Saturday, November 19, 2016

பிழை எதில்?


கருப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் நீங்கள் ஒரேடியாக மோடியை குறை கூறுகிறீர்கள் என்று ஒரு உறவினர் கேட்டார்.

இதுபோன்ற கேள்வியை கேட்பவர்களுக்கு....

கருப்புப் பணத்தை ஒழிப்பதை, கள்ளநோட்டை ஒழிப்பதை, தீவிரவாதிகள் அதுபோன்ற பணத்தை பயன்படுத்துவதை ஒழிப்பதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

நாம் குறை கூறுவதெல்லாம், இவர்கள் கையாளும் முறையைத்தான். முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். எத்தனை பெரிய மதிப்புக் கொண்ட பணம் வெளியிடப்படுகிறதோ, அத்தனை அளவு பொருட்களின் மதிப்பு உயரும். ஆக மொத்தத்தில் பண வீக்கம் ஏற்படும்.

உண்மையிலேயே இவர்கள் பொருளாதாரச் சீர்திருத்தம் கொண்டு வருபவர்களாக இருந்திருந்தால், 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த தோடு நிறுத்தி இருக்க வேண்டும். 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டதுமே உண்மையில் இவர்களின் நோக்கம் பொருளாதாரச் சீர்திருத்தம் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.

அடுத்த கட்டமாக, இவர்கள் இதனை ஏதோ அணு ஆயுதச் சோதனை நடத்தியதற்குச் சமமாக ரகசியமாக, சாமர்த்தியமாக செய்ததைப் போல பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் இவர்களின் செயல் முட்டாள்தனமானதாகும். இப்போது இவர்கள் செய்திருப்பது என்ன? பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டது, நடுத்தர, கீழ்த்தட்டு மக்களே. வங்கிகளில் கால் கடுக்க காத்திருந்து, மயங்கி விழுந்து, சிலர் செத்தும் போனார்கள். அதேவேளையில் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என்ன செய்திருப்பார்கள்? இதுவரை மாற்ற பணத்தை மாற்றி இருப்பார்கள். அவர்களிடம் மீதியுள்ள பணம் செல்லாத பணமாக ஆகிவிடும். அது மட்டுமே இவர்களின் திட்டத்திற்கு கிடைக்கும் பலனாகும்.

இதற்கு மாறாக அரசாங்கம் ஏன் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று பார்ப்போம். அரசாங்கத்தின் திட்டம் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களில் வெள்ளைப் பணத்தை வசூலித்து விட்டு கருப்புப் பணத்தை, கள்ள நோட்டுக்களை செல்லத்தகாததாக ஆக்க வேண்டும். இப்போது அரசின் இந்தத் திட்டம் யாருக்கும் தெரியாது. அரசாங்கம் முதலில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தைப் பாதியாக குறைக்கிறது.
100 ரூபாய் நோட்டின் பயன்பாட்டை அதற்கு இணையாக பயன்படுத்துகிறது. பின்னர் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு இணையான அளவில் புதிய நோட்டுக்களை போதுமான அளவில் அச்சடித்து அனைத்து வங்கிகளுக்கும் கொடுத்து விடுகிறது.

இந்த நிலையில் திடீரென 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அறிவித்து அதற்குள் இருக்கும் பழைய நோட்டுக்களை மற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கிறது. இவ்வாறு செய்திருந்தால் தற்போது மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தில் 25% பேரே சிரமப் பட்டிருப்பார்கள்.  அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே.

இப்போது அறிவிப்பு வந்து 10 நாட்கள் ஆகியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இன்னும் இது 40 நாட்களுக்கு நீடிக்க இருக்கிறது. ஆனால் நடப்பில் உள்ள முறையைவிட அதிக பலனை அடைந்திருக்க முடியும். மேற்படி முறையில் தீவிரவாதிகள் பணத்தைப் பயன்படுத்துவது, கள்ள நோட்டுக்கள் அச்சிடப்படுவதை தடுப்பது அடங்காது. அதெற்கெல்லாம் வேறு திட்டங்கள் வேண்டும்.

தேசபக்தி மயக்கத்தில் இருப்பவர்களால் இதை ஏற்க முடியாது என்பது எனக்கு நன்றாகவே  தெரியும்.





No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...