இவ்வாண்டு ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதாவது வரவு செலவுத் திட்டத்தை
தாக்கல் சமர்பித்த கனம் நிதி மந்திரி அவர்களின் பிரசங்கம் தமிழிலும் அச்சடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி நம் தாய் மொழியாகிய தமிழ் பாஷைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்
தக்கது. ஆனாலும் ஆந்திர ராஜ்யம் பிரிந்து போன பிற்பாடு, இந்த ராஜ்யத்தை
‘தமிழ் ராஜ்யம்’ என்று அழைப்பதற்குப் பதிலாக
‘எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்’ என்பதாக அழைத்து
வருவது மிகவும் வருந்த வேண்டியதாகும். அந்த நிலை என்றைக்கு மாறுமென்பதே தெரியவில்லை.
இந்தியாவில் உள்ள இதர ராஜ்யங்கள் எல்லாம் தங்கள் தங்கள் ராஜ்ய
மொழி இன்னதென்பதைத் தீர்மானித்துக் கொண்டு விட்டன. வங்காளம், பஞ்சாப்
போன்ற பெரிய மாகாணங்களும்,
ஒரிசா போ ன்ற சிறிய மாகாணமும் கூட தங்கள் தாய் பாஷையை ராஜ்ய
மொழியாக பிரகடனம் செய்து விட்டன.
ஆனால் இங்கே தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்காததற்கு காரணம், சில கன்னடர்களும், சில மலையாளிகளும்
இன்னமும் நம்மோடு இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. அது வாஸ்தவம். ஆனால் மலையாளிகளுக்கு தனி ராஜ்யமாக திருவாங்கூர்-கொச்சி இருக்கிறது.
அதைப்போலவே கன்னடர்களுக்குத் தனி ராஜ்யமாக மைசூர் இருக்கிறது.
சென்னையிலிருந்து பிரிந்து போன தெலுங்கர்கள் கூட ஆந்திர ராஜ்யத்தை தெலுங்கர்கள் ராஜ்யமாக
அறிவித்துக் கொண்டனர். ஆனால் ஆந்திர ராஜ்யம் பிரிந்து போன பிற்பாடும், நம் ராஜ்யத்திற்கு
‘தமிழ் ராஜ்யம்’ என்று பெயரிடப்படாமல் ‘எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்’ என்று பெயரிட்டிருப்பது வருந்த
வேண்டிய விஷயமாகும்.
இன்றைக்கு இந்த ராஜ்யத்தில் தமிழர் ஆட்சி வந்து விட்டது என்று
வெளியே பேசப்படுகிறது. அதோடு ‘பச்சைத் தமிழர் ஆட்சி’
ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த ‘பச்சைத்
தமிழருடைய ஆட்சியில்’ இந்த ராஜ்யம் தமிழ் ராஜ்யம் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் என்ன பயன்?
தமிழ் மொழி வளரவேண்டும், தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும்.
அதற்கு அறிகுறியாகவே பட்ஜெட் பிரசங்கம் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் சொல்வது
வெறும் பிரச்சாரமாகப் போய் விடாதிருக்க வேண்டும் என்றால், இன்றைக்கு
நாம் கலையை வளர்ப்பதற்கும்,
உயர்ந்த கருத்துக்களை அமைப்பதற்கும், சிறந்த மொழியாக விளங்கி வரும்
தமிழ் மொழியை ஆட்சி மொழியாகச் சட்டப் பூர்வமாகச் செய்ய வேண்டும். அப்பொழுதே அதற்கு
மரியாதைக் செலுத்திக் கொண்டவர்களாக ஆவோம்.
-1955-56-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீது 1955 மார்ச் 3-ல் தேவர்
பேசியது
No comments:
Post a Comment