டு கோப்புகள் மூடப்பட்டன. கூடங்குளம் அணுமின் திட்டத்திலும் இதே இழிவான நிலைப்பாடுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு.

1989-லிருந்து தொடர்ந்து கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் மீனவ மக்களையும் இயக்கங்களையும் புறக்கணித்துவிட்டு அணுமின் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு தன் வேலைகளைத் தொடர்ந்தது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்றவற்றிலிருந்து தண்ணீர் பெறுவதில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். நமது நியாயமான உரிமைகளைக்கூட தமிழகத்தை ஆண்ட திமுக மற்றும் அதிமுக அரசுகள் இதுவரை போராடிப் பெற்றுத் தரவில்லை என்ற கோபம் முழுவடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

செம்மொழி குடும்ப மாநாடுகள் நடத்தி ஆண்ட இனம் எமது என்று பெருமை பேசிக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலத்தவர் நம்மை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதைத்தான் நதிநீர்ப் பிரச்னைகள் உணர்த்துகின்றன. ஒவ்வோராண்டும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பிற மாநிலங்களிடமிருந்து முற்றாக நம்மால் பெற முடிந்ததில்லை. ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விவசாயத்துக்குக்கூடப் பயன்படுத்தாமல் மின்பற்றாக்குறையைத் தாங்கிக்கொண்டு அண்டை மாநிலங்களுக்குப் பங்குவைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக ஆட்சியாளர்களின் மக்கள்விரோதக் கொள்கைத்திட்டங்களால் விவசாயம் மற்றும் கைத்தொழில்கள் அழிந்து பஞ்சம் பிழைக்கக் கூலிகளாக அண்டை மாநிலங்களுக்குச் சென்ற தமிழர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் தமிழர்களின் மறதியைக் கடந்து வெளித்தெரியத் தொடங்கியுள்ளன.

வரலாறு காணாத ஊழல், ஏகபோக குடும்ப அரசியல், காட்சி-செய்தி ஊடகங்கள், தொழில் முதலீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், தமிழகமெங்கும் அரசியல்வாதிகளால் கொள்ளையடித்துக் குவிக்கப்பட்ட சொத்துகள், ஈழவிடுதலைப் போருக்கு ஆட்சியாளர்கள் தங்கள் பதவி சுகத்துக்காக இழைத்த அவமானகரமான துரோகம் என நீண்டு செல்கிறது தமிழக மக்களின் துயரக் கணக்குகள். திரைப்படங்களும், கிரிக்கெட்டும், தொலைக்காட்சியும் தவிர வேறெதுவும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்று முடிவுகட்டினர் ஆட்சியாளர்கள்.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உள்துறை அமைச்சகத்தால் மூன்றுபேரின் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டபோது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். தமிழர்கள் மூன்றுபேரின் தூக்குத் தண்டனையை நீக்கக்கோரி மூன்று பெண் வழக்கறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கும் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஈழப் படுகொலையின்போது தமிழர்கள் இதுபோன்ற எழுச்சியை, எதிர்ப்பைக் காட்டியிருந்தால் இழப்புகள் குறைந்திருக்குமோ எனத் தோன்றியது.

ஜப்பான் புகுஷிமா பகுதியின் அணுஉலைகள் வெடித்துச் சிதறியபோது தங்கள் வீட்டை, உடைமைகளை, நிலத்தை, கடற்கரையைவிட்டு 16 லட்சம் மக்கள் வெளியேறியதை ஊடகங்கள் வழியாகத் தமிழக மக்கள் கண்டனர். நிலம், நீர், காற்று, கடல் அனைத்தும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது, அப்பகுதி தண்ணீர், பால், மீன், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அனைத்தும் மக்கள் பயன்படுத்த முடியாமல் பாழானது, 16 லட்சம் பேரில் எத்தனை லட்சம் பேர் கதிர்வீச்சு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர் என்ற கணக்கை அரசு இதுவரை வெளியிடாதது என ஒவ்வொன்றும் தமிழகக் கடலோர மக்களின் மனங்களில் அச்சத்தையும் மற்றொரு வகையில் தெளிவையும் உருவாக்கின. ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட கூடங்குளம் அணுஉலைகளின் சோதனை ஓட்டத்தில் எழுந்த பேரோசை, அணுஉலை நிர்வாகம் வெளியிட்ட விபத்துகால ஒத்திகை குறித்த அறிவிப்பு இரண்டும் கூடங்குளம் சுற்றுப்புறக் கிராம மக்களின் அச்சத்தை உறுதிப்படுத்தின.
ஊர்மக்கள் ஆயிரக்கணக்கில் தன்னெழுச்சியாக மாதா கோயிலின் முன் திரண்டு கூடங்குளம் அணுஉலையை மூடுவதற்கான போராட்டத்தை ஆகஸ்டு-16ம் தேதி தொடங்கவேண்டும் என முடிவெடுத்தனர். இந்தப் போராட்டம் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே முன்னோடித்தன்மை கொண்டது.

செப்டம்பர் 11-ல் இடிந்தகரையில் ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டமாகத் தொடங்கிய மக்கள் போராட்டம் கூடங்குளம் அணுஉலைகளை மூடும்வரை தொடரும் வலிமையுடன் இப்போது முன் சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் வெறும் உணர்வெழுச்சியின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கவில்லை, அறிவுப்பூர்வமான அரசியல் தெளிவுடன் மக்களால் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வயது பாகுபாடின்றி சிறுவர்கள் முதல் முதிய பெண்கள் வரை அணுஉலைகளின் ஆபத்தைப் பற்றி அறிவியல்பூர்வமாகப் பேசுகின்றனர். அணுக்கழிவுகளால் உண்டாகும் சுற்றுச்சூழல் கேடு, நோய், கதிரியக்கப் பொருள்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாவது என்பவை குறித்து மிகுந்த அக்கறையும் கவலையும் அவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் தமிழர்கள் மூன்றுபேரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரும் போராட்டம் என இரண்டு போராட்டங்களை விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தின் சில பகுதி மக்களின் அரசியல் உணர்வுக்கும் சோதனை தரும் வகையில் வந்து சேர்ந்தது முல்லைப் பெரியாறு அணை பிரச்னை.

வழக்கம்போல் தமிழக அரசியல் கட்சிகள் அறிக்கைவிட்டு விட்டு அமைதி காத்துவிடுவர், தமிழர்கள் கூடங்குளத்தை மறந்துவிட்டு முல்லைப் பெரியாறுக்கு போராட வந்துவிடுவர், ஒருவாரம் கழித்து மீண்டும் வழக்கம்போல் திரைப்படம்-தொலைக்காட்சி பார்க்கப் போய்விடுவார்கள் என்ற தேசிய சக்திகளின் கணக்கை தமிழர்கள் இப்பொழுது பொய்யாக்கியிருக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணையை தமிழகத்திடம் இருந்து பறிக்க கேரளக் கட்சிகள் செய்யும் சதிச்செயல்கள் தமிழக மக்களை பல காலத்துக்குப் பிறகு ஒன்றுபடுத்தியுள்ளதுடன் போராடவும் தூண்டியுள்ளது. இந்தித் திணிப்பு எதிர்ப்புக்குப் பிறகு தமிழக மக்களின் இந்த மூன்று போராட்டங்களும் தமிழ் அடையாளம் சார்ந்த வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்துக்கான பேரெழுச்சி என்ற வகையில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.

அரசியல் கட்சிகளின் அழைப்புக்கு மக்கள் ஓடிவந்த நிலைமாறி மக்கள் களத்தில் முன்செல்ல அனைத்துக் கட்சிகளும் அவர்கள் பின் செல்லவேண்டிய நிலையை அடைந்துள்ளன. இன்னும் தமிழகத்தில் தீண்டாமை நடைமுறையில் உள்ளது என்பதற்காக வெட்கப்படும், இனி தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்ற நிலையை உருவாக்க நினைக்கும் இளைஞர்களின் கையில் இன்றுள்ள போராட்டங்கள் சென்று சேரும் எனில், தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் மட்டுமன்றி, பண்பாட்டு எதிர்காலமும் ஒளிபொருந்தியதாக அமையும் என்று நம்பலாம். அதற்கு முன்னோட்டமாக இன்று நடக்கும் இந்த மூன்று போராட்டங்களும் அமைந்துள்ளன.

நன்றி தினமணி 2.1.2012

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=531414&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...