Tuesday, June 21, 2016

எங்கள் ஊர் காதல் கதை


(21-06-16) இன்று மதியம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியவர் என் சின்னம்மாவின் மகன். உசிலம்பட்டியிலிருந்து ஒரு தம்பி வருகிறார். ஏதோ கல்யாண பிரச்சனை. உங்கள் காவல் நிலையித்தில் அழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் என்று சொன்னார்.

நான் அங்கு சென்று பார்த்தேன். காவல் நிலையத்தின் வெளியே பெண் வீட்டார் குழுமி இருந்தனர். அவர்களின் பார்வையில் ஆத்திரம் தாண்டவமாடியது. மாப்பிள்ளையின் பெற்றோர் காவல் நிலைய வளாகத்தினுள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். என்னை அழைத்தவர்களும் அங்கேதான் இருந்தார்கள்.

என்ன விஷயம் என்று கேட்டேன்...
பெண்ணும் மாப்பிள்ளையும் எங்கள் ஊர் காவல் நிலைய எல்லைக்குள் வரும் அம்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு வசிப்பவர்கள் பிரமலைக் கள்ளர்கள் மட்டும்தான்.

பெண்ணும் மாப்பிள்ளையும் பிரமலைக் கள்ளர்கள்தான். பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சகோதரர் முறை கொண்டவர்களைப் போல பழகி வந்துள்ளனர்.

ஆனால் மாப்பிள்ளை பாப்பாபட்டி கோவில் கும்பிடுபவர். பெண் மானூத்து கோவில் கும்பிடுபவர். எனவே பிரமலைக் கள்ளர்களின் சாதி வழக்கப்படி பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தமான திருமண முறையே உள்ளது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் காணவில்லை. அவர்கள் ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டார்கள். பெண் வீட்டார் இது பற்றி புகார் செய்யவே காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக மாப்பிள்ளையின் தாய்-தந்தையரை காவல் நிலையத்தில் இருக்கச் செய்துள்ளனர். காலையில் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் காவல் நிலையத்தின் உள்ளே அமர்த்தி இருந்தார்கள். இருவருமே வயது வந்தவர்கள். அவர்களைச் சந்தித்து விட்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.
அப்போது அங்கு வந்த பெண் வீட்டார் ஆத்திரக் குரலோடு வந்தனர். பெண்ணின் தயார் காவல் நிலைய சுவற்றில் முட்டி அழுதார். காவலர்கள் அவரை கண்டித்து வெளியில் அனுப்பினார்கள். நான் வெளியில் வரும்போது பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர் “அவனை கை-கால்களை வெட்டிப் போட வேண்டும்” என்று இரைந்தார்.

ஆய்வாளர் உணவருந்தச் சென்று விட்டதால் நானும் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன். நான் மாப்பிள்ளை வீட்டாரைச் சந்தித்து விட்டு வந்ததைக் கண்ட பெண் வீட்டார் என்னையும் ஆத்திரமாகவே பார்த்தார்கள்.

மாலை 6 மணியளவில் காவல்நிலையம் சென்றேன். அதற்குள் விசாரணையை முடித்து விட்டிருந்தார்கள். பெண் வீட்டாரையும் அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் ஒரு காரைக் கொண்டு வந்து பெண்-மாப்பிள்ளை இருவரையும் அழைத்துச் சென்றனர்.

விசாரித்தபோது மணமகன் போதிய வசதி இல்லாதவர் என்று தெரிந்தது. அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற அந்த மாப்பிள்ளை அந்தப் பெண்ணுக்கு மாற்று உடை கூட வாங்கித் தரவில்லை என்று சொன்னார்கள். சொந்த சாதிக்குள் காதலித்தாலும் இதுதான் காதலுக்கு கிடைக்கும் வரவேற்பு. இதனை புரியாத புரட்சியாளர்கள். காதல்-கத்தரிக்காய் என்று புலம்பித் திரிவார்கள்.


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...