Friday, July 22, 2016

தெய்வீக காதல் கதை


நேற்று முன்தினம் (20.07.2016) ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பான காதல் கதை. ஒரு இளம்பெண் ஒரு வாலிபரை அழைத்து வந்து தான் அவரை காதலிப்பதாகவும். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த வாலிபரை விட அந்தப் பெண் சற்று குண்டாக இருக்கிறார். அந்த வாலிபருக்கு 20-22 வயதுதான் இருக்கும். அந்தப் பெண் திருமணம் செய்து விவாகரத்து செய்திருக்கிறார். அதற்கு காரணம் அவரது கணவர் தன்னை விட 11 வயது மூத்தவர் என்றும் அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாதவராக இருந்ததாக கூறுகிறார்.

அவரது தாய்.தந்தையர் டீக்கடை வைத்து பிழைத்து வருகிறார்கள். அவருக்கு இரண்டு சகோதரிகளும் உண்டு. தான் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தனது காதலை காதலனின் பெற்றோர் ஏற்கவில்லை என்று கூறினார்.

அந்த வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அந்த வாலிபர் இந்தப் பெண்ணுடன்தான் வாழ்வேன் என்று சொல்கிறார்.

அவர் திருமணம் செய்த பெண் தந்தையை இழந்தவர் ஆவார். அவரது தயார் அவருக்காக சிரமப்பட்டு 10 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார். அந்தப் பெண்ணை பார்த்து தனக்கு பிடித்திருப்பதாக சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்வது வரை காத்திருந்து திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னதாக தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக தான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணிடம் சொல்லி இருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண், என் தயார் சிரமப்பட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஊரெல்லாம் திருமண பத்திரிகை கொடுத்தாகி விட்டது. இப்போது திருமணத்தை நிறுத்த முடியாது. நீ அந்தப் பெண்ணோடு வாழ்வதாக இருந்தால் போய்விடு இல்லையென்றால் என்னை திருமணம் செய்துகொள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் அப்போதைக்கு எதுவும் செய்யாத அந்த வாலிபர் அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

இதற்கிடையில் தான் காதலித்த பெண் விவாகரத்து செய்து வீட்டிற்கு வந்து விட்டார் என்று தெரிந்ததும் அவருடன் சுற்றத் தொடங்கினார். தற்போது அந்தப் பெண் அந்த வாலிபரை திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

பையனின் தாய், அவன் காதலித்த பெண் குண்டாகவும் வயதில் மூத்த பெண்ணைப் போலவும் இருப்பதால் அவளை தனக்கு பிடிக்க வில்லை என்று சொன்னார். மேலும் அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆன பின்னர், பையனின் சம்மதத்தோடு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம் என்று சொன்னார். தங்களுக்கு அவன் ஒரே பையன் என்றும் அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்றும் சொன்னார்.

இதற்கிடையில் இவர்களின் காதலுக்கு இருதரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக அவர்களது உறவினர்கள் இருவரிடமுமே பேசியுள்ளனர். பையன்தான் தவறு செய்து விட்டதாக பையனின் தந்தை சொன்னார். ஒன்று இவன் அந்தப் பெண்ணை காதலித்து இருக்கக் கூடாது. இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை திருமணம் செய்திருக்கக் கூடாது என்று சொன்னார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் உனக்கு என்ன வேண்டும் என்று காதலித்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்தப் பெண் சொன்னார். அப்படியானால் திருமணம் செய்த பெண் அந்த வாலிபருக்கு விவாகரத்து தரவேண்டும் என்று சொன்னார்.

அதற்கு அந்த வாலிபரின் மனைவி தான் விவாகரத்து தர முடியாது என்று மறுத்து விடுகிறார்.

இதற்கிடையில் காதலித்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.

இது எப்படி நடந்தது என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கிறார். லாட்ஜில் தங்கினீர்களா என்று கேட்கிறார். தனது வீட்டில் தங்கியதாக அந்தப் பெண் சொல்கிறார். வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்டபோது எல்லாரும் டீக்கடைக்கு சென்று விட்டார்கள் என்று சொல்கிறார் அந்தப் பெண்.

உன் பெற்றோர் உனக்காக கடையில் உழைத்துக் கொண்டிருக்கும்போது நீ வீட்டில் இப்படி இருந்தது தவறு இல்லையா என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார். வாலிபரின் மனைவி புகார் செய்தால் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்கிறார். வாலிபர் தனது இயலாமையுடன் தன் மனைவி மற்றும் தன் காதலியை தவறாக பயன்படுத்தியுள்ளார். அவரால் தனியே தன் காதலியை வைத்து வாழ முடியாது என்பதையும் அவரது பெற்றோர்கள் சொல்கிறார்கள். இதற்கிடையில் அந்த வாலிபர் தன் மனைவி குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொள்கிறார் .

இப்போது அந்தப் பெண் என்ன முடிவு எடுக்கிறார் என்பது பிரச்சனையாகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரது தாய் தந்தையரிடம் தொலைபேசியில் பேசுகிறார். அவர்கள் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தங்களுக்கு இன்னும் இரண்டு பெண்கள் இருப்பதாகவும் இந்தப் பிரச்சனையால் கடையை திறக்காமலும் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் அந்தப் பெண் வீட்டிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் எடுத்துச் சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் அந்தப் பெண் ரூபாய் 5 ஆயிரம்தான் எடுத்து வந்ததாகவும், அது தான் வேலை செய்து சம்பாதித்ததாகவும் சொல்கிறார். அதேபோல அந்த வாலிபர் முன்பு ஒரு செயின் அணிந்திருந்தார். அது இப்போது இல்லை. எனவே அவர் அந்த செயினை விற்று விட்டுத்தான் அவர் அந்தப் பெண்ணை அழைத்து வந்திருக்கிறார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் அந்த வாலிபர் அதனை மறுத்து தன் பாக்கெட்டில் உள்ள செயினை எடுத்து கொடுத்தார்.

இப்போது அந்தப்பெண்ணும் தன் வீட்டிற்குச் செல்லத் தயாராக இல்லை. ஏதாவது விடுதிக்குச் சென்று விடுவதாக சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொல்கிறார்.

சுயமாக வாழ முடியாதவர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது, முறையற்ற காதலால் காதலர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இந்த சம்பவம் விளக்குவதாக அமைந்தது.


-----------------------------

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...