Wednesday, March 15, 2017

சிறிய சமூக சேவை - தேனி - ஆதரவற்றோர் இல்லாத மாவட்டம்


தேனியிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 5 கிமீ தூரத்தில் உள்ள
கோடாங்கிபட்டியில் அமைந்துள்ளது மனிதநேய காப்பகம். இந்த காப்பகத்தை
நிறுவி நடத்தி வருபவர் மா. பால்பாண்டி. பிகாம் பட்டதாரியான இவர் 2004-ம்
ஆண்டு சுனாமியால் ஆதரவற்றோரான 3 குழந்தைகளை எடுத்து பராமரிக்கும்
வேலையைத் தொடங்கினார். தற்போது இவரது காப்பகத்தில் 136 குழந்தைகள் உள்ளன.

இவரது காப்பகத்தில் வளர்ந்து கல்வி பயின்ற கார்த்திகா என்ற பெண் தற்போது
ரஷ்யாவில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் விகடனின்
நம்பிக்கையின் தோழிஎன்ற விருதைப் பெற்றவர் ஆவார். இந்தப் பெண்ணின்
கனவுதான் ஆதரவற்றோர் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பது. கடந்த ஒரு மாதமாக இந்த இயக்கத்தை நடத்திய மனிதநேய காப்பகம்  இதில் முழு வெற்றி பெற்றுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
பால்பாண்டியை சந்தித்து அவருடன் பேசியபோது அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-

ஒரு நாடு முன்னேறிய நாடு என்றால் அங்கு வறுமைக் கோட்டிற்கு கீழே யாரும்
இருக்கக் கூடாது. அங்கு ஆதரவற்றோரும் (பிச்சைக்காரர்கள்) இல்லாதிருக்க
வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது வளர்ந்த நாடாக இருக்காது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்டமைப்பு மேல்மட்டத்தில் இருப்பவர்கள்
அவ்வாறு தொடரவும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை அதே நிலையில்
வைத்திருக்கக் கூடியதாகவும் உள்ளது.

பணக்காரர்களுக்கு வரியை குறைத்தால் அது அவர்களுக்கு லாபம் அளிப்பதாக
உள்ளது. ஏழைகளுக்கு வரி விதித்தால் அது அரசாங்கத்திற்கு லாபமாக உள்ளது.
எனவே அரசாங்கம் ஏழைகளுக்கு வரி விதிப்பதையே கொள்கையாகக்  கொண்டுள்ளது. இதனால் சம்பளம் பற்றாக்குறையான ஒன்றாக உள்ளது. இது  மக்களின் வாங்கும் சக்தியை குறைக்க வழிவகுக்கிறது.

இதனால் ஒருவர் தன் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை
ஏற்படுகிறது. இந் நிலையால் ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவியின்
கண்டிப்புக்கு ஆளாகிறான். இதனை தவிர்க்க அவன் போதைப் பழக்கங்களுக்கு
ஆளாகுதல், மனைவியின் கண்டிப்பால் விலைமாதர்களிடம் செல்ல முற்படுகிறான். இதனால் பாலியல் நோய்களுக்கு ஆளாகி குடும்பத்தை விட்டுப் பிரிந்து பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவன் சாமியார் வேடமிட்டு பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டுகின்றான். பிச்சை
எடுக்கும் காசில் போதைப் பொருட்களை அனுபவிக்கிறான். இவ்வாறான நிலையில்
அவனது குடும்பமே சிதறிவிடுகிறது. அவனும் பிச்சை எடுக்கிறான். அவனது
குடும்பமும் பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இந்தச்
சூழலில் பிச்சை எடுக்க ஆளான ஒரு சிறுமிதான் இன்று எங்கள் காப்பகத்தின்
மூலமாக எம்பிபிஎஸ் படிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். அவரது கனவுத்
திட்டம்தான் நம் நாட்டில் பிச்சை எடுப்பவர் யாரும் இருக்கக் கூடாது
என்பது.

இதற்காக நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினோம். ரூபாய் 80 கோடி
முதலீட்டில் தமிழகத்தையும் 1100 கோடி முதலீட்டில் பிச்சைக்காரர்,
ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டத்தை வடித்தோம். இதன் மூலம்
இந்தியாவில் உள்ள 534 மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ரூ. 2 கோடி
என்று வங்கியில் முதலீடு செய்வது. அதிலிருந்து மாதாந்திர வட்டியாக
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 2 லட்சத்தைப் பெறுவது. அந்தத் தொகையை அந்த
மாவட்டத்தில் உள்ள 4 காப்பகங்களுக்கு பிரித்துக் கொடுத்து அந்த
மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோரை பராமரிக்கச் செய்வது. இவ்வாறான திட்டத்தின்
மூலமாக குறுகிய காலத்திற்குள்ளாக நாட்டில் ஆதரவற்றோருக்கு முற்றிலுமாக
மறுவாழ்வு அளித்து விடலாம். இந்தத் திட்டம் பிச்சைக்காரர்,
ஆதரவற்றோருக்கான நிரந்தர தீர்வாக அமையும்.

இதில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். சாலையோரம்
வசிக்கக் கூடியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாம். அதேபோல வீட்டுக்கு
ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழே யாரும் இருக்க
வேண்டிய நிலை ஏற்படாது.

இதுபோன்ற திட்டத்தை தயாரித்து நாங்கள் இது பற்றி ஜனாதிபதி, பிரதமர்
மற்றும் பிரமுகர்கள் பலருக்கும் கடிதம் எழுதினோம். நடிகர்கள் ரஜினி,
சூர்யா, விஷால், ராகவா லாரன்ஸ் போன்றோரை நேரில் சந்திக்க முயன்றோம்,
பின்னர் கடிதமாக எழுதி தெரிவித்தோம். ஆனால் அதனால் எந்த பலனும்
கிடைக்கவில்லை.

அதன் பின்னர் நாங்கள் எங்களது சொந்த முயற்சியில் தேனி மாவட்டத்தை
ஆதரவற்றோர் இல்லாத மாவட்டமாக மாற்றி இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும்
எடுத்துக் காட்டாக காட்டுவது என்று முடிவு செய்தோம். அதன்பின் தேனி
மாவட்ட ஆட்சியருக்கு இது பற்றி கடிதம் எழுதினோம். 1 ஆண்டுக்குப்
பின்னர்தான் இதுபற்றி அவரைச் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்தது.

இது தோல்விகரமான திட்டம், இதனை யாரும் செயல்படுத்த முன் வரமாட்டார்கள்
என்றுதான் பலரும் கருத்துக் கூறினார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்ட
மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மாவட்ட சமூகநலத்துறை அலுவலக அதிகாரிகள்
இந்த திட்டத்தை நாங்கள் எங்கள் சொந்த முயற்சியிலேயே செய்ய வேண்டும் என்ற
நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார்கள்.

அதன் பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்துத்து அனுமதி பெற்றோம்.
அவர் மீட்கப்பெறும் ஆதரவற்றோரை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி
நீதித்துறையிடம் ஆலோசனை செய்து அனுமதி பெறுமாறு கூறினார். இந்தத் திட்டம்
பற்றிய விவரங்களை கேட்டவுடன் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மீட்கப்படும்
நபர்களுக்கு உறவினர்கள் இருந்தால் அவர்களை எச்சரித்து உறவினர்களிடம்
ஒப்படைத்துவிடவும், ஆதரவற்றோரை காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் ஆலோசனை
வழங்கினர்.

இந்த திட்டத்திற்கு தேனி ஊடக-பத்திரிகையாளர்கள் சங்கம், வையை தமிழ்ச்
சங்கம், சேவா செக்யூரிட்டி, இயற்கை அன்னை பாதுகாப்புக் குழு, விஜய்
ரசிகர் மன்றம், அஜீத் ரசிகர் மன்றம், பிரின்டர்ஸ் அசோசியேஷன், இண்டியன்
ரெட்கிராஸ் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த
அமைப்புகளைச் சேர்ந்த குழுவினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அனுமதி
பெற்றனர். அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், நீதித்துறையும்
இந்த திட்டத்திற்கு அனுமதியளித்தன.

இந்தத் திட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட போடி, சின்னமனூர்,
ஆண்டிபட்டி, கம்பம் வடக்கு-தெற்கு, சுருளி, பெரியகுளம் வடக்கு-தெற்கு,
தேவதானப்பட்டி, தேனி, வீரபாண்டி மற்றும் வைகை அணை ஆகிய 12 காவல் நிலைய
எல்லைக்குள்ளாக பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டார்கள். இந்த முயற்சியில்
மொத்தம் 196 பேர் மீட்கப்பட்டார்கள். இதில் 94 பேர் அவர்களின்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 102 பேர் மனதுருக்கம் தர்ம அறக்கட்டளை
(கானாவிலக்கு), போதி (ஆண்டிபட்டி), யுவா விகாஸ் (உத்தமபாளையம்), மனிதநேய
காப்பகம் (கோடாங்கிபட்டி) ஆகிய மையங்களில் பிரித்து தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலமாக தேனி மாவட்டத்தை ஆதரவற்றோர் இல்லாத மாவட்டமாக
மாற்றியுள்ளோம். இவ்வாறு பால்பாண்டி தங்களது வெற்றியை சொல்லி
பெருமைப்படாமல் தன்னடக்கத்துடன் கூறினார். இந்தத் திட்டத்தில் பங்கேற்று
இதனை வெற்றிகரமாக முடிக்க உதவிய அனைவருக்கும் தேனி நீதிமன்ற சட்ட உதவி
அரங்கில் வைத்து தலைமை நீதிபதியின் கையால் சிறந்த சேவைக்கான பாராட்டுப்
பத்திரமும் விருதும் வழங்கப்பட்டது.

பால்பாண்டியின் பல்வேறு சேவைகளைப் பாராட்டி நேரு யுவகேந்திராசிறந்த
இளையோர்விருதையும், அரிமா சங்கம்வாழ்நாள் சாதனையாளர்விருதையும்,
சென்னை மகாகவி பாரதி நற்பணி மன்றம்மனிதநேய மாமணிஎன்ற விருதையும்
வழங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
••••





No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...