Wednesday, October 14, 2015

தேவரின் தமிழுணர்வும் தமிழ்ப் பற்றும்



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசியம் மீது பற்றுக் கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேவேளையில் அவர் அதற்கு சற்றும் குறையாத அளவுக்கு தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் மண் மீதும் பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் தேவரைப் பற்றிய புத்தகங்களை வாசித்தறியாத சிலர் தேசியம் என்ற பெயரில் தமிழுணர்வை, தமிழர் உரிமையை கைவிட வேண்டும் என்று பேசுகிறார்கள். தேவர் இன்னமும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிராக தமிழர் உரிமைகளுக்காக போரடியிருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தேவர் தமிழ் மொழி மீதும், தமிழ் நாட்டின் மீதும் பற்று வைத்திருந்தார் என்பதை விவரிக்கும் வகையில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ்

1949 பிப்ரவரி 13-ம் வெளியான ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் இதழான கண்ணகியில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதுகிறார் தேவர். தமிழின் பண்டைக்காலப் பெருமை இன்றைக்கு மிகவும் குறைந்திருக்கிறது என்று குறிப்பிடும் அவர், இன்றைக்கு வானுலக ஆராய்ச்சியில் சூரியனில் புள்ளிகள் இருப்பதை மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடித்திருக்கிறார்கள், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்ற சந்தேகப்படுகிறது அறிவியல் என்று சொல்கிறார்.

ஆனால் பண்டைத் தமிழர் மண்ணுலகு, வானுலகு, வானோர்க்கு கந்த உலக என்கின்ற அனைத்தையும் ஆராய்ந்துள்ளனர். அண்டம், பிண்டம், சராசரம், அதலம், மத்தியம், பாதாளம் இவைகளில் உள்ள சஞ்சரிப்பு குறித்து சிவஞான போதமென்னும் நூலைப் பார்த்து தெரிந்துகொள்க என்று குறிப்பிடுகிறார். உயிர்கள் இறப்புக்குப் பின்னர் அவரவர் குணங்கள், செய்கைக்குத் தக்கவாறு பல இடங்களிலான வசிப்பை பெறும் என்று சொல்லும் அவர்,
யானென தென்னுஞ் செறுக்கறுப்பான்-வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
என்ற குறளை எடுத்துக் காட்டுகிறார்.

யான்’, ‘எனதுஎன்னும் அகங்காரமும் ஆசையும் அற்றவன் மண்ணுலகினின்றும் உயர்ந்த, வானுலகினின்றும் உயர்ந்த இடத்திற்குப் போய்ச் சேருகிறான் என்று நிச்சயப்படுத்தி சொல்வதிலிருந்து வானுலகிலும் சஞ்சரிப்பு இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அது யோக பாக்கிய சுவர்க்க நிலையே தவிர முக்தி நிலையில்லை என்பதையும் வெகு தெளிவாகக் காட்டுகிறது என்று விளக்கம் அளிக்கிறார்.

மேலும், பண்டைத் தமிழ் மக்கள் மூளை கலையில் மட்டுமல்ல, சிற்பத்திலும், சித்திரத்திலும், கணிதத்திலும், வான ஆராய்ச்சியிலும், கடலாராய்ச்சியிலும் கரை கடந்து நின்றார்கள். எடுத்துக் காட்டாக மொகஞ்சதாரோஎன்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும் பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது. அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது. இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும் என்று சொல்கிறார்.

இந்தக் கட்டுரையில் தேவர், தமிழரின் ஓவிய நுணுக்கம், கணித நுணுக்கம், கடலாராய்ச்சி, வைத்தியம், ஆகாய சஞ்சரிப்பு ஆகியவை குறித்துப் பேசுகிறார். இன்றைய மருத்துவர்கள் போதிக்கின்ற சுகாதாரத்தை ஆசாராக் கோவைஎன்ற சிறு நூல் போதிக்கிறது என்று தமிழின் பெருமை குறித்து பேசுகிறார்.

மேலும், தமிழ்ச் சங்கம், முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று இருந்த காலமும், அகஸ்தியர், நக்கீரர் போன்ற ஞானப்புலவர்களும், இடைக்காடர், ஔவை போன்ற துறவிகளும், முருகன், சிவபெருமான் போன்ற தெய்வங்களும் அச்சங்கங்களை ஆக்குவித்தார்கள், ஊக்குவித்தார்கள். அவை இன்று சீர்கெட்டுக் கிடக்கின்றன. இவைகளுக்கு ஆக்ககாலம் வருகிறது என்று சொல்லி கட்டுரையை முடிக்கிறார். (பசும்பொன் தேவரின் கட்டுரைகள்- கே. ஜீவபாரதி, பக்கம் 19, 20, 21, 22, 23)

மலேயா தமிழரின் நிலை

சுதந்திரம் பெற்ற நிலையில் மலேசியாவில் துப்பாக்கி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக தொழிலாளர்களுக்காக போராடி வந்த கணபதி என்ற தமிழருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேவேளையில் இந்தியாவுக்கு எதிரான போரில் ஹைதராபாத்திற்கு ஆயுதம் வழங்கிய சிட்னி காட்டன் என்ற ஆஸ்திரேலியருக்கு ஆங்கில நீதிமன்றம் 200 பவுண்ட்கள் அபராதம் மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை சுட்டிக் காட்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காமென்வெல்த்தில் உறவு வைத்துள்ள இந்திய அரசாங்கம். தமிழரான கணபதியை காப்பாற்றத் தவறி விட்டது என்று குற்றம் சட்டி நேதாஜி இழலில் கட்டுரை எழுதினார். அதேபோல சாம்பசிவன் என்ற மலேயாகாரரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் லண்டன் பிரிவி கவுன்சிலில் பாதுகாக்கப் போவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது. அதையும் தேவர் கண்டித்தார்.

இலங்கை தமிழரின் நிலை

இலங்கையில் கடுமையாக உழைத்துப் பிழைத்து வரும் தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு (தமிழகத்திற்கு) பணம் அனுப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பதையும் தேவர் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.

அதேபோல இலங்கை அமைச்சர் ஜெயவர்த்தனா இந்தியர்கள் (தமிழர்கள்) பொருளாதாரத்தை சுரண்டி இந்தியாவுக்கு அனுப்பி அங்குள்ள நிதிநிலையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டுவதை குறிப்பிட்டு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் நேரு இந்தப் பிரச்சனைகளை போக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவ்வாறு நேரு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கை வாழ் இந்தியர்களுக்கு அது பெருத்த இடராக விடியும் என்று எச்சரிக்கிறார். (பசும்பொன் தேவரின் சிரிய சிந்தனைகள் - க.பூபதிராஜா, பக்கம் 74-85)

தமிழனுக்குக் கிடைத்த மரியாதை

1955-ம் ஆண்டு சபாநாயகராக இருந்த சிவசண்முகம் பிள்ளை வேறொரு பதவிக்கு சென்றார். அப்போது அதைப் பராட்டும் விதத்தில் தேவர் ஆகஸ்டு 10-ம் தேதி சட்டப்பேரவையில் பேசும்போது அது தமிழனுக்கு கிடைத்த மரியாதை என்று பேசினார்.

ஏற்கனவே கவர்னர் பதவி கிடைக்க வேண்டிய சந்தர்ப்பம் இருந்து அது கைநழுவிப் போனது துக்கரமான சம்பவம் என்று குறிப்பிடும் தேவர், தற்போது கொடுக்கப்படும் பதவியும் நிலையை மாற்றும் பதவிதானே தவிர உங்கள் பதவியை உயர்த்தும் பதவி என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

உங்களுக்கு தற்போது கிடைத்திக்கும் கௌரவம் உங்களுக்கு மாத்திரம் சார்ந்ததல்ல, முதலில் அது தமிழருக்கு கிடைத்த மரியாதையாகும். இரண்டாவதாகச் சென்னைவாசிக்கு கிடைத்த மரியாதையாகும். மூன்றாவதாக இந்தச் சட்டசபைக்கு கிடைத்த மரியாதை. நான்காவதாக ஹரிசன சமூகத்திற்குக் கிடைத்த மரியாதையாகும். இத்தனைக்கும் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு பேசுகிறார். (சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - க. பூபதிராஜா, பக்கம் 169, 170)


தமிழ் ராஜ்யம்என்று பெயரிடுக

1956-57 ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் மீதாக 1955 மார்ச் 3-ம் தேதி தேவர் சட்டசபையில் பேசியபோது, தமிழகத்திற்கு தமிழ் ராஜ்யம்என்று பெயரிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். மேலும் நிதியமைச்சர் தனது உரையை தமிழில் கொடுத்திருப்பதை பாராட்டும் அவர், ஆந்திரா பிரிந்த பின்னர் இந்த ராஜ்யத்தை தமிழ் ராஜ்யம்என்றழைக்காமல் எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்என்று அழைப்பது மிகவும் வருந்த வேண்டியதாகும் என்று குறிப்பிடுகிறார். அந்த நிலை என்றைக்கு மாறும் என்பதே தெரியவில்லை என்று கூறி வருந்துகிறார்.

மேலும் இந்தியாவிலுள்ள இதர ராஜ்யங்கள் எல்லாம் தங்கள் ராஜ்யமொழி இன்னதென்று தீர்மானித்து விட்டன. வங்காளம், பஞ்சாப் போன்ற பெரிய மாகாணங்களும், ஒரிசா போன்ற சிறிய மாகாணமும் கூட தங்கள் தாய் பாஷையை ராஜ்ய மொழி ஆக்கிக் கொண்டன. ஆனால் இங்கே தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்காததற்கு காரணம், ‘சில கன்னடர்களும், சில மலையாளிகளும் இன்னமும் நம்மோடு இருப்பதுதான்என்று சொல்லப்படுகிறது.

அது வாஸ்தவம்தான். ஆனால் மலையாளிகளுக்கு தனி ராஜ்யமாக திருவாங்கூர் - கொச்சி இருக்கிறது. அதைப் போலவே கன்னடர்களுக்கும் தனி ராஜ்யமாக மைசூர் இருக்கிறது. சென்னையிலிருந்து பிரிந்துபோன தெலுங்கர்கள் கூட ஆந்திர ராஜ்யத்தை தங்களது ராஜ்யமாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆந்திர ராஜ்யம் பிரிந்து போன பின்னாலும், நம் ராஜ்யத்திற்கு தமிழ் ராஜ்யம் என்று பெயரிடாமல் எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்என்று பெயரிட்டிருப்பது வருந்த வேண்டிய விஷயமாகும் என்று சொல்கிறார்.

மேலும், இன்றைக்கு இந்த ராஜ்யத்தில் தமிழர் ஆட்சி வந்து விட்டது என்று வெளியே பேசப்படுகிறது. அதோடு பச்சைத் தமிழர்ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் பச்சைத் தமிழருடைய ஆட்சியில்இந்த ராஜ்யம் தமிழ் ராஜ்யம்என்று அறிவிக்கப்படாவிட்டால் பயன் என்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார்.

தமிழ் மொழி வளரவேண்டும், தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு அறிகுறியாகவே பட்ஜெட் பிரசங்கம் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளதுஎன்றெல்லாம் சொல்வது வெறும் பிரச்சாரமாகப் போய்விடாதிருக்க வேண்டுமென்றால், இன்றைக்கு நாம் மட்டும் கலையை வளர்ப்பதற்கும், உயர்ந்த கருத்துக்களை அமைப்பதற்கும், சிறந்த மொழியாக விளங்கி வரும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் சட்டப்பூர்வமாகச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்த உரையின்போது விவசாயிகளுக்கு விதிக்கப்படும் வரி அதிகமானது என்று சொல்லும் அவர்
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
என்ற குறளை மறந்து விடக் கூடாது என்று சுட்டிக் காட்டுகிறார். (சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - க. பூபதிராஜா, பக்கம் 148, 149)

தமிழக எல்லை மீட்பு போராட்டம்

தமிழரசுக் கட்சியின் நிறுவனத் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கேற்ப பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 7.6.1956-ம் தேதி குமரியில் நடந்த  எல்லை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய தேவர், தமிழரசு காணவும், தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும் தமிழை அரசு மொழியாக்கவும் சரியான நேரத்தில் தமிழ் அரசு கழகம் முன் வந்திருக்கிறது என்று கூறினார்.

மேலும், தமிழ்நாடு - தமிழுக்கும் தமிழ்ப் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. அந்த அலைக்கழிவு, முடிவில் தமிழ் மாகாணம்என்று கூட சொல்ல இயலாது - எஞ்சிய சென்னைஎன்பதன் முறையிலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

சரித்திர சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது. இந்நிலையில், சென்னையை ஒட்டி, ஜனத் தொகையிலும் சர்வமுறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து நிற்கிறது. இதற்கென ஒரு போராட்டம் எழுந்த பின்னரும்  காங்கிரஸ் மந்திரி சபை ஆங்கிலேய முறையை பின்பற்றி அடக்குமுறையால் கையாள நினைக்கிறதே தவிர அறிவு வந்ததாக தெரியவில்லை.

எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரி சபை வழக்கம்போல அசட்டுத்தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிர்பார்க்க நேரும். அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ்நாட்டில் தயாரிக்கும் என்று எச்சரித்து தமிழ் எல்லைப் போராட்டத்திற்கு ஆசிகூறுகிறேன் என்று பேசி முடித்தார். (பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள் - க.பூபதிராஜா, பக்கம் 201, 202)

உலக நாகரீகத்தின் வேர் தமிழ்

1956-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்கும் சட்டம் கொண்டு வரப்படுகிறது. அது குறித்து பேசும் தேவர், இந்தச் சட்டம் மிகவும் காலம் தாழ்த்தி செய்யப்படுவதாகும் இந்த வருஷ கடைசியில் கொண்டு வந்திருப்பது சுப சகுனமாக உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். அதோடு, தமிழ் மொழி மற்ற மொழிகளைப் போல தோன்றியது அல்ல, ஒவ்வொரு எழுத்தும் என்னென்ன ஓசையோடு தோன்றியவை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் மொழி உலக நாகரீகத்தையே முதலில் தொட்டு நின்ற மொழி. இது லெமூரியா கண்டத்தில் தோன்றியது. அங்குதான் முதல் தமிழ்ச் சங்கம் அமைந்தது. அதற்கு பிந்தையதுதான் ராமயண காலம். கபாடபுரத்தில் இரண்டாவது தமிழ்ச் சங்கம் அமைந்தது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் மதுரையில் அமைந்தது. நாகரீகம் தென்னிந்தியாவில் உற்பத்தியாகி வட இந்தியா, பாரசீகம், பாபிலோன், கிரீஸ், ரோம், ஜெர்மனி சென்று அங்கிருந்து பிரான்ஸ், இங்கிலாந்து, அங்கிருந்து அமெரிக்காவின் கிழக்குப் பாகத்திற்கு சென்று அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ, பின்னர் ஜப்பான், சீனா வந்து உலகையே ஒரு சுற்று சுற்றி வந்துள்ளது. இப்படியாக உலகத்திற்கே ஆதியாக நிற்பது தமிழ்த் தாயகம் என்று கூறுகிறார்.

மேலும், தமிழ் எழுத்துக்களில் மாறுதல் வேண்டும் என்பவர்களை கண்டித்ததோடு தமிழில் ஆங்கிலத்திற்கு இணையான வார்த்தைகள் உள்ளன. ஏற்கனவே தமிழறிஞர்கள் இயற்றிக் கொடுத்துள்ள சொற்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். (சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர், பக்கம் 179, 180, 181)

சிங்களச் சன்னதியில் தமிழன் தலை கவிய மாட்டான்

இலங்கையில் தமிழர்கள் சிங்களருக்கு இணையாக வாழ விரும்புகிறார்கள். அவ்வாறு வாழ முடியாத போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகவும் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்று தேவர் தனது கட்டுரையில் எழுதுகிறார். அந்தக் கட்டுரை இதோ...

இனம் என்றால் சிங்கள இனமும தமிழ் இனமும் என்று இருந்தால் பிரச்சனைக்கு இடமே இல்லை. மொழி என்று இருந்தால் சிங்கள மொழியும் தமிழ்மொழியும் என்றிருந்தால் சிக்கலே கிடையாது. இது பண்டார நாயகாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.

ஆயினும் அந்த நிலைமையை ஏற்படுத்த அவர் மறுக்கிறார். தம்மைப் பதவியில் அமர்த்தியவர்கள் சிங்களவர்களாம். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கவும சிங்களவர்களைப் பாதுகாக்கவுமே தம்மை அவர்கள் தெரிவு செய்தார்களாம். அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தாம் எதையும செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார். பாவம் பதவி போய்விடுமே என்ற பயம்! பதவி என்ன அவ்வளவு பெரிதா? சர்வாதிகாரம் சாசுவதமானதா? அப்படி நினைத்தால் அதன் விளைவை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.

சிங்களவர்களுக்குச் சிங்களம் எப்படியோ அப்படித்தான் தமிழர்களுக்கும் தமிழ் உள்ளது! சிங்களவர்களுக்குத் தமது மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுண்டோ அவ்வளவு அக்கறை தமிழர்களுக்கும் தமது மேம்பாட்டில் உண்டு. ஆகவே, நாட்டில் ஒற்றுமை வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு. அடிமைகளாக வாழத் தேவையில்லை! அடிமைகளாய், உரிமை அற்றவர்களாய் வாழ்வதைவிடச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சுத்த வீரர்களாய், மானம் உள்ளத் தமிழர்களாய் மடிவது மேல் என்று அவர்கள் கருதுகிறார்கள். (1952 பசும்பொன் தேவரின் அரசியல் முழக்கம்- க.பூபதிராஜா, பக்கம் 141)

தமிழ்க் குலத்தின் தனிப்பெருந் திருநாள்

1960-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி கண்ணகி இதழில் தமிழ்க் குலத்தின் தனிப்பெருந் திருநாள் என்ற தலைப்பில் தேவர் பொங்கல் திருநாளைப் பற்றி கட்டுரை எழுதுகிறார். அதில் நீண்டகாலம் தொட்டே தமிழ் மரபு தைப் பொங்கலைத்தான் புத்தாண்டாக வைத்துக் கொண்டாடி வந்தது. இடையில் ஏற்பட்ட மாற்றம்தான் மேஷ ராசியில் சூரியன் புகும்போது, அதாவது சித்திரை மாதத்தை புது ஆண்டாகக் கொண்டாடிய பழக்கம் என்று குறிப்பிடுகிறார்.

மேலும், “தமிழர்கள் தமிழ் பாஷைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்என்று வேகமாகப் பேசுகிறதோடு, தமிழ்ப் பண்பு ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டதென்று பறைசாற்றுகிறதோடு, தமிழனை நாஸ்திகப் பாதைக்கு இழுத்துச் சென்று, இழிவுபடுத்துகிற நிலைமைக்கு முனைந்து நிற்கிறார்கள். முழுமூச்சாகவும் பாடுபடுகிறார்கள். இது இந்தியாவின் தேசியம் குறித்து வேகமாகப் பேசிய நபர்களால் மறைமுகமாகக் காமன் வெல்த் உறவிற்கு இழுத்துச் சென்ற கதைபோல, தமிழனை முன்னேற்ற நினைக்கும் கூட்டம் தமிழனை இழிவுபடுத்திய நாசத் தன்மையாகும் என்று கண்டிக்கிறார்.

மேலும், ஆலய வணக்கம், பூஜை, வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை இவைகள் எல்லாம் ஆரியர் கூற்று என்று சொல்லப்படுகிறது, சீர்திருத்தவாதிகளால். ஆரியரென்பர் சரித்திரத்தின்படி இந்தியாவில் நுழைந்த காலம் கிட்டத் தட்ட 3500 வருஷங்களாகும். தமிழ் மன்னன், தமிழ்ச் சங்கம், தமிழ்க் கலை, தமிழ்ச் சித்திரம் வாழ்ந்த காலம் பல லட்ச வருஷங்களுக்கு முன்பே இருந்ததாகும் என்று குறிப்பிடுகிறார்.

இந்தப் பண்டைய தமிழ்நாட்டை - சர்வ நூலும் கண்ட ஒரு தமிழ் பாஷையை அவர்கள் கையாண்ட பழக்க வழக்கத்தை - மதத்தை - வழிபாட்டை சிதறடிப்பது, சீர்குலைப்பது தமிழுக்குப் பாடுபடுவதாகாது. இதில் தமிழர்கள் உஷாராக வாழ்ந்து தமிழன்என்ற மானத்தோடு தலைநிமிர்ந்து நடக்கத் தமிழன்னை வருகிற புத்தாண்டில் புத்துணர்ச்சி அளிப்பாளாக, வாழ்க தமிழ்த்தாய், வளர்க தமிழ் என்று வாழ்த்துக் கூறி முடிக்கிறார். (பசும்பொன் தேவரின் கட்டுரைகள்- கே. ஜீவபாரதி, பக்கம் 189, 190, 191)

தமிழின் பெருமை

13.02.1949 அன்று மதுரை சௌராஷ்டிரா பெண்கள் பள்ளியில் மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருக்குறள் அஷ்டாவதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழ் மொழியின் பெருமை, தமிழரின் கலைத்திறன், மருத்துவ திறன் போன்றவை பற்றி கீழ்க்கண்ட வகையில் பேசுகிறார்.

தமிழின் பண்டைக்காலப் பெருமை இன்றைக்கு மிகவும் குறைந்திருக்கின்றது. மண்ணுலகு மட்டுமல்ல, விண்ணுலகையும் தேர்ந்து தெரிந்துகொண்டு களிக்க பாடிக் கொடுக்கப்பட்டது தமிழ்.

தமிழரின் கலைத்திறன்

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு குறிக்கிறேன். பழைய காலத்தில்  இருந்த சிற்பங்கள், இற்றைக்கு இருக்கின்ற கோவில்கள், மண்டபங்கள், கற்சிலைகள், அஜந்தாகுகை இன்னும் மற்றுமுள்ள மகாபலிபுரம் போன்ற இடங்களிலுள்ளவைகளைக் கண்டு தேர்ந்து தெளிக.

முற்காலத்தில் அரசர்களுக்கு அரசிகளுக்கு ஒருவருக்கொருவர் பார்ப்பதற்கு ஓவியங்கள் தீட்டுவதுண்டு. அந்த படங்களெல்லாம் ஒருவரை ஒருதரம் பார்த்த மாத்திரத்தில் எழுதப்பட்டவை. அரசிகள் படங்களெல்லாம் மெல்லிய சல்லாவுக்குப் பின்னால் அவர்களை நிறுத்தி, வெளியிலிருந்து அவர்கள் உருவை திரை மறைவில் நிழல்போலாடும் பிம்பத்தைத் கண்டு எழுதப்பட்டவைகள். ஒருவருடைய சிறு விரல் நகம் கிடைத்தால், அதை வைத்துக் கொண்டே இன்ன விரலுக்கு இந்த நகம் இருக்கும். அந்த விரல் சாமுத்திரிகா லட்சணப்படி இன்ன கையிலேயே அமையும் என்று முடிவு கண்டு உருவங்கள் சிலை ரூபமாகவும், படங்கள், சித்திர ரூபமாகவும் அமைக்கப்பட்ட காலமும் உண்டு.

தமிழரின் மருத்துவ சக்தி

மேலும் மருத்துவம் சம்பந்தமாகவோ பஸ்பம், சுண்ணம், திராவகம், கஷாயம், செந்தூரம் என்ற முறைகள் அத்தனையும் தேர்ந்து தெளிந்து, அதோடு மட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றுந்திறமையும் தங்கம் செய்யும் திறமையும் பெற்றிருந்தது தமிழ். அதைத்தான் தாயுமான சுவாமிகள் கந்துக மதகரியை வசமாய் நடத்தலாம்என்ற பாட்டில் ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்”  என்கிறார். விற்றுண்ணல் என்பது தங்கமாக்குவது. ரசத்தைக் கொட்டி குளிகைகள் உண்டாக்கி அக்குளிகை மூலம் ஆகாயத்தில் சஞ்சரித்த காலமும், அதிவிரைவில் பல ஆயிரம் மைல்கள் தனிச் சரீரத்தோடு சஞ்சரித்த காலமும் உண்டு.

அக்காலத்திய வைத்தியர் ஒருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப் பார்த்து அவன் கீரையோ கீரை என்று கூறும் குரலைக் கேட்டு பக்கத்து மனிதரிடத்தில் இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான். இவனை சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்என்று சொன்னபடியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அவன் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தின் சிறப்பில் ஆதாரமிருக்கின்றது. தமிழ் சங்கம், முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று இருந்த காலமும் அகஸ்தியர், நக்கீரர் போன்ற துறவிகளும், முருகன், சிவபெருமான் போன்ற தெய்வங்களும், அச்சங்கங்களை ஆக்குவித்தார்கள். ஊக்குவித்தார்கள். அவைகள் இன்று சீர்கெட்டு சிதைந்து கிடக்கின்றன. இவைகளுக்கு ஆக்க காலம் வருகின்றது.

தமிழின் எதிர்காலம்

அதற்கு அறிகுறியாகத்தான் சமீபகாலத்தில் தோன்றிய மகான் ஜோதி ராமலிங்க சுவாமிகள்,

கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆழ்க
தெருள் நிறைந்த நல்லோர் நினைத்த நலம்பெருக
எல்லாரும் இன்புற்று வாழ்க இசைந்து

என்று சொல்லி மறைந்திருக்கிறார்கள். சீக்கிரம் திருவருள் செங்கோலாட்சி நடைபெறும் என்று அருளியிருக்கிறார்கள். அந்தக் காலம், தமிழ்த் தன்மை பெற்று வன்மை பெற்று வளமுற்று இந்தியாவை ஆளுங்காலம். அதைத்தான் மிகச் சமீபகாலத்தில் மறைந்த பாரதியார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போலினிதாவ தெங்கும் காணோம்என்றும்,

இந்நாடு சேம்முற வேண்டுமெனில்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

என்றும் பாடியிருக்கிறார். இதை எவர் மறைப்பினும் எதிர்ப்பினும் தமிழ்மொழி தன் சிம்மாசனம் ஏறுங்காலம் சமீபிக்கிறது. தெய்வத்தின் திருவருளை எதிர்த்து நிற்க சிறு அரசுக்குச் சக்தி போதாது. அக்காலத்தில் குறள் அதன் மகிமையும் மாண்பும் உணர்ந்த மக்களைப் பெரிதும் உடைத்தாகி இயங்கும். இத்தனைக்கும் உலகம்மை மீனாட்சி உதவி புரிவாளாக! அந்நாள், திருக்குழந்தை முருகன் அகஸ்தியருக்குப் போதித்த முழுத் தமிழும் முழங்கும்-முழு இந்தியாவிலும். வாழ்க தமிழ் என்று பேசி முடிக்கிறார். (நன்றி- பசும்பொன் களஞ்சியம், தேவரின் சொற்பொழிவுகள்)

இவை ஒருசில எடுத்துக் காட்டுக்களே. அவர் தமிழுணர்வுடன் பேசிய அனைத்தையும் தொகுத்தால் ஒரு புத்தகமாகவே ஆகிவிடும். தேவர் எந்தப் பொருள் குறித்து பேசினாலும் திருக்குறள், திருவருட்பா, திருவாசகம், சிவஞான போதம், சித்தர் பாடல்களிலிருந்து மேற்கோள்களை காட்ட தவற மாட்டார். தேவர் இந்திய தேசத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தாலும் தமிழ் மொழி, மண், இனத்தின் மீதும் போற்றுதலுக்குரிய பற்று வைத்திருந்தார்.
*****






2 comments:

Unknown said...

இலங்கையில் கடுமையாக உழைத்துப் பிழைத்து வரும் தமிழர்கள் இந்தியர்கள் என்றுதான் பேசி உள்ளார், ஒரு போதும் தமிழர்கள் என்று எல்லை தாண்டி தேவர் பேசியதும் இல்லை அதற்க்கான தேவையும் இல்லை காரணம், இன்றும் மலையக இந்திய வம்சா வழி தமிழர்கள் என்றே இலங்கையில் தனித்து அடையாளபடுத்த படுகிறார்கள், இலங்கையில் பல்வேறு தமிழர்கள் உள்ளார்கள், இலங்கை தமிழர் என்று சொல்வது நகைப்புக்குரியது,
கங்கை ஆறு போன்றது தேவர் அய்யாவின் இந்திய தேசிய உணர்வு அதை உம் டம்ளருக்குள் அடைக்காதீர்

பெருமாள் தேவன் செய்திகள் said...

அவர் தமிழர்கள் இந்தியர்களுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா?

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...