Thursday, July 12, 2012

சாதி ஒழிப்பு போராளியும் நானும்



சாதி வெறியன் என்ற பட்டத்தை ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் (அவர்கள் எனக்கு எந்த பட்டம் பொருந்தாது என்று தெரியாதவர்கள்). அதற்காக அந்த பட்டம் என் சிந்தனைகளுக்கோ பேச்சுக்கோ தடை விதிக்கப் போவதில்லை.

நான் ஒற்றை வரியில் கேள்வி கேட்கிறேன் என்று சொல்பவர்களுக்கு,
நான் ஆரம்பத்திலேயே சாதி ஒழிப்பு போராளிகளுக்கான தகுதிகளாக 11 புள்ளிகளை கொடுத்திருந்தேன். அதில் உள்ள புள்ளிகளைப் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லை.

மற்றபடி சாதி ஒழிப்பு பற்றி பேசுவது நாகரீகம், சாதி பற்றி பேசுவதே தவறு என்ற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதே கற்பிதங்களை கூறிய தலைவர்கள் மறைமுகமாக தங்கள் சுய லாபத்திற்கு இதில் பல ராச தந்திர விளையாட்டுக்களை விளையாடி சாதிகளிடையே வன்மத்தையும் குரோதத்தையும் தூண்டி வருகின்றனர். இதில் தங்களை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று கருதிக் கொள்பவர்களுக்கும் பங்குண்டு.

அறிவுசார் சமுதாயம் இதை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. அதையே நான், சாதி வேண்டாம் என்று யாராவது ஒரு வரிவிளம்பரமாவது செய்தார்களா என்று நான் வேடிக்கையாக கேட்டேன். இதற்கும் இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. இவர்கள் இப்படித்தான். தனது கொள்கைக்காக சமுதாயத்திற்காக சிறிதும் நேரமோ பணத்தையோ செலவழிக்கத் தயார் இல்லை. இப்படிப்பட்ட நபர்கள்தான் சமுதாய மாற்றத்தை விரும்புகின்றனர்.

சில முற்போக்கு எழுத்தாளர்களுக்கு சாதியின் பெயரை கேட்டாலே அவர்களுக்கு விஷமாக படுகிறது. இந்த நிலையை உருவாக்கியுள்ள அந்த கரிக்கொட்டை எழுத்தாளர்கள் மக்களை,  சாதியை பற்றி சரியாக சி்ந்திக்க கூட விடாமல் செய்துள்ளனர்.

முகநூலில் எனது பதிவுகளை பாராட்டிய பலரும் உங்கள் பெயரில் உள்ள தேவன் சாதிப்பெயராக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் நான் சொல்லும் விஷங்கள் சரியானவையாக தோனறினாலும் அந்த பெயர் அவர்களை மிகவும் பாதிக்கிறது என்று தெரிகிறது.


அதேபோல வெப்துனியாவில் அய்யநாதன் காசித்தேவர் என்பவர் பணிபுரிகிறார், அவர் தமிழ் ஈழம் சம்பந்தமான போராட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அவர் சாதி வெறியுடனேயே தமிழ் உணர்வாளர் என்று காட்டிக் கொள்வதாக கூறி இதனை கண்டிக்கும் முகமாக சிலர் அவரது வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தப்போவதாகஅறிவித்தார்கள். அதற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். சாதியின் பெயரை கொண்ட ஒருவர் சாதிவெறியர் என்றால் மதங்களின் பெயர்களை கொண்டவர்கள் மதவெறியர்களாகத்தானே இருக்க வேண்டும் என்று கேட்கும்போது அதற்கு பதில் இல்லை.

அதேபோல அந்த அய்யநாதனே வந்து தன் வாதங்களை முன் வைத்தார். அவர், தன்னை சாதிவெறியன் இல்லை என்பதை காட்ட தன்பெயரில் உள்ள தேவரை எடுத்துவிடுவதாகவும், ஆனால் தன் தந்தையின் பெயரில் உள்ள தேவர் என்பதை தன்னால் எப்படி எடுக்க முடியும், தன் தந்தையின் பெயரை தன் பெயருடன் சேர்த்து எழுதும்போது அது வரத்தானே செய்யும் என்று கேட்டார் அதற்கும் பதில் இல்லை.

மேலும் தேவர் சாதியில் பிறந்த தான், தேவர் என்று சலுகை பெற்று கல்வி கற்ற தான் எதற்காக அதை மறைக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கும் பதில் இல்லை. ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள், சாதிப் பெயரில் சலுகை பெற்றாலும் அதை மறைத்துக் கொள் என்கிறார்கள். இதில் என்ன நீதி இருக்கிறது என்று தெரியவில்லை.

சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களிம் எந்தவித திட்டமும் இல்லை. அதை ஒழிக்கும்போது என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை கற்பனை செய்து பார்க்கக் கூட இவர்கள் தயாராக இல்லை. வெறுமனே சாதியில் இருப்பவர்களை இழித்தும் பழித்தும் பேசி விட்டால் சாதி ஒழிந்து விடும் என்று நம்புகின்றனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எந்த அப்பாவி மக்களை சாதிவெறியர் என்று திட்டுகிறார்களோ அந்த மக்களே சாதி பார்க்காமல் வாக்களித்து இவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர்கள் ஆவர். கடந்த 50 ஆண்டுகளாக சாதி ஒழிப்பாளர்கள்தானே ஆட்சியில் இருந்தார்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்?

இது ராமசாமி நாயக்கர் ஆரம்பித்து வைத்த போராட்ட முறையே அல்லாமல் வேறொன்றும் இல்லை. அவர்தானே பாம்பையும் பிராமணனையும் கண்டால் பிராமணனை அடி என்று சொன்னார். அன்று முதல் இன்றுவரை இவர்கள் பிராமணரை சாடி வருகிறார்கள். ஆனாலும் பிராமணரின் ஆதிக்கம் உச்ச நிலையிலேயே இருப்பதாக இவர்களே சொல்கிறார்கள். அதாவது கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கூட பிராமணர்தான் ஆதிக்கம் செலுத்துவதாக சொல்கிறார்கள்.

ஒரு அறுபது ஆண்டு காலமாக திட்டிவரும் இவர்களால் ஒரு சிறு பிரிவினரான பிராமணரின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியில்லை. இவர்கள் எப்படி ஒரு பெரும்பான்மை சமுதாயத்தை, அரசியல் ஆதிக்கம் செலுத்தும் சாதியை  வெறுமனே திட்டி மட்டும் ஆதிக்கத்தை இழக்கச் செய்ய முடியும்? இன்றளவும் அவர்கள் பிராமணர்கள் பற்றி மற்றவர்களின் மனதில் ஒரு பிளவையே ஏற்படுத்தி வருகின்றனர். இதையே இந்த சாதி ஒழிக்க முற்போக்குவாதிகள் இன்று வன்னியர், முதலியார், கவுண்டர், தேவர் பற்றி பேசி சாதிப் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

கருணாநிதி வன்கொடுமை சட்டத்தை கொண்டு வந்தாராம் ஆனால் ஆதிக்க சாதியனரின் ஒத்துழைப்பு இல்லாததால் அதை நடைமுறைப் படுத்த வில்லை என்று சொல்கிறார் ஒருவர். அப்படியானால் ஆதிக்க சாதியினரின் ஒத்துழைப்பை பெற நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.

வெள்ளையன் ஓரளவு உளவியல் அறிந்தவன். அதனால்தான் போர்புரியும் மக்களை குற்றப்பரம்பரை என்று அறிவித்தாலும் மறுபுறம் இவர்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்து மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளருக்கென்று தனிப்பள்ளிகளை கட்டினான்.

ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் உளவியல் ரீதியாக ஏதாவது செய்ய திட்டமிடுகிறார்களா? இதைக் கேட்டால் இவர்கள் எனக்கும் சாதிவெறியன் பட்டத்தை தருகிறார்கள். அந்தப் பட்டம் என்னை என்ன செய்துவிடும்?

சாதியை ஒழிக்கலாம் என்றாலும் இவர்களிடம் திட்டமில்லை. சாதி அப்படியே இருக்கட்டும் என்றாலும் இவர்களிடம் திட்டமில்லை.

அடுத்தபடியாக இவர்கள் கலப்புத் திருமணம் பற்றியும் கௌரவ கொலைகள் பற்றியும் பேசுகிறார்கள். சக மனிதனை ஒரு மனிதனாகவே மதிக்கத் தெரியாத அளவு சாதி வேறுபாட்டை ஊட்டிய இவர்கள் எவ்வாறு கலப்புத் திருமணம் மூலம் எவ்வாறு சாதியை ஒழி்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மாறாக பெரும்பான்மை கலப்புத் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அப்போது அவர்கள் சாதிகளிடம் நம்பிக்கையை இழந்து சமுதாயத்தில் ஒதுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஒரு ரூபாய் கூட தன் சட்டைப் பையில் இருந்து எடுத்து செலவழிக்கத் தயாராக இல்லாத இவர்கள் எப்படி கலப்புத் திருமண ஜோடிகளுக்கு உதவுவார்கள்? கலப்புத்திருமண ஜோடிகளை கொலை செய்கிறார்கள் என்று சொல்லும் இவர்கள் அவர்களை பாதுகாக்க தாங்கள் என்ன செய்தோம் என்பதை சௌகரியமாக மறந்து விடுகிறார்கள். இவர்களது கலப்புத் திருமணம் அவர்களின் சமூக உறவுகளை துண்டித்து அவர்களை நட்டாற்றில் விடுவது போலத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு சாதிக்காரருமே தன் சுய சாதிக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஒருவருக்கு பெண் கொடுத்து விடுவதில்லை. அவருடைய பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, குடும்ப வரலாறு எல்லாவற்றையும் பார்ததுதான் பெண் கொடுக்கிறார்கள், பெண் எடுக்கிறார்கள். சாதி பார்க்காதவர்கள் கூட இதைத்தான் செய்கிறார்கள்.

இதைத்தானே இன்றைய கல்யாண மலை முதல் அனைத்து திருமண ஏற்பாட்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. இவர்களும் துணிச்சலாக ஒவ்வொரு சாதியின் பெயரை எழுதி அவர்களுக்கு வரன்கள் தேடித் தருவதாக விளம்பரம் செய்கிறார்கள். இதில் விசேஷ சாதியினருக்கு மட்டும் வரன் தேடித்தருவது, வீடு விற்பது வாடகைக்கு விடுவது போன்ற அளவு முன்னேறியுள்ளார்கள். அதாவது வெறும் சமூக நிலையில் இருந்த சாதி இன்று வர்த்தக நிலையை எட்டியுள்ளது.

இந்த திருமண நிறுவனங்களை எதிர்த்து எந்த சாதிப் போராளியாவது ஏதாவது செய்ய முடியுமா?

அடுத்தாக இவர்கள் பேசும் விஷயம் இட ஒதுக்கீடு. சாதி ஒழிய வேண்டும். ஆனால் சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு தேவை. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. அதற்காகத்தான் நான் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க கூடாது என்று சொல்கிறேன். ஆனால் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை பகிர்ந்து கொள்ள இவர்கள் தயாராக இல்லை. ஒரு அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் உதவி செய்யக் கூடிய திறன் கொண்டது என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். இது இவர்களது உரிமையை பறிப்பதாக நினைக்கிறார்கள். எனவேதான் இவர்கள் சாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ராமசாமி நாயக்கரின் நிறுவனத்தை நடத்தி வரும் தனித்தமிழ் வீரர் கி. வீரமணி கூட உள் சாதியை அப்படியே பதிவு செய்யுங்கள் என்று அறிக்கை (கவனிக்கவும் அறிக்கை விளம்பரம் அல்ல) விடுக்கிறார். அதாவது சலுகைகளுக்காக சாதிப் பிரிவினைகள் அப்படியே இருக்க வேண்டும் என்பது இவர்களது நிலை. இது எதுவரை என்று கேட்டாலும் இவர்களிடம் பதில் இல்லை.

இவர்களுடன் ஒப்பிடும்போது சாதியாளர்களை பாராட்டலாம். இவர்கள் தங்களுக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து ஒரே பெயரியில் சாதிகளை பதிவு செய்யுங்கள் என்று சொந்த பணத்தில் விளம்பரம் செய்கிறார்கள். விட்டால் இவர்கள் நாளடைவில் இணையான சாதிகளுடன் இணைந்து இவர்கள் சாதி வேறுபாட்டை (வட்டங்களை) குறைத்து விடுவார்கள் என்றே நம்புகிறேன்.

எனவேதான் சாதி ஒழிப்பு என்று பேசுபவர்கள் உண்மையில் சமூக அக்கறையில் பேசவில்லை. இவர்கள் தங்கள் பிழைப்புக்காக சாதிப் பிரிவினைகளை வளர்க்க விரும்புகிறார்கள். அதனை சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.  ஆனால் சாதி தொடர்ந்து ஒரு வலுவான கட்டமைப்பாக இருந்து கொண்டு தன் கோர முகத்தை மட்டுமே அழகு படுத்தி வருகிறது.

அதேபோல ஒரு அமெரிக்கர் என்ன உணவு உண்கிறாரோ அதை நமும் உண்ண வேண்டும் என்று சொல்ல முடியாது. ரஷ்யரின் சமுதாய அமைப்பை நாமும் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல முடியாது. ஒரு மனிதருக்கு வேலை செய்யும் மருந்து மற்றொருவருக்கு வேலை செய்யாத போது ஏன் சாதி என்ற கட்டமைப்பை நம்முடைய விசேஷ சமுதாய அமைப்பாக கருதி ஏற்றுக் கொள்ளக் கூடாது? இந்த கட்டமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளாத வரை இதனை நெருங்க முடியாது என்பது மட்டும் உண்மை.

சாதி பற்றி பேசுவது நாகரீகம் அல்ல என்று கருதும் படித்தவர் வெறுமனே இதனை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்த போக்கை கண்டிக்காத காரணத்தால், அவர்கள் மேற்படி சாதி ஒழிப்பு போராளிகளின் செயல்களுக்கு உடந்தையாகி வருகின்றனர்.

எனவே படித்தவரும் படிக்காதவரும் இது பற்றி வெளிப்படையாக, தெளிவாக பேசி தங்களது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்று தீர்மானத்திற்கு வந்தால்தான் சமூக பிளவுகள் குறையும் மூடி மறைக்கும் நோய் முற்றவே செய்யும் எந்நாளும் குணமாகாது.

வாய்ப்புக்கு நன்றி

இப்படிக்கு

சாதிவெறியன் பெருமாள் அம்மவாசி தேவன்

1 comment:

Sakthi Ganesh said...

திரு.பெருமாள் தேவன் அவர்களுக்கு :
உங்கள் கேள்விகள் நியாமனது ஆனால் இவர்களை போன்றோர் இந்த கேள்விகளுக்கு எப்போதும் பதில் சொல்லப்போவது இல்லை. எனேன்றால் இவர்களுக்கு உண்மையில் ஜாதிய,மத ஒழிப்பில் ஆர்வம் இல்லை மாறாக இதை பயன்படுத்தி பணம் செய்வதே இவர்கள் வேலை.

சாதிகள் இல்லை எனச் சொல்வதும் இவர்கள் தான்,ஆனால் சாதியை பயன்படுத்தில் சலுகைகளை பெறுவதும் இவர்கள் தான், எத்தகைய முரன்பாடுகள் பாருங்கள்.

பசும்பொன் தேவர் சொன்னது எத்தகைய உண்மை.தேவர், எத்தகைய தீர்க்கதரிசி என்பது இப்போது புரிகிறது.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...