Friday, July 19, 2019

காமராஜர் தமிழ்த் தேசியத் தந்தையா?

காமராஜர் "தமிழ்த் தேசியத் தந்தை" என்பது போல அண்ணன் சீமானும் அவரது தம்பிகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். காமராஜர் இந்திய தேசியத்திற்கான தலைவரே அன்றி தமிழினத்திற்கான தலைவர் அல்ல. அவர் அவ்வாறு இருந்திருந்தால் ஆதித்தனார் தனியாக "நாம் தமிழர்" கட்சியைத் தொடங்காமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து காமராஜரின் வழியில் செயல்படத் தொடங்கியிருப்பார்.
மற்றபடி திராவிடக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் காமராஜரின் ஆட்சி மிகச் சிறந்த ஆட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவரது ஆட்சியில் குறையே இல்லை என்று பேசுவது ஒருவகை மூளைச் சலவை ஆகும். காமராஜரின் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தமிழினப் பற்றுக் கொண்ட நாடார் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் ம.பொ.சி., மார்ஷல் நேசமணி, சங்கரலிங்கம் நாடார். எல்லைப் பிரிவின்போது ம.பொ.சி. நடத்திய போராட்டங்களை கண்டுகொள்ளாத காமராஜர், எஞ்சியுள்ள சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கம் நாடாரை சாக விட்டு வேடிக்கை பார்த்தவர்தான் காமராஜர்.
உண்மை இப்படி இருக்கும்போது காமராஜர் தமிழத் தேசியத்தின் தந்தை என்பது போல பேசுவது சீமானின் மூளைச் சலவையாகும். தமிழ்த் தேசிய அரசு என்பது காமராஜரின் ஆட்சியின், பிரபாகரனின் தமிழீழ அரசு மற்றும் பண்டைத் தமிழர் அரசுகளின் நல்ல தன்மைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ ஒரு ஆட்சியாளரை பின்பற்றும் அரசாக இருக்காமல் சமகாலத்தில் சிறந்த அரசாக இருக்க வேண்டும். சீமான் இன்னொரு விஷயத்தை பேசி வருகிறார். அது என்னவென்றால் அன்பான சர்வாதிகார அரசை அமைப்பது. அதைத்தான் காமராஜர் நடத்தியதாகவும் சொல்கிறார். அவரை சிறந்த ஜனநாயகவாதி என்றும் சொல்கிறார். காமராஜரின் சர்வாதிகார பக்கம்தான் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது.
எல்லைப் பிரிவினை ஆற்று நீர் உரிமைகளை இழந்தோம். நாம் இன்றும் இந்தியை எதிர்க்கிறோம். காமராஜர் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஜனநாயகமும் அன்பான மட்டுமல்ல எந்தவித சர்வாதிகாரமும் ஒன்றாக செயல்பட முடியாது. அது தமிழர்களுக்கு எதிரானதாகவே அமையும்.
தமிழர்கள், மராட்டியர், நாயக்கர், ஆங்கிலேயர், காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தலை சிறந்த ஆட்சியை அமைக்க வேண்டும். அதை விட்டு விட்டு, காமராஜரின் ஆட்சி மற்றும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தை நடுநிலையோடு சீர்தூக்கி பார்க்காமல் மா.பொ.சிவஞானம் கிராமணியார், மார்ஷல் நேசமணி, சங்கரலிங்கம் நாடார் ஆகியோரை வசதியாக மறந்து விட்டு காமராஜரை மட்டும் தூக்கி பிடிப்பது என்பது வாக்கு வங்கி அரசியல் அல்லது சாதிவெறி அரசியலே அன்றி வேறொன்றுமில்லை. அன்பான சர்வாதிகார ஆட்சியமைக்க விரும்பும் அண்ணனும் தம்பிகளும் செவி சாய்ப்பார்களா?

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...